name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கவிதை (25) (1969) அன்புடன் அருள் ! (லூக்காஸ்,ஜோசப்,ஹெர்பர்ட்சன்)

வியாழன், அக்டோபர் 10, 2019

கவிதை (25) (1969) அன்புடன் அருள் ! (லூக்காஸ்,ஜோசப்,ஹெர்பர்ட்சன்)




             கொத்து (01)                                                                                            மலர் (041)
--------------------------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டையிலிருந்து இடமாற்றலான
நண்பர்கள் லூக்காசு  -  உளுந்தூர்ப்பேட்டை, ஜோசப்ராஜ்  - கிண்டி, 
ஹெர்பட்சன்  -  மதுரை  ஆகியோருக்கு அளிக்கப்பட்ட
தேனீர் விருந்தின் போது நான் ஆற்றிய உரை.
(ஆண்டு 1969)
----------------------------------------------------------------------------------------------------------


          அன்புடன்         அருள்தவழும்    அவைத்தலைவர் அவர்கட்கும் !
          அமைதியுடன்   எனதுரையைச்  செவிமடுக்கும்   நண்பர்க்கும் !
          இன்றுடன்        இம்மனையைத்  துறந்துசெலும்     தோழர்க்கும் !
          இனிமையுடன்    சுவையுண்டி     ஈங்குதந்த          பேரவைக்கும் !
          தலைவணங்கிக் கரம்குவித்துத்    தருகின்றேன்      வணக்கம் !
          தகைமையுடன்   ஏற்றிடுக !        தமிழ்த்தாயே      வாழ்த்து !

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

  
       நாற்பத்து          நான்குஇதழ்       நாற்புறமும்        சூழ்ந்தமரை !
       நடுவினில்         நித்திலமாய்       எழிலூட்டும்       மணிமேடை !
       சேற்றினில்        காலூன்றி         மலரேந்தும்        சிறுதண்டு !
       செம்பரிதிச்         சுடர்காண         செம்மாந்து         நிற்கையிலே !

       இயக்குநரின்       ஆணையெனும்    இரைகாற்று     தன்கரத்தால்,
       இந்நிலையப்       பொய்கைதனில்   இளநிலவாய்ப்   பூத்திருந்த,
       மயக்கழகு          மாமரையில்       மூவிதழைச்     சாய்த்துவிட,
       மற்றஇதழ்          தடுமாறி            மனங்கலங்கி   வாடுதுகாண் !

       ஒடிந்து             விழுந்தஇதழ்     ஒவ்வொன்றும்   ஓடைதனில்,
       ஊர்ந்துசெலும்     படகாகி           உறைவிடமாம்   துறைவிலகி,
       கடிவிரைவில்      வெவ்வேறு       உளம்நோக்கிச்   சென்றுவிட,
       கண்கலங்கித்      தாய்மலரும்      கவலையுடன்     வாடுதுகாண் !

       உளுந்தூர்ப்       பேட்டையெனும்   ஒளிவிளக்கை    நாடுதொன்று !
       உவர்க்கடலின்    ஓரமுள            கிண்டிதனைத்    தேடுதொன்று !
       வளைநரல்        மணிமாடம்        வானுயர்ந்த       மாமதுரை !
       வளம்காண       வேட்கையுடன்     விரைந்திடுது     பிறிதொன்று !

       வெள்ளி           நிலவுருக்கி        வெண்கரும்புச்    சாறூற்றி,
       வார்த்து           எடுத்தமுது        வழங்குபெயர்      லூக்காசு !
       தெள்ளுத்         தமிழறிவு ;         தேன்கவிதை      தூங்குமுளம் ,
       துள்ளித்           துடிப்படையும்     தூயமொழிப்       பற்றுணர்வு ,

       அன்னையாம்     தமிழ்மீது          அளப்பரிய        அருங்காதல் !
       அயலூர்தாம்      சென்றிடினும்     அழியாது          அவர்நினைவு !
       புன்னையிளம்    பூவெடுத்துப்       பொறுமையாம்    நூலிழையில் ,
       பிணித்தமண     மலராரம்           பெற்றபெயர்         ஜோசப்பு !

       கண்ணிற்        கருமணியாய்,    கற்பகமாய்,      பொற்கிழியாய் ,
       காத்து             வளர்த்தமொழி !  காசினியில்        மூத்தமொழி !
       விண்ணில்       விளையாடும்    வெண்ணிலவுக்   கன்னிமொழி !
       விழிமலரில்      இமையாக,         வேட்பதுடன்       காப்பதலால் ;


       அன்னைத்        தமிழ்மகவு        அவட்காற்றும்    நற்பணியென் ?
       அவளன்றித்      தமிழகத்தில்      அறிவொளியும்   சுடர்விடுமா ?
       என்னும்          மெய்ப்பொருளை  இலட்சியமாய்   ஏந்தியவர் !
       எவ்வூரில்        வாழ்ந்திடினும்     இனிதூறும்       அவர்நினைவு !

       ஆழிவிளைப்      பவழத்தில்         அடக்கமாம்       மெருகேற்றி ,
       அமைதியெனும்  பொன்னிழையில்  ஆக்கியதோர்      மணிமாலை !
       தோழமையின்    பேருருவம் ;        துவளாத          அன்புமுகம் !
       துணைவராம்     ஹெர்பட்சன்        தூயநினை        வழியாது !

       ஆண்டுகள்        பலவாக         அருமையுடன்      பணியாற்றி ,
       அன்பினால்       எம்முடைய      அகமலரில்         குளிரூட்டி ,
       பண்பிற்கோர்     காட்டாகப்        பாங்குடனே       செயலாற்றி ,
       பாசமெனும்      கதிர்கொய்துப்    பறந்துசெலும்     பைங்கிளியீர் !

       கத்தும்           கடலனையக்      கண்காணா       தொலையூரில்
       கடமைதனை   ஆற்றிடவே         கடிதுசெலும்      கண்மணிகாள் !
       குத்து            விளக்கெரியும்     கோலமிகுத்       தீச்சுடரின்
       கொழுந்தில்     திரியேற்றிக்       கொண்டுடனே    செல்கின்றீர் !

       மெத்தவும்       உயர்ந்தகலைக்     கோபுரங்கள்,      ஆலயங்கள் ,
       மேவும்           இருள்நீக்கி         மேதினியில்        வாழ்ந்திடுக !
       இத்தரணி        போற்றிடவே       ஏற்றமுடன்         நீர்வாழ்க !
       இன்பத்           தமிழ்காத்து         இன்னிசையாய்    வாழ்ந்திடுக !

       அறிவுக்         களஞ்சியமாம்      அண்ணாபோல்      நீர்வாழ்க !
       அகத்தியன்     அருட்செல்வி       அருந்தமிழாய்        வாழியநீர் !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .