name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 02/22/20

சனி, பிப்ரவரி 22, 2020

வரலாறு பேசுகிறது (31) பேரா. அ.ச.ஞானசம்பந்தன் !

மறைந்த  தமிழறிஞர்களைப் பற்றிய தொடர் !


பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன்.


தோற்றம்:

திருச்சி நகரை அடுத்த கல்லணைக்கு அருகில் உள்ள அரசங்குடி என்னும் ஊரில் 1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் நாள் ஞானசம்பந்தன் பிறந்தார். அவரது தந்தார் பெயர் அ.மு.சரவணமுதலியார். தாயார் சிவகாமி அம்மையார் !

கல்வி:

தனது தொடக்கக் கல்வியை அரசங்குடியில்  கற்ற ஞானசம்பந்தன், உயர்நிலைப் பள்ளிக் கல்வியை இலால்குடியில் உள்ள கழக உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். அடுத்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து இடைநிலைக் கல்வி வகுப்பில் (INTERMEDIATE) இயற்பியல் பாடத்தைத் தேர்வு செய்து படித்தார். அப்போது அங்கு தமிழ்ப் பேராசிரியராக இருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார், ஞானசம்பந்தனின் தமிழறிவையும் ஆர்வத்தையும் கண்டு அவரைத் தமிழ்ப் பாடத்திற்கு மாறும்படிச் செய்தார் !

இங்கு படிக்கையில், இவருக்கு திரு.வி.., தெ.பொ.மீ., போன்ற அறிஞர்களின் தொடர்பு கிடைத்தது. ஆகையால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேயே தமிழில் பயின்று  கலையியல் வாலை (B.A), கலையியல் மேதை (M.A) ஆகிய பட்டங்களையும் பெற்றார் ! அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இவர் பயில்கையில், இவருடன் படித்தவர்கள் பேராசிரியர் க.அன்பழகன்,  நாவலர். இரா.நெடுஞ்செழியன், பொதுவுடைமைக் கட்சியில் புகழ் பெற்று விளங்கிய பாலதண்டாயுதம் போன்றோர் ஆவர் !

திருமணம்:

..ஞானசம்பந்தனுக்கு 1940 ஆம் ஆண்டு அவரது 24 ஆம் அகவையில் திருமணம் நிகழ்ந்தது. காதல் திருமணம் ! தன்னுடன் பயின்ற இராசம்மாள் என்பவரைக் காதலித்து, பல எதிர்ப்புகளையும் தடைகளையும் கடந்து, மருத்துவர். தர்மாம்பாள் தலைமையில் தனது திருமணத்தை நிகழ்த்திக் காட்டினார்.  இவ்விணையருக்கு மெய்கண்டான், சரவணன் என இரு ஆண் மகவினரும் சிவகாமசுந்தரி, பங்கயச்செல்வி, அன்புச் செல்வி, மீரா ஆகிய நான்கு பெண் மகவினரும் பிறந்தனர் !

ஆசிரியப் பணி:

தமிழில் கலையியல் மேதை பட்டம் பெற்ற பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1942 ஆம் ஆண்டு விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து 1956 வரை 14 ஆண்டுகள் அங்குப் பணி புரிந்தார்.  மாணவர்களின் திறனறிந்து அவர்களுக்குக் கற்பிக்கும் வல்லமை படைத்தவராக இவர் திகழ்ந்தார். இவரது வழிகாட்டுதலின் பேரில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் பலர். அவர்ளுள் பேராசிரியர் ந.சஞ்சீவி, முனைவர் ப.இராமன், முனைவர் சித்தலிங்கையா, பேராசிரியர் மா.இரா.போ.குருசாமி போன்றோர் முதன்மையானவர்கள் !

வானொலி நிலையப் பணி:

இவரது தமிழாற்றல் சென்னை வானொலி நிலைய அலுவர்களை ஈர்த்தது. எனவே இவர் பச்சையப்பன் கல்லூரியிலிருந்து விடுவிப்புப் பெற்று, சென்னை வானொலி நிலையத்தில் நாடகங்கள் புனைவுப் பிரிவின் தலைமை அலுவலராக 1956 ஆம் ஆண்டு பொறுப்பேற்று 1961 வரை ஐந்தாண்டுகள் அங்கு பணியாற்றினார் ! பின்னணிப் பாடகி ஏ.பி.கோமளா திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை தந்து இனிய குரலில் பாட, அதற்கு அ..ஞா. அவர்களே விளக்கமளிக்கும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது. இசையறிஞர்,எசு.இராமநாதனின் இசையமைப்பில் ஆய்ச்சியர் குரவையை ஒலிபரப்பச் செய்தார். மணிமேகலை,கம்ப இராமாயணம், கலிங்கத்துப் பரணி போன்றவற்ரை வானொலி நாடகங்களாக்கி அளித்தார். எம்.எம்.தண்டபாணி தேசிகரைப் பாட வைத்து சிலம்பு நாடகத்தை அரங்கேற்றினார் !

பிற பணிகள்:

1959 ஆம் ஆண்டு தமிழக அரசின் செய்தித் துறையில் மொழிபெயர்ப்புப் பிரிவின் இணை இயக்குநர் பணிக்கு அ.ச.ஞா. தேர்வானார். பின்னர் தமிழ் வெளியீட்டுத் துறையின் பொதுத்துறைச் செயலாளராகவும், தமிழ் வளர்ச்சித் துறையின் இணை இயக்குநராகவும் பணிபுரிந்தார். 1967 முதல் 1970 வரை மீண்டும் அதே தமிழ் வெளியீட்டுத் துறையின் இயக்குநர் பொறுப்பேற்றார். அக்காலத்தில் 350க்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களை இவர் தமிழில் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது ! 1940ல் கம்பனடிப்பொடி சா. கணேசனால் காரைக்குடியில் கம்பன் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அதுமுதல் 1985 வரை ஒவ்வோர் ஆண்டும் அதில் சிறப்புரையாற்றுவதை அ.ச.ஞா. வழக்கமாக வைத்திருந்தார் !

பல்கலைக் கழகப் பணி:


மதுரைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற தெ.பொ.மீ., அ.ச.ஞா.வைத் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்க அழைத்தார். அவரது அழைப்பை ஏற்ற அ..ஞா. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக  1970 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 1973 வரை மூன்றாண்டுகள் பணியாற்றி, அதிலிருந்து ஓய்வு பெற்றார் !

படைப்புகள்:


பேராசிரியர் அ..ஞானசம்பந்தன்அகமும் புறமும்”, “அரசியர் மூவர்”, “அருளாளர்கள்”, ”ஈராவணன் மாட்சியும் வீட்சியும்”, “இலக்கியக் கலை”, “இன்றும் இனியும்”, “இன்னமுதம்”, “கம்பன் கலை”, “தொட்டனைத்தூறும் மணர்கேணி”, ”பாரதியும் பாரதி தாசனும்”, “புதிய கோணம்உள்பட 39 நூல்களை எழுதியுள்ளார் ! தாகூர், ஜான் டெவி, தொரோ போன்றோரது நூல்களைத் தமிழில் பெயர்த்துள்ளார். தெள்ளாறு நந்தி உட்படப் பதினைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார் !

பன்முக அறிஞர்:


..ஞானசம்பந்தன், தமிழறிஞர் மட்டுமல்ல, எழுத்தாளர், சொற்பொழிவாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர். இவரது தந்தையார் அ.மு.சரவண முதலியாரும் தமிழறிஞராக விளங்கியவர் என்பதால், இளமையிலேயே ஞானசம்பந்தனிடம் தமிழ் ஊற்றாகப் பெருக்கெடுத்த்து. இவர் தனது ஒன்பதாவது அகவையில் துறையூர் சைவசமய மாநாட்டில் முதன்முதலில் மேடையேறிப் பேசி, குழுமியிருந்த சான்றோர்களின் பாராட்டைப் பெற்றார் !

சொற்பொழிவாளர்:

தூத்துக்குடியில் வ,.சி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் ஞானசம்பந்தன் தனது 15 ஆம் அகவையில் சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களுடன் மேடையேறி உரையாற்றிப் புகழ் பெற்றார் ! ஒருமுறை எசு.வையாபுரிப் பிள்ளை, சச்சிதானந்தன் பிள்ளை திரு.வி.க போன்றோர் கலந்து கொண்ட சைவ சித்தாந்த பேரவைக் கூட்டத்தில் இவர் உரையாற்றினார். இவரது சொற்பொழிவால் கவரப்பெற்ற திரு,வி.., பின்னாளில் ஞானசம்பந்தனின் முதன்மை வழிகாட்டியாகச் செயல்பட்டு இவரது முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவினார் !

விருதுகள்:

பேராசிரியர் அ..ஞானசம்பந்தனுக்கு தமிழ் மொழி அறிஞர்களுக்கான சாகித்திய அகாதமி விருது 1985 ஆம் ஆண்டில் வழங்கப்பெற்றது. ”தமிழ் மூதறிஞர்”, “தமிழ்ச் செம்மல்”, “இயற்றமிழ்ச் செல்வர்”, “செந்தமிழ் வித்தகர்”, “கம்பன் மாமணிபோன்ற பல பட்டங்களையும், ”இராசா அண்ணாமலைச் செட்டியார் விருது”, ”திரு.வி.க விருது”, “குறள் பீட விருது”, “கலைமாமணிவிருது, “தருமபுர ஆதீன விருது”, “கபிலர் விருதுஉள்படப் பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார் !

மறைவு:

இத்தகைய புகழ் மிக்க தமிழறிஞரான அ..ஞானசம்பந்தனார் 2002 ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், 27 ஆம் நாள், தமது 86 ஆம் அகவையில் இப்பூவுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார் !

முடிவுரை:

செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர் செயற்கரிய செய்கலாதார் என்னும் வள்ளுவரின் வாக்குப் படி திருவாசகத்தைப் பற்றிய சிந்தனைகள் ஐந்து தொகுதிகள் படைத்த பேராசிரியர் அ..ஞானசம்பந்தன், உண்மையிலேயே தாம் பெரியவர்தான் என்பதை மெய்ப்பித்துக் காட்டிய அருளாளர் ! உழைப்பவர்கள் உயர்வடைவார்கள் என்பதற்குச் சான்றாகிய விளங்கிய அ..ஞா. அவர்களின் புகழ் ஓங்குக ! அவரது தமிழாற்றல் தமிழ்ப் பணி மன்ற நண்பர்களுக்கு ஊக்கமூட்டுவதாக அமைவதாக !

------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2051, கும்பம் (மாசி),10]
{22-02-2020}

-----------------------------------------------------------------------------------------------------------
             
தமிழ்ப் பணிமன்றம்  முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------