name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: திருப்பாவை - (07) கீசு கீசு என்று எங்கும் !

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (07) கீசு கீசு என்று எங்கும் !

கருங்குருவிகள் ‘கீசு’ ‘கீசு’ என்று கூவுகின்றன !


கீசுகீசு  என்றுஎங்கும்  ஆனைச்சாத்தன்  கலந்து
.........பேசின பேச்சுஅரவம் கேட்டிலையோ, பேய்ப்பெண்ணே !
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
.........வாச  நறுங்குழல்  ஆய்ச்சியர்  மத்தினால்
ஓசைப் படுத்த  தயிர்அரவம் கேட்டிலையோ !
.........நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன்  மூர்த்தி.
கேசவனைப் பாடவும்  நீகேட்டே  கிடத்தியோ,
.........தேசம்  உடையாய்  திறவேல்ஓர்  எம்பாவாய் !

------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
---------------

ஆனைச் சாத்தன் என்னும் கரிச்சான் குருவிகள் தங்கள் உறவையும் பிரிவையும் பற்றிகீசு கீசுஎன்று பேசிக் கொள்ளும் பேச்சை நீ கேட்கவில்லையா ? ஆயர்பாடிப்பெண்கள்காசுஎன்ற அச்சுத் தாலியும்பிறப்புஎன்றஆமைத்தாலியும் கல கல என்று ஒலிக்கும்படி தயிர் கடையும் ஓசை உனக்குக் கேட்கவில்லையா ? எங்கள் தலைவியே ! அந்த நாராயணனை, மூர்த்தியை, கேசவனை நாங்கள் பாடிக் கொண்டே இருக்கிறோம் ! நீ கேட்டுக் கொண்டே படுத்து இருக்கிறாயா ? ஓகோ ! அவனது அருள் ஒளி உனக்கு வாய்த்து விட்டதோ ! அப்படியானால் அந்த ஒளியோடு வந்து கதவைத் திற பார்க்கலாம் !

-------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:
------------------------------------

கீசு கீசு = கரிக்குருவிகள் எழுப்பும் ஒலி; ஆனைச் சாத்தன் = கரிக்குருவி; அரவம் = ஒலி; பேய்ப்பெண்ணே = அறிவில்லாதவளே; காசு = ஒருவகைத் தாலி; பிறப்பு = இன்னொரு வகைத் தாலி; கலகலப்ப = கல கலவென்று ஒலிக்க; ஆய்ச்சியர் = ஆயர்குலப் பெண்கள்; மத்தினால் = தயிர் கடையும் மத்து கொண்டு; தயிர் அரவம் = பானைக்குள் தயிர்  சுழலும் ஒலி; நாயகப் பெண் = எங்கள் தலைவியே !; நார அயணன் (நீர் வழியே செல்பவன்) என்னும் நாராயணமூர்த்தி = பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள்; கேசவன் = மாலவன்; பாடவும் = நங்கள் போற்றிப் பாடிக் கொண்டிருக்கிறோம்; நீ கேட்டே = நீ கேட்டுக் கொண்டே; கிடத்தியோ = படுத்துக் கிடக்கிறாயா ? தேசம் = (தேஜஸ்) ஒளி; திறவு ஏல் ஓர் எம்பாவாய் = கதவைத் திறவாய் பதுமை போன்ற எம் பெண்ணே ! கண்ணனைப் போற்றிப் பாடுவோம், வாராய் !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை,06.]
{21-12-2018}

-------------------------------------------------------------------------------------------------------------
       
 “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .