name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: எட்டுத்தொகை
எட்டுத்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எட்டுத்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 05, 2019

எட்டுத்தொகை (08) புறநானூறு !

பண்டைய தமிழ் மன்னர்களின் வீரம், கொடை, ஆளுமைத் திறம் போன்வற்றை நமக்கு எடுத்துக் காட்டும் காலக் கண்ணாடி !



புறப்பொருள் பற்றிப் புலவர்களால் பாடப்பெற்ற நானூறு பாக்களைக் கொண்ட தொகுதியாதலால், இந்நூல் புறநானூறு என்னும் பெயர் பெற்றது. புறம், புறப்பாட்டு, புறம்பு நானூறு என்னும் பெயர்களாலும் இந்நூலை நச்சினார்க்கினியர்  முதலிய உரையாசிரியர்கள் குறித்துள்ளனர் !

பண்டைத் தமிழகத்தின் அரசியல் வரலாற்றையும், சமூக வரலாற்றையும், அறிவுறுத்தும் அரிய கருவூலமாக  இத்தொகை நூல் உள்ளது. பண்டைக் காலத்து வாழ்ந்த பேரரசர்களையும், சிற்றரசர்களையும், வீரர்களையும், வீர வழிபாட்டு முறைகளையும், பல சமூகப் பழக்க வழக்கங்களையும், எடுத்து இயம்பும் நோக்குடைய பாடல்களை இத்தொகுதி ஒன்றில்தான் நாம் பரக்கக் காண இயலும் !

இந்நூலில் இறைவணக்கம் உள்பட 400 பாடல்கள் இருந்திருக்கின்றன. இவற்றுள் 267, 268 ஆம் பாடல்கள் முற்றும் மறைந்து போயின. 266 ஆம் பாடலுக்கு மேற்பட்டுள்ள பிற்பகுதிப் பாடல்கள் பலவற்றின் அடி, சீர், முதலியனவும், பாடல்களின் பிற்குறிப்புகளில் பெரும்பாலனவும் சிதைவுபட்டுள்ளன. இத்தொகை பாடிய புலவர்கள் நூற்று ஐம்பத்து அறுவர் ஆகும் !

எத்துணை செல்வங்கள் இருந்தாலும், மழலைச் செல்வம் இல்லாதோர் வாழ்வு, பயனற்றது என எடுத்துரைக்கும் பாண்டியன் அறிவுடை நம்பியின்,

------------------------------------------------------------------------------------------

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்,
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறு குறு நடந்து, சிறு கை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லை, தாம் வாழு நாளே” !

-----------------------------------------------------------------------------------------

என்னும் பாடல் இந்நூலில் 188 ஆவது பாடலாக இடம் பெற்றுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைப் பள்ளிப் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த இது போன்ற பாடல்களை இப்போதைய தலை முறையினர் படிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டனர் என்னும் நிலை மனதைத் துன்பப்படுத்துகிறது !

முந்தைய முழுமதி நாளில் நாங்கள் எம் தந்தையுடன் இருந்தோம்; எமது பரம்பு மலையும் எம்மிடமிருந்தது; இன்றைய முழுமதி நாளில் எம் தந்தையும் உயிருடன் இல்லை; எம் பரம்பு மலையும் எம்மிடம் இல்லைஎன்று பாரிமகளிர் மனத் துன்பம் கொண்டு பாடிய  அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்.... என்னும் கையறு நிலைப் பாடல் (112), படிக்கும்தோறும் மனதை உருக்கும் உணர்வலைகளை உள்ளடக்கிய ஒப்பற்ற பாடல் !

பசி என்று சொல்லி இரந்துண்பது இழிவானது; அப்படி வரும் இரவலர்க்குஇல்லை, போ ! போ !” என்று விரட்டுவது அதைவிட இழிவான செயல் என்று கடிந்து உரைக்கும் கழைதின் யானையாரின் கருத்தாழம் மிக்க ஈ என இரத்தல் இழிந்தன்று; அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று...” (204)  என்பது அறத்தை வலியுறுத்தும் ஆற்றல் மிக்க வரிகளைச் சுமந்து நிற்கும் அழகிய பாடலாகும் !

ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே...”, உண்டால் அம்ம இவ்வுலகு...”, உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்...”, நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்...”, பல் சான்றீரே ! பல்சான்றீரே !”,யாதும் ஊரே யாவரும் கேளிர்...” போன்ற அரும்பெரும் கருத்துகளை உள்ளடக்கிய நயமிக்க பாடல்கள் பல புறநானூற்றில் பொதிந்து கிடக்கின்றன !

பல ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் தரும் அழகிய தமிழ்ச் சொற்கள் புறநானூற்றுப் பாடல்களில் பொன்மணிகளாய் ஆங்காங்கே பூத்துக் கிடக்கின்றன. சிலவற்றை மட்டும் காண்போமா !

----------------------------------------------------------------------------------------------------------

FAN (ரசிகர்)....................................= ஆர்வலர் (பாடல்.12, 390)
SNACK BAR......................................= ஆர்கையகம் (பா.391)
MUSIC INSTRUMENT.......................= இன்னியம் (பா153)
BRIYANI (பிரியாணி).....................= ஊன்சோறு (பா.33, 113,)
BRACELET (பிரேஸ்லெட்) ............= கடகம் (பா.150)
HUNTING DOG (வேட்டை நாய்)...= கதநாய் (பா.33)
PLANET (கிரகம்).............................= கோள்மீன் (பா.392)
JAR ...................................................= சாடி (பா.258) 
RICE (சாதம் என்பது தவறு)........= சோறு (பா.20, 220, 235, 250, 261, 399)
CENTRE............................................= நடுவண் (பா.363, 400)
GATE..................................................= படலை (பா.265, 319, 325)
SOUP..................................................= புற்கை (பா.84)
BOTTLE..............................................= மணிக்கலன் (பா.397)
PORTICO............................................= முன்றில் (பா.129,170, 247, 316, 388)
DRIVER...............................................= வலவர் (பா.27)
STAR.......................= மீன் (பா.13, 21, 24, 25, 109, 270, 302, 367, 396, 399)
SAFETY..................= ஏமம் (பா.1, 3, 16, 41, 178, 213, 351, 360, 363)

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,02]
{17-06-2019}
--------------------------------------------------------------------------------------------------------
      தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை ! 
--------------------------------------------------------------------------------------------------------






எட்டுத்தொகை (07) அகநானூறு !

பண்டைய தமிழ் மக்களின் காதல் வாழ்வு, இல்லற வாழ்வு, கற்பு நெறி ஆகியவற்றை எடுத்தியம்பும் இலக்கியம் !



எட்டுத்  தொகை நூல்களில் அகநானூறும் ஒன்று. அகம், புறம் என்னும் பொருட் பாகுபாடு பற்றித் தொகுக்கப் பெற்றவை அகநானூறும் புறநானூறும். இவ்விரண்டும் ஆசிரியப்பா என்னும் அகவற்  பாக்களினால் இயன்றவை !


தலைவன் தலைவியைக் கண்டு காதல் கொண்டு பலர் அறிய மணம் புரிந்து இல்லறம் நடத்துதல், இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள் தேடுதல் முதலிய காரணங்களால், தலைவன் தலைவியை விட்டுப் பிரிதல், தலைவன் பிரிந்த பின் தலைவி இல்லின்கண் ஆற்றியிருத்தல், குறித்த காலத்தில் தலைவன் வராவிடின் தலைவி புலம்புதல், பிரிந்து மீண்ட தலைவனுடன் தலைவி மகிழ்ந்து வாழ்தல், தலைவன், தலைவி, தோழி ஆகியோர் உரையாடுதல், என்பன போன்ற பல செய்திகளை இந்நூலிற் காணலாம் !

     
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவை அகப்பொருள் பற்றியவையே.  ஆயினும், எட்டுத்தொகை நூல்களுள்அகம்: என்னும் பெயரையே இத் தொகைநூல்  பெற்றிருத்தல் இதன் சிறப்பு நோக்கி எழுந்தது போலும் !

     
அகவற் பாவில் அமைந்த நூல்களிலும் இதன்கண் அமைந்த பாடல்கள் அடி அளவால் மிகவும் நீண்டவை. இப்பாடல்கள் 13 அடிச் சிறுமையும் 31 அடிப் பெருமையும் கொண்டவை. எனவே இதனைநெடுந்தொகைஎனவும் வழங்குவர் !

     
இறைவணக்கப் பாடலைத் தவிர்த்து 400 பாடல்கள்  இதில் உள்ளன.  இந்த 400 பாடல்களும் களிற்றியானை நிரை (1-120), மணிமிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301 – 400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றன !

     
அகநானூறு என்னும் இத்தொகை நூலைத் தொகுத்தவர் உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்தவர்  பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. அகநானூறில் அடங்கியுள்ள 400 பாடல்களையும் பாடிய  புலவர்கள் நூற்று நாற்பத்து ஐவர். அகப்பொருள் நூலாயினும் இதில் வரும் வரலாற்றுக் குறிப்புகள் மிகப் பலவாகும் !

     
சில ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் அழகிய தமிழ்ச் சொற்கள் பல அகநானூற்றுப் பாடல்களில் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் காண்போம் !

----------------------------------------------------------------------------------------------------------

PLAY GROUND..........................= ஆடுகளம் (அக.364.3)
BAZAAR STREET.......................= ஆவணம் (அக.122.3)
MAN POWER..............................= ஆள்வினை (அக.279.8)
DRAWING...................................= ஓவம் (அக.54.4)
COIN...........................................= காசு (அக.363.8)
BLOOD........................................= குருதி (அக.3.8)
WELL...........................................= கூவல் (அக.207.10)
WELL...........................................= கேணி (அக.137.2)
CART...........................................= சகடம் (அக.136.5)
SLIPPER......................................= செருப்பு (அக.257.1).
INDIVIDUAL.................................= தமியர் (அக.78.11)
RUBBER......................................= பயின் (அக.1.5)
BOTTLE.......................................= புட்டில் (அக.122.19)
GODOWN / STORE ROOM........= பொதியில் (அக.138.7)
DRIVER.......................................= வலவர் (அக.20.5)

---------------------------------------------------------------------------------------------------------


ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,04]
{19-06-2019}

---------------------------------------------------------------------------------------------------------
        “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------

எட்டுத்தொகை (06) கலித்தொகை !

தமிழரது மணமுறைஇல்லற இன்பம் என்பவற்றைச் சுவைபட இந்நூலின் செய்யுள்கள் எடுத்துக் காட்டுகின்றன !


புறநானூறு முதலிய தொகைநூல்கள் அகவற் பாக்களால் தொகுக்கப் பெற்றவை. இந்நூல், கலிப்பாக்களால் தொகுக்கப் பெற்றமையால், கலித் தொகை என்னும் பெயர் பெற்றது !

பாலை முதலிய ஐந்து திணைகளைப் பற்றிய நூற்றைம்பது பாக்கள் இதன்கண் உள்ளன. ஏனைய தொகை நூல்களிற் போலப் பாடல்களில் சிதைவும் குறைவும் இன்றி, கலி நூற்றைம்பதும் இப்பொழுதும் வழங்குவது தமிழ் மக்களின் தவப்பயன் எனலாம். நூற்றைம்பது பாடல்களுள் முதற் பாடல் கடவுள் வாழ்த்து. பின்னர், பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற வரிசையில் ஐந்திணைகளுக்கும் உரிய பாடல்கள் அமைந்துள்ளன !

இவை முறையே 35, 29, 35, 17, 33 பாடல்களைக் கொண்டுள்ளன.  கலித்தொகைப் பாடல்களை பெருங்கடுங்கோன், கபிலர், மருதன் இளநாகனார், உருத்திரனார், நல்லந்துவனார் ஆகிய ஐவர் பாடியுள்ளனர். கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடிய நல்லந்துவனாரே, இந்நூலைத் தொகுப்பித்துள்ளார் என்று கூறப்படுகிறது !


இந்நூலில், தலைமக்களின் காதல் ஒழுக்கம், அடியவர் வினைவலர் இவர்தம் செய்திகள் முதலியன காணப்படுகின்றன; காதல் பற்றிய செய்யுள்கள், உரையாடல் முறையில் அமைந்திருக்கின்றன; இதிகாசச் செய்திகள் சில, செய்யுள்களில் உவமைகளாக வருகின்றன. தமிழரது மணமுறை, இல்லற இன்பம் என்பவற்றைச் சுவைபட இந்நூலின் செய்யுள்கள் எடுத்துக் காட்டுகின்றன !

தினைப் புனக் காவல், கவண்கல் வீசும் திறம், ஏறு தழுவுதல், தைந்நீராடுதல், கடவுள் வழிபாட்டு முறை முதலிய தமிழ் நாட்டுச் செய்திகள் பலவற்றை இந்நூலிற் காணலாம் !

கலித்தொகையில் பாலைக் கலியில் இடம்பெற்றுள்ள 9-ஆவது பாடலில் ஒரு அரிய, சுவையான காட்சி வருகிறது.  அக்காட்சி என்ன தெரியுமா ?

பொருள் ஈட்டிவர  அயலூர்  செல்லும் தலைவனுடன், தலைவியும் உடன் செல்கிறாள். அவளைக் காணாது அவளது செவிலித்தாய், கானக வழியில் தேடுகிறாள். எதிர்வரும் சான்றோர் ஒருவரிடம், ’எம் மகளையும் அவள் தலைவனையும்  கண்டீரோஎன வினவுகிறாள். ’இருவரையும் கண்டோம்; அவ்வாறு செல்வதே அறம் எனக் கருதி இவண் வந்தோம்என்கிறார் அநத  உயர்ந்த மனிதர்  !

மேலும் அந்தப் பேராண்மையாளர்  சொல்கிறார், மலையில் விளையும் நறுமணமுள்ள சந்தனம், அதைப் பூசிக் கொள்வோருக்கு அன்றி, மலைக்கு அதனால் எவ்விதப் பயனும் உண்டா தாயே ?”

ஒளிவீசும் வெண்ணிற முத்துக்கள், அதை அணிந்து கொள்பவர்க்கு அல்லாமல், அவை பிறக்கும் கடல்நீருக்கு அம்முத்துக்களால் என்ன பயன் சொல்லுங்கள் ?”

காற்றில் மிதந்து வரும் ஏழிசையானது அதைச் செவி மடுப்பவருக்கு அல்லாமல், அந்த இசையைப் பிறப்பித்த யாழுக்கு அதனால் என்ன பயன் ?”

அதைப் போல தலைவனுடன் தலைவி சேர்ந்து வாழ்வதே வாழ்வின் பயன் ! அவர்களைத் தேடி அலைய வேண்டாம் தாயே ! என்கிறார் அச் சான்றோர். பாடல் இதோ :-

---------------------------------------------------------------------------------------

எம்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ ? – பெரும’ !
காணேம் அல்லேம்; கண்டனம் கடத்திடை;
ஆணெழில் அண்ணலொடு அருஞ்சுரம் முன்னிய
மாணிழை மடவரல் தாயிர் நீர் போறிர்’.

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை.
மலையுளே பிறப்பினும், மலைக்கவைதாம் என்செய்யும் ?
நினையுங்கால், நும்மகள், நுமக்கும்ஆங்கு அனையளே !

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும் ?
தேருங்கால், நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே !

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும் யாழ்க்குஅவைதாம் என்செய்யும் ?
சூழுங்கால், நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே !

--------------------------------------------------------------------------------------------------

இத்தகைய சுவையான காட்சிகள் கலித் தொகையில் பரவலாக இடம் பெற்றுள்ளன. அக்காலத் தமிழர்களின் வாழ்க்கை ஒழுங்கினை எடுத்துரைக்கும் கலித்தொகையைப் படித்து மகிழும் வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதாக !

--------------------------------------------------------------------------------------------------------

கலித்தொகையில் இடம்பெற்றுள்ள கலைச் சொற்களுள் ஒரு சில வருமாறு :-

--------------------------------------------------------------------------------------------------------
அம்பல் (கலி:3:1)........................= CALUMNY
வல்லை (கலி:3:10).....................= QUICKLY
கோண்மீன் (கலி:5:9)................= PLANET
கைபுனை (கலி:7:6)...................= HAND MADE
நாஞ்சில் (கலி:8:5)......................= PLOUGH
பிறள் (கலி:9:6)............................= ALIEN LADY
நன்னர் (கலி:21:6).......................= GOODNESS
ஆலுதல் (கலி:30:8)......................= MAKE SWEET NOISE
எல்லா (கலி:42:5).........................= HALLO !
அரங்கு (கலி:79:4).......................= STAGE
இடும்பை (கலி:127:9).................= SUFFERING
இளமழை (கலி:41:25).................= DRIZZLING
ஊராண்மை (கலி:89:2)..............= VILLAGE ADMINISTRATION
ஏதிலார் (கலி:138:24)..................= POOR PEOPLE
கவணை (கலி.41:10)...................= CATTLE FEEDER
கைவிளக்கு (கலி.142:430...........= TORCH
புட்டில் (கலி:80;8).........................= BOTTLE
பூவல் (கலி.114:12)........................= LARGE WELL
விடலை (கலி.95:32).....................= TEEN - AGER

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050:மடங்கல்(ஆவணி), 25]
{11-09-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
"தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------

எட்டுத்தொகை (05) பரிபாடல் !

      தீயினுள் தெறல் நீபூவினுள் நாற்றம் நீ !
      கல்லினுள் மணியும் நீசொல்லினுள் வாய்மை நீ !



பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பட்டமையால், இந்நூல் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. இந்நூல் எழுபது பாடல்களைக் கொண்டிருந்தது. அவற்றுள் அழிந்தன போக, இன்று இருப்பவை இருபத்து இரண்டு பாடல்களே !

     
எனினும், பழைய உரைகளிலிருந்தும், புறத் திரட்டுத் தொகை நூல்களிலிருந்தும் இரண்டு முழுப் பாடல்களும், சில பாடல்களின் உறுப்புக்களும் தெரியவந்துள்ளன.  இவை பரிபாடல் திரட்டு என்னும் தலைப்பில் பரிபாடல் நூலுடன் இணைத்து பதிப்பாளர்களால் வெளியிடப்படுகிறது !
     
பரிபாடலில் திருமாலைப் பற்றி ஆறும், செவ்வேளைப் பற்றி எட்டும், வையையைப் பற்றி எட்டுமாகப் பாடல்கள்  உள்ளன. பரிபாடல் திரட்டில் உள்ள இரண்டு முழுப் பாடல்களுள் ஒன்று திருமாலைப் பற்றியும் மற்றொன்று வையையைப் பற்றியும் அமைந்தவை. மதுரை, வையை ஆறு, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை என்பன பற்றிய செய்திகளையும், அக்கால மக்களின் பழக்க வழக்கங்களையும், தெய்வ வழிபாட்டு முறைகளையும் இந்நூலிற் காணலாம் !

     
இந்நூற் பாடல்கள், பொருள்களின் இயற்கைத் தன்மையை விளக்குபவை; சொற்சுவை பொருட்சுவைகளிற் சிறந்தவை. ஆற்றில் புது வெள்ளம் பெருகி வரும்போது  நிகழும் செயல்கள், இந்நூலில் நன்கு கூறப்பட்டுள்ளன. மார்கழி நீராட்டுப் பற்றிய செய்தி, இதன்கண் காணப்படுவது குறிப்பிடத் தக்கது !

     
திருமாலின் சிறப்பு பற்றிக் கூறும் ஒரு பாடலின் வரிகள் வருமாறு:-

-------------------------------------------------------------------------------------------

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;

-------------------------------------------------------------------------------------------
     
வையை ஆற்றில் புது வெள்ளம் கடல் போல் பெருக்கெடுத்து வருகிறது. அதைக் காண ஆடவரும் பெண்டிரும் திரண்டு செல்கின்றனர். மகளிர் ஈரணி (SWIMMING SUIT) அணிந்து நீரில் விளையாடி மகிழ்கின்றனர். வையைக் கரையெங்கும் மலர்களின் மணம் காற்றில் கலந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. என்னென்ன மலர்கள் ஆற்றில் மிதந்து வருகின்றன தெரியுமா ?

----------------------------------------------------------------------------------

மல்லிகை, மௌவல், மணம் கமழ் சண்பகம்,
அல்லி, கழுநீர், அரவிந்தம், ஆம்பல்,
குல்லை, வகுளம், குருக்கத்தி, பாதிரி,
நல்லிணர் நாகம், நறவம், சுரபுன்னை,
எல்லாம் கமழும் இருசார் கரை கலிழ,
.....................................
-----------------------------------------------------------------------------------
       
பரிபாடல் நூல் நெடுகிலும் இவை போன்ற இனிய வரிகள் இறைந்து கிடக்கின்றன. படித்துச் சுவைப்பதற்குச் செய்திகள் நிரம்பவும் காணப்படுகின்றன. இலக்கியத்தில் மூழ்கித் திளைக்க விரும்புவோர்க்கு பரிபாடல் உகந்த வாய்ப்பு !

       
அழகிய தமிழ்ச் சொற்கள் பல அணிவகுத்து பாடல்களின் ஊடே காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை மட்டும் தொகுத்து, அவற்றுக்கு இணையான அல்லது புதிதாகப் புனைந்த ஆங்கிலச் சொற்களையும் தந்துள்ளேன். சுவைத்து மகிழுங்கள் !

--------------------------------------------------------------------------------------------------------

FAST....................................= ஒல்லை (பரி.6:72)
HELLO.................................= எல்லா ! (பரி.8:56)
INPUT..................................= உள்ளீடு (பரி.2:12)
JUNIOR...............................= இளையர் (பரி.6:27)
LOTUS................................= கயமுகை (பரி.8:115)
MATING ROOM..................= சுணங்கறை (பரி.9:20,21,22.)
MODEL................................= செய்குறி (பரி.2:15)
NEW MOON........................= இருள்மதி (பரி.11.37)
PLOUGH (கலப்பை).........= நாஞ்சில் (பரி.1:5)
RUBBER..............................= பயின் (பரி.10:54)
SILENCE..............................= வாளாமை (பரி.20:16)
STAGE.................................= அரங்கம் (பரி.8:109)
SWIMMING SUIT.................= ஈரணி (பரி.6:28)
TEEN AGE...........................= முகைப் பருவம் (பரி.10:19)
TIFFIN..................................= சிற்றடிசில் (பரி.10.105)
VIRGINITY............................= கன்னிமை (பரி.11:136)
HEARING.............................= ஓர்தல் (பரி.11.127)
BAZAAR...............................= அங்காடி (பரி.திர.2:9)
CENTRE...............................= நாப்பண் (பரி2:32)
FULL MOON........................= நிறைமதி (பரி.3:52)
BATHING DRESS................= நீரணி (பரி.10:27)
BED......................................= அமளி (பரி.10:34)
BLOOD.................................= குருதி (பரி.16:29)
CAKE....................................= பண்ணியம் (பரி.19:38)
DRAWING.............................= ஓவம் (பரி.21:28)
WIG.......................................= புனைமுடி (பரி.13:2)
PUBERTY..............................= பூப்படைவு (பரி.16:30)
8th DAY(அஷ்டமி).............. = எண்மதி (பரி.11:37)
READY MADE DRESS.........= புனைதுகில் (பரி.7:46)

CONSCIOUS OF THE OUTER WORLD DURING
SLEEP................................. = அறிதுயில் (பரி.13:29)

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,08]
{23-06-2019}

----------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------

எட்டுத்தொகை (04) பதிற்றுப் பத்து !

சேர மன்னர்களைப் பற்றி மட்டுமே பாடப் பெற்ற  பாடல்களின் தொகுதி இந்நூல் !


எட்டுத் தொகை நூல்களில் பதிற்றுப்பத்தும் ஒன்று. புறப்பொருள் பற்றிய தொகை நூல்களில் புறநானூற்றை அடுத்து பதிற்றுப் பத்தும் முதன்மை இடம் பெறுகிறது. இவை இரண்டும் ஆசிரியப் பா என்னும் அகவற்பாக்களால் இயன்றவை. எனினும் புறநானூற்றுக்கும் பதிற்றுப்பத்துக்கும் முதன்மையாக ஒரு வேறுபாடு உண்டு !

         
முடிமன்னர் மூவரையும், வேளிர் முதலிய பிறரையும், பற்றிய பாடல்களின் தொகுதி புறநானூறு. ஆனால், பதிற்றுப் பத்தோ சேர மன்னர்களையே பற்றிய பாடல்களின் தொகுதி !

         
பத்துப் பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்ட நூல் ஆதலின், இதுபதிற்றுப்பத்துஎன்று பெயர் பெறலாயிற்று. ஒவ்வொரு பத்தும், தனித்தனியே, ஒவ்வொரு புலவரால், ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப் பெற்றமையின், இந்நூல் பத்துப் பகுதியாகக் கொள்ளத் தக்கது. இதிலுள்ள பத்துப் பத்துக்களும்முதற் பத்து”, “இரண்டாம் பத்து”, என்று இவ்வாறு எண்ணால் பெயர் பெற்றுள்ளன !

         
ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அப் பத்தைப் படியவர், அதன் பாட்டுடைத் தலைவர், அவர் செய்த அரும் பெருஞ் செயல்கள், புலவருக்கு அவர் அளித்த பரிசில் முதலிய செய்திகளைக் குறிப்பிடும்பதிகம்உள்ளது !

         
இந்நூற் செய்யுட்களில் (100), இப்பொழுது கிடைப்பவை 80 மட்டுமே; பிற ஆசிரியர்களின் உரைகளால் தெரிய வருவன 6 பாடல்கள். இடைக்காலத் தமிழர்களின் கருத்தின்மையால் நாம் இழந்த நூல்கள் பற்பல. கிடைத்துள்ள நூல்களிலும் முழுமை பெறாதவை சில !

         
ஒவ்வொரு காலப் பகுதியிலும் தமிழுக்கு ஏற்பட்ட இழப்பும், ஏற்பட்டு வரும் இழப்புகளும் தமிழர்களின் கருத்தின்மையால் விளைந்தவை; விளைந்து வருபவை ! இனிமேலாவது தமிழ்க் குலம் விழிப்படைய வேண்டும் !

         
பதிற்றுப் பத்தில் பொதிந்து கிடக்கும் சில தமிழ்ச் சொற்களும் அவற்றுக்கு நேரான அல்லது இணையான அல்லது புனைப் பொருள் தரும் ஆங்கிலச் சொற்களும் உங்கள் பார்வைக்காக !

----------------------------------------------------------------------------------------------------------

CUTTER (wood cutter etc.).......= அரிஞர் (பதி.19:22)
PLAYER.....................................= ஆடுநர் பதி.17:6)
BAZAAR STREET......................= ஆவணம் (பதி.68:10)
INSTRUMENTALIST..................= இயவர் (பதி.17:7)
MUSICAL INSTRUMENT...........= இன்னியம் (பதி.26:3)
CENTRE / CENTER...................= நடுவண் (பதி.21:13)
BOTTLE......................................= மணிக்கலன் (பதி.30:2)

-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,03]
{18-06-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------