name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: திருப்பாவை - (21) ஏற்ற கலங்கள் எதிர் !

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (21) ஏற்ற கலங்கள் எதிர் !

      மானிடனாகப் பிறந்திருக்கும் ஒளிச் சுடர் நீ !


ஏற்ற  கலங்கள்  எதிர்பொங்கி  மீதளிப்ப,
.........மாற்றாதே  பால்சொரியும்  வள்ளல்  பெரும்பசுக்கள்,
ஆற்றப்  படைத்தான்  மகனே  அறிவுறாய் !
.........ஊற்றம்  உடையாய்  பெரியாய்  உலகினில்
தோற்றமாய்  நின்ற  சுடரே !  துயிலெழாய் !
.........மாற்றார்  உனக்கு வலிதொலைந்துன்  வாசற்கண்
ஆற்றாது  வந்து உன்  அடிபணியுமா  போலே
.........போற்றியாம் வந்தோம் ! புகழ்ந்துஏல் ஓர்  எம்பாவாய் !

---------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
----------------

பாத்திரம் கொள்ளாத அளவுக்குப் பால் சொரியும் பசுக்களைப் படைத்தவன் நந்தகோபன் ! அவனுடைய மகன் அல்லவா நீ ! கேளாய் கண்ணா ! இவ்வளவு பெரும் செல்வத்தை உடையவன் நீ ! பெரியவன் நீ ! மறைந்து நின்று வரம் கொடுக்கும் கடவுள்கள் போல் அல்லாமல், உலகில் மானிடனாகவே பிறந்திருக்கும் ஒளிச் சுடர் நீ ! பகைவர்கள் எல்லாம் உன்னிடம் தோற்று, ஆற்றாமல் வந்து உன் அடி பணிவார்கள் ! அவர்கள் உன் வலிமையின் முன் தோற்றார்கள் ! நாங்கள் உன் கருணைக்குத் தோற்றோம் ! உன்னைப் போற்றிப் புகழவே அடிமை ஆனோம் ! கொஞ்சம் துயில் எழுந்து வாராய் கண்ணா !

----------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
--------------------------

ஏற்ற கலங்கள் = பால் கறக்க எடுத்து வந்த பாத்திரங்களில்;  எதிர் பொங்கி = பால் பொங்கி  ;  மீது அளிப்ப = நிரம்பி வழிந்திட; மாற்றாதே = மறுப்பு ஏதுமின்றி; வள்ளல் பெரும் பசுக்கள் = வள்ளல்போல நிரம்பவும் பால் தரும் பசுக்கள்; ஆற்றப் படைத்தாய் மகனே = ஏராளமாகக் கொண்ட நந்தகோபனுடைய மகனே ! கண்ணா ! அறிவுறாய் = கேளாய் ! ஊற்றம் = ஆற்றல்; பெரியாய் = பெரியவன் நீ; உலகில் தோற்றமாய் = இந்த நிலவுலகத்தில் மானிட உருவெடுத்து வந்துள்ள ஒளிச் சுடரே ! ‘ மாற்றார் = பகைவர்கள்; வலி தொலைந்து = வலிமை இழந்து தோற்று; உன் வாசற்கண் ஆற்றாது வந்து = உய்யும் வழிதேடி வந்து உன் வாசலில் நின்று ; உன் அடி பணியுமாபோலே = உன் திருவடிகளைப் பணிந்து வணங்குவதைப் போல ; போற்றி யாம் வாந்தோம் = உன்னைப் போற்றிப் பாடி வணங்கிட நாங்கள் வந்துள்ளோம்; புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனைப் புகழ்ந்து பாடுவோம் வாராய் பதுமை போன்ற பெண்ணே ! நப்பின்னாய் !

--------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்பணிமன்றம்.
[தி.;2049, சிலை,20.]
{04-01-2019}

           ------------------------------------------------------------------------------------------------
       
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

            -----------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .