name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நல்வழி (32) ஆறிடும் மேடும் மடுவும் !

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

நல்வழி (32) ஆறிடும் மேடும் மடுவும் !


ஆற்றில் உண்டாகும் மேடு பள்ளங்களைப் போன்றது  செல்வம் !


ஔவையார் அருளிச் செய்த பாடல்கள் எல்லாம் இனிய வாழ்க்கைக்கு புதிய பாதை அமைத்துத் தருவன. செல்வத்தின்  நிலையாமை பற்றி நல்வழி என்னும் நூல் வாயிலாக  ஔவையார் அருளிய ஒரு பாடல் இதோ !

------------------------------------------------------------------------------------------------------------
பாடல்.32.
-------------------------------------------------------------------------------------------------------------

ஆறிடு மேடும் மடுவும்போ லாஞ்செல்வம்
மாறிடு மேறிடும் மாநிலத்தீர்  -  சோறிடுஞ்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறு முயர்ந்து.

------------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்
------------------------------------------------------------------------------------------------------------

ஆறிடும் மேடும் மடுவும் போல் ஆம் செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்  -  சோறு இடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பு ஆக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.

-----------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------

மாநிலத்தீர் = இந்தப் பெரிய பூமியில் வாழும் மாந்தர்களே ! ஆறு இடும் மேடும் மடுவும் போல் = ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப்படும் மணல் மேடும் பள்ளமும் போல; செல்வம் ஏறிடும் மாறிடும் = செல்வம் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கும் ; (ஆதலினால்) சோறு இடும் = இரந்து வருவோர்க்கு சோறு  இடுங்கள் ; தண்ணீரும் வாரும் = (பருகுதற்கு நல்ல) தண்ணீரையும் வார்த்திடுங்கள் (கொடுங்கள்) ; தருமமே சார்பு ஆக = (இப்படிச் செய்து வருவீர்களானால்) இந்தத் தருமமே துணையாக ; உள்நீர்மை உயர்ந்து வீறும் = உள்ளத்திலே தூய தன்மை ஓங்கி விளங்கும். (போல் ஆம் என்பதில் வரும் ஆம் என்பது அசைச் சொல். இதற்குப் பொருள் காண வேண்டியதில்லை)

-----------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------


இந்தப் பூவுலகில் வாழும் மாந்தர்களே ! கேளுங்கள் ! ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப்படும் மணல் மேடுகளும் தாழ்வான பள்ளங்களும் போல உங்களிடம் உள்ள செல்வமும் வளர்வதும் தேய்வதுமான குணங்களை உடையது. ஆகையால், இத்தகைய நிலையற்ற செல்வம் மீது ஆசை வைக்காமல், அறவழியில் உங்கள் சிந்தனையைச் செலுத்துங்கள்; இரவலர்களின் பசித்த வயிற்றுக்குச் சோறு இடுங்கள். அவர்கள் பருகுதற்கு நல்ல தண்ணீரும் கொடுங்கள்; இப்படிச் செய்து வருவீர்களானால், இந்தத் தருமமே உங்களுக்கு என்றும் துணை நிற்கும். உள்ளமும் தூய தன்மை உடையதாக ஓங்கி விளங்கும் !

-----------------------------------------------------------------------------------------------------------
          
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
 கட்டுரை

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மீனம்,20]
{03-04-2019}

-----------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .