name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நல்வழி (02) சாதி இரண்டொழிய வேறில்லை !

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

நல்வழி (02) சாதி இரண்டொழிய வேறில்லை !

உதவுவோர் உயர் சாதி ; உதவாதோர் இழிந்த  சாதி !


நல்வழி என்பது  ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று  !  ஔவையார் என்னும் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர். நல்வழியை அருளிய ஔவையார் கி.பி. 9- ஆம் நூற்றாண்டுக்குப் பின் வாழ்ந்தவர் என்பது அறிஞர்களின் கருத்து !

-----------------------------------------------------------------------------------------------------------
பாடல்.2.
----------------------------------------------------------------------------------------------------------

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின்  -  மேதினியில்
இட்டார் பெரியோர்  இடாதோர் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி

-----------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------

இந்தப் பூவுலகில் சாதிகள் இரண்டே இரண்டுதான். இவ்விரண்டைத் தவிர வேறு சாதிகள் இல்லை. இந்த இரண்டு சாதிகளும் எவை தெரியுமா ? நீதி தவறாது நல்வழியில் நின்று, முறையோடு, வறியவர்க்கும் இயலாதோர்க்கும், முதியோர்க்கும் ஈகை மனம் கொண்டு உதவி செய்வோர் உயர் சாதியினர். பசிக்கிறது என்று வந்தவர்களுக்கு, வயிற்றுக்கு உணவு கூடத் தராத, உதவி செய்கின்ற மனம் கருகிப் போன கருமிகள் இழிந்த சாதியினர். பட்டாங்கு எனப்படும் நீதி நூல்கள் குறிப்பிடும் இரண்டு சாதிகள் இவ்விரண்டே !

------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-------------------------------------

சாற்றுங்கால் = சொல்லப் போனால் ; வழுவா = தவறாத ; நெறி = நல்வழி ; முறையின் = முறையோடு ; மேதினி = பூமி ; இட்டார் = தருவோர் ; இடாதோர் = தராதோர் ; பட்டாங்கு = நீதிநூல்கள் (சாத்திரங்கள்)

-----------------------------------------------------------------------------------------------------------
         
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மீனம், 04]
{18-03-2019}

-----------------------------------------------------------------------------------------------------------




3 கருத்துகள்:

  1. இந்த செயலின் இறுதி இரண்டு வரிகளை நண்பர் திரு நடராஜன் அவர்கள் கூற தற்பொழுது தான் பள்ளிக்கூடங்களில் படித்தது என் நினைவுக்கு வந்தது அருமையான பாடல் அருமையான உதாரணம்

    பதிலளிநீக்கு
  2. என் சிறு வயதில் படித்தது, இன்று முழு பொருள் விளக்கத்துடன் படித்து மகிழ்ந்தேன். நன்றி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .