name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நல்வழி
நல்வழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல்வழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

நல்வழி (36) நண்டு, சிப்பி, வேய், கதலி !

ஞானம்செல்வம்கல்வி  மூன்றும்  அழிவது  எப்போது ? 


நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !
-----------------------------------------------------------------------------------------------------------------
பாடல்.36.
-----------------------------------------------------------------------------------------------------------------

நண்டுசிப்பி  வேய்கதலி  நாசமுறுங்  காலத்தில்
கொண்ட  கருவளிக்குங்  கொள்கைபோல் - ஒண்டொடீ
போதந்  தனங்கல்வி  பொன்றவருங்  காலம்அயல்
மாதர்மேல்  வைப்பார்  மனம்.

-----------------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------

தாய் போட்ட குட்டி நண்டுகள் தாயைத் தின்று வளரும். கிளிஞ்சில் சிப்பிகள் உடைந்த பின்பே அவற்றின் வயிற்றிலிருந்து முத்துக்கள் பிறக்கும். மூங்கில்கள் நெல் விளைந்த பின் வெடித்துச் சிதறும் காலத்தில் அவற்றின் வேர்களில் முளைகள் தோன்றி வளரும். தாய் வாழை நாசமடையும் காலத்தில் வாழைக்கன்றுகள் முளைக்கும் !

அதுபோல, அறிவு, செல்வம், கல்வி ஆகியவை அழிய வரும் காலத்தில் ஆண்கள் அயலார் வீட்டுப் பெண்ணின் மேல் ஆசைப்படுவர் !

-----------------------------------------------------------------------------------------------------------------
சுருக்க விளக்கம்:
-----------------------------

ஒருவன் தன் மனைவியை அன்றி பிற மகளிரின் மேல் ஆசை வைத்தால், அஃது அவனிடத்து உள்ள ஞானம், செல்வம், கல்வி என்னும் மூன்றும் கெடுதற்கு அறிகுறியாகும் !

-----------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்;
------------------------------------

ஒண் தொடீ ! = ஒளி பொருந்திய வளையல்களை அணிந்திருக்கும் பெண்ணே ! ; நண்டு = நீரில் வாழும் நண்டு; சிப்பி = கடலில் வாழும் முத்துச் சிப்பி; வேய் = மூங்கில்; கதலி = வாழை ; நாசமுறும் காலத்தில் = தாம் அழிவை அடையும் காலத்திலே; கொண்ட கரு அளிக்கும் கொள்கை போல் = (முறையே தாம்)  கொண்ட  (குஞ்சும், முத்தும், அரிசியும், காய்க் குலையும் ஆகிய) கருக்களை ஈனும் தன்மை போல ; (மனிதர்கள்) போதம் தனம் கல்வி  பொன்ற வரும் காலம் = ஞானமும், செல்வமும், கல்வியும் அழிய வரும் காலத்திலே; அயல்  மாதர் மேல் மனம் வைப்பார்  =  பிற மகளிர் மேல் ஆசை வைத்து அவர்களைய அடைய முயல்வார்கள்.

----------------------------------------------------------------------------------------------------------------
          
  ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை

----------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.: 2050, கடகம்,01]
{17-07-2019}
-----------------------------------------------------------------------------------------------------------------





நல்வழி (35) பூவாதே காய்க்கும் மரமும் உள !

பூக்காமல் காய்க்கின்ற மரங்களும் உள்ளன !



நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களில் ஒன்று. ஆத்திச் சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக் கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப் பாடல்களும் ஔவையார் இயற்றியன !

அரிய பல கருத்துகளை எடுத்துரைக்கும் நல்வழியில் நாற்பது பாடல்கள் உள்ளன. அவற்றுள், 35-ஆவதாக இடம் பெறும் இப்பாடல் பேதையிடம் எத்துணை  உரைத்தாலும் அதை அவன் உணரான் என்பதை விளக்குகிறது !

-------------------------------------------------------------------------------------------------------------
பாடல்.35.
-------------------------------------------------------------------------------------------------------------

பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே  -  தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலுந் தோன்றா துணர்வு !

-------------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-------------------------------------------------------------------------------------------------------------

பூவாதே காய்க்கும்  மரமும் உள மக்களு(ள்)ளும்
ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரேதூவா
விரைத்தாலும் நன்று ஆகா வித்து எனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு !

-------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:
------------------------------------

பூவாதே காய்க்கும் = பூக்காமலேயே காய்க்கின்ற ; மரமும் உள = மரங்களும் உள்ளன.  ஏவாதே நின்று தாம் உணர்வார் உளர் = (அதுபோல) மனிதர்களுள்ளும் ஏவுதல் இல்லாமலேயே தாமே அறிந்து செய்ய வல்லவரும் உண்டு.; தூவா = தூவி ; விரைத்தாலும் நன்று ஆகா வித்து என = விதைத்தாலும் முளைத்துப் பயன்படாத விதை போல ; பேதைக்கு உரைத்தாலும் உணர்வு தோன்றாது = மூடனுக்கு (எடுத்து விளங்கச்) சொன்னாலும் (அதனை அறியும்) அறிவு (அவனிடத்துஉண்டாகாது !

------------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
-----------------------

பூக்காமலேயே காய் காய்க்கின்ற மரங்கள் சில உண்டு. அதுபோல, மனிதர்களுள்ளும் யாரும் சொல்லாமலேயே தாமே அறிந்து செய்ய வல்லவரும் உண்டு. வளமான நிலத்தில் தூவி விதைத்தால் கூட  முளைத்துப் பயன்படாத விதைபோல, மூடனுக்கு எடுத்து விளங்கச் சொன்னாலும் அதனை அறிந்து கொள்ளும் அறிவுத் திறன் அவனிடத்தில் உண்டாகாது  !

குறிப்பறிந்து செய்பவரே அறிவுடையோர்; அறிவித்த பின்பு கூட அதை உள்வாங்கி அறிந்து செய்யாதவர் மூடர் என்பதே இப்பாடல் நமக்கு உணர்த்தும் கருத்து ஆகும் !

-------------------------------------------------------------------------------------------------------------
        
  ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை

-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, ஆடவை,24,]
{09-07-2019}
-------------------------------------------------------------------------------------------------------------



நல்வழி (33) வெட்டனவை ! மெத்தனவை !


வன்சொல் தோற்கும் ! இன்சொல் வெல்லும் !


ஔவையார் அருளிச் செய்த நல்வழி என்னும் நூலில் 33-ஆவதாக இடம் பெறும் இப்பாடலில் வன்சொல் தோற்கும், இன்சொல் வெல்லும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது !

------------------------------------------------------------------------------------------------------------
பாடல்.33.
------------------------------------------------------------------------------------------------------------

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது  -  நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.

------------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்
------------------------------------------------------------------------------------------------------------

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்  வேழத்தில்
பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாதுநெட்டு இருப்புப்
பாரைக்கு நெக்கு விடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.

------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-------------------------------------

வெட்டனவை = வன்சொற்கள்; மெத்தனவை = இன்சொற்கள் ; வெல்லாவாம் = வெல்லமாட்டா ; வேழத்தில் = வலிய யானை மீது ; பட்டு உருவும் கோல் = பட்டு ஊடுருவும் அம்பானது ; பஞ்சில் பாயாது = (மெல்லிய) பஞ்சுப் பொதியினை ஊடுருவித் துளைத்துச் செல்லாது ; நெட்டு = நீண்ட ; இருப்பு = இரும்பாலான ; பாரை = கடப்பாரை ; நெக்கு விடாப் பாறை = பிளவாத கருங்கற் பாறை ; பசுமரத்தின் = பச்சை மரத்தின் ; வேருக்கு நெக்கு விடும் = வேர் ஊடுருவினால் பிளந்து போகும்.
------------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------

வலிமையான யானை மீது பட்டு ஊடுருவும் அம்பானது, மென்மைத் தன்மை உடைய  பஞ்சுப் பொதியில் பட்டு ஊடுருவிச் செல்ல முடியாது. நீண்ட இருப்புப் பாரை, தாக்கும் போது பிளவுபடாத கருங்கற் பாறையானது உயிருள்ள மரத்தின் வேர் ஊடுருவிச் செல்லும்போது பிளவுபட்டு விடுகிறது. அதுபோன்றே வன்சொற்களால் இன்சொற்களை வெல்ல முடியாது ! இன்சொற்களே வெல்லும் !

வன்சொல் தோற்கும்; இன்சொல் வெல்லும் என்பது இப்பாடலின் கருத்தாகும் !

------------------------------------------------------------------------------------------------------------
         
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை

------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,27]
{12-07-2019}
------------------------------------------------------------------------------------------------------------






நல்வழி (32) ஆறிடும் மேடும் மடுவும் !


ஆற்றில் உண்டாகும் மேடு பள்ளங்களைப் போன்றது  செல்வம் !


ஔவையார் அருளிச் செய்த பாடல்கள் எல்லாம் இனிய வாழ்க்கைக்கு புதிய பாதை அமைத்துத் தருவன. செல்வத்தின்  நிலையாமை பற்றி நல்வழி என்னும் நூல் வாயிலாக  ஔவையார் அருளிய ஒரு பாடல் இதோ !

------------------------------------------------------------------------------------------------------------
பாடல்.32.
-------------------------------------------------------------------------------------------------------------

ஆறிடு மேடும் மடுவும்போ லாஞ்செல்வம்
மாறிடு மேறிடும் மாநிலத்தீர்  -  சோறிடுஞ்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறு முயர்ந்து.

------------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்
------------------------------------------------------------------------------------------------------------

ஆறிடும் மேடும் மடுவும் போல் ஆம் செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்  -  சோறு இடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பு ஆக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.

-----------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------

மாநிலத்தீர் = இந்தப் பெரிய பூமியில் வாழும் மாந்தர்களே ! ஆறு இடும் மேடும் மடுவும் போல் = ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப்படும் மணல் மேடும் பள்ளமும் போல; செல்வம் ஏறிடும் மாறிடும் = செல்வம் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கும் ; (ஆதலினால்) சோறு இடும் = இரந்து வருவோர்க்கு சோறு  இடுங்கள் ; தண்ணீரும் வாரும் = (பருகுதற்கு நல்ல) தண்ணீரையும் வார்த்திடுங்கள் (கொடுங்கள்) ; தருமமே சார்பு ஆக = (இப்படிச் செய்து வருவீர்களானால்) இந்தத் தருமமே துணையாக ; உள்நீர்மை உயர்ந்து வீறும் = உள்ளத்திலே தூய தன்மை ஓங்கி விளங்கும். (போல் ஆம் என்பதில் வரும் ஆம் என்பது அசைச் சொல். இதற்குப் பொருள் காண வேண்டியதில்லை)

-----------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------


இந்தப் பூவுலகில் வாழும் மாந்தர்களே ! கேளுங்கள் ! ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப்படும் மணல் மேடுகளும் தாழ்வான பள்ளங்களும் போல உங்களிடம் உள்ள செல்வமும் வளர்வதும் தேய்வதுமான குணங்களை உடையது. ஆகையால், இத்தகைய நிலையற்ற செல்வம் மீது ஆசை வைக்காமல், அறவழியில் உங்கள் சிந்தனையைச் செலுத்துங்கள்; இரவலர்களின் பசித்த வயிற்றுக்குச் சோறு இடுங்கள். அவர்கள் பருகுதற்கு நல்ல தண்ணீரும் கொடுங்கள்; இப்படிச் செய்து வருவீர்களானால், இந்தத் தருமமே உங்களுக்கு என்றும் துணை நிற்கும். உள்ளமும் தூய தன்மை உடையதாக ஓங்கி விளங்கும் !

-----------------------------------------------------------------------------------------------------------
          
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
 கட்டுரை

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மீனம்,20]
{03-04-2019}

-----------------------------------------------------------------------------------------------------------




நல்வழி (29) மரம் பழுத்தால் வௌவாலை !


”வா”, “வா” என்று கூவி அழைப்பார் உண்டோ ?


தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிச் செயத பல நூல்களுள் நல்வழியும் ஒன்று. அதிலிருந்து, கொடையாளருக்கு எல்லாரும் உறவினரே என்பதை வலியுறுத்தும்  ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------
பாடல்.29.
------------------------------------------------------------------------------------------------------------

மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவரு மங்கில்லை  - சுரந்தமுதம்
கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்.

-----------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்.
-----------------------------------------------------------------------------------------------------------

மரம் பழுத்தால் வௌவாலை வா என்று கூவி
இரந்து அழைப்பார் யாவரும் அங்கில்லைசுரந்து அமுதம்
கன்று ஆ தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத்தவர்.

------------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:
---------------------

மரத்தில் காய்கள் முற்றிப் பழுத்திருந்தால்,  பழத்தைத் தின்று பசியாறும் வௌவாலை “வா”, “வா’ என்று  வருந்தி அழைப்பவர்கள்  அம்மரத்தருகில் ஒருவருமில்லை. கன்றை உடைய பசு, பாலைச் சுரந்து கொடுத்தல் போல் ஏழை எளியவர்க்கு”இல்லை” என்று சொல்லாமல், தம்மிடம் உள்ள மிகுதியான செல்வத்தைக் கொடுத்து அவர்தம் துன்பத்தைத் தீர்ப்பாராயின்,  அத்தகைய ஈகையாளருக்கு  உலகத்தார் அனைவரும்  உறவினர் ஆகிவிடுவர் !

-----------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:
--------------------------

மரம் பழுத்தால் = மரத்தில் காய்கள் முற்றிப் பழுத்திருந்தால் ; வௌவாலை = பழத்தைத் தின்று பசியாறும் வௌவாலை ; வா என்று கூவி =  வா” “வாஎன்று கூவி ;  இரந்து அழைப்பார் = வருந்தி அழைப்பவர்கள் ; யாவரும் அங்கு இல்லை = அம் மரத்தருகில் ஒருவருமில்லை ; கன்று ஆ (கற்றா) = கன்றை உடைய பசு ; அமுதம் சுரந்து தருதல் போல் = பாலைச் சுரந்து கொடுத்தல்போல் ; கரவாது அளிப்பரேல் = ஏழை  எளியவர்க்கு  இல்லைஎன்று சொல்லாமல், (ஒளிக்காமல்,) தம்மிடம் உள்ள மிகுதியான செல்வத்தைக்  கொடுத்து அவர்தம் துன்பத்தைத் தீர்ப்பாராயின் ; உலகத்தவர் உற்றார் = உலகத்தார் (அவ் வௌவால் போலத் தாமே  வந்து ) ஈகையாளருக்கு உறவினர் ஆகிவிடுவார் !


------------------------------------------------------------------------------------------------------------
         
 “தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050,மீனம்,11]
{25-03-2019}

-------------------------------------------------------------------------------------------------------------




நல்வழி (28) உண்பது நாழி ! உடுப்பது நான்கு முழம் !

நாழி அளவுச் சோறு தான் உண்ண முடியும் !



ஔவையார்  அருளிச் செய்த நல்வழி என்னும் நூலிலிருந்து  ஒரு அருமையான பாடல். மனித வாழ்க்கையில் மன அமைதியின் தேவையை வலியுறுத்துகிறது இந்தப் பாடல்.

------------------------------------------------------------------------------------------------------------
பாடல்.28.
------------------------------------------------------------------------------------------------------------

உண்பது நாழி ! உடுப்பது நான்கு முழம் !
எண்பது கோடி நினைந்து எண்ணுவன  -  கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான் !

------------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:
----------------------

மனிதன் உண்பது ஒரு நாழி அளவிலான அரிசிச் சோறு !  அவன் உடுப்பது நான்கு முழ அளவுள்ள துணி ! இப்படி எளிமையாக இருக்கையில், அவன் மனதில் நிழலாடும் எண்ணங்கள் மட்டும்  எண்பது கோடியாகப் பெருகி மனத் துன்பத்தைத் தருகிறது. அகக் கண் குருடாக இருக்கிற மாந்தர்களின் குடி வாழ்க்கையானது (கருத்தின்றிக் கையாண்டால்) எளிதில் உடைந்து விடும் மண் கலம் போலச் சாகும் வரை அவனுக்குத் துன்பம் அளிப்பதாகவே  இருக்கிறது !

உள்ளதே போதும் என மனம் அமைதி  பெறாதவர்கள் இறக்கும் வரையில் சஞ்சலமே அடைவார்கள் என்பதே இப்பாடலின் கருத்து !

-------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------

நாழி =  முற்காலத்தில் வழக்கில் இருந்த ஆழாக்கு என்னும் முகத்தல் அளவை. ; நினைந்து எண்ணுவன எண்பது கோடி = நினைத்து என்னும் காரியங்களோ எண்பது கோடி (அதாவது பற்பல என்று பொருள்) ; கண் புதைந்த = அகக்கண் குருடாக இருக்கிற ; மண்ணின் கலம் = மண்ணால் செய்யப்பட்டு சூளையில் வேகவைக்கப் பெற்ற பானை, சட்டி போன்றவை ; சாந்துணையும் = சாகும் வரையிலும் ; சஞ்சலமே = (அவர்க்குத்) துன்பமாகவே இருக்கிறது !

-----------------------------------------------------------------------------------------------------------
          
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050,மீனம்,03]
{17-03-2019}
-----------------------------------------------------------------------------------------------------------




நல்வழி (22) பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து !

உழைத்துச் சேர்த்த செல்வத்தை  நல்வழியில் செலவிடுக  !


ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, ஞானக்குறள், அசதிக் கோவை, பந்தனந்தாதி, நல்வழி ஆகியவை ஔவையார் இயற்றிய நூல்கள். இவற்றுள் நல்வழியிலிருந்து ஒரு செய்யுளைப் பார்ப்போமா !

-----------------------------------------------------------------------------------------------------------
பாடல்.22
-----------------------------------------------------------------------------------------------------------

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்  -  கூடுவிட்டிங்
காவிதான் போயினபின் பாரே யநுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.

----------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்
----------------------------------------------------------------------------------------------------------

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்  -  கூடுவிட்டுஇங்கு
ஆவிதான் போயினபின்பு யாரே அநுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.

---------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------

பணத்தினை வருந்தி உழைத்துச் சேர்த்து பசியாற உண்ணாமலும், அறவழிச் செயல்களில்  ஈடுபடாமலும், பாதுகாப்புக் கருதி, யாருக்கும் தெரியாமல் பூமியிலே புதைத்து வைக்கின்ற புத்திகெட்ட மனிதர்களே கேட்பீர்களாக ! உங்களுக்குப் பிற்காலம் அந்தப் பணத்தின் பயனை அடையப் போவது யார் என்று உங்களுக்கே தெரியாது ! அப்படி இருக்கையில் எதற்காகச் சேர்த்து வைக்கிறீர்கள் ? உலக வாழ்வை நீப்பதற்கு முன் நற்செயல்களைச் செய்து நல்லவர் என்று பெயர் எடுங்களேன் !

--------------------------------------------------------------------------------------------------------

இன்னொரு கருத்து:
---------------------------------

வருந்தி வருந்தி உழைத்து கோடி கோடியாகச் சேர்த்து அளகைப் (BANK) பாதுகாப்புப் பெட்டகத்தில் தங்கக் கட்டிகளாக மறைத்து வைக்கும் மதிகெட்ட மாந்தர்களே கேளுங்கள் ! வாழும் காலத்தில் அறச் செயல்களுக்குப் பணத்தைப் செலவிட்டு நற்பெயர் ஈட்டுங்கள் ! அதை விடுத்து, அடுத்த தலைமுறைக்குச் சேர்த்து வைக்க விழைவீர்களானால், அந்தப் பணமே உங்கள் கான்முளைகளை (வாரிசுகள்) சோம்பேறிகளாக்கி, உங்கள் குலக்கொடியையே வேரறுத்து வீழ்த்தி விடும் !

----------------------------------------------------------------------------------------------------------

பாடல் எளிய சொற்களில் அமைந்திருப்பதால் அருஞ் சொற்பொருள் தேவையில்லை எனக் கருதி விடப்பட்டுள்ளது.

-----------------------------------------------------------------------------------------------------------
         
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை

-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, மீனம்,06]
{20-03-2019}

------------------------------------------------------------------------------------------------------------