name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: புறநானூறு
புறநானூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புறநானூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், அக்டோபர் 03, 2022

புறநானூறு (70) தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண !

 

கொள்ளக் கொள்ளக் குறையாத செல்வ வளம் மிக்கது கிள்ளி வளவனின் அரண்மனை !

-------------------------------------------------------------------------------------------------

பாடலின் பின்னணி:

-------------------------------------------------------------------------------------------------

 

புலவர் கோவூர் கிழார் கிள்ளி வளவனின் அரண்மனையிலிருந்து தன் இல்லம் திரும்பிக் கொண்டிருக்கிறார். அவரை எதிர்கொண்ட பாணர் ஒருவர், புலவரை அடையாளம் கண்டு கொண்டு, ”ஐயனே என் பாடலைப் கேட்டருள்வீராக”  என்று வேண்டுகின்றார். புலவர் அந்தப் பாணரிடம், ”வேண்டாம் பாணரே ! நீர் கிள்ளி வளவனைச் சென்று காண்பிராக; அவன் உமக்கு உறுதியாகப் பரிசில்கள் வழங்கி மகிழ்விப்பான்: என்று கூறி பாணரை மன்னனின் அரண்மனைக்கு ஆற்றுப்படுத்தி வைக்கிறார் !

 

-------------------------------------------------------------------------------------------------

பாடல் எண் (70)

-------------------------------------------------------------------------------------------------

தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண!

'கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன

நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை

இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி;

வினவல் ஆனா முது வாய் இரவல!

தைஇத் திங்கள் தண் கயம் போல,

கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர்,

அடுதீ அல்லது சுடுதீ அறியாது;

இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன்,

கிள்ளி வளவன் நல் இசை உள்ளி,

நாற்ற நாட்டத்து அறு கால் பறவை

சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும்

கை வள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்

பாதிரி கமழும் ஓதி, ஒள் நுதல்,

இன் நகை விறலியொடு மென்மெல இயலிச்

செல்வைஆயின், செல்வை ஆகுவை;

விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர்

தலைப்பாடு அன்று, அவன் ஈகை;

நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!

 

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------

சீறியாழ்ப் பாணனே ! குளத்து ஆமையைக் கோத்து வைத்தது போலக் கிணைஎன்னும் முரசினை கொம்பில் இயைத்து வைத்துள்ளாய்; உன் பாடலுடன் இழைந்து வரும் முரசு  இசையைக் கேட்பீராக என்று என்னை அழைத்து வேண்டுகின்றாய் ! பாணனே ! தை மாதத்தில் நீர் நிறைந்திருக்கும் தண்குளம்போல் கொள்ளக் கொள்ளக் குறையாத செல்வ வளம் மிக்கது கிள்ளி வளவனின் அரண்மனை !

 

அவன் நாட்டு மக்கள் அடுப்புத் தீயைக் கண்டு உள்ளனர். சூரியனின் வெப்பத்தை அறிந்துள்ளனர். இவையன்றி வேறு வெம்மைகளை  அவர்கள் கண்டது இல்லை. அவன் ஆட்சியில் செம்மையைத்தான் அவர்கள் காண்கின்றனர். அத்தகைய தலைவன் கிள்ளி வளவனின் நற்புகழைக் கேட்டு அறிந்து அதனை மதித்து இனிய நகைமொழி உடைய விறலியோடு நீ சென்றால் செல்வம் பெற்று உயர்வாய் !

 

விறகு வெட்டி எடுத்துவரக் காட்டுக்குச் செல்லும் ஒருவனுக்கு எதிர்பாராமல் பொன் கிடைப்பதைப் போன்றது அன்று அவன் ஈகை ! அவனது அருள் கிடைக்குமோ கிடைக்காதோ, அவனிடமிருந்து  பொன்னும் பொருளும் பெறுவோமோ இல்லையோ என்று ஐயுறுதல் வேண்டாம். ; நீ பரிசில் பெறுவது உறுதி ! சென்று வருவாயாக ! வள்ளன்மை மிக்க கிள்ளிவளவன் நீடூழி வாழ்வானாக !

