name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 05/01/22

ஞாயிறு, மே 01, 2022

வீரராகவர் பாடல் (09) ஏடாயிரம் கோடி எழுதாது தன்மனத்து !

 

அந்தகக்கவி வீரராகவர் வேண்டிய பொருள் தான் யாது?

------------------------------------------------------------------------------------------------------------

அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்னும் புலவர் காஞ்சிபுரத்தை அடுத்த பொன் விளைந்த களத்தூரில் பிறந்தவர். பிறவியிலேயே கண் பார்வை அற்ற அவர் தமது அயராத முயற்சியால் தமிழ் கற்றுப் புலவரானவர். திருக்கழுகுன்ற புராணம், சந்திரவாணன் கோவை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் முதலான பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

-------------------------------------------------------------------------------------------------------------

ஒருமுறை வீரராகவர் "தாகம் தீர்த்த செழியதரையன்' என்ற குறுநில மன்னனுக்குத்  தூக்குக்கவி (கவிதை வடிவக் கடிதம்) ஒன்றை அனுப்புகிறார். அந்தத் தூக்குக் கவி எப்படித் தொடங்குகிறது தெரியுமா ?

 

கோடி கோடியாய்  ஏடுகள் பலவற்றில் எழுதிப் படிக்காமல் அனைத்தையும் நெஞ்சத்திலேயே மனனம் செய்து இருத்திக் கற்ற வல்லவனும்,  எப்பொருளைப் பற்றி யார் கேட்பினும் அப்பொருளின் நுட்பம் உரைத்திடும் ஆற்றல் மிக்கவனுமாகிய வீரராகவன் என்னும் இந்தப் புலவன் விடுக்கும் தூக்கோலையை, ஆதிசேடனே சிரமசைத்துப் போற்றும் கலைகளின் அதிபதியும், கங்கைகுலத் தலைவனும், சேலம் மற்றும் தென்திசையில் உள்ள பாலைக்காடு (பாலக்காடு) ஆகிய இடங்களில் குறுநில மன்னர்களை வெற்றி கொண்டவனும் ஆகிய தாகம் தீர்த்த செழியன் காண்க !

 

சரி ! தூக்குக் கவியில் வீரராக முதலியார் அப்படி என்னதான் கேட்டிருந்தார் ?

-------------------------------------------------------------------------------------------------------------

 

ஏடாயிரம் கோடி எழுதாது தன்மனத்து
எழுதிப் படித்த விரகன்,


எதுகொடுப்பினும் அதுவே எனச்சொலும் கவிவீர
ராகவன் விடுக்கும் ஓலை !


சேடாதிபன், சிரமசைக்கும் கலாகரன்
திரிபதகை குல சேகரன்,


தென்பாலை சேலம் செயித்த, தாகந்தீர்த்த
செழியன் எதிர்கொண்டு காண்க  !


பாடாத கந்தருவம், எறியாத கந்துகம்,
பத்தி கோணாத கோணம்,


பறவாத கொக்கு, அனல் பண்ணாத கோடை,வெம்
படையாய்த் தொடாத குந்தம்,


சூடாத பாடலம், பூவாத மா, தொடை
தொகுத்து முடியாத சடிலம்,


சொன்னசொல் சொல்லாத கிள்ளை, ஒனிறெங்கும்
துதிக்க வர விடவேணுமே''

 

------------------------------------------------------------------------------------------------------------

 அருஞ்சொற்பொருள்:

--------------------------------------

விரகன் = கூர்மதியாளன் ;  சேடாதிபன் = மக்கள் தலைவன் ;   திரிபதகை = கங்கை ; குலசேகரன் = குலத்தவன் ; தென்பாலை = தென் திசையிலுள்ள பாலக்காடு ; ஒன்று + எங்கும் = ஒனிறெங்கும்.

-------------------------------------------------------------------------------------------------------

அந்தத் தூக்குக்கவியில் பறக்காத கொக்கு ஒன்றினைத் தனக்குப் பரிசாகத் தரவேண்டும் என்று வேண்டினார். அதுமட்டுமா ? இன்னும் பலவற்றையும் கேட்கிறார். அவை யாவை ? பார்ப்போமா ?

 

இசைக்காத இசை, எறிந்து விளையாடாத பந்து, கோணல் அற்ற மூலை, வெப்பம் இல்லாத  கோடைக்காலம், ஊறு செய்யாத குந்தம் என்னும் படைக்கருவி,  காலில் அணிய முடியாத பாதுகை, பூக்காத மாமரம், தொகுத்துப் பின்னலிடாத சடை, சொன்னதைச் சொல்லாத கிளிப்பிள்ளை ஆகியவற்றையும் எனக்கு  அனுப்புக'' என்று கேட்டிருந்தார் !

 

இயற்கைக்கும் இயல்புக்கும் மாறான இத்தனையும் ஏன் புலவர் கேட்டார்? கட்புலன் அற்ற அப்புலவருக்கு, காடும் மேடும் திரிந்து பரிசில் பெற்று வாழ்பவருக்கு இயல்புக்கு மாறான இத்தனை பொருள்களும் ஏன் தேவைப்பட்டன ?

 

புலவர் பலவாறாய்க் கேட்டாலும் அவை அனைத்தும் ஒன்றையே குறிக்கும். அவர் வேண்டியது எளிதில் பயணப்பட ஒரு குதிரை. அவ்வளவுதான் !

-------------------------------------------------------------------------------------------------------------

 

பாடாத கந்தருவம் = இசைக்காத கந்தருவ இசை, (அதாவது கந்தருவம் எனப்படும் குதிரை).

 

எறியாத கந்துகம் = எறிந்து விளையாட உதவாத பந்து, (அதாவது கந்துகம் எனப்படும் குதிரை)


பத்தி கோணாத கோணம்
= கோடு மடங்காத மூலை மடக்குக் கோணம் (Angle), (அதாவது கோணம் எனப்படும் குதிரை),

 
பறவாத கொக்கு = பறந்து செல்ல முடியாத கொக்கு, (அதாவது கொக்கு எனப்படும் குதிரை),

 

அனல் பண்ணாத கோடை = வெப்பம் இல்லாத  கோடைக் காலம், (அதாவது கோடை எனப்படும் குதிரை),

 

வெம்படையாய்த் தொடாத குந்தம் = தாக்கிக் காயப்படுத்தாத குந்தம் என்னும் போர்க்கருவி, (அதாவது குந்தம் எனப்படும் குதிரை),


சூடாத பாடலம் =  யாரும் அணியாத மிதியடி, (அதாவது பாடலம் எனப்படும் குதிரை,

 

பூவாத மா = பூக்காத மாமரம், (அதாவது மா எனப்படும் குதிரை)

 

தொடை தொகுத்து முடியாத சடிலம் = பின்னப்படாத சடை, (அதாவது சடிலம் எனப்படும் குதிரை),


சொன்னசொல் சொல்லாத கிள்ளை = சொன்னதைத் திருப்பிச் சொல்லாத கிளி, (அதாவது கிள்ளை எனப்படும் குதிரை),

 

குதிரையைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்தாம் எத்துணை எத்துணை ! [கந்தருவம் = கானம், குதிரை]  [கந்துகம் = பந்து, குதிரை] [கோணம் = மூலை, குதிரை]   [கொக்கு = பறவை, குதிரை]  [கோடை = கோடைக்காலம், குதிரை] [குந்தம் = போர்க்கருவி, குதிரை]  [பாடலம் = மிதியடி,  குதிரை]  [மா = மாமரம், குதிரை]  [சடிலம் = சடை, குதிரை]  [ கிள்ளை = கிளி, குதிரை]

 

”குதிரை” ஒன்று தனக்கு வேண்டும் என்று கேட்கும் வீரராகவர், தன் கருத்தைப் பாடல் வடிவில், திகைக்க வைக்கும் கருத்துடைய சொற்களைப் பெய்து தூக்குக் கவி வடித்திருக்கும் பாங்கினை எண்ண எண்ண வியப்புத்தான் மேலிடுகிறது !

 

கண்பார்வை இல்லாத ஒரு மனிதர் இணையற்ற திறமைகள் படைத்த தமிழ்ப் புலவராக சில நூற்றாண்டுகள் முன்பு விளங்கி இருக்கிறார் ! இரண்டு கண்களிலும் பார்வைப் புலன் படைத்திருக்கும் நாம் தமிழில் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறோமா ? எண்ணிப் பாருங்கள் !

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 18]

{01-05-2022}

-----------------------------------------------------------------------------------------------------



 


வீரராகவர் பாடல் (08) சீராடை யற்ற வைரவன் வாகனம் !

கட்டுச் சோற்றை நாய் கவ்விக் கொண்டு போயிற்றே !

------------------------------------------------------------------------------------------------------------

அந்தகக்கவி வீரராகவ முதலியாருக்கு பிறப்பிலேயே கண்பார்வை இல்லாமற் போயிற்று. கண்பார்வை இல்லாவிட்டாலும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி அனைவரும் விதந்து போற்றும் பெரும் கவிஞராகத் திகழ்ந்தார். 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தக் கவிஞர் தொண்டைமண்டலத்தில் காஞ்சிபுரம் அருகிலுள்ள பூதூரில் பிறந்தவர். அவரது அரிய பாடல் ஒன்றைப் பார்ப்போமா !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல்:

----------------------------------------------------------------------------------------------------------


சீராடை யற்ற வைரவன் வாகனஞ் சேரவந்து

பாராரு நான்முகன் வாகனந் தன்னைமுன் பற்றிக்கௌவி

நாராயணனுயர் வாகன மாயிற்று நம்மைமுகம்

பாரான்மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே!

-----------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------------------

சீராடை அற்ற வைரவன் வாகனம் சேர வந்து,

பார் ஆரும் நான்முகன் வானம் தன்னை முன்பற்றிக் கௌவி

நாராயணன் உயர் வாகனம் ஆயிற்று நம்மை முகம்

பாரான் மை வாகனன் வந்தே வயிற்றினில் பற்றினனே !

------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------

சீராடை = அணியும் ஆடை ; அற்ற = இல்லாத ; வைரவன் வாகனம் = வைரவனின் வாகனமாகிய நாய் ஒன்று ; சேரவந்து = அருகில் வந்து ; பாராரும் = நிலத்திலிருந்த (அதாவது என் அருகில் தரையில் வைக்கப்பட்டிருந்த) ; நான்முகன் வாகனம் தன்னை = நான்முகக் கடவுளின் வாகனமாகிய அன்னத்தை (அன்னம் = சோறு - அதாவது சோற்றினை – கட்டுச் சோற்று மூட்டையினை) 


முன்பற்றிக் கௌவி = வாயில் கௌவிக் கொண்டு ; நாராயணன் உயர் வாகனம் = கருடன் (அதாவது கருடனைப் போல்) ஆயிற்று = விரைந்து சென்று விட்டது) ; நம்மை முகம் பாரான் = பசியால் வாடியிருக்கும் நம் (என்) முகத்தை பாராமல் - இரக்கமில்லாமல்; மை வாகனன் = (மை எனப்படும்) ஆட்டினை வாகனமாகக் கொண்டிருக்கும் அக்னி பகவான் (அதாவது பசி என்னும் நெருப்பு); வந்தே வயிற்றில் பற்றினனே = வயிற்றில் பற்றிக் கொண்டது.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------

கட்டுச் சோற்று மூட்டையினை என்னருகில் தரையில் வைத்துவிட்டு ஓய்வாகப் படுத்திருந்தேன். எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று சோற்று மூட்டையைக் கவ்விக் கொண்டு கருடன் போல விரைந்து ஓடிவிட்டது. என் வயிற்றில் பசி என்னும் தீ பற்றிக் கொண்டு என்னை வாட்டுகிறது !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர், 

தமிழ்ப் பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 18]

{01-05-2022}

------------------------------------------------------------------------------------------------------------