name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கவிதை (28) (1970) நீலத் திரைவானில் நீந்திவரும் ! (படத்தை வைத்துப் பாடல்)

வியாழன், அக்டோபர் 10, 2019

கவிதை (28) (1970) நீலத் திரைவானில் நீந்திவரும் ! (படத்தை வைத்துப் பாடல்)


             கொத்து (01)                                                                                       மலர் (028)
===========================================================================
           குமுதம் இதழில் வெளியான ஒரு படத்தை  வைத்துக்                   கொண்டு எழுதிய   ஒரு  கவிதை !
   (ஆண்டு 1970)
=========================================
           

            நீலத்  திரைவானில்  நீந்திவரும்  வெண்மதிபோல்
                நின்வதனம்  தோன்றுவதேன் ?  நிலவு முகத்தினிடை
            சேலிரண்டு  துள்ளுவதேன் ?  செந்தமிழின்  காவலனாம்
                சேரன் புகழ்பாடிச்  செங்கோட்டை மீதுயர்ந்த
            

            பட்டுத்  துகிற்கொடியில்  பறித்து  எடுத்ததுவோ !
                பைங்கொடியாள்  நின்புருவம் ? பவளத்துப் பாறைதனில்,
            வெட்டி எடுத்ததுவோ  வேல்விழியாள் நின்னிதழ்கள் ?
                வெள்ளை நறுமுல்லை  வெட்கித் தலைகுனிய,
            

            முத்து  மணிகொண்டு  கோத்ததுவோ பல்வரிசை ?
                முக்கனியின்  சாறெடுத்து ஆக்கியதோ  கன்னங்கள் ?
            கத்து  கடலனையக்  காட்சிதரும்  கருங்கூந்தல்,
                கார்முகிலின்  சொத்தலவோ ? காரிகைநீ  கொண்டதுஏன் ?
            

            தேன்கதலித்  தண்டினிலே  வடித்ததுவோ நின்மேனி ?
                தீங்கரும்புத்  துண்டாமோ  சேயிழையாள்  நின்கரங்கள் ?
            அன்னத்தின் சிறகெடுத்து ஆக்கியதோ  சீரடிகள் ?
                அஞ்சுகமும் பூங்குயிலும்  அடைக்கலமோ  நின்னிடமே ?
            

            பொதியமலைத்  தென்றலிடைப் பூங்கொடிகள் ஆடுதல்போல்,
                புன்னகையின்  ஆட்சிதனில்  பொன்மலர்நீ  ஆடுதலால்,
            மதுவூறும்  மாமலரே !  மான்மறியே !  பூம்பொழிலே !
                மல்லிகையே ! இன்றுமுதல்  பூங்கொடியே நின்பெயராம் !
            

             பூங்கொடியே  நீவாழ்க !!  நின்முறுவல்  நனிவாழ்க !
                பொன்மணியே நீவாழ்க ! நின்மனைவாழ்க ! வாழியவே !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

-------------------------------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .