name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நல்வழி (09) ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் !

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

நல்வழி (09) ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் !

வற்றிவிட்டாலும் கூட  ஆறு,  ஊற்று  நீரை  உலகுக்கு அளிக்கிறது !

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆற்றுப்   பெருக்கற்    றடிசுடு  மந்நாளு  மவ்வாறு
ஊற்றுப்   பெருக்கால்  உலகூட்டும்  -  ஏற்றவர்க்கு
நல்லகுடிப்  பிறந்தார்  நல்கூர்ந்த   ரானாலும்
இல்லையென  மாட்டா    ரிசைந்து.

-----------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்
-----------------------------------------------------------------------------------------------------------

ஆற்றுப் பெருக்கு அற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும்  -  ஏற்றவர்க்கு
நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:
---------------------

ஆற்றில் வெள்ளம் வற்றிப் போய், நடந்து செல்வோரின் பாதங்களை ஆற்று மணல் சுட்டெரிக்கும்  கோடை காலத்திலும் கூட, அந்த ஆறானது, ஊற்று நீரைத் தந்து, மக்களின் தாகத்தைத் தணிக்கிறது. அதுபோல நற்குடியிற் பிறந்தவர்கள், தம் செல்வமெலாம் இழந்து வறுமை உற்ற காலத்திலும் கூட, இரவலர்களுக்கு (பிச்சை எனக் கேட்போர்) மனமிசைந்துஇல்லைஎனச் சொல்ல மாட்டார்கள். (இயன்றதைத் தருவர் எனப் பொருள்)

-----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:
------------------------------------

பெருக்கு = நீர்ப் பெருக்கு ; அற்று = வறண்டுபோய் ; அடி சுடும் = நடப்போர்  பாதங்களை மணல் சுடுகின்ற ; ஊற்று = ஆற்று மணலிடையே தோண்டப் பெறும் கிணறு போன்ற பள்ளம் ; உலகு ஊட்டும் = மக்களின் தாகத்தைத் தணிக்கும் ; ஏற்றவர்க்கு = இரவலர்களுக்கு ; நல்ல குடிப் பிறந்தார் = உயர்ந்த குடியில் பிறந்த மனிதர்கள் ; நல்கூர்ந்தார் = வறியவர்கள்; (நல்குரவு = வறுமை) ; இசைந்து = மனம் ஒப்பி.

------------------------------------------------------------------------------------------------------------
        
  “தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை

------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
 வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணிமன்றம்.
[தி.: 2050, மீனம்,05]
{19-03-2019}

------------------------------------------------------------------------------------------------------------




4 கருத்துகள்:

  1. அருமை . கற்பிக்க எளிமையாக உள்ளது

    பதிலளிநீக்கு
  2. இந்தப் பாடலுக்கு ஏற்ப வறண்ட ஆறு, அதன் அருகே ஊற்று நீர் தேங்கியுள்ள தண்ணீர், அதன் பக்கத்தில் ஒருவர் ஊற்றில் இருந்து தண்ணீர் எடுப்பது போன்ற படம், மற்றொரு படத்தில் அந்த ஊற்று நீரை ஒரு குடத்தில் வடிகட்டி ஊற்றும் பெண் ஆகிய புகைப்படங்கள் மிகவும் ரசிக்கத் தக்கதாக உள்ளன. இதை வெளியிட்டமைக்கு மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள ஐயா, வணக்கம். தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை என்னும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் பங்கேற்போர் தங்களின் தமிழ்ப்பணிகளைத் தெரிவிக்க வேண்டும். அந்த வகையில் வரும் நவம்பர் 5 ஞாயிறு காலை 10.. மணிக்கு நடைபெறும் இணையக்கூட்டத்தில் தாங்கள் உரையாற்ற இசைவு தர வேண்டுகிறேன். தங்கள் பேசி எண்ணைத் தெரிவிக்கவும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .