name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 02/10/20

திங்கள், பிப்ரவரி 10, 2020

பெயரியல் ஆய்வு (06) - மது !

மது என்பது இனிமையைக் குறிக்கும் சொல் !



குழந்தைகளுக்கு வைக்கபெறும் வடமொழிப் பெயர்களில் பெரும்பான்மையானவை கடவுள் பெயர்களாகவே இருப்பதைக் காணலாம். இதற்கு என்ன  காரணம் ? ஆரியர்கள் சமற்கிருதத்தைப் பரப்புவதற்குப் பல சூழ்ச்சிகளைக் கையாண்டனர். அவற்றுள் ஒன்று தான் மக்களை அச்சப்படுத்தி அவர்களைத்  தம்வயப்படுத்தல் !


இயற்கை நிகழ்வுகளான இடி, மின்னல், புயல், வெள்ளம், ஆகியவற்றைக் கண்டு பண்டைய மனிதன் அச்சப்பட்டான். அனைத்தையும் அழிக்கவல்ல தீ (நெருப்பு), நச்சுப் பாம்புகள் ஆகியவையும் அவனை அச்சப்படுத்தின ! அவற்றை அமைதிப்படுத்தினால், தன்னைத் தற்காத்துக் கொள்ளமுடியும் என்று அவன் நம்பினான் !


இதன் அடிப்படையில் தோன்றியதே வழிபாடு ! மனிதனுக்குத் துன்பம் தரும் வல்லமை உள்ளவைகளை வணங்கினால், அவை தமக்குத் துன்பம் விளைவிக்காது என்று கருதி அவற்றை வழிபடத் தொடங்கினான் !


பண்டைய மக்களிடம் உறைந்து கிடந்த இந்த அச்ச உணர்வை ஆரியர்கள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்த விரும்பினார்கள். அதுவரை இயற்கையை மட்டுமே வணங்கி வந்த தமிழ் மக்கள், ஆரியர்கள் கற்பித்த  நூற்றுக் கணக்கான கடவுளர்களையும், அவர்களுக்கு இருப்பதாகச் சொல்லப்பட்ட வலிமைகளையும் நம்பத் தொடங்கினர் !


காலப் போக்கில், பல  தொன்மக் (புராணம்) கதைகளையும், மறவனப்புக் (இதிகாசம்) கதைகளையும் உருவாக்கி, மக்களிடையே அவற்றைப் பரப்பலாயினர்கதைமாந்தர்கள் பெயர்கள் அனைத்தையும் வடமொழிப் பெயர்களாவே உருவாக்கத் தொடங்கினர் !


ஆரியர்கள் உருவாக்கிவிட்ட கடவுளர்களை வணங்க வேண்டும் எனவும், இல்லையேல் அவை மனிதர்களை தீங்கு செய்யும் என்றும் கதைகட்டிவிட்டனர். கடவுளர்களை அமைதிப்படுத்த அவற்றுக்கு உணவுப் படையல் முதல் உயிர்ப் படையல் வரை செய்யவேண்டும் எனவும் கற்பித்தனர் !


கடவுள் பெயர்களை மனிதர்களுக்கு வைத்துக் கொண்டால், அவர்களைத் துன்பங்கள் அணுகா என்னும் தன்னல  அடிப்படையில், மனிதர்கள் கடவுள் பெயர்களைச் சூட்டிக் கொள்ளத் தொடங்கினார்கள். ஆரியர்கள் உருவாக்கிய அனைத்துக் கடவுள் பெயர்களும் வடமொழிப் பெயர்களாகவே இருந்தமையால், இக்காலத்திம் நாம் காணும் மாந்தப் பெயர்கள் அனைத்தும் வடமொழிப் பெயர்களாகவே இருக்கக் காண்கிறோம் !


மனிதர்கள் தன் மனைவி மக்கள் மீது வைத்திருக்கும் இயற்கையான பற்றின் (பாசம்) காரணமாகஅவர்களது நலனுக்காக என்று சொல்லி யார் எதைச் சொன்னாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள்; நம்புகிறார்கள்எந்தக் கோயிலுக்குப் போகச் சொன்னாலும் போகிறார்கள்; எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை அப்படியே ஏற்று, இணையத்தில்  பெயர் தேடி உலவுகிறார்கள் !


தான் செய்வது சரியா தவறா என்று எந்த மனிதனும் சிந்திப்பதே இல்லை ! இப்படித்தான், ஆரியர்களின் கான்முளையான பார்ப்பனர்களும், வயிற்றுப் பிழைப்பிற்காக ஏமாற்றித் திரியும் கணியர்களும் (சோதிடர்) மனைக் கணியர்களும் (வாஸ்து) வடமொழியின் முகவர்களாக மாறித் தமிழ்நாட்டில், தமிழை வீழ்த்திக் கொண்டிருக்கிறாரகள் !


சரி ! ”மதுரபாஷினிஎன்று தன் மகளுக்கு ஒரு தமிழாசிரியர் பெயர் வைத்திருப்பதைக் கண்டு வியந்து போனேன் ! இதற்குப் பொருள் என்ன ? மதுரம் என்றால் இனிமை; “பாஷினிஎன்றால்மொழிபவள்” ; (பாஷை > பாஷினி) எனவேமதுரபாஷினி”  என்றால்இன்மொழிஎன்று பொருள். இவர் போன்ற தமிழாசிரியர்கள் தான் இன்று தமிழ்நாட்டில் தமிழுணர்வு குறைந்து போனமைக்குக் காரணம் ! “மதுரம்தொடர்புடைய வேறு சில பெயர்களைக் காண்போமா ? தமிழில் மது என்னும் சொல்லுக்கு இனிமை, தேன், கள், அமுது, நீர், பால், இளவேனில் என்றெல்லாம் பொருள் உண்டு.


                                 ------------------------------------------------------------
                                      
                                       மது.........................= தேன்மதி
                                       மதுமதி.................= பால்நிலா / நிறைமதி
                                       மதுபாலா.............= இளவேனில்
                                       மதுரம்...................= தேன்மொழி
                                       மதுரபாஷினி.....= இன்மொழி
                                       மாதுரி....................= அமுதமொழி
                                       மாதுரி தேவி......= தமிழமுது

                                 ------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2051, சுறவம் (தை),22]
{05-02-2020}

-------------------------------------------------------------------------------------------------------------
     
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------------

பெயரியல் ஆய்வு (05) - இந்திரன் !

இந்திரன் என்னும் பின்/முன்னொட்டுப் பெயர்கள் - பொருளென்ன ? 



ஒவ்வொரு மனிதனும் தன் பெயருக்கான பொருளை அறிந்து வைத்திருத்தல் இன்றியமையாத் தேவை. தமிழ் நாட்டில் எத்துணைப் பேர் இப்படித் தன் பெயரின் பொருளைத் தெரிந்து வைத்திருப்பார்கள் என்றுக் கருதுகிறீர்கள் ?


கடைத் தெருவில்  சிலர் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அருகில் சென்று, இங்கிருப்பவர்களில் யார் யாருக்கு உங்கள் பெயரின் பொருள் தெரியும் என்றுக் கேட்டுப் பாருங்கள். பெரும்பாலானோர் ஏதோ கடவுள் பெயர் என்றுத் தெரியும்; ஆனால் பெயரின் பொருள் எல்லாம் தெரியாது என்பார்கள். ஒரு சிலர் மட்டுமே தம் பெயரின் பொருளைச் சொல்வார்கள் !


தமிழ்நாட்டு மக்களின் பெயர்களில் 90% வடமொழிப் பெயர்களாகவே அமைந்திருப்பதைக் காணலாம். அடிநிலை மக்களின் பெயர்கலியன், வீரன், அஞ்சான், குஞ்சு, காளி...” போன்ற தமிழ்ப் பெயர்களாக இருக்கும். இத்தகைய பெயர்கள் 5% இருக்கும். ஆனால் அவை மதிப்புக் குறைவான பெயர்கள் என்னும் கண்ணோட்டம் இடைநிலை மக்களிடமும். மேல்நிலை மக்களிடமும் இருப்பதால், அப்பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைப்பதில்லை !


அறிவழகன், வில்லாளன், முல்லைவழுதி, நாவுக்கரசு போன்ற அழகிய தமிழ்ப் பெயர்களை 5% மக்களிடம் நாம் காணமுடியும். தமிழ் உணர்வு என்றால் என்ன விலை என்று கேட்கக் கூடிய அரசியல் தலைவர்களே இப்போது எங்கும் நிறைந்து இருப்பதால், மக்களுக்கும் தமிழ் உணர்வு  இல்லாமற் போய்விட்டது. அதனால் மக்களும் தமிழ்ப் பெயர்களை வைத்துக் கொள்வதில்லை !


பொருளையே புரிந்து கொள்ளாமல் வடமொழிப் பெயர்களைத் தம் குழந்தைகளுக்கு வைக்கும் பெற்றோர், அப்பெயர்களின் பொருள் புரிய வந்தால், நிலைகுலைந்து போவார்கள் ! அவற்றுள் சிலவற்றை மட்டும் பார்ப்போமா !


-------------------------------------------------------------------------------------

பெயர்.............நேரடிப் பொருள்......மறைமுகப் பெயர்

-------------------------------------------------------------------------------------


அகோரம்........அழகில்லாதவன் ......(சிவன்)
பூவராகன்.......நிலப் பன்றி...................(திருமால்)
நாகசுந்தரம்....அழகிய பாம்பு................................
மாருதி..............குரங்கு...........................(அநுமான்)
மாத்ருபூதம்...தாய்ப் பேய்.....................................
நந்திதேவன்...காளை மாடு...............(சிவனூர்தி)
கோபால்..........மாடு மேய்ப்பவன்....(திருமால்)
வைரவன்........நாய்..................................(நாயூர்தி)
பைரவி.............நாய்க்குட்டி...................(துர்க்கை)
சுடலை............சுடுகாடு...........................(சிவன்)


-------------------------------------------------------------------------------------

இப்படி மதிப்புக் குறைவான பெயர்களைச் சூட்டிக் கொண்டு வலம் வரும் தமிழ் மக்கள் நூறாயிரக்  கணக்கில் இருக்கின்றனர் !


சரி ! இந்திரன் என்னும் பெயருக்கு உங்களுக்குப் பொருள் தெரியுமா ? இப்பெயருக்குப் பல பொருள்கள் உள்ளன. வானவர் தலைவன், தலைவன், அரசன், புலவன், கடவுள், விநாயகன், கேட்டை மீன்,  என்றெல்லாம் பொருள் கூறுகிறது தமிழ் அகரமுதலி !


இராசேந்திரன் என்றால் அரசர்களுக்கு எல்லாம் அரசன் (சக்கரவர்த்தி) – மன்னர் மன்னன் என்று பொருள். இராசராசன் என்றாலும் அதே பொருள்தான். நாகேந்திரன் என்றால் நாகங்களின் தலைவன் என்று பொருள். இவ்வாறு இந்திரன் என்னும் சொல்லை முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ கொண்டு அமைந்துள்ள வடமொழிப் பெயர்களையும் அவற்றுக்கான தமிழ்ப் பெயர்களையும் பார்ப்போமா !


-------------------------------------------------------------------------------------------

வடமொழி..................................தமிழ்

-------------------------------------------------------------------------------------------


இராசேந்திரன்.................மன்னர் மன்னன்
இராசராசன்......................கோவேந்தன் (கோ = அரசன்)
மகேந்திரன்......................பேரரசு (மகா = பெரிய)
நாகேந்திரன்.....................அரவரசு (அரவம்பாம்பு)
குபேந்திரன்......................செல்வப் பெருந்தகை
புவனேந்திரன்.................பூவரசு (புவனம் = உலகம் = பூ).
தர்மேந்திரன்...................அறவரசு (தர்மம் = அறம்)
கசேந்திரன்......................வேழவேந்தன் (கசம் = வேழம்)
ஞானேந்திரன்................அறிவுக்கரசு (ஞானம் = அறிவு)
விசயேந்திரன்.................வெற்றி வேந்தன் (விசயம் = வெற்றி)
சுரேந்திரன்.......................விண்ணரசு  (சுரர் = வானவர்)
சுசீந்திரன்.........................மதியரசு (சுசி = நிலவு, மதி)
நரேந்திரன்.......................பூவேந்தன் (நரன் = மனிதன்)
இந்திரகுமாரி..................இளவரசி (இந்திரன் = அரசன்)
இந்திரகுமார்...................இளவரசன் (குமார் = மகன்)


------------------------------------------------------------------------------------------

தமிழன் என்று சொல்லிக் கொண்டு, நம் பெயர்களை வடமொழிப் மொழி பெயர்களாக வைத்துக் கொள்வது தலைக்குனிவான செயல் அல்லவா ? நம் பெற்றோர்கள் தான் அந்தத் தவற்றைச் செய்துவிட்டனர். நாமாவது நம் பிள்ளைகள், பெயரன் பெயர்த்திகளுக்கு நல்ல தமிழ்ப் பெயரை வைக்கலாமே !


---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(Veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணிமன்றம்
[ திபி: 2051, சுறவம்,18]
(01-02-2020)

----------------------------------------------------------------------------------------------------------
              
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

---------------------------------------------------------------------------------------------------------