name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: புதிய தமிழ்ச் சொல்
புதிய தமிழ்ச் சொல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய தமிழ்ச் சொல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 28, 2021

புதிய தமிழ்ச் சொல் (61) காலிகை (CALENDAR)

புதுச் சொல் புனைவோம் !


காலிகை = CALENDAR

--------------------------------------------------------------------------------------

எந்தவொரு நிகழ்வையும் நினைவில் வைத்துக் கொள்ள நமக்குத் தேவை அஃது எப்பொழுது நிகழ்ந்தது என்பதை  அடையாளப்படுத்தும்  ஒரு குறியீடு !  இந்தியா எப்பொழுது விடுதலை பெற்றது ? இதை நமக்கு நினைவுபடுத்துவது 1947 என்னும்  ஆண்டுக் குறியீடு !

 

எந்த மாதத்தில் விடுதலை பெற்றது ?  இதை அடையாளப் படுத்துவது ஆகத்து என்னும் மாதக் குறியீடு !  எந்த நாளில் விடுதலை பெற்றது என்பதை அடையாளப் படுத்துவது 15 என்னும் நாள் குறியீடு !

 

நான் எப்பொழுது வீட்டிலிருந்து அலுவலகம் புறப்பட்டேன் ?  இதற்கு விடை சொல்வதுகாலைஎன்னும் வேளைக் குறியீடு !  அலுவலகம் எப்பொழுது இயங்கத் தொடங்குகிறது ? இதற்கு விடையளிப்பதுமணிஎன்னும் சிறுகால் (சிறிய காலப்பகுதி) குறியீடு !

 

இத்தகைய குறியீடுகள் தான் மனிதனின் நினைவுகளைக் குழப்பத்திலிருந்து மீட்கின்றன ! இந்தக் குறியீடுகளை எழுத்து வடிவில் வைத்துக் கொண்டால் அவை நிலைத்து நிற்கும் என்பதை அறிந்த மனிதன் அதற்கு வாய்ப்பாக வடிவமைத்துக் கொண்டது தான்காலண்டர்” (CALENDAR) !

 

நடைமுறையில் உள்ளகாலண்டர்கள் இரண்டு வகைப்படும். அவை (1) அன்றாடம் நாளையும் கிழமையையும்  காட்டும்நாள்காட்டிஎன்னும் “DAILY SHEET” (2) மாதப்பெயரையும், அம்மாதத்தில் உள்ள நாள்களையும், அந்த நாள்களுக்கு உரிய கிழமைகளையும் காட்டும்மாதங்காட்டிஎன்னும் மதிகாட்டி” “MONTHLY SHEET” ! (மதி என்பதற்குப் பிற பொருள்களுடன்மாதம்என்னும் பொருளும் உண்டு)

 

காலண்டர்என்பதைநாள்காட்டிஎன்னும் சொல்லால் அழைக்கிறோமே தவிரமதிகாட்டிஎன்னும் சொல் வழக்கில் வரவில்லை.  படித்தவர், படிக்காதவர்  என்ற வேறு பாடு  இன்றி, அனைவரது வாயிலும் புகுந்து புறப்படும் சொல்காலண்டர்” !

 

ஆங்கிலேயர் அகன்றுவிட்டாலும், அவர்கள் விட்டுச் சென்ற ஆங்கிலம் மட்டும் இன்னும் அகலவில்லை. சரி ! காலண்டர் என்பதைத் தமிழில் எப்படி அழைக்கலாம் ?

 

 கால்என்பதற்குத் தமிழில் பிற பொருள்களுடன்காலம்என்னும் பொருளும் உண்டு. ’காலண்டர்என்பதுகாலம்உரைக்கும் ஒரு கருவியல்லவா ? ”இகைஎன்றால்கொடுஎன்று  பொருள். காலத்தை அல்லது காலத்தின் உட்கூறுகளை  நமக்குச் செய்தியாகக் கொடுக்கும் கருவியை கால் + இகை = காலிகை என்று கூறுதல் தவறில்லையே !

 

நாம் பார்க்கும் அந்த நொடியில் அற்றைநாள் (அன்றைய நாளில்) , அல்லது பிற்றைநாள் (பின்னொரு நாளில்) நிலவும் நாண்மீன் (நட்சத்திரம்), பிறை நிலை, கதிர்மதி நிலை (திதி),  கிழமை, மாதம் முதலிய காலப் பகுதிகளைச் செய்தியாக நமக்குக் கொடுக்கும்   கருவி என்பதால் இதைக்காலிகைஎன்று அழைத்தல் பொருத்தமானது !

 

உலகிலுள்ள ஒவ்வொரு பொருட்கும், மக்கள் உள்ளத்தில் எழும் ஒவ்வொரு கருத்திற்கும்  ஒவ்வொரு சொல் தோன்றுவது இன்றியமையாததாகும். ஆயினும், ஒவ்வொரு கருத்திற்கும் ஒவ்வொரு புதுச்சொல் அமைவது இயலாது. ஆதலால், பழஞ் சொற்களினின்றே புதுச் சொற்கள் திரித்துக்  கொள்ளல் வேண்டும். கருத்துகள் பல்கப் பல்கச் சொற்களும் பல்க வேண்டி இருப்பதால், ஒரு மொழி முழு வளர்ச்சி அடைவதற்குப் பல்லாயிரக் கணக்கான திரிசொற்கள் தேவையாயுள்ளன.  (பக்.90.பாவாணரின் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் நூல்)

 

பாவாணரின்  வழிகாட்டுதலுக்கு இணங்ககால்”(காலம்) என்னும் சொல்லிலிருந்துகாலிகைஎன்னும் புதிய சொல்லைத் திரித்து அதை ஆங்கிலத்தில் வழங்கப்பெறும்  CALENDAR  என்னும் சொல்லுக்கு இணையான சொல்லாக அறிமுகப்படுத்துகிறேன் !

 

ஒரு புதிய சொல் உருவாக்கப்படும் போதுஅதிலிருந்து பல கிளைச் சொற்களை உருவாக்கும்  வாய்ப்புள்ளதாக  அச்சொல் நெகிழ்ச்சித் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும்.  CALENDAR  என்பதற்கு இணையானதாக  “நாட்காட்டியை இருத்திக் கொண்டால்  CALENDAR YEAR என்பதை நாட்காட்டி ஆண்டு என்று சொல்ல வேண்டி வரும். இச்சொல் பொருத்தமானதாக இல்லை.

 

எனவே கிளைச் சொற்களை உருவாக்க எந்தவகையிலும் இடையூறு தராத  காலிகைஎன்னும் சொல்லை நாம் புழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும் ! “காலிகையிலிருந்து உருவாகும் கிளைச் சொற்கள் அடியில் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பலுக்கிப் பாருங்கள் !

 

காலிகைஎன்னும் சொல் முற்றிலும் புதியது என்பதால் அதை ஏற்றுக் கொள்ளச் சிலருக்குத் தயக்கம் இருக்கும். தொடக்கத்தில் அப்படித்தான் இருக்கும்; போகப் போகப் பழகிவிடும். முற்றிலும் புதிய சொல்லான “CORONA”வை நாம் தயக்கமின்றி ஏற்கவில்லையா ? சுனாமியை (TSUNAMI ) ஏற்கவில்லையா ?  “காலிகையை ஏற்பதிலும் அத்தகைய  நெகிழ்ச்சித் தன்மையை  நாம் காண்பிக்க வேண்டும் !

 

காலிகைஎன்னும் சொல் வடிவில் சிறியது; பொருளில் பொலிவுடையது; ஓசையில் இனியது ! எனவேகாலிகையை . இனி நாம் புழக்கத்திற்குக் கொண்டு வருவோம் !

-----------------------------------------------------------------------------------------

 

CALENDAR......................................= காலிகை  

DAILY CALENDAR.........................= அற்றைக் காலிகை

DAILY  SHEET..................................= அற்றைக் காலிகை

MONTHLY  CALENDAR..............= மாதக் காலிகை

MONTHLY  SHEET........................= மாதக் காலிகை

CALENDAR MONTH....................= காலிகை மாதம்

CALENDAR YEAR..........................= காலிகை ஆண்டு

 

 -----------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.பி.2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

-------------------------------------------------------------------------------------------



 

 

 

வியாழன், பிப்ரவரி 04, 2021

புதிய தமிழ்ச் சொல் (60) ஊனடிசில் ( BRIYANI )

புதுச்சொல் புனைவோம் !

ஊனடிசில் - BRIYANI

------------------------------------------------------------------------------------------------------------

ஊன்சோறு என்னும் சொல்லைச்  சங்ககாலப்  புலவர்கள்  பல இலக்கியங்களில் எடுத்து  ஆண்டிருக்கிருக்கின்றர். ஓரிரண்டை மட்டும் இங்குப் பார்ப்போம் !

 

ஊன்சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும்என்பது புறநானூற்றுப் பாடல் 33, வரி 14. “

 

அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்என்று இதே புறநானூறு பாடல் 113, வரி 02-ல் சொல்கிறது !

 

ஆடுற்ற ஊன்சோறு”, என்கிறது மதுரைக் காஞ்சி (பாடல் வரி 35). இதே மதுரைக் காஞ்சியில் இன்னொரு இடத்தில், புகழ்படப் பண்ணிய பேர்  ஊன் சோறும் (பாடல் வரி 533) என்னும் வரி வருகிறது !

 

எடுத்துக் காட்டுக்காக  இரண்டு இலக்கியங்களில்  இருந்து மேற்கோள்களைச் சுட்டியுள்ளேன். ஊன் சோறு என்றால் என்ன ?

 

ஊன் என்றால் தசை என்று பொருள்.  இஃதன்றி நிணம், கொழுப்பு, புலால், இறைச்சி, உடல் என்றெல்லாம்  பொருள் சொல்கிறது கழகத் தமிழ் அகராதி ! தசை என்பதைசதைஎன்று சொல்வது இக்கால வழக்கு !

 

ஊன்கலந்து  செய்யப்படும் சோறுஊன்சோறு” ! இக்காலத்தில்பிரியாணிஎன்று சொல்கிறோமே அதைத் தான் அக்காலத்தில் ஊன்சோறு என்று வழங்கி இருக்கின்றனர் ! ஊன்சோற்றை ஆக்கும் முறையில் பண்டைக்காலத்திற்கும் இக்காலத்திற்கும் வேறுபாடு இருந்திருக்கக் கூடும். அதில் சேர்க்கும் நறுமணப் பொருள்களின் அளவில் வேறுபாடு இருந்திருக்கக் கூடும். செய்ம்முறையில் வேறுபாடு இருந்திருக்கக் கூடும். ஆனால் அக்கால “ஊன் சோறு” தான் இக்கால “பிரியாணி” என்பதில் ஐயமிருக்க முடியாது !


சோறு என்பதைக் குறிக்கும் இன்னொரு சொல் “அடிசில்”. “நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்” என்பது புறநானூறு (188).  ஊன்சோறு என்பதை “ஊனடிசில்” என்று சொன்னால் இன்னும் சுவையாக இருக்கும்.  எனவே “பிரியாணி” என்பதைத் தமிழில் “ஊனடிசில்” என்று மொழியாக்கம் செய்தல் பொருத்தமுடையதாக இருக்கும்.

 

ஊனடிசில் என்பது பொதுச்சொல். ஊனடிசிலில்  பலவகை உள்ளன. ஒவ்வொரு வகையையும் குறிப்பிட வெவ்வேறு சொற்களைப் பயன் படுத்தலாம். “ மட்டன் பிரியாணிஎன்பதைஆட்டூன்  அடிசில்” (ஆடு + ஊன் = ஆட்டூன்) என்று சொல்லலாம். ஆட்டுக்கு இன்னொரு பெயர் ”மறி”;  எனவே  மறி + ஊன் + அடிசில் = மறியூன் அடிசில் ;  இதை இன்னும் சுருக்கமாக ”மறியடிசில்” எனலாம் !


மாட்டுக்  கறி கலந்து செய்யப்படும் பிரியாணிக்கு “பீப் (Beef)  பிரியாணி” என்று பெயர். மாட்டுக்கு வேறு பெயர் “ஆன்”. எனவே ஆன் + ஊன் + அடிசில் = ஆனூன் அடிசில்; இதைச் சுருக்கமாக ”ஆனடிசில்” எனலாம் !


சிக்கன் பிரியாணி என்பதைகோழியூன் அடிசில்எனலாம். இதை இன்னும் சுருக்கமாக ”கோழியடிசில் என்று சொல்லலாம். முட்டை பிரியாணி என்பதைமுட்டையூன் அடிசில்”,அல்லது  சுருக்கமாக ”முட்டையடிசில்” என்று சொல்லலாம் ! முட்டை ஓட்டுக்குள் இருப்பது  நீர்ம வடிவிலான ஊன் தானே ! ஆகையால் முட்டையூன் அடிசில் / முட்டையடிசில் என்பது பொருத்தமன்றோ !

 

சரி ! “வெஜிடபிள் பிரியாணிஎன்பதை எப்படி அழைப்பது என்ற ஐயம் வருகிறதா ? அதையும் பார்ப்போம் ! காய்களின் உள்பகுதியில் என்ன இருக்கிறது ? “சதைஅல்லவா ?  நல்ல சதைப் பற்று உள்ள முருங்கைக் காய் என்னும் உலக வழக்கை நோக்குக ! சதை, தசை, ஊன் என்பவை ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள். எனவே சதை  என்பது  ஊன் அன்றி வேறென்ன  ? ஆகையால்  வெஜிடபிள் பிரியாணிஎன்பதைக்காயூன் சோறு” (காய் + ஊன் + சோறு = காயூன் சோறு) எனலாம். இதை இன்னும் சுருக்கமாக “காயடிசில்” என்று     சொல்லலாமே !

 

நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற அழகிய சொற்களை வழக்கறச் செய்துவிட்டு, ஆங்கிலச் சொற்களை இரவல் வாங்கிப் பயன்படுத்துவது நமக்கு அழகல்லவே  !

 

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பு கனவு கண்டார் பாரதியார். அவர் பிறந்த நாளில் அவர் படத்திற்கு மாலையிட்டு வணங்கினால் மட்டும் போதுமா ? அவரது கனவை நனவாக்க வேண்டாவா ?

 

பாரதியின் கனவுக்கு  வடிவம் தர இன்றே உறுதி ஏற்போம் ! இனிபிரியாணியைத் துறப்போம்; “ஊனடிசில்உண்போம் ! பண்டை இலக்கியங்கள்  “ஊன்சோறு” என்னும் சொல்லை ஆண்டாலும், நாம் அதைச் சற்று மேம்படுத்தி   “ஊனடிசில்” என்று உரைப்போமே   !


பொதுச் சொல்லான “பிரியாணி’ என்பதை மட்டும் “ஊனடிசில்” என்று உரைத்தால் சுவையாக இருக்காதா என்ன ?

 

----------------------------------------------------------------------------------------------------------

 

                                   BRIYANI .............................=  ஊனடிசில் 

                                   MUTTON BRIYANI...........=  மறியடிசில் 

                                   CHICKEN BRIYANI..........=  கோழியடிசில்

                                    BEEF BRIYANI..................=  ஆனடிசில்

                                    EGG BRIYANI....................=  முட்டையடிசில்

                                    VEGETABLE BRIYANI....=  காயடிசில் 

----------------------------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

அட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

(veda70.vv@gmail.com)

[தி.பி.2052, சுறவம் (மார்கழி) 15]

{28-01-2021}

---------------------------------------------------------------------------------------------------------



ஊனடிசில்

ஊனடிசில்


திங்கள், அக்டோபர் 05, 2020

புதிய தமிழ்ச் சொல் (59) ஏணாள் ( WEEK )

புதுச்சொல் புனைவோம் !

ஏணாள் - WEEK

--------------------------------------------------------------------------

நொடி, நிமிடம், மணி, காலை, நண்பகல், மாலை இரவு, நாள், வாரம், ஆண்டு, பத்தாண்டு, நூறாண்டு போன்ற சொற்கள் காலத்தைக் குறிப்பவை.  இவற்றுள் வாரம் என்பதைத் தவிர பிற அனைத்தும் தமிழ்ச்சொற்களே !

 

வாரம் என்பது சமற்கிருதச் சொல்லானவார்என்பதிலிருந்து திரிக்கப்பட்ட சொல்.  சமற்கிருதத்தில்  ஞாயிற்றுக் கிழமை  என்பதைச் சூர்ய வார் என்றும் திங்கட் கிழமையைச் சோம வார் என்றும் கூறுவார்கள் !

 

இவ்வாறே பிற கிழமைகளை மங்கள் வார், புத் வார், குரு வார், சுக்ர வார், சனி  வார் என்று  அழைப்பார்கள்.  இடைக்காலத் தமிழர்கள்வார்என்னும் சொல்லைவாரம்என்று திரித்துத் தமிழில் புழக்கத்திற்குக் கொண்டுவந்துவிட்டனர் !

 

கிழமை என்னும் சொல்லே சமற்கிருத்ததில்வார்என்று வழங்கப்படுகிறது.  கிழமை என்பது நாளையும், ‘வார்எனப்படும் வாரம் ஏழு நாள்கள் கொண்ட காலப் பகுதியையும் குறிக்கும்  சொல்லாகப் புழக்கத்தில் இருந்து வருகிறது !

 

சரி ! கிழமை என்பது நாளைக் குறிக்கும் சொல்லாகிவிட்ட பிறகுவாரம்என்பதைத் தமிழில் எவ்வாறு குறிப்பிடுவது ? மடிமைக்கு இடம் கொடுத்துவிட்ட தமிழர்கள்வாரம்என்பதற்குப் புதுச் சொல் கண்டுபிடித்துப் புழக்கத்திற்குக் கொண்டுவராமல்வாரம்என்றே  சொல்லத் தலைப்பட்டுவிட்டனர் !

 

வார இதழ்கள், வாராந்திர அறிக்கைவாராந்திர வரவு-செலவுவாராந்திர முன்னேற்றம், வாராந்திர விற்றுமுதல் என்று WEEK என்பதைக் குறிக்கும் WEAKLY என்னும் ஆங்கிலச் சொல் தமிழர்கள் எழுத்திலும் பேச்சிலும்வாராந்திரம்என்று  நிலைபெற்றுவிட்டது !

 

சரி ! ”வாரம்”, “வாராந்திரம்”  என்னும் சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்ளலாமாஏற்றுக் கொண்டால்  நாம் தமிழுக்குச் செய்யும் பெருந் தீங்காக அது அமைந்துவிடும் ! அப்புறம் வேறு என்ன செய்வது ? புதிய சொல்லை உருவாக்குவோமே !

 

வாரம் என்பது ஏழு நாள்கள் கொண்ட காலப் பகுதி என்பது உங்களுக்குத் தெரியும். இதைக் கருவாக வைத்தே நாம் புதுச் சொல் படைக்கலாம் ! வாரம் என்பது ஏழு நாள்கள்; ஏழு நாள்கள் என்பதை ஏழ்நாள் என்று சொல்லலாம்.  வாழ் + நாள் = வாணாள்  என்பது போல, ஏழு + நாள் = ஏழ்நாள் > ஏணாள்  என்று சொல்லலாம் !

 

ஏணாள் என்னும் சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் பார்ப்போமா !

 

-----------------------------------------------------------------------------------------------------------

                          WEEK..........................................= ஏணாள்

                          WEEKLY JOURNAL................= ஏணாளிதழ்

                          WEEKLY REPORT....................= ஏணாள்  அறிக்கை

                          WEEK-END HOLIDAYS.........= ஏணாள் ஈற்று  விடுமுறை

                          WEEK-WAR PROGRAME.....= ஏணாள் செயல்திட்டம்

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, கன்னி (புரட்டாசி),18]

{04-10-2020

-----------------------------------------------------------------------------------------------------------

          தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 

கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------



ஏணாள்