name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 02/20/21

சனி, பிப்ரவரி 20, 2021

நான்மணிக் கடிகை (09) கள்வம் என்பார்க்கும் துயிலில்லை !

அளவற்ற   செல்வத்தால்  அழிந்து   விடும்  மன அமைதி !

------------------------------------------------------------------------------------------------------------

முழுவதும் வெண்பாக்களால் யாக்கப்பெற்ற #நான்மணிக்கடிகைவிளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பெற்ற நூல். கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இந்நூல் ஒவ்வொரு பாடலிலும் நான்கு நான்கு கருத்துகளைச் சொல்கிறது ! இதிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------------------

பாடல்; எண் (09)

------------------------------------------------------------------------------------------------------------

 

கள்வமென்  பார்க்குந்  துயிலில்லை  காதலிமாட்டு

உள்ளம்வைப்  பார்க்குந்  துயிலில்லை;  ஒண்பொருள்

செய்வமென்  பார்க்குந்  துயிலில்லை;  அப்பொருள்

காப்பார்க்கும்  இல்லை  துயில்.

------------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------------------

கள்வம்  என்பார்க்கும்  துயிலில்லை;  காதலிமாட்டு

உள்ளம்  வைப்பார்க்கும்  துயிலில்லை; ஒண்பொருள்

செய்வம்  என்பார்க்கும்  துயிலில்லை; அப்பொருள்

காப்பார்க்கும்  இல்லை துயில்.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

---------------

 

திருடுவதற்காக ஊர் அரவம்  அடங்கும் வரைக் காத்திருப்பார்க்கும் உறக்கம் வாராது  !

 

காதலில் கட்டுண்டுக்  காதலியின் இடத்தில்  மனதைப் பறிகொடுத்தவர்களுக்கும் உறக்கம் வாராது !

 

நிறைந்த செல்வம் சேர்க்கவேண்டும் என்று கருதி இராப் பகலாய் உழைப்பவர்களுக்கும்  உறக்கம் வாராது !

 

அதுபோல்,  சேர்த்த பொருளை,  களவாலும் பிறவாற்றாலும் கெடாதபடிக் காப்பவர்களுக்கும் கவலையால் உறக்கம் வாராது !

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------------------------

 

கள்வம் = திருடுவோம்; என்பார்க்கும் = என்று திட்டமிடுபவர்களுக்கும்;  காதலி மாட்டு = காதலி இடத்தில்;  ஒண்பொருள் = பெரும் செல்வம்;  செய்வம் = ஈட்ட வேண்டும்;

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம்(மாசி),08]

{20-02-2021}

 

------------------------------------------------------------------------------------------------------------

கள்வம் என்பார்க்கும் !