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருளுரை:

---------------------------------

01. தேஎம் தீம் தொடை = தேன்போல இனிய  இசை எழுப்பும் நரம்புகள் பொருத்தப் பெற்ற,

02. சீறியாழ்ப் பாண = (சிறுமை + யாழ் = சீறியாழ்) யாழில் சிறிய வகையான சீறியாழை  யாழை இசைக்கும் பாணனே,

03.   கயத்து வாழ் யாமை = குளத்தில் வாழும் ஆமையை,

04.   காழ் கோத்தன்ன = இரும்புக் கம்பியில் கோத்ததைப் போல,

05.   நுண் கோல் தகைத்த = மெல்லிய குச்சியில் பிணைத்த,

06.  தெண் கண் மாக் கிணை = ஒற்றைக் கண்ணுடைய கிணைஎன்னும்  முரசு எழுப்புகின்ற,

07.  இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி = இசையைக் கேட்க இங்கு அமர்க என்று,

08. வினவல் ஆனா முது வாய் இரவல = என்னை அழைத்து வினவுகின்றாய் இரவலனே,

09.  தைஇத் திங்கள் தண் கயம் போல = தை மாதத்தில் குளிர்ந்த நீர் நிரம்பியிருக்கும் குளம் போல,

10.  கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர் = கொள்ளக் கொள்ளக் குறையாத செல்வ வளம் மிக்க கிள்ளி வளவனின் பெரிய நகரம்,

11.   அடுதீ அல்லது சுடுதீ அறியாது = அடுப்புத் தீயை அல்லாது சுடுகின்ற வேறு வெப்பத்தை அறியாது.

12. இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன் = இரு மருந்துகளாகிய நீர் வளமும் நெல் வளமும் மிக்க நாட்டின் தலைவனாகிய,

13.   கிள்ளி வளவன் நல் இசை உள்ளி = கிள்ளி வளவனின் நற்புகழைக் கேட்டறிந்து மனத்தின் இருத்தி,   

14.  நாற்ற நாட்டத்து அறு கால் பறவை = மலர்களின் நறுமணத்தால் ஈர்ப்புற்று, சென்று அவற்றை அறிந்தாய்வு செய்யும் தேனீக்கள்,

15.  சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் = சிறிய வெண்ணிற அல்லி மலர்களை அடைந்து தேனுண்ணும்,

16.  கை வள் ஈகைப் பண்ணன் = கை நிறைய அள்ளிக் கொடுக்கும் வள்ளன்மை உடைய பண்ணன் என்னும்,

17.  சிறுகுடிப்பாதிரி கமழும் ஓதி = சிறு குடியிற் பிறந்த பாதிரிப்பூக்கள் சூடிய மணம்  மிகுந்த கூந்தலை உடைய,

18.  ஒள் நுதல், இன் நகை விறலியொடு = ஒளிமிகு நெற்றியையும் இனிய புன்னகையையும் உடைய உனது நாட்டியப் பெண்ணாகிய விறலியோடு,

19. மென்மெல இயலிச் செல்வைஆயின் = மெல்ல மெல்ல நடந்து அவனிடம் செல்வாயாகின்,

20.   செல்வை ஆகுவை = செல்வம் மிக்கவன் ஆகிவிடுவாய் !

21.  விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர் = விறகு வெட்டச் சென்ற மக்கள் பொற் குவியலை அடைந்தது போன்ற, 

22.   தலைப்பாடு அன்று = அரிய நிகழ்வு என,

23.   அவன் ஈகை = கிள்ளி வளவனது ஈகைத் தன்மையை,

24.   நினைக்க வேண்டா = நினைக்க வேண்டா,

25. வாழ்க, அவன் தாளே = அப்படிப்பட்ட கிள்ளி வளவன் நீடூழி வாழட்டும் !

 

-------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கன்னி (புரட்டாசி) 15]

{02-10-2022}

---------------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

வியாழன், மே 05, 2022

புறநானூறு (13) இவன் யார் என்குவையாயின் !

விண்மீன்களுக்கு இடையே உலவரும் நிலவைப் போல யானை மீது அமர்ந்து வரும் இவன் யாரோ ?

-----------------------------------------------------------------------------------------------------------

பாடலின் பின்னணி:

-----------------------------------------------------------------------------------------------------------

பண்டைத் தமிழகத்து குறுநில மன்னன் ஒருவன் யானை மீது அமர்ந்து ஊர்ந்து வருகிறான். அவனைச் சுற்றிலும் வாளேந்திய படைவீரர்கள் சூழ்ந்து நடந்து வருகின்றனர். அந்நாட்டுக் குடிமகன் ஒருவனைப் பார்த்து வழிப்போக்கன் ஒருவன் ”இவன் யார்” என்று கேட்கிறான் ! இனி பாடலைப் படியுங்கள் !

-----------------------------------------------------------------------------------------------------------

 

இவனியா ரென்குவை யாயி னிவனே

புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய

எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்

மறலி யன்ன களிற்றுமிசை யோனே

களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்

பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்

சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப

மரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே

நோயில னாகிப் பெயர்கதி லம்ம

பழன மஞ்ஞை யுகுத்த பீலி

கழனியுழவர் சூட்டொடு தொகுக்கும்

கொழுமீன் விளைந்த கள்ளின்

விழுநீர் வேலி நாடுகிழ வோனே !

 

-----------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-----------------------------------------------------------------------------------------------------------

இவன் யார்?” என்குவை ஆயின், இவனே   (01)

புலி நிறக் கவசம் பூம் பொறி சிதைய,

எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின்,

மறலி அன்ன களிற்று மிசையோனே;

களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்,(05)

பல் மீன் நாப்பண் திங்கள் போலவும்,

சுறவினத்து அன்ன வாளோர் மொய்ப்ப,

மரீஇயோர் அறியாது, மைந்து பட்டன்றே;

நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம !

பழன மஞ்ஞை உகுத்த பீலி                                     (10)

கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,

கொழு மீன், விளைந்த கள்ளின்,

விழு நீர் வேலி நாடு கிழவோனே !                      (13)

-----------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-------------------------

 

வரி.(01). என்குவை ஆயின் = என்று கேட்பீராயின் ;

வரி.(02). புலி நிறம் = புலித்தோல் ; கவசம் = போர்வீரன் மார்பில் அணியும் பாதுகாப்பு சட்டை ; பூம்பொறி சிதைய = அழகிய தோலில் (ஆங்காங்கே துளை ஏற்பட்டுச்) சிதைவு ஏற்ப ;

வரி.(03).எய் கணை = எந்த அம்பு ;  கிழித்த = துளைத்த ; பகட்டு எழில் மார்பின் = வலிய அழகிய மார்பின் ;

வரி.(04). மறலி அன்ன = எமன் போன்ற; களிற்று மிசையோனே = யானை மேல் அமர்ந்திருப்பவன் ;

வரி.(05). களிறே = யானை ; முந்நீர் = கடல் ; வழங்கு நாவாய் போலவும் = செல்லும் மரக்கலம் போலவும்;

வரி.(06). பல் மீன் நாப்பண் = விண்மீன் கூட்டத்தின் நடுவில் ; திங்கள் போலவும் = அம்புலி போலவும் ;

வரி.(07). சுறவினத்து அன்ன = சுறா மீன் கூட்டத்தை போல ; வாளோர் மொய்ப்ப = வாள் ஏந்திய படை வீரர்கள் சூழ்ந்து வர ;

வரி.(08). மரீஇயோர் அறியாது = பின்தொடர்ந்து வரும் பாகர்கள் அறியாமலேயே ; மைந்து பட்டன்றே = யானை மதம் கொண்டது ;

வரி.(09). நோய் இலன் ஆகி = நலமுடன் ; பெயர்கதில் = திரும்பி வர வேண்டும் ; அம்ம = அசைச்சொல்.

வரி.(10). பழன மஞ்ஞை உகுத்த பீலி = வயல்களில் மேயும் மயில்கள் உதிர்த்த தோகை ;

வரி.(11). கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும் = உழவர்கள் நெல் அரியுடன் சேர்த்து எடுத்துச் செல்வர்;

வரி.(12). கொழு மீன் = கொழுத்த மீன் ; விளைந்த கள்ளின் = முதிர்ந்த கள்ளின் ;

வரி.(13). விழு நீர் = நீர்வளம் மிக்க ஊர் ; நாடு கிழவோனே = நாட்டின் தலைவனே !

----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------

இவன் யார் என்று கேட்கிறாயா ? அம்புகளால் துளைக்கப்பட்டு ஆங்காங்கே புள்ளி புள்ளியாகச் சிதைந்து காணப்படும் புலித்தோலால் ஆகிய கவசத்தை இவன் தன் மார்பில் அணிந்து கொண்டு கூற்றுவன் போல யானை மீது வந்துகொண்டிருக்கிறான். அந்த யானை வருவது, கடலில் ஒரு மரக்கலம் வருவதைப் போலவும், பல் விண்மீன்களுக்கு நடுவே உலா வரும் நிலவைப் போலவும் காட்சியளிக்கிறது !


அந்த யானையைச் சுற்றிலும் சுறா மீன்கள் கூட்டம் போல் வாளேந்திய படைவீரர்கள் சூழ்ந்து வருகின்றனர்.  அவர்களுக்கு இடையே நடந்துவரும் யானைப் பாகர்கள் அறியாமலேயே அந்த யானைக்கு மதம் பிடித்துச் சினத்துடன் காணப்படுகிறது. இத்தகைய அடலேற்றின் நாட்டில், வயல்களில் மயில்கள் உதிர்த்த தோகையை உழவர்கள் நெல் அறுத்த அரியுடன் சேர்த்து அள்ளிச் செல்வார்கள் !


இவன் நாட்டில் கொழுத்த மீனும் முதிர்ந்து பக்குவப்பட்ட கள்ளும் எங்கும் கிடைக்கும். நீர்வளம் மிக்கதால் நிலவளம் மிகுந்த நாட்டுக்குத் இவன் தலைவனாகத் திகழ்கிறான். மதம் கொண்ட யானை மீது  ஊர்ந்துவரும் இவன் இன்னல்கள் ஏதுமின்றி நலமுடன்  திரும்பிச் செல்வானாக !

----------------------------------------------------------------------------------------------------------

காலக் கண்ணாடி:

-----------------------------------

இப்பாடலிலிருந்து நாம் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றையும் தெரிந்துகொள்ள முடிகிறது !

(01) பண்டைத் தமிழகத்தில் அயல்நாட்டு வாணிகம் மற்றும் நாட்டுப் பாதுகாப்பின் பொருட்டு, மரக் கலன்கள் பயன்பாட்டில் இருந்தன என்பது இப்பாடல் மூலம் தெரிய வருகிறது !

(02) மக்களின் முதன்மை உணவாக மீனும், கள்ளும் இருந்தமை இப்பாடல் வாயிலாக அறிய முடிகிறது. கள் என்பது உடல் வலிமைக்காக அருந்தும் நீராளமாகவே இருந்திருக்கிறது; வெறிமைக்காக அஃது அருந்தப்படவில்லை என்பது மன்னனே கள் அருந்தினான் என்பதிலிருந்து உறுதியாகிறது !

 

புறநானூறு  பண்டைய தமிழகத்தின் வளத்தையும் மாண்பையும் உணர்த்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்கிறது என்பது இப்பாடல் மூலம் உறுதிப்படுகிறது !


-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்

(veda70.vv@gmal.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பணி மன்றம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 22]

{05-05-2022}

----------------------------------------------------------------------------------------------------------


புதன், மே 04, 2022

புறநானூறு (86) சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன் !


தாயே ! தங்கள் மகன் எங்கே ? சொல்லுங்களேன் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடலின் பின்னணி:

----------------------------------

தாய் ஒருத்தியிடம் உன் மகன் எங்கே என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அந்தத் தாய், கேட்டவர் திகைக்கும் வண்ணம் மறுமொழி கூறுகிறாள் ! காவற்பெண்டு என்னும் பெண்பாற் புலவர் இயற்றிய அந்தப் பாடலைக் காணுங்கள் !

------------------------------------------------------------------------------------------------------------

புறநானூறு பாடல் எண்: (86)

------------------------------------------------------------------------------------------------------------

 

சிற்றில் நற்றூண் பற்றிநின் மகன்

யாண்டு ளனோவென வினவுதி; என்மகன்

யாண்டுள னாயினும் அறியேன்; ஓரும்

புலிசேர்ந் துபோகிய கல்லளை போல,

ஈன்ற வயிறோ விதுவே;

தோன்றுவான் மாதோ போர்க்களத் தானே !

 

-----------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------------------

 

சிற்றில் நல் தூண் பற்றிநின் மகன்

யாண்டு உளன்என வினவுதி; என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவான் மாதோ போர்க் களத்தானே !

 

-----------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-------------------------

 

வரி.(01). சிற்றில் = இந்தச் சிறிய வீட்டின் ; நல் தூண் பற்றி = வலிமையான தூணைக் கைகளால் பற்றிக் கொண்டு நிற்கும் தாங்கள் ; நின் மகன் = உன்னுடைய மகன்;

 

வரி.(02). யாண்டு உளனோ = எங்கிருக்கிறான் ; என வினவுதி = எனக் கேட்கிறீர்கள் ; என் மகன் = என்னுடைய மகன் ;

 

வரி.(03). யாண்டு உளன் = எங்கு இருக்கிறான் ; ஆயினும் அறியேன் = என்பதை நான் அறியேன் ; ஓரும் = இது ஒரு அசைச் சொல், இதற்குப் பொருள் பார்க்க வேண்டியதில்லை.

 

வரி.(04). புலி சேர்ந்து போகிய = புலி தங்கியிருந்துவிட்டுச் செல்லும் ; கல் அளை போல ; மலைக் குகையைப் போல ;

 

வரி.(5). ஈன்ற வயிறோ இதுவே =  மகனைப் பெற்ற வயிறு இங்கே இருக்கிறது ;

 

வரி.(06). தோன்றுவான் மாதோ போர்க்களத்தானே = (ஆனால்) அவன் போர்க்களத்தில் இருக்கக் கூடும் !


-----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

இந்தச் சிறிய வீட்டின் வலிமையான தூணைப் பற்றிக் கொண்டு , “உன் மகன் எங்கே இருக்கிறான்எனக் கேட்கிறீர்கள். என் மகன் எங்கே இருக்கிறான் என்பதை யான் அறியேன். புலி குகையை விட்டுக் கிளம்பிய பின் அது எங்கு சென்றுள்ளது என்பதை யாரும் அறிய முடிவதில்லை !


அதுபோல அவனை ஈன்ற வயிறோ இங்கே இருக்கிறது; அவன் எங்கு சென்றுள்ளான் என்பதை யான் அறியேன். ஆனால் அவன் போர்க்களத்தில் தான் இருப்பான். அவனைக் காண விரும்பின் போர்க்களத்திற்குச் சென்று காண்பீராக !

---------------------------------------------------------------------------------------------------------

 காலக் கண்ணாடி:

-------------------------------- 

இப்பாடலிலிருந்து நாம் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றையும் தெரிந்துகொள்ள முடிகிறது !

 

(01)பண்டைத் தமிழகத்தில் தூண்களுடன் கூடிய குடியிருப்பு இல்லங்கள் கட்டப்பட்டு இருந்திருக்கின்றன என்பது இப்பாடல் மூலம் தெரியவருகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் கட்டடக் கலையில் சிறந்து விளங்கியிருக்கிறான் !

(02)தம் பிள்ளைகளை போர்க்களத்துக்கு அனுப்புவதற்கு பண்டைய தமிழகத் தாய்மார்கள் அச்சப்பட்டதில்லை என்பதும் வீர மிக்கவர்களாக அவர்கள் விளங்கியிருக்கிறார்கள் என்பதும் இப்பாடல் மூலம் விளங்குகிறது !

 

புறநானூறு என்பது பண்டைய தமிழகத்தின் வளத்தையும் மாண்பையும் உணர்த்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்கிறது என்பது இப்பாடல் மூலம் உறுதிப்படுகிறது ! 


----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ்ப் பணி மன்றம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை)21]

{04-05-2022}

-----------------------------------------------------------------------------------------------------------