name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 04/28/22

வியாழன், ஏப்ரல் 28, 2022

வீரராகவர் பாடல் (03) இல்லெனுஞ் சொல்லறியாத சீகையில் !

ஒரு வாய்க்கே சோறு கிடைக்கவில்லை ! நால்வாய்க்கு எப்படி அளிப்பேன் ?

 

--------------------------------------------------------------------------------------------------

 

இல்லை என்னும் சொல்லை வாயிலிருந்து உதிர்த்து அறியாத வள்ளல் ஒருவன் (இராமன்) சீகை என்னும் சீர்காழியில் வாழ்ந்து வந்தான். அவனைக் காண பாணனாகிய இந்தப் புலவர் சென்றார். இராமனிடம் “யான் யாழ் மீட்டும் பாணன்என்று சொல்லிப் பல்லைக் காட்டி நெளிந்து குழைந்து  இரந்தார் !

 

 

சில நாள்களுக்குப் பசியாற உண்பதற்கு ஒரு சில பொதிகள் அரிசியும் உடுத்துவதற்குத் துணிமணிகளும் அவன் கொடுத்து அனுப்புவான் என்று அவர் எதிர்பார்த்தார். அவனோ அவற்றைக் கொடுக்காமல் தொங்குகின்ற தும்பிக்கையுடைய  (நால்வாய்) யானை ஒன்றைக் கொடுத்தான் !

 

 

திகைத்துப் போனார் புலவர்.  பசியாற உண்பதற்கு எனது ஒருவாய்க்குச் சோற்றுக்கே வழியில்லாத   நான் (நாலு வாய்க்கு - சிலேடைப் பொருள், நால் வாய் = தொங்கு வாய், அதாவது யானை) நால்வாய்க்கு இரை தர என்ன செய்வேன் ?  கொடை என்ற பெயரில் யானையைத் தந்து கொல்கிறானே இந்த வள்ளல் - என்று பாடுகிறார் புலவர் !


-------------------------------------------------------------------------------------------------

இதோ பாருங்கள் பாடலை !

-------------------------------------------------------------------------------------------------

 

இல்லெனுஞ் சொல்லறியாத சீகையில் வாழ்,

……..தன்னைப்போய்  யாழ்ப்பாணன் யான்

 

பல்லைவிரித் திரந்தக்கால் வெண்சோறும்,

……..பழந்தூசும் பாலியாமல்

 

கொல்ல நினைந்தே தனது நால்வாயைப்,

………பரிசென்று கொடுத்தான், பார்க்குள்

 

தொல்லையென தொருவாய்க்கு நால்வாய்க்கு,

……… இரையெங்கே துரப்புவேனே!

 

-------------------------------------------------------------------------------------------------

 சொற்பொருள்:

 -------------------

இல்” எனுஞ் சொல்றியாத = தன் வாயிலிருந்து “இல்லை” என்னும் சொல்லை உதிர்த்து அறியாத ;  சீகையில் வாழ் = சீகை என்னும் சீர்காழியில் வாழ்கின்ற; தன்னைப்போய் = வள்ளலாகிய இராமன் என்பவரிடம் சென்று; யாழ்ப்பாணன் யான் = யாழ் மீட்டுகின்ற பாணனாகிய நான்;  பல்லை விரித்து இரந்தக்கால் = பற்களைக் காட்டி நெளிந்து குழைந்து உதவி கோரியபோது; 

 

வெண்சோறும் பழந்தூசும் பாலியாமல் = சில நாள்கள் வயிறார உண்பதற்கு சில பொதிகள் அரிசியும் துணிமணிகளும் தராமல்; பார்க்குள் தொல்லை து  ருவாய்க்கு = இந்தப் பூமியில் என் ஒரு வாய்க்கே உணவின்றி அல்லற்பட்டு வருகையில்; நால்வாய்க்கு = எனக்குப் பரிசாக இந்த வள்ளல் கொடுத்திருக்கும் நால்வாய் எனப்படும் யானைக்கு; இரையெங்கே துரப்புவேனே = இரை அளிப்பதற்கு  நான் என் செய்வேன் ?

 -------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

 -----------------


சீர்காழியில் வாழ்ந்து வந்த இராமன் என்பார் வள்ளல் தன்மை மிக்கவர். அவரிடம் யாழ் மீட்டும் புலவர் (பாணன்) ஒருவர் சென்று தனக்கு உதவி செய்யக் கோரினார்.  அந்த வள்ளல் யானை ஒன்றை புலவருக்குக் கொடுத்தார். தன் ஒரு வயிற்றுக்கே சோறு கிடைக்காத போது யானையைக் கட்டித் தீனி போடுவது எப்படி என்று அவர் கலங்குகிறார் !

 --------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

 ---------------


வள்ளலின் கொடைத் திறத்தை அந்தகக் கவி வீரராகவர் நகைச் சுவை மிக்க பாடலாக வெளிப்படுத்தியுள்ளார் !

 

---------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.ஆ: 2053, மேழம் (சித்திரை) 15]

{28-04-2022}

---------------------------------------------------------------------------------------------------

நால்வாய்



வீரராகவர் பாடல் (02) தேன் பொழிந்த வாயான்!

தேன் போல இனிய மொழி பேசுபவர் ! யார் ?


------------------------------------------------------------------------------------------------------

 

வீரராகவ முதலியார் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த  தமிழ்ப் புலவராவார். தொண்டை நாட்டில் உள்ள பொன்விளைந்த களத்தூரைச்  சேர்ந்த வடுகநாத முதலியாருக்கு மகனாக பிறந்த வீரராகவ முதலியார், இளமையில் அந்நாட்டின் தலைநகரான காஞ்சிமாநகர் சென்று அங்கு தமிழ் கற்றார். 

 

அருணகிரிநாதர்,  வில்லிபுத்தூரார்  காலத்தில் வாழ்ந்த இவர் வசிப்பிடம் பொற்களந்தை என்பர். பார்வை இல்லாத காரணத்தால் இவர் அந்தகக் கவி வீரராகவ முதலியார் என்றும் அழைக்கப்படுவர்.  எட்டாயிரங் கோடி யெழுதாது தன் மனத் தெழுதிப் படித்த விரகர் என்று இவரின் ஞாபகத்தில் வைத்து செய்யுள் பாடும் திறமையைப் புகழ்வர்.

 

இவர் பல தனி நிலைச் செய்யுள்களையும் கழுக்குன்றப் புராணம், கழுக்குன்ற மாலை,  சந்திரவாணன் கோவை, திருவாரூர்  உலா, சேயூர்க்கலம்பகம், சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், கயத்தாற்றரசன் உலா முதலிய பிரபந்தங்களை இயற்றியுள்ளார் !

 

வீரராகவ முதலியார்  பிறவியிலேயே  கண் பார்வை இழந்தவர். அதனால் அந்தகக் கவி என்னும் அடைமொழி பெற்றவர் !

 

அவர் வாழ்ந்த ஊரில் திருவேங்கடம், கண்ணுக்கினியான் என இருவர் வாழ்ந்து வந்தனர்.  இவர்களுள் திருவேங்கடம் இன்மொழியாளர்; கண்ணுக்கினியான் சுடுமொழியாளர். தமிழ்ப் புலவர்களை நயந்து பாராட்டுவதில் இருவரும் தத்தம்  இயல்பான குணங்களுக்கு ஏற்ப நடந்து வரலாயினர் !

 

அவர்களைப் பற்றி  வீரராகவர் இயற்றிய ஒரு பாடல், இதோ உங்களுக்காக !

-----------------------------------------------------------------------------------------------------

 

தேன்பொழிந்த வாயான் திருவேங்கடத் துடனே

ஏன்பிறந்தான் கண்ணுக் கினியானே வான்சிறந்த

சீதேவியாருடனே செய்ய திருப்பாற் கடலில்

மூதேவியேன் பிறந்தாள் முன் !

 

------------------------------------------------------------------------------------------------------

 

பாடலின் பொருள்:

-------------------------

தேன் போல இனிய மொழி பேசுபவர்  அன்பர் திருவேங்கடம்.”  ஆனால் இனிமை என்பதையே  அறியாத, சுடுமொழியாளர் கண்ணுக்கினியான்”, அவருக்குத் தமையனாராக  ஏன் பிறந்தார் ? எப்படியென்றால், வானவர் போற்றும் திருமகளான சீதேவியுடன்  அவளுக்கு முன் அவளது தமக்கையான மூதேவி திருப்பாற்கடலில் பிறக்கவில்லையா ?  அப்படித்தான் இவனும் பிறந்திருக்கிறான் !

 

-----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2053, மேழம் (சித்திரை) 15]

{28-04-2022}

------------------------------------------------------------------------------------------------------

மூதேவி