யானைபோல் வலிமை உடையவர், நந்தகோபன் !
உந்து  மதகளிற்றன்,  ஓடாத  தோள்வலியன்,
.........நந்தகோ  பாலன்  மருமகளே ! நப்பின்னாய் !
கந்தம்  கமழும்  குழலீ ! 
கடைதிறவாய் !
.........வந்தெங்கும்  கோழி  அழைத்தனகாண்  மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண் !
.........பந்தார்  விரலி உன்  மைத்துனன்  பேர்பாடச்
செந்தா  மரைக்கையால்  சீரார் வளையொலிப்ப
.........வந்து திறவாய் ! மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய் !
-------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-
---------------
யானைபோல் வலிமை உடையவர், போரிலே புறங் காட்டாதவர் நந்தகோபன் ! 
அடி, நப்பின்னை ! 
அவரது மருமகளல்லவா நீ !  நறுமணக் கூந்தலுடைய நற்பதுமையே ! கொஞ்சம் கதவைத் திற ! எங்கும் கோழிகள் கூவுகின்றன; மாதவிக் கொடிப் பந்தலின் மேல் அமர்ந்து குயில்கள் கூவிக் கொண்டே இருக்கின்றன. பந்து விளையாடும் எழிலார் விரல்களுடைய ஏந்திழையே ! 
உன் மணவாளன் பேர் பாட வந்துள்ளோம் ! உன் தாமரைக் கைகள்  வளையொலி எழுப்ப, வந்து கதவைத் திற !
-------------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
-------------------------
உந்து = வீசி எறிதல்; மதகளிறு = வலிமை மிக்க யானை; ஓடாத = போரில் புறங் காட்டாத; நப்பின்னாய் = நப்பின்னை என்று பெயர்படைத்தவளே !;கந்தம் = நறுமணம்; கழலீ = கூந்தல் உடையவளே; கடை திறவாய் = கதவைத் திற; வந்து எங்கும் = எங்கும்; கோழி அழைத்தன = கோழிகள் கூவுகின்றன; மாதவி = மல்லிகை; பல்கால் = வெகுநேரமாக; கூவினகாண் = கூவுகின்றன; பந்தார் = 
பந்து விளையாடும்; விரலி = விரல்களை உடைவள்; உன் மைத்துனன் = உன் மணவாளன்; செந்தாமரைக் கை = செந்தாமரைக் கொடி போன்ற நீண்ட கைகள்; பேர் பாட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனின் புகழைப் போற்றிப் பாடி மகிழ்வோம் ! வா ! வந்து கதவைத் திறவாய் !
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2049, சிலை,17.]
{01-01-2019}
------------------------------------------------------------------------------------------------------------
 “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------

அருமையான பதிவு உங்கள் தமிழ் தொண்டு அகிலம் போற்றும் வண்ணம் உள்ளது.
பதிலளிநீக்குதங்கள் பாராட்டுரைக்கு நன்றி ஐயா !
பதிலளிநீக்கு