name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கவிதை (18) (1968) மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் ! (பேரறிஞருக்கு அஞ்சலி)

வியாழன், அக்டோபர் 10, 2019

கவிதை (18) (1968) மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் ! (பேரறிஞருக்கு அஞ்சலி)






         கொத்து (01)                                                                      மலர் (022)
---------------------------------------------------------------------------------------------------------
                           பேரறிஞர்  அண்ணா 
                     மறைந்த காலை எழுதிய 
                                      கவிதை 
                                     (ஆண்டு 1968)
---------------------------------------------------------------------------------------------------------


          மாற்றான்    தோட்டத்து   மல்லிகைக்கும்   மணமுண்டு !
              மறவாதே  என்றதமிழ்  மன்னவனும் சென்றுவிட்டான் !
          தூற்றான் ;  அயலாரைத்  துன்புறுத்த   நினையாதான் !
              தோழமையாய்  வாழுதற்குத் தூதனுப்பிச்  சென்றுவிட்டான் !
          தோற்றான் ; உயிர்ப்போரில்  துஞ்சிவிட்டான்; சென்றுவிட்டான் !
              தூமலரில்  தேன்துளியாய்  தோன்றியவன்  வீழ்ந்துவிட்டான் !
          காற்றான்   மழையான்   கலக்கமுறாக்   கஞ்சமலர் ;
              காலமகன்  அடிபட்டுக்  கடற்கரையில்  துஞ்சுதுகாண் !

          எதையும்  தாங்கவல  இதயமேன்  வேண்டுமென்று,
              இயம்பிவழி  காட்டிவந்த  ஏகலைவன்  சென்றுவிட்டான் !
          கதையும்  கற்பனையும்  கண்ணியமாய் இழையோட,
              கருத்துமழை  பெய்துவந்த  கரிகாலன்  சென்றுவிட்டான் !
          சிதையும்  மொழியார்வம்  சீர்படுத்திச்  சென்றுவிட்டான் !
              செந்தமிழால் யாவரையும் சிறைசெய்தான் ; துஞ்சிவிட்டான் !
          தசையும்   உயிரும்போல்  தமிழ்க்கொடியில்  பூத்தமலர்,
              தலைசாய்ந்து  பூமகளின்  திருவடியில்  துஞ்சுதுகாண் !

          கடமையுடன்  கண்ணியமும்  கட்டுப்பா  டும்காத்து,
              காசினியில்  வாழவழி  காட்டியவன்  சென்றுவிட்டான் !
          மடமைத்தீ  மூட்டிவரும்  மாந்தனது  இறையுணர்வின்
              மாசுதனை  நீக்கவந்த  மறத்தலைவன்  சென்றுவிட்டான் !
          தடம்புரளாப் பகுத்தறிவுத்  தமிழ்ச்செல்வன்  சென்றுவிட்டான் !
              தனித்தமிழன்  ஆட்சிகண்ட  தலைமகனும்  சென்றுவிட்டான் !
          குடங்குடமாய்க்  கண்ணீரில் குளித்தெழுந்து  வெண்மணலில்,
              குடியிருக்கச்  சென்றுவிட்டான் ;  குமுகாயம்  வாடுதுகாண் !


----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------



1 கருத்து:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .