name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: திருப்பாவை - (11) கற்றுக் கறவை !

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (11) கற்றுக் கறவை !

கள்ளங்  கவடற்ற   பொற்கொடியே ! புனமயிலே !


கற்றுக்  கறவைக்  கணங்கள்  பலகறந்து
.........செற்றார்  திறல் அழியச்  சென்று செருச்செய்யும்
குற்றமொன்று  இல்லாத    கோவலர்தம்  பொற்கொடியே !
.........புற்றரவு  அல்குல்  புனமயிலே !  போதராய் !
சுற்றத்துத்  தோழிமார்  எல்லாரும்  வந்துநின்
.........முற்றம்  புகுந்து முகில்வண்ணன்  பேர்பாட,
சிற்றாதே !  பேசாதே !  செல்வப்  பெண்டாட்டிநீ !
.........எற்றுக்கு  உறங்கும்  பொருள் ஏல்ஓர் எம்பாவாய் !

------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
----------------

கண்ணனைப் பகைத்தவர்கள் எல்லாம் எங்கள் பகைவர்கள் என்று கருதுபவர்கள் யாதவர்.  அவர்களோடு போர் புரிந்து வெல்லுவார்.  கள்ளங் கவடமற்ற அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ! பொற்கொடியே ! நாகப் படம் போன்ற பீடம் உடையவளே ! உனது உறவுப் பெண்கள் எல்லாம் வந்திருக்கிறோம். அந்தக் கார் மேக வண்ணன் பேர் பாட முற்றத்தில்  நின்று கொண்டிருக்கிறோம். நீயும் எங்களோடு சேர்ந்து கொள்ள வேண்டியவள் தானே ! நீ கண்ணனது செல்லப் பெண்டாட்டி ஆயிற்றே ! பின் எதற்காக உறங்குகிறாய் ? எழுந்து வா !

------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
--------------------------

கற்று = கன்றுக்குட்டி; கறவை =பால் கறக்கும் பசு; கணங்கள் = கூட்டம்; பல கறந்து = பலவற்றைக் கவர்ந்து சென்று; செற்றார் = பகைவர்; திறல் = வலிமை; செரு = போர்; குற்றம் = கெட்ட பெயர்; கோவலர் = ஆயர் குலத்தினர்; பொற்கொடி = அழகிய பெண்; புற்று = பாம்புகள் வாழும் மண் புற்று; அரவு அல்குல் = பாம்பு படம் விரித்தாற் போன்று தோற்றம் உடைய பீடம்; புனமயில் = ஆயர்பாடி என்னும் கழனி வாழ் மயில்; போதராய் = வருவாயாக !; சுற்றத்துத் தோழிமார் = உறவுப் பெண்கள் ; நின் முற்றம் புகுந்து = உன் வீட்டின் முன் நிற்கிறார்கள்; சிற்றாதே = மனம் சஞ்சலப் படாதே !; பேசாதே = வேறு பேச்சு வேண்டாம்; செல்வப் பெண்டாட்டி நீ = கண்ணனின் ஆசை மனைவி அல்லவா நீ; எற்றுக்கு = எதற்காக; உறங்கும் பொருள்= இன்னும் உறங்குகிறாய், நீ உறங்குவதில் பொருளில்லை.; ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனைப் போற்றிப் பாடுவோம் வாராய் பதுமை போன்ற பெண்ணே !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை,10.]
{25-12-2018}

-------------------------------------------------------------------------------------------------------------
         ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியடப் பெற்ற
 கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .