name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 10/14/21

வியாழன், அக்டோபர் 14, 2021

நான்மணிக் கடிகை (31) குழித்துழி நிற்பது நீர் !

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய நான்மணிக் கடிகை, பெரும்புலவர் விளம்பி நாகனார் என்பவர் படைத்ததுசங்க கால இலக்கியமான இந்நூல் அறநெறிக் கருத்துகளை எடுத்துரைக்கிறது ! கடவுள் வாழ்த்து உள்பட இந்நூலில் மொத்தம் 106 பாடல்கள் உள்ளன !    இதிலிருந்து ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------------------

 பாடல் எண்: (31)

----------------------

 

குழித்துழி   நிற்பது   நீர்;தன்னைப்   பல்லோர்

பழித்துழி   நிற்பது   பாவம்;    அழித்துச்

செறிவழி   நிற்பது   காமம்;   தனக்கொன்று

உறுவுழி   நிற்பது  அறிவு.

 

-----------------------------------------------------------------------------------------------------------

 பொருள்:

--------------

 

பள்ளம் எங்கிருக்கிறதோ அந்த இடத்திற்குச் சென்று   தேங்கி நிற்பது தான் தண்ணீரின்  இயல்பு !

 

சான்றோர்  பழிக்கும்   செயல்களைப் புரிகின்ற  கீழ்மக்களிடத்தில் தீவினைகள் குடிகொண்டிருப்பதும்  இயல்பு !

 

தவநெறியில் ஒழுகும் தூய  வாழ்வு  இல்லாத மக்களிடத்தில் காம உணர்வு  மேலோங்கி நிற்பதும் இயல்பு !

 

அதுபோல், ஒருவனுக்கு இடர் வரும்போது  அவனுக்குத் துணையாக  அவனது அறிவு நிற்பதும் இயல்பு !

----------------------------------------------------------------------------------------------------------

 அருஞ்சொற்பொருள்:

------------------------------

நீர் குழித்துழி நிற்பது = தண்ணீர் குழிக்கப்பட்ட இடத்தில் நிற்கும் இயல்பு உடையது ; பல்லோர் = சான்றோர் பலரும் ; தன்னைப் பழித்துழி = பழிக்கும்   செயல்களைப் புரிகின்ற  கீழ்மக்களிடத்தில் ; பாவம் = தீவினை என்பது ; நிற்பது = சூழ்ந்து நிற்கும் இயல்புடையது ; அழித்து = தவ நெறியைக் கெடுத்து ; செறிவுழி = தீய நெறியில் வயப்பட்டால்  ;  காமம் =  காம உணர்வு ; நிற்பது = மேலோங்கி நிற்பது இயல்பு ; தனக்கு  = அறிஞன் ஒருவனுக்கு ;  ஒன்று உறுவுழி = ஓர் இடர் உண்டான காலத்தில் ; அறிவு = அவனது கல்வியறிவு ; நிற்பது = துணையாய் நிற்கும் இயல்பு உடையது.

------------------------------------------------------------------------------------------------------------

 கருத்துச் சுருக்கம்:

--------------------------

 

பள்ளம் உள்ள இடத்தில் நீர் நிற்கும்;  பலரும் பழிக்கும் தீயோரிடத்தில்  பாவம் நிற்கும் ; தவ ஒழுக்கம் இல்லாதவன் பால், காமம் நிற்கும் ; இடர்வந்த போழ்து கற்ற அறிவு துணை நிற்கும்.

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2050,மடங்கல்(ஆவணி),31]

{17-09-2019}

---------------------------------------------------------------------------------------------------------

 

நான்மணிக்கடிகை (30) கற்பக் கழிமடம் அஃகும் !

 

சங்க கால இலக்கியமான நான்மணிக்கடிகை  முழுவதும் வெண்பாக்களால் ஆனது. ஒன்னொரு பாடலிலும்  நந்நான்கு  கருத்துகள் சொல்லப்படுகின்றன !  மதி மன்னு மாயவன்  வாள்முகம் ஒக்கும்என்னும்  கடவுள் வாழ்த்துப் பாடலின் மூலம் இந்நூலாசிரியர் திருமால் வழிபாட்டினர் என்பது புலனாகிறது ! இதிலிருந்து ஒரு பாடல் !

--------------------------------------------------------------------------------------------------------

 பாடல் எண்: (30)

---------------------------

 

கற்பக்    கழிமடம்    அஃகும்  மடம்அஃகப்

புற்கந்தீர்ந்  திவ்வுலகின்  கோளுணருங்  கோளுணர்ந்தால்

தத்துவ  மான  நெறிபடரும்  அந்நெறி

இப்பா  லுலகின்  இசைநிறீஇ  -  உப்பால்

உயர்ந்த உலகம் புகும்.

 

(ஐந்து அடிகள் கொண்ட வெண்பாவாதலால், இதைப்   பஃறொடை  வெண்பா என்பர்)

-------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

----------------

 

அறிவார்ந்த  நூல்களைக்  கற்கக்  கற்க, மனிதனிடம் குடிகொண்டுள்ள  அறியாமை  மெல்லெ மெல்லக் குறைகிறது !

 

அறியாமை  குறையக்  குறைய  அவனிடம்  நிறைந்திருக்கும் புல்லறிவு (முட்டாள்தனம்) நீங்கி  , இவ்வுலகத்தைப்  புரிந்து  கொள்கிறான் !

 

உலக இயல்பைப் புரிந்து கொண்ட பின் , உண்மையான அருள் நெறியில்  நடைபயிலத்  தொடங்குகிறான் !

 

அருள்நெறியில் ஒழுகத் தொடங்குவதால் , இம்மையில் புகழை ஈட்டுவதுடன்,  மறுமையில் வீடுபேறும் எய்துகிறான் !

--------------------------------------------------------------------------------------------------------

 அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

கற்ப = ஒருவன் அறிவு நூல்களைக் கற்பதனால் ; கழிமடம் = மிக்க அறியாமை ; அஃகும் = குறையப் பெறுவான் ; மடம் அஃக = அறியாமை குறைய ; புற்கம் தீர்ந்து = புல்லறிவு நீங்கி ; இவ்வுலகின் = இவ்வுலகத்தின் ; கோள் உணரும் = இயற்கையைப்  புரிந்து கொள்வான் ;  (கோள் = இயல்பு, இயற்கை) கோள் உணர்ந்தால் = அவ்வியற்கையை அறிந்து கொண்டால் ; தத்துவமான = உண்மையான ; நெறி படரும் = அருள் நெறியில் செல்வான் ; அந் நெறி = அந் நெறியினால் ; இப்பால் உலகின் = இவ்வுலகின்கண் ; இசைநிறீஇ = புகழ் நிறுத்தி ; உப்பால் = மறுமையில் ; உயர்ந்த உலகம் புகும் = உயர்ந்த வீடு பேறு அடைவான்.

 

------------------------------------------------------------------------------------------------------

 பின்குறிப்பு:-

----------------------

 

இப்பாடல் நான்மணிக் கடிகைக்கு உரிய  பாடலாகத் தெரியவில்லை; இடைச்செருகல் போல் தோன்றுகிறது.  தத்துவம்என்ற தமிழல்லாச் சொல் இடம்பெற்றிருப்பதும்,  இம்மை, மறுமை போன்ற கருத்துகள் புகுத்தப் பெற்றிருப்பதும் இடைச்செருகல் என்பதை  உணர்த்துகிறது !

-----------------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை;


வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2050,மடங்கல்(ஆவணி),31]

{17-09-2019}

-----------------------------------------------------------------------------------------------

 

 

 

நான்மணிக்கடிகை (29) கோல்நோக்கி வாழும் குடியெல்லாம் !

கி.பி.2- ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூலான நான்மணிக் கடிகையை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர். பதினெண் கீழ்க் கணக்கு என்னும் நூல் வகையைச் சார்ந்த இவ்விலக்கியத்தில் பல அரிய கருத்துகள் சொல்லப்படுகின்றன ! இதிலிருந்து ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (29)

-----------------------

 

கோல்நோக்கி   வாழும்  குடியெல்லாம்;   தாய்முலைப் 

பால்நோக்கி   வாழும்   குழவிகள்;   -  வானத்

துளிநோக்கி   வாழும்    உலகம்;   உலகின்

விளிநோக்கி   இன்புறூஉம்   கூற்று.

-------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

-------------

 

நாட்டில் வாழும் குடி மக்கள் எல்லாம் ஆள்வோரின்  செங்கோல் தவறாத நல்லாட்சியை  எதிர்பார்த்து வாழ்கிறார்கள் !

 

பிறந்த குழந்தைகள் எல்லாம் தம் பசிக்குத்  தாய்ப் பாலை  நம்பியே உயிர் வாழ்கின்றன !

 

இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும் வானத்திலிருந்து பொழிகின்ற மழையைச் சார்ந்தே உயிர் வாழ்கின்றன !

 

ஆனால், கூற்றுவனோ தன் கடமையை நிறைவேற்ற உயிர்களின் இறப்பை எதிர்பர்த்தே காத்திருக்கிறான் !

 

-------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------

குடியெல்லாம் = குடிமக்கள் எல்லோரும் ; கோல் நோக்கி = ஆள்வோரின் நேர்மை தவறாத ஆட்சியை எதிர்பார்த்து ; வாழும் = உயிர் வாழ்வர் ; குழவிகள் = குழந்தைகள் எல்லோரும் ; தாய் முலைப்பால் நோக்கி = தம் பசிக்குத் தாய்ப்பாலை நம்பியே ;  வாழும் = உயிர் வாழ்கின்றன ; உலகம் = உலகத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ; வானத் துளி நோக்கி = வானின்று பொழியும் மழையைச் சார்ந்து ; வாழும் = உயிர் வாழ்கின்றன ;  கூற்று = கூற்றுவன் (எமன்) ; உலகின் விளி நோக்கி = உயிர்களின் இறப்பை  நோக்கி ; (விளிதல் = இறத்தல்) ; இன்புறூஉம் = மகிழ்வான்.

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2050,மடங்கல்(ஆவணி),31]

{17-09-2019}

----------------------------------------------------------------------------------------------------------