name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: திருப்பாவை - (01) மார்கழித் திங்கள் !

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (01) மார்கழித் திங்கள் !

மாதங்களில் இது மார்கழி !  ஒளி நிறைந்த நன்னாள் !


மார்கழி மாதம் ! வைகறை நேரம் ! உடலில் சில்லென்று மோதிச் செல்லும் இளங் காற்று ! வெண்பட்டு விரித்தது போன்று எங்கும் பனிப் போர்வை ! நீராடப் போகிறார்கள் இளம் பெண்கள் !  யாரிவர்கள் ?

------------------------------------------------------------------------------------------------------------

மார்கழித்  திங்கள் மதிநிறைந்த  நன்னாளால்
.........நீராடப்  போதுவீர்  போதுமினோ  நேரிழையீர் !
சீர்மல்கும்  ஆய்ப்பாடிச்  செல்வச் சிறுமீர்காள் ! 
.........கூர்வேல்  கொடுந்தொழிலன்  நந்தகோ  பன்குமரன்,
ஏரார்ந்த கண்ணி  யசோதை  இளஞ்சிங்கம்,
.........கார்மேனிச்  செங்கண்  கதிர்மதியம்  போல்முகத்தான்,
நாரா  யணனே  நமக்கே  பறைதருவான்,
.........பாரோர்  புகழப்  படிந்தேலோர் எம்பாவாய் !

------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:
---------------

மாதங்களில் இது மார்கழி ! வானிலும் மண்ணிலும் ஒளி நிறைந்த நன்னாள் ! மங்கையரே ! வாருங்கள் ! நீராடச் செல்வோம். சீர் நிறைந்த ஆயர்பாடியைச் சேர்ந்த செல்வச் சிறுமியரே ! கூரிய வேலும், கொடிய தொழிலும் கொண்ட நந்தகோபனுக்குக் குமாரனாக வந்தவன், அழகு வழியும் கருங்கண்ணாள் யசோதையின் இளஞ்சிங்கம், கறுத்த மேனியும், சிவந்த கண்ணும், கதிரவன் போல் முகமும் கொண்டவன் ! அவர் பெயர் நாராயணன் ! அவனே நமக்கு நோன்புப் பரிசு தருவான் ! உலகம் புகழ அவன் புகழைப் பாடிக் கொண்டே இருப்போம் ! வாருங்கள் !

--------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:
-------------------------

மதி நிறைந்த நன்னாள் = எங்கும் ஒளி பெருகும் வைகறைப் பொழுது; போதுவீர் = வருவீர்; போதுமினோ = வாருங்கள்; கூர்வேல் கொடுந்தொழிலன் = கூர்வேல் கொண்டு போரிடும் ஆற்றல் பெற்றவன்; ஏரார்ந்த = அழகிய; கண்ணி = கண்களை உடைய; கதிர் மதியம் = கதிரவனின் கதிர்கள்; நாரம் = நீர் (கடல்), அயணன் = செல்பவன்; நாராயணன் = திருப்பாற்கடலில் அலைவழியே பயணிப்பவன்; பறை = அருள்; படிந்து = நீராடி; ஏலோர் = வணங்குவோம்; பாவாய் = பதுமை போன்ற சிறுமியரே.

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, நளி,29.]
{15-12-2018}

------------------------------------------------------------------------------------------------------------
    
  ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .