name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கவிதை (40) ( 1971) ஆட்சிமொழி தமிழ் என்றார் ! (புலவர்க்கு அறைகூவல் !

ஞாயிறு, அக்டோபர் 20, 2019

கவிதை (40) ( 1971) ஆட்சிமொழி தமிழ் என்றார் ! (புலவர்க்கு அறைகூவல் !


        கொத்து (01)                                                                        மலர் (08)
--------------------------------------------------------------------------------------------------------
                                         புலவர்க்கோர் அறைகூவல் !       
                                புதுகையில்  பிறந்த அலைச்சீறல்  
                                                      (ஆண்டு 1971)
--------------------------------------------------------------------------------------------------------

       ஆட்சிமொழி    தமிழென்றார்     ஐம்பத்து     எட்டுமுதல் !
           ஆயினும்  நடைமுறையில்  செயற்படலில்  விரைவில்லை !
       மாட்சிமிகு    அமைச்சர்கள்,   மாணவர்கள்,     பணியாளர்,
           மனம்வைத்தால்  செயலாக்கம்  விரையாதோவளராதோ ?

       ஊருக்கு      ஊர்கூட்டம்       கூடுகிறீர்,    பேசுகிறீர் !
           உருப்படியாய்     ஏதேனும்      சொல்லாக்கம்  நடந்ததுவா ?
       பேருக்குச்      சிலபேர்கள்       கருத்தரங்கு   ஏறியதால்
           பெற்றபயன்      யாதோகாண் !   பெரியீரே     சிந்திப்பீர் !

       தமிழ்நாட்டில்   தமிழுணர்வு  நாள்தோறும்   குறைகிறது !
            தமிழ்க்கல்வி   நிலையங்கள்   ஒவ்வொன்றாய்  மறைகிறது !
       அமிழ்தான    மொழிவடிவம்    ஊடகத்தால்    சிதைகிறது !
            அய்யகோ      இதைத்தடுக்க    அரசினர்தான்   வாராரோ ?

       பொங்குதமிழ்     அங்காடிப்     பலகைகளால்     வீழ்கிறது !
             புற்றீசல்    போல்பதின்மப்    பள்ளியெங்கும்     சூழ்கிறது !
       தங்குதடை     இன்றிதமிழ்ப்    பேசுதற்கு     ஆளில்லை !
              தரமில்லா   தாளிகைகள்   மொழிக்கலப்பில் மூழ்குதையா !

       ஆன்றோரே !    சான்றோரே !    அரங்கிலுள்ள  இளையோரே !
            அன்னைமொழி    நலிவடைதல்  அழகாமோ ? அறமாமோ ?
       மன்பதையில்   நம்மொழியும்   மாண்புதனைப்   பெறவேண்டும் !
            மனம்வைத்தால் அத்துணையும் வயமாகும் ! இஃதுண்மை !

       கலைச்சொற்கள்   தமிழூற்றில்   ஊருணியாய்   வரவேண்டும் !
           கற்றோர்தம்     கடனாற்றி    மொழிக்கேற்றம்  தரவேண்டும் !
       அலையலையாய்  பிறசொற்கள்  மொழிமாற்றம்  பெறவேண்டும் !
           ஆங்கிலம்போல்  நம்மொழியை  உலகறியச் செயல்வேண்டும் !

       ”பேண்ட்”போல்    பலசொற்கள்   தமிழ்க்குடிலில்   இன்றுண்டு !
           பீடுடைய  இணைச்சொற்கள்  தமிழின்கண்  எவையுண்டு ?
       புரியாமல்    தடுமாறும்     போதுகளாம்     எமையழைத்துப்
           புரியவைக்க   யாருண்டு ?    புலவர்காள்     விளம்பிடுவீர் !!

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

 

-----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .