name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பழமொழி
பழமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 02, 2021

பழமொழி நானூறு (108) பழங்கன்று ஏறாதலும் உண்டு !

எளிய மனிதன் வாழ்வில் ஏற்றம் பெறுவதும் உண்டு !

                                                            *********

நலங்கிள்ளி பத்தாம் வகுப்புப் படித்து முடித்து விட்டு, வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான். வேலை கிடைத்தபாடில்லை ! ஒரு நாள் மனச் சோர்வுடன்  குளக்கரை ஆல மரத்தடியில் வந்து அமர்ந்தான் !

 

அங்கு நிழலில் படுத்திருந்த ஒரு முதியவர், அவனைப் பார்த்து, “ஏன் தம்பி சோர்வாக இருக்கிறாய் ?  என்ன காரணம் ?” என்று அன்பாகக் கேட்டார். நலங்கிள்ளி தன் சோர்வுக்கான காரணத்தைக் கூறினான் !

 

முதியவர் அவனுக்கு மனத்தெம்பூட்டும் வகையில் பேசினார்.  அவரது பேச்சில் ஈர்ப்புக் கொண்ட நலங்கிள்ளி, அவரைப் பற்றி உசாவினான். தான் கோயில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுக்கும் ஒரு இரவலர் என்றும், தனக்குக் குடும்பமோ பிள்ளை குட்டிகளோ கிடையாது என்றும் கூறினார் !

 

நலங்கிள்ளியின் இல்லத்தில் அவனது தந்தை, தாய், ஒரு தங்கை அவன் உள்பட நான்கு பேர் உள்ளதாகவும், தந்தை கூலித் தொழிலாளி என்றும் அவரது வருமானம் குடும்பச் செலவுக்கு மட்டுமெ போதுமானதாக இருப்பதாகவும்  கூறினான் !

 

அவனது பேச்சினைக் கேட்ட முதியவர், வேலை கிடைக்காவிட்டால் என்ன, சிறிய அளவில் கடை வைத்து வருவாய் ஈட்டலாமே என்று தனது கருத்தை எடுத்துச் சொன்னார் !

 

கடை வைக்கும் அளவுக்கு முதலீடு செய்யத் தன் தந்தையிடம் பணமில்லை  என்பதை நலங்கிள்ளி அவரிடம் எடுத்துச் சொன்னான். அதைக் கேட்ட முதியவர், ” தம்பி !  கடை வைக்கலாம் என்பதை நீ ஏற்றுக் கொள்வதாக இருந்தால் பணத்திற்கு நான் வழிவகை செய்கிறேன்என்றார் !

 

அவரை வியப்புடன் நோக்கிய நலங்கிள்ளி,” ஏற்றுக் கொள்கிறேன் ஐயா !” என்றான்.  அவர், “வா ! உன் வீட்டிற்குச் செல்வோம்என்று அழைத்தார். இருவருமாக, நலங்கிள்ளி வீட்டை அடைந்தனர். நலங்கிள்ளியின் தந்தையுடன் முதியவர் கலந்து உரையாடினார் !

 

நலங்கிள்ளியின் தந்தையிடம் அவர், “ஐயா ! என்னிடம் பத்தாயிரம் உருபா பணம் இருக்கிறது, பிச்சை எடுத்துச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருக்கிறேன். அதைத் தருகிறேன். அதை வைத்து நலங்கிள்ளி சிறிய அளவில் ஒரு கடை தொடங்கட்டும்என்றார் !

 

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்வதானால், நான் சொல்வதையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்; உங்களுக்கோ குடும்பம் , மனைவி,  மக்கள் என்று ஏதுமில்லை என்கிறீர்கள்;  அப்படி இருக்கையில் , நீங்களும் எங்கள் வீட்டிலேயே எங்களுடன்  சேர்ந்து வாழ ஒப்புக் கொள்வதானால், உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம்என்றார் !

 

இருதரப்பினரும் ஒப்புக்கொள்ள, ஒரு நல்ல நாளில் நலங்கிள்ளி சிறிய அளவில் கடை ஒன்றைத் திறந்தான். ஊர் மக்கள் மெல்ல மெல்ல அவன் கடையில் பொருள்கள் வாங்கத் தொடங்கினர் !

 

ஆனால், ஊர் மக்களில் இன்னொரு  பகுதியினர், சின்னஞ்சிறிய கடையை வைத்துக் கொண்டு நலங்கிள்ளி எப்படிப் பிழைக்கமுடியும், கடைக்கான முதலீடு போதாது; கடையை விரைவில் இழுத்து மூடிவிடுவான்  என்று கேலி பேசலானார்கள் !

 

நலங்கிள்ளியை இளக்காரமாகப் பார்க்கலானார்கள் !  அவன் செய்திருப்பது சிறு முதலீடு என்றாலும், அதையே  ஊர்க்காரர்களில் சிலர்  பேசு பொருளாக மாற்றி அவனைச் சிறுமைப்படுத்த முயன்றார்கள் !

 

ஊர்க்காரர்களின் இளக்காரப் பேச்சு நலங்கிள்ளியை உசுப்பி விட்டது.  கடுமையாக உழைத்தான்; கடை வணிகம் சூடு பிடித்தது. ஆதாயம் பெருகியது; கடை விரிவாகியது; எந்தப் பொருளைக் கேட்டாலும்இல்லைஎன்று சொல்லாத அளவுக்கு, அவன் பொருள்களை வாங்கி இருப்பு வைத்தான் !

 

ஏழை வீட்டுப்  பையனாக இருந்த நலங்கிள்ளி, முதியவரின் பண உதவியாலும், தனது கடுமையான உழைப்பாலும், நேர்மையான செயல்படுகளாலும், தனது கடையை விரிவு படுத்தி, அதைச் சிறப்பங்காடி (SUPER MARKET) என்ற அளவுக்கு உயர்த்தி இருக்கிறான் !

 

இதைத் தான் பண்டைப் புலவர் முன்றுறை அரையனார்  தனது பாடல் மூலம் உலகோருக்கு அறிவிக்கிறார்,’”ஒருவனிடம்  உள்ளது  மிகச் சிறிய  முதலீடு என்றாலும், ஊர்க்காரர்கள் அதை இளக்காரமாக எண்ணலாகாது; ஏனெனில் கடைத் தெருவிலே  கிடைத்ததை  உண்டு வாழும் பழைய கன்று என்றாலும், பிற்காலத்தில் அது வீறு மிக்க ஏறு (கம்பீரமான காளை) ஆதலும் உண்டு” !

 

இதோ அந்தப் பாடல் !

---------------------------------------------------------------------------------------------------------

பழமொழி நானூறு (பாடல்.108)

--------------------------------------------------------------------------------------------------------

உள்ளூ  ரவரால்   உணர்ந்தாம்   முதலெனினும்

எள்ளாமை   வேண்டும்;   இலங்கிழாய் ! – தள்ளாது

அழுங்கல்   முதுபதி   அங்காடி  மேயும்

பழங்கன்று   ஏறாதலும்   உண்டு.

 

---------------------------------------------------------------------------------------------------------

பாடலின் கருத்துரை:

-----------------------------------

 

ஒரு மனிதனிடம்  உள்ளது மிகச் சிறிய செல்வம் தான் (முதலீடு தான்)  என்று தெரியவந்தாலும்  உள்ளூர்க்காரர்கள்  அவனை ஏளனம் செய்யக் கூடாது ! இளக்காரமாகப் பார்க்கக்கூடாது !   ஏனெனில், இன்று கடைத்தெருவில் திரிந்து அலைந்து , கிடைத்தவற்றை உண்டு வாழும்  சிறு கன்று கூட பிற்காலத்தில்  வீறுமிக்க ஏறாக (காளையாக) வளர்ச்சி அடையக் கூடும் !

 ---------------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------------

கைம்முதல் சிறிதேயானாலும், விடாமுயற்சியால் அதனைப் பெரிதாக்கி, தன்னை இகழ்ந்த ஊர்மக்கள் மெச்ச  வாழமுடியும் !  முயற்சிதான் வேண்டும் !

----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

--------------------------------------

 

உள்ளூர் அவரால் = உள்ளூர் மக்களால் ; உணர்ந்தாம் முதலெனினும் = மிகச் சிறிய முதலீடே   என்று உணரப்பட்டாலும்  ; எள்ளாமை வேண்டும் = இளக்காரமாகப் பார்க்கலாகாது ; இலங்கிழாய் = ஒளிமிக்க அணிமணிகளைப் பூண்டவளே !; தள்ளாது = ஒதுக்கிவிடாது ; அழுங்கல் = ஆரவாரம் நிறைந்த  ; முதுபதி = பமையான ஊர் ;  அங்காடி = கடைத் தெரு ; மேயும் பழங் கன்று = அலைந்து திரிந்து கிடைத்ததை உண்ணும்  கன்று;  ஏறு = பிற்காலத்தில் வீறு மிக்க காளையாக ; ஆதலும் உண்டு = வளர்ச்சி பெறுவதும் உண்டு.

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் +இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.பி:2052, சுறவம் (தை) 20]

(02-02-2021}

-------------------------------------------------------------------------------------------------------------



 

 

சனி, ஜூன் 20, 2020

பழமொழி நானூறு (127) ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் !

காலம் கனிவானால்  மிகு முயற்சி தேவையில்லை !


{குறிஞ்சி நிலத் தலைவன் ஒருவனுடன்  புலவர் ஒருவர் உரையாடுகிறார்}


நெடிதுயர்ந்த  மலைகள் நிறைந்த நாட்டின் தலைவனே ! உனக்கு ஒன்று சொல்கிறேன்; கேளாய் !

காலம் கனிவாக இருக்குமேயானால், செல்வத்தை ஈட்டுவதற்கு முனைப்பான முயற்சி மிகுதியும் தேவையில்லை ! காலம் உதவியாக இல்லையேல் ஈட்டிய செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள எத்துணை முயன்றாலும், பயனில்லை; அச்செல்வம் கைவிட்டுப் போயே தீரும் !

முயற்சியும் துணையும் இருந்தாலும் கூட, காலம் கனியவில்லையேல், அவரால் ஆகக் கூடியது ஏதும் இல்லை !

பாடல் வடிவிலான இந்த உரையாடல், பதினெண்கீழ்க் கணக்கு நூலாகிய பழமொழி நானூற்றில் வருகிறது. இதோ அந்தப் பாடல்:-

--------------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்; (127)
-------------------------------------------------------------------------------------------------------

ஆகும்  சமயத்தார்க்கு  ஆள்வினையும்  வேண்டாவாம்
போகும்  பொறியார்  புரிவும்  பயனின்றே !
ஏகல் மலைநாட !  என்செய்தாங்  கென்பெறினும்,
ஆகாதார்க்கு ஆகுவது இல் !

-------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
--------------------------
ஏகல் = உயர்ந்த ; மலை நாட = மலைகளை உடைய நாட்டிற்கு உரிய தலைவனே ! ஆகும் சமயத்தார்க்கு = காலம் கனிவாக இருக்கும் மனிதர்களுக்கு ; ஆள்வினையும் வேண்டாவாம் = முயற்சி வேண்டியதில்லை; போகும் = காலம் உதவியாக இல்லாத நேரத்து; பொறியார் = மேன்மக்கள் ; புரிவும் = முயற்சிகளால் ; பயனின்றே = பயனில்லை; என் செய்து = என்ன முயற்சி செய்து ; ஆங்கு என் பெறினும் = பிறரது துணையைப் பெற்றாலும்  ; ஆகாதார்க்கு = காலம் துணை செய்யாதவர்களுக்கு ; ஆகுவது = ஆகக் கூடியது ; இல் = ஏதுமில்லை.

--------------------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
-------------------

காலம் கனிவாக இல்லையேல் எத்துணை முயன்றாலும் செல்வத்தை ஈட்ட முடியாது ! காலம் உதவியாக இல்லையேல் ஈட்டிய செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்வதும் இயலாது ! காலத்தின் உதவி இல்லாதவரால் ஆகக் கூடியது ஏதுமில்லை ! ”ஆகாதார்க்கு ஆகுவது இல்என்பது பழமொழி !

---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(Veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[வள்ளுவராண்டு:2051: சுறவம் (தை) 19]
{02-02-2020}
--------------------------------------------------------------------------------------------------------



சனி, பிப்ரவரி 01, 2020

பழமொழி நானூறு (128) காட்டிக் கருமம் கயவர் மேல் !

மீன் உலர் களத்துக்குப் பூனை காவலா ?




மரத்தடியில் கண்களை மூடி அமர்ந்திருந்தார், அவ்வூரில் நெடு நாள்களாகத் தங்கியிருக்கும் ஒரு முனிவர். ஊராருக்கு நல்வழி காட்டி நல்வாக்குச் சொல்லிவரும் ஞானி அவர் !  முனிவரை அணுகிய பெண்ணொருத்தி, ”ஐயா ! இன்று நான் வெளியூர் செல்கிறேன் ! திரும்பிவர நான்கு நாள்களாகும். ஆனால் ஈரம் காயும் முன் வயலில் நெல் விதைத்தாக வேண்டும். எனக்கு வேறு துணையில்லை.  பக்கத்துத் தெரு பகலவன் எனக்கு அறிமுகம் ஆனவர் தான். ஆனால் நேர்மையானவர் என்று சொல்வதற்கில்லை ! அவரிடம் நெல் விதைப்புப் பணியை ஒப்படைத்துச் செல்லலாமா ? தாங்கள் எனக்கு நல்வழி காட்டுங்கள்என்று பணிவுடன் கேட்டாள். அதற்குத் துறவி சொல்லும் மறுமொழியைப் பாருங்கள் !)

மாவடு போன்ற கண்களும் மயில் போன்ற சாயலையும் உடைய பெண்ணே ! உனக்கு ஒன்று தெரியுமா ? ”

கீழ்மைக் குணம் படைத்த எந்த மனிதனும் நம்பத் தகுந்தவன் அன்று ! நேரம் வரும் போது நம்மைக் காட்டிக் கொடுக்க அவன்  தயங்க மாட்டான் ! அப்படிப்பட்டக் கயமைக் குணம் படைத்த கீழ்மகனை நம்பி, தான் செய்ய வேண்டிய பணிகளை ஒப்படைக்கும் எவனும் சிறந்த மனிதனாக இருக்க முடியாது ! ”

மீன்கள் உலர்கின்ற களத்தில் அதற்குப் பூனையைக் காவலாக வைக்க எந்த அறிவுள்ள மனிதனும் துணியமாட்டான் ! கீழ்மகனை நம்பித் தனது பணிகளை அவனிடம் ஒப்படைத்து விட்டு, அவன் செப்பமாகச் செய்து முடிப்பான் என்று நம்பி வாளாவிருக்கும் எவனும் மீனுக்குப் பூனையைக் காவலாக வைக்கும் தவறைச் செய்தவன் ஆவான் !”

இத்தகைய கருத்துடைய பாடலை எழுதிய புலவர் பெயர் முன்றுறை அரையனார். பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான பழமொழி நானூறில் இடம் பெற்றுள்ள இப்பாடல்பூசையைக் காப்பிடுதல் புன்மீன் தலைஎன்னும் பழமொழியை  உள்ளடக்கி அமைந்துள்ளது.  இதோ அந்த பாடல்:-

----------------------------------------------------------------------------------------------------------

காட்டிக்  கருமம்   கயவர்மேல்  வைத்தவர்
ஆக்குவர்  ஆற்றஎமக்  கென்றே  அமர்ந்திருத்தல்
மாப்புரை நோக்கின்  மயிலன்னாய் ! பூசையைக்
காப்பிடுதல்  புன்மீன்  தலை !

----------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:
-------------------------

(மா + புரை) மாப்புரை = மாவடு போன்ற; நோக்கின் = கண் உடைய; மயிலன்னாய் = மயில்போன்ற அழகுடைய பெண்ணே ! எமக்கு என்றே = எமக்காக; ஆற்ற = முழுமையாக (திறம்பட); கருமம் ஆக்குவர் = பணியாற்றுவார்; கயவர் மேல் காட்டி வைத்தவர் = கீழ்மக்கள் மீது நம்பிக்கை வைத்தவர்; பூசையை = பூனையை; தலை = அதிகாரம் கொடுத்து ; காப்பிடுதல் = காவலுக்கு வைத்தல்; புன்மீன் = மீன் உலர் களம்.

---------------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:
--------------------

தான் செய்ய வேண்டிய பணியை நம்பத் தகாத வேறொரு ஆளிடம் ஒப்படைத்து விட்டு, ஓய்வெடுப்பவன், மீன்கள் உலரும் களத்திற்குப்  ஒரு பூனையைக் காவலுக்கு வைத்தவனுக்கு  ஒப்பாவான் !


---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி:2051: சுறவம் (தை)18)
{01-02-2020}
---------------------------------------------------------------------------------------------------------
    
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

---------------------------------------------------------------------------------------------------------



ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

பழமொழி நானூறு (32) தெருளாது ஒழுகும் திறனிலாரை !

எல்லோருக்கும் ஒரு விலையுண்டு  !


பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான பழமொழிஎன்பது முன்றுரை அரையனார் என்பவர் இயற்றிய நானூறு வெண்பாக்களால் ஆகிய ஒரு இலக்கியம். ஒவ்வொரு வெண்பாவிலும் ஈற்றடியில் ஒரு பழமொழியை அமைத்து இவ்விலக்கியத்தை அவர் படைத்துள்ளார் !

-------------------------------------------------------------------------------------------------------
பாடல். 32.
-------------------------------------------------------------------------------------------------------

தெருளா தொழுகும் திறனிலா தாரைப்
பொருளா லறுத்தல் பொருளே பொருள்கொடுப்ப,
பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? வேற்குத்தின்
காணியின் குத்தே வலிது.

--------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்.
--------------------------------------------------------------------------------------------------------

தெருளாது ஒழுகும் திறன் இலாதாரைப்
பொருளால் அறுத்தல் பொருளே பொருள் கொடுப்ப,
பாணித்து நிற்கிற்பார் யார் உளரோ? வேல் குத்தின்
காணியின் குத்தே வலிது.

---------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------

தனது தகுதியை உணராது ஆணவத்துடன் செயல்படும் திறமையற்ற பகைவரை, பொருள் (பணம்) கொண்டு அழித்தலே சரியான செயலாகும்.. (அந்த எதிரியை ஒழிக்கும் நோக்கில் கைக்கூலியாக) தேவையான (பணத்தை) பொருளைக் கொடுத்தால் பகைமையை விட்டொழிக்கத் தயங்குபவர் யாராவது இருக்கிறார்களா என்ன ? கூரிய வேலைக் கொண்டு அழிப்பதைக் காட்டிலும் பணத்தால் அடித்து  பகைவரை வெல்வதே  வலிமையானது !
----------------------------------------------------------------------------------------------------------

பழமொழி சொல்லும் பாடம்: எல்லோருக்கும் ஒரு விலையுண்டு, பணம் எதையும் சாதிக்க வல்லது; ஆகையால்  செல்வத்தைத் தக்க முறையில் பயன்படுத்தி எதிரி  நமக்கு இடையூறாக இருப்பதை நீக்கிட வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------

தெருளாது = தனது தகுதியை உணராது; ஒழுகும் = நடந்துகொள்ளும்; திறன்  இலாதாரை = திறமையற்ற பகைவரை; பொருளால் = பணம் கொடுத்து; அறுத்தல் = இல்லாமல் செய்தல் (அழித்தல்); பொருளே = சரியான செயலாகும். பொருள் கொடுப்ப = பணம் கொடுத்தால்; பாணித்து = தனது செயலிலிருந்து பின்வாங்காமல்; நிற்கிற்பார் = உறுதியாக நிற்பவர் ; யார் உளரோ = யார் இருக்கிறார்; வேல் குத்தின் = வேல் கொண்டு குத்தி அழிப்பதைவிட ;  காணியின் குத்தே = காணிக்கையாகக் பணம் கொடுத்து அவரைப் பணியவைப்பதே ; வலிது = வலிமை மிகுந்ததாகும் !

---------------------------------------------------------------------------------------------------------

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில். (குறள்: 759)

திருவள்ளுவரும் முன்றுரை அரையனாரின் கருத்தை வலியுறுத்துவதை மேற்கண்ட குறள் மூலம் அறியலாம்.

---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050:மடங்கல்(ஆவணி),21]
{07-09 -2019}
--------------------------------------------------------------------------------------------------------