name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: புறநானூறு (86) சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன் !

புதன், மே 04, 2022

புறநானூறு (86) சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன் !


தாயே ! தங்கள் மகன் எங்கே ? சொல்லுங்களேன் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடலின் பின்னணி:

----------------------------------

தாய் ஒருத்தியிடம் உன் மகன் எங்கே என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அந்தத் தாய், கேட்டவர் திகைக்கும் வண்ணம் மறுமொழி கூறுகிறாள் ! காவற்பெண்டு என்னும் பெண்பாற் புலவர் இயற்றிய அந்தப் பாடலைக் காணுங்கள் !

------------------------------------------------------------------------------------------------------------

புறநானூறு பாடல் எண்: (86)

------------------------------------------------------------------------------------------------------------

 

சிற்றில் நற்றூண் பற்றிநின் மகன்

யாண்டு ளனோவென வினவுதி; என்மகன்

யாண்டுள னாயினும் அறியேன்; ஓரும்

புலிசேர்ந் துபோகிய கல்லளை போல,

ஈன்ற வயிறோ விதுவே;

தோன்றுவான் மாதோ போர்க்களத் தானே !

 

-----------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------------------

 

சிற்றில் நல் தூண் பற்றிநின் மகன்

யாண்டு உளன்என வினவுதி; என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவான் மாதோ போர்க் களத்தானே !

 

-----------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-------------------------

 

வரி.(01). சிற்றில் = இந்தச் சிறிய வீட்டின் ; நல் தூண் பற்றி = வலிமையான தூணைக் கைகளால் பற்றிக் கொண்டு நிற்கும் தாங்கள் ; நின் மகன் = உன்னுடைய மகன்;

 

வரி.(02). யாண்டு உளனோ = எங்கிருக்கிறான் ; என வினவுதி = எனக் கேட்கிறீர்கள் ; என் மகன் = என்னுடைய மகன் ;

 

வரி.(03). யாண்டு உளன் = எங்கு இருக்கிறான் ; ஆயினும் அறியேன் = என்பதை நான் அறியேன் ; ஓரும் = இது ஒரு அசைச் சொல், இதற்குப் பொருள் பார்க்க வேண்டியதில்லை.

 

வரி.(04). புலி சேர்ந்து போகிய = புலி தங்கியிருந்துவிட்டுச் செல்லும் ; கல் அளை போல ; மலைக் குகையைப் போல ;

 

வரி.(5). ஈன்ற வயிறோ இதுவே =  மகனைப் பெற்ற வயிறு இங்கே இருக்கிறது ;

 

வரி.(06). தோன்றுவான் மாதோ போர்க்களத்தானே = (ஆனால்) அவன் போர்க்களத்தில் இருக்கக் கூடும் !


-----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

இந்தச் சிறிய வீட்டின் வலிமையான தூணைப் பற்றிக் கொண்டு , “உன் மகன் எங்கே இருக்கிறான்எனக் கேட்கிறீர்கள். என் மகன் எங்கே இருக்கிறான் என்பதை யான் அறியேன். புலி குகையை விட்டுக் கிளம்பிய பின் அது எங்கு சென்றுள்ளது என்பதை யாரும் அறிய முடிவதில்லை !


அதுபோல அவனை ஈன்ற வயிறோ இங்கே இருக்கிறது; அவன் எங்கு சென்றுள்ளான் என்பதை யான் அறியேன். ஆனால் அவன் போர்க்களத்தில் தான் இருப்பான். அவனைக் காண விரும்பின் போர்க்களத்திற்குச் சென்று காண்பீராக !

---------------------------------------------------------------------------------------------------------

 காலக் கண்ணாடி:

-------------------------------- 

இப்பாடலிலிருந்து நாம் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றையும் தெரிந்துகொள்ள முடிகிறது !

 

(01)பண்டைத் தமிழகத்தில் தூண்களுடன் கூடிய குடியிருப்பு இல்லங்கள் கட்டப்பட்டு இருந்திருக்கின்றன என்பது இப்பாடல் மூலம் தெரியவருகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் கட்டடக் கலையில் சிறந்து விளங்கியிருக்கிறான் !

(02)தம் பிள்ளைகளை போர்க்களத்துக்கு அனுப்புவதற்கு பண்டைய தமிழகத் தாய்மார்கள் அச்சப்பட்டதில்லை என்பதும் வீர மிக்கவர்களாக அவர்கள் விளங்கியிருக்கிறார்கள் என்பதும் இப்பாடல் மூலம் விளங்குகிறது !

 

புறநானூறு என்பது பண்டைய தமிழகத்தின் வளத்தையும் மாண்பையும் உணர்த்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்கிறது என்பது இப்பாடல் மூலம் உறுதிப்படுகிறது ! 


----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ்ப் பணி மன்றம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை)21]

{04-05-2022}

-----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .