கி.பி,2-ஆம்
நூற்றாண்டு வாக்கில் தோன்றிய நான்மணிக் கடிகை என்னும் நூல் விளம்பி நாகனார் என்பவரால்
படைக்கப் பெற்றது. கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்களைக்
கொண்ட இந்நூல் அறத்தை வலியுறுத்துகிறது !. இதிலிருந்து
ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்; (25)
--------------------------
மலைப்பினும்   வாரணம்   தாங்கும்    அலைப்பினும்
அன்னேயென்   றோடும்    குழவி,  சிலைப்பினும்
நட்டார்  நடுங்கும்  வினை  செய்யார்,  ஒட்டார்
உடனுறையும்   காலமும்   இல்.
-----------------------------------------------------------------------------------------------------------
பொருள்:
----------------
பாகன் தன்னைக்  கவை முள் கருவி கொண்டு குத்தி  ஒறுத்தாலும் , அவனை வெறுக்காமல்,
யானையானது  அவனைச்
சுமந்தே  செல்கிறது  !
தன்னை அடித்து வருத்தினாலும்,  அதை மனதில் கொள்ளாது , குழந்தையானது
“அம்மா” என்று அழுது கொண்டே தாயின் பின்னால் தான் ஓடுகிறது  !
தவறு கண்டு சினந்து உரைத்தாலும்
, உண்மையான நண்பர்கள் நமக்கு எந்நாளும் தீமை செய்யத் துணிவது  இல்லை  !
ஆனால்,
பகைவர்களோ தமக்குள் வேற்றுமைகளை  மறந்து  ஒன்றாகக்
கூடி வாழ்தல் என்பது  இவ்வுலகில்
ஒருபோதும்  இருந்ததில்லை  ! 
------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-------------------------------------
மலைப்பினும்
= பாகன் தன்னை ஒறுத்தாலும் ; வாரணம்  தாங்கும்
= யானை அவனைச் சுமந்து செல்லும் ;  அலைப்பினும் = தன்னை அடித்து
வருத்தினாலும் ; குழவி = குழந்தை ; அன்னே என்று
ஓடும் = “அம்மா” என்று அழுது கொண்டே அவளருகில் ஓடும்
; சிலைப்பினும் = தவறு கண்டு சினந்து கொண்டாலும் ; நட்டார்
= நண்பர் ; நடுங்கும் வினை செய்யார் = நாம்
நடுங்கும்படித் தீயவை செய்ய மாட்டார் ; ஒட்டார்
= பகைவர்கள் ; உடன் உறையும் காலமும் = தம்முள்
ஒன்று கூடி நீங்காமல் வாழும் காலமும் ; இல்
= ஒருபோதும் இல்லை.
-------------------------------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
-------------------------
யானையைப் பாகனும்,
குழந்தையைத் தாயும்,   நண்பர்களை
நண்பர்களும்,  வருத்தினாலும்
ஒருவரையொருவர் தழுவியே நிற்பர்; ஆனால் பகைவர்களோ  எக்காலத்தும் தமக்குள் ஒன்றுபட்டு  நிற்பதில்லை !
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2052, ஆடவை (ஆனி) 16]
{30-06-2021}
-----------------------------------------------------------------------------------------------------------



