காலம் கனிவானால் மிகு முயற்சி தேவையில்லை !
{குறிஞ்சி நிலத் தலைவன் ஒருவனுடன்  புலவர்
ஒருவர் உரையாடுகிறார்}
நெடிதுயர்ந்த  மலைகள் நிறைந்த நாட்டின் தலைவனே
! உனக்கு ஒன்று சொல்கிறேன்; கேளாய் ! 
காலம் கனிவாக இருக்குமேயானால், செல்வத்தை ஈட்டுவதற்கு முனைப்பான முயற்சி மிகுதியும் தேவையில்லை ! காலம் உதவியாக இல்லையேல் ஈட்டிய செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள எத்துணை முயன்றாலும்,
பயனில்லை; அச்செல்வம் கைவிட்டுப் போயே தீரும்
! 
முயற்சியும் துணையும் இருந்தாலும்
கூட,
காலம் கனியவில்லையேல், அவரால் ஆகக் கூடியது ஏதும்
இல்லை ! 
பாடல் வடிவிலான இந்த உரையாடல், பதினெண்கீழ்க் கணக்கு நூலாகிய பழமொழி நானூற்றில் வருகிறது. இதோ அந்தப் பாடல்:- 
--------------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்; (127)
-------------------------------------------------------------------------------------------------------
ஆகும்  சமயத்தார்க்கு  ஆள்வினையும்  வேண்டாவாம்
போகும்  பொறியார்  புரிவும்  பயனின்றே !
ஏகல் மலைநாட
!  என்செய்தாங்  கென்பெறினும்,
ஆகாதார்க்கு ஆகுவது இல் !
-------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
--------------------------
ஏகல் = உயர்ந்த ; மலை நாட = மலைகளை உடைய
நாட்டிற்கு உரிய தலைவனே ! ஆகும் சமயத்தார்க்கு = காலம் கனிவாக இருக்கும் மனிதர்களுக்கு ; ஆள்வினையும்
வேண்டாவாம் = முயற்சி வேண்டியதில்லை; போகும்
= காலம் உதவியாக இல்லாத நேரத்து; பொறியார்
= மேன்மக்கள் ; புரிவும் = முயற்சிகளால் ; பயனின்றே = பயனில்லை;
என் செய்து = என்ன முயற்சி செய்து ; ஆங்கு என் பெறினும் = பிறரது துணையைப் பெற்றாலும்  ; ஆகாதார்க்கு = காலம் துணை செய்யாதவர்களுக்கு ; ஆகுவது = ஆகக் கூடியது ; இல் = ஏதுமில்லை.
--------------------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
-------------------
காலம் கனிவாக இல்லையேல்
எத்துணை முயன்றாலும் செல்வத்தை ஈட்ட முடியாது ! காலம் உதவியாக
இல்லையேல் ஈட்டிய செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்வதும் இயலாது ! காலத்தின் உதவி இல்லாதவரால் ஆகக் கூடியது ஏதுமில்லை ! ”ஆகாதார்க்கு ஆகுவது இல் “ என்பது பழமொழி !
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(Veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[வள்ளுவராண்டு:2051:
சுறவம் (தை) 19]
{02-02-2020}
--------------------------------------------------------------------------------------------------------

 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .