name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: திருப்பாவை - (10) நோற்றுச் சுவர்க்கம் !

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (10) நோற்றுச் சுவர்க்கம் !

அழகிய பெண்ணே ! எழுந்து வா ! 


நோற்றுச்  சுவர்க்கம்  புகுகின்ற  அம்மனாய்
.........மாற்றமும்  தாராரோ  வாசல்  திறவாதார்,
நாற்றத்  துழாய்முடி  நாராயணன்  நம்மால்
.........போற்றப் பறைதரும்  புண்ணியனால்  பண்டுஒருநாள்,
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்,
.........தோற்றும்  உனக்கே  பெருந்துயில்தான்  தந்தானோ !
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே !
.........தேற்றமாய் வந்து திற! ஏல்ஒர்  எம்பாவாய் !

-------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
--------------

என்ன தூக்கமடி இது ? இப்படித் தூங்கித்தானே முன்பு கும்பகர்ணன் எமன் வாயில் வீழ்ந்தான். போரில் இராமனிடம் தோற்ற பின்பு , தன்னுடைய தூக்கத்தை எல்லாம் உன்னிடம் தந்துவிட்டானா ? மணம் பரப்பும் திருத் துழாய் மாலையை (துளசி மாலையை) மணிமுடியில் அணிந்திருக்கும் நாராயணன் நமது வெறும் பாடலை வாங்கிக் கொண்டு பரிசு தரும் புண்ணியன் அல்லவா ? அவனை எண்ணி நோன்பு நோற்றுச் சொர்க்கம் புக வேண்டும்.  இடைவிடாமல்  தூங்கும் ! அழகிய பெண்ணே ! தூக்கக் கலக்கம் நீங்கி மெல்ல வந்து கதவைத் திற !

-------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
-------------------------

நோற்று = நோன்பு இருந்து; சுவர்க்கம் புகுகின்ற = சொர்க்கலோகம் செல்கின்ற  நல்வாய்ப்பைப் பெறவிருக்கும்; அம்மனாய் = பெண்ணே; மாற்றமும் = மறுமொழியும் ; தாராரோ = தருவாயோ; வாசல் திறவாதார் = வாசல் கதவைத் திறப்ப்பாயோ; நாற்றத் துழாய் = மணமுள்ள துளசி மாலை; முடி = அணிந்திருக்கின்ற; நம்மால் போற்றப் பறை தரும் = நமது வெறும் பாடலை வாங்கிக்கொண்டு  பரிசு தரும்;  புண்ணியனால் = புண்ணிய மூர்த்தியாகிய கண்ணனால்; பண்டொரு நாள் = முன்பொரு காலத்தில் ; கூற்றத்தின் வாய் வீழ்ந்த = மடிந்து போன; கும்பகரணனும் = இராவணன் தம்பியாகிய கும்பகரணனும்; தோற்றும் = இராமனுடனான போரில் தோற்ற பின்பு; உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ = அவனிடமிருந்த பேருறக்கம் என்னும் பழக்கத்தை உனக்குத் தந்து விட்டானா; ஆற்ற அனந்தல் உடையாய் = உறக்கக் கலக்கத்தில் இருப்பவளே; அருங்கலமே = அழகிய பெண்ணே; தேற்றமாய் வந்து = தூக்கம் தெளிந்து வந்து; திறவேலோர் = கதவைத் திறவாய்; எம்பாவாய் = எமது பதுமை போன்ற பெண்ணே !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை,09.]
{24-12-2018}
-----------------------------------------------------------------------------------------------------------
         “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------




1 கருத்து:

  1. ஐயா, துல்லியமாக உள்ளது. இதன் தாத்யர்யம் இரு வகையில் அமைந்துள்ளதையும் ஆராய்ந்து வெளியிட வேண்டுகிறேன்.

    உதாரணமாக நாட்காலே நீராட்டலும் மார்கழி நீராட்டலும் வேறு வேறு என்று நான் அவதானிக்கிறேன்.

    பக்தியின் மத்தியில் யோக தந்திர குறியீடுகள் மணிக்கதவம்,நேய நிலைக்கதவம் போன்றவை குறித்தும் எழுதவும். நன்றி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .