name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: திருப்பாவை - (09) தூமணி மாடத்து !

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (09) தூமணி மாடத்து !

மாடத்தில் நான்கு பக்கமும் விளக்கு  எரிகிறது ! 


தூமணி  மாடத்துச்  சுற்றும்  விளக்கெரிய,
.........தூபம்  கமழ,  துயிலணைமேல் கண்வளரும்
மாமான்  மகளே  மணிக்கதவம்  தாள்திறவாய் !
.........மாமீர்  அவளை  எழுப்பீரோ  உம்மகள்தான்,
ஊமையோ  அன்றிச்  செவிடோ  அனந்தலோ ?
.........ஏமப்  பெருந்துயில்  மந்திரப்  பட்டாளோ ?
மாமாயன்  மாதவன்  வைகுந்தன்  என்றென்று
.........நாமம் பலவும் நவின்றுஏல்ஓர்  எம்பாவாய் !

-------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
---------------

அழகிய மாணிக்கங்கள் அமைந்த மாடத்தில் நான்கு பக்கமும் விளக்கு  எரிகிறது ! அகில் புகை எழுந்து எங்கும் மணம் பரப்புகிறது ! பஞ்சணையில் உறங்கிக் கொண்டிருக்கும் எங்கள் மாமன் மகளே ! மணிக் கதவைக் கொஞ்சம் திற ! எங்கள் மாமியரே ! அவளைக் கொஞ்சம் எழுப்புங்கள் ! உங்கள் மகள் என்ன ஊமையா ? செவிடா ? அல்லது தூங்கு மூஞ்சியா ? உறக்க மயக்கத்தில் கட்டுண்டு கிடக்கிறாளா ? அந்த மா மாயன் வைகுந்தன் வருகிற வேளையில் தூங்கி வழிகிறாளே ! அவனைப் பாடி வணங்குவதற்கு அவளை எழுப்புங்கள் !

--------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
-------------------------

தூ மணி மாடம் = அழகிய மேல் மாடம்; சுற்றும்= நாலாபுறமும்; தூபம் = நறும்புகை மணம்; துயில் அணை = உறங்கும் பஞ்சு மெத்தை; கண் வளரும் = கண் மூடித் தூங்கும்; தாள் = தாழ்ப்பாள்; மாமீர் = மாமன் மனைவியரான மாமிகளே ; எழுப்பீரோ = எழுப்புங்களேன்; உம் மகள் = உங்கள் மகள்; ஊமையோ = வாய் பேசாதவளோ; செவிடோ = காது கேளாதவளோ; அனந்தல் = உறக்க மயக்கம்; ஏமம் = துயிலறை; பெருந்துயில் = ஆழ்ந்த உறக்கம்; மந்திரப் படுதல் = கட்டுண்டு கிடத்தல்; மா மாயன் = மாயத் திருவிளையாடல்கள் புரிபவன்; மாதவன் வைகுந்தன் = மாதவன் என்றும் வைகுந்தன் என்றும் சொல்லப்படும் கண்ணனின் ; நாமம் பலவும் நவின்று = பெயர்களைச் சொல்லி; ஏல் = துயில் எழுந்து; ஓர் = அவனைப் பாடி வணங்குவாய் ! எம்பாவாய் = எமது பதுமை போன்ற அழகிய பெண்ணே !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை,08.]
{23-12-2018}

-------------------------------------------------------------------------------------------------------------
         “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .