name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: திருப்பாவை - (12) கனைத்திளங் கற்றெருமை !

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (12) கனைத்திளங் கற்றெருமை !

கன்றை நினைத்து எருமை  பாலைச் சொரிகிறது  !


கனைத்திளங்  கற்றெருமை  கன்றுக்  கிரங்கி
.........நினைத்து  முலைவழியே  நின்று  பால்சோர,
நனைத்தில்லம்  சேறாக்கும்  நற்செல்வன்  தங்காய் !
.........பனித்தலை வீழநின்  வாசற்  கடைப்பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக்  கோமானைச் செற்ற,
.........மனத்துக் கினியானைப்  பாடவும்நீ  வாய்திறவாய் !
இனித்தா  னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் ?
.........அனைத்தில்லத்  தாரும் அறிந்தேலோ  ரெம்பாவாய் !

-------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
----------------

எருமை ஒன்று தன் கன்றை நினைத்து ஏங்குகிறது ! அந்த ஏக்கம் காரணமாக கன்று அங்கு இல்லாத போதே பால் சொரியத் துவங்குகிறது ! அதனால் வீடு முழுவதும் சேறாகிவிடுகிறது ! நாங்கள் தான் பார்த்தோமே ! அந்த வீட்டுக்குடைய யாதவச் செல்வன் மகளே ! அடி பாவாய் ! வெளியே பனி கொட்டு கொட்டென்று கொட்டுகிறதடி ! உன் வீடு பாலால் நனைந்தது போல், எங்கள் தலை பனியால் நனைந்துவிட்டது ! வாசலிலே நின்றுகொண்டிருக்கிறோம். அன்று கோபத்தால் வில்லெடுத்து இராவணனை வென்ற கோவிந்தனைப் பாட வேண்டுமடி ! என்ன இந்த உறக்கம் ! எழுந்து வந்து கதவைத் திற !

-------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
-------------------------

கனைத்து = வாயினால் ஒலி எழுப்பி; இளங் கற்று எருமை = மிக அணிமையில் கன்று ஈன்ற எருமை; கற்றுக்கு இரங்கி = கன்றை நினைத்து ஏங்கி; முலை வழியே நின்று பால் சோர = மடியிலிருந்து தானாகப் பால் சொரிய; நனைத்து இல்லம் சேறாக்கும் = இல்லமெலாம் பாலினால்  சேறாக ; நற்செல்வன் தங்காய் = ஆயர் இனச் செல்வனின் தங்கையே !; பனித் தலை வீழ = பனி கொட்டி தலையெலாம் நனைந்து போக; நின் வாசற் கடைப் பற்றி = நின் இல்லத்தின் வாசலில் நிற்கின்றோம்;  சினத்தினால் = சீதையைக் கவர்ந்து சென்ற  சினத்தினால் ; தென்னிலங்கைக் கோமானை = இலங்கை அரசனாகிய இராவணனை; செற்ற = போரிட்டுக் கொன்ற; மனத்துக்கு இனியானை = மனதுக்கு இனியவனாகிய இராமனாக அவதாரம் எடுத்திருந்த கண்ணனை; பாடவும் நீ வாய் திறவாய் = பாடிப் பரவ வேண்டும், எழுந்திராய்; இனி தான் எழுந்திராய் = தானாக எழுந்து வா !; ஈதென்ன பேருறக்கம் = இது என்ன அப்படி ஒரு கும்பகர்ணத் தூக்கம்; அனைத்து இல்லத்தாரும் = எல்லா வீட்டினரும் ; அறிந்து = பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனை போற்றிப் பாட வேண்டும், எழுந்து வா அருமைப் பெண்ணே ! எழுந்து கதவைத் திற !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை,11.]
{26-12-2018}

-----------------------------------------------------------------------------------------------------------
         ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற 
கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .