name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: செப்டம்பர் 2020

செவ்வாய், செப்டம்பர் 29, 2020

தமிழ் (31) நமது பெயர்கள் வடமொழிப் பெயர்களாக இருப்பது ஏன் ?

தமிழ் நாட்டில் தமிழில் பெயர் வைத்துக் கொள்ளல் அருகிவிட்டது ஏன் ?

------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்கள் பொதுவாகசங்க கால இலக்கியங்கள்என்றும்சங்கம் மருவிய கால இலக்கியங்கள்என்றும் வகைப் படுத்தப்படுகின்றன.  சங்க காலம் என்பது கி.மு 5 ஆம் நூற்றாண்டு தொடங்கி கி,பி 2 ஆம் நூற்றாண்டு வரை விரிந்து நிற்கும் காலம். சங்கம் மருவிய காலம் என்பது கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டு கி.பி 7 ஆம் நூற்றாண்டு வரை விரிந்து நிற்பவை !


எட்டுத் தொகை நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை சங்ககால நூல்களாகக் கருதப்படுபவை ! இவை கி.மு 500 தொடங்கி கி,பி 200 வரையுள்ள காலத்தைச் சேர்ந்தவை என அறிஞர்களால் கணிக்கப்பட்டுள்ளன !

 

கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே ஆரியர்களின் வருகை தமிழ்நாட்டுக்குள்  நிகழ்ந்திருக்கிறது என வரலாற்று அறிஞர்கள் கணிக்கின்றனர். சங்க கால இலக்கியங்களில் உள்ள பாடல்களில் ஒரு சில ஆரியர் வருகையையொட்டி இயற்றப்பட்டிருக்கலாம். அதனால் தான் அதன் தாக்கம் புறநானூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து   மற்றும் கலித்தொகைப் பாடல் வரிகளில் எதிரொலிக்கிறது !

 

 ஒரு சில பாடல் வரிகளைக் காண்போம் !

 ----------------------------------------------------------------------------------------------------

(01)      ஆலமர் கடவுள் அன்ன நின் செல்வம் (புறநானூறு198)

(02)     ஆவும்  ஆன் இயல் பார்ப்பன மாக்களும் (புறநானூறு.9)

(03)      ஈப்பாய் அடுநறாக் கொண்டது இவ்யாறெனப்

       பார்ப்பார் ஒழிந்தார் படிவு. (பரி.திர.2:59)

(04)      ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய 

             (புறநாநூறு.2)

(05)      உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் (புறம்.182)

(06)      ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறைய (புறம்.367)

(07)      ஐந்தலை சுமந்த வேக வெந்திறல் நாகம் (புறம்.37)

(08)      ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என் (கலி.130:9)

(09)      ஐயிரு தலையின் அரக்கர் கோமான்(கலி.38:3,)

(10)      ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா

        கைபுனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு

        (கலி.25:3)

(11)      கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை (புறம்.378)

(12)      கறை மிடற்று அண்ணல் காமர் சென்னி (புறம். 55)

(13)      கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு (புறம்.361)

(14)      சூர் நவை முருகன் சுற்றத்து அன்ன நின் (புறம்.23)

(15)      தாலி களைந் தன்றும்  இலனே ; பால்விட்டு (புறம்.77)

(16)      தேவர் உலகம் எய்தினன் ஆதலின் (புறம்.228)

(17)      தைஇத் திங்கள் தண் கயம் போல (புறம்.70)

(18)      நல் பனுவல் நால் வேதத்து  (புறம்.15)

(19)      நீல மணி மிடற்று ஒருவன் போல (புறம்.91)

(20)      நீல் நிற உருவின் நேமியோனும் (புறம்.58)

(21)      நெய்ம்  மலி ஆவுதி பொங்க பல் மான் (புறம்.15)

(22)      பனி பொழி சாரலும்,பார்ப்பாரும் (பரி.8:52,)

(23)      பாம்பு சேர் மதி போல, பசப்பு ஊர்ந்து தொலைந்த

                   (கலி.15:17)

(24)      பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய (நற். 321:5,)

(25)      பார்ப்பன மகனே ! பார்ப்பன மகனே ! குறு. 156.

(26)      பார்ப்பார் தப்பிய கொடுமை யோர்க்கும் (புறம்.34)

(27)      பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது (புறம்.43)

(28)      பால் நிற உருவின் பனைக் கொடியோனும் (புறம்)

(29)      பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல (புறம்.55)

(30)      போர் தலைமிகுத்த ஈர்-ஐம்பதின் மரொடு (பதிற். 14:5)

(31)      மறம் தலைக்கொண்ட நூற்றுவர் 

            தலைவனை (கலி.52:2)

(32)      மாற்று அருங் கணிச்சி மணி மிடற்றோனும் (புறம் )

(33)      முதுபார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து (கலி. 65:20)

(34)      வடமீன் புரையும் கற்பின், மடமொழி (புறம்.122.)

(35)      வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற

       முகத்தவன் (திருதராட்டிரன்) (கலி.25:1)

(36)      வல் வேற் கந்தன் நல் இசை அல்ல (புறம்.380)

(37)      வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் (புறம்.183)

---------------------------------------------------------------------------------------------------

ஆரியர்களின் அறிமுகமான ஆலமர் கடவுள் (தெட்சணாமூர்த்தி), இந்திரன், இராமன், சீதை, தேவர் உலகம், மணிமிடற்று ஒருவன் (பரமசிவன்) நேமியோன் (திருமால்), பனைக்கொடியோன், நுதல் விளங்குமொரு கண் (பரமசிவன்), கந்தன் ஆகிய கடவுளர் பெயர்கள் புறநானூற்றுப் பாடல்களில் இடம் பெற்றிருப்பது எப்படி ?

 

ஈரைம்பதின்மர் (கௌரவர்கள்), ஐந்தலை நாகம், ஐயிரு தலையின் அரக்கர் கோமான் (இராவணன்), நால்வேதம், வேள்வி அந்தணர், தாலி களைதல், நெய்ம்மலி ஆவுதி, பாம்பு சேர் மதி (சந்திர கிரகணம்), வடமீன் கற்பு ஆகிய ஆரியர்களின் கருத்துகள் புறநானூற்றில் இடம் பெற்றிருப்பது எப்படி ?

 

ஆரியர்களின் கான்முளைகளாகக் கருதப்படும்  ஒரு பிரிவினரைக் குறிக்கும் வகையில்பார்ப்பனர்என்னும் சொல் ஒன்பது பாடல் வரிகளில் இடம் பெற்றிருப்பது எப்படி ?

 

வேறு எந்தப் பிரிவினரையும், எடுத்துக் காட்டாகசத்திரியர்”, “வைசியர்”, “சூத்திரர்ஆகியோரைக் குறிக்கும் எந்தச் சொல்லும் புறநானூற்றில் காணப்படாத போதுபிராமணர்களைக் குறிக்கும்பார்ப்பனர்என்ற சொல் மட்டும் ஒன்பது பாடல் வரிகளில் இடம் பெற்றிருப்பது எப்படி?

 

பத்துப் பாட்டு நூல்களான, திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகியவை கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை. இவற்றில் ஆரியக் கலப்பு இருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை.


---------------------------------------------------------------------------------------------------

1).ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய (பெரும்.415.)

2).பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் (பெரும்.373)

---------------------------------------------------------------------------------------------------

 

திருமுருகாற்றுப்படை கி.பி. 7 ஆம் நூற்றாண்டு இலக்கியம். இதில் தான் திருமால், சிவன், இந்திரன், பிரம்மா, பார்ப்பனர்   பற்றிய குறிப்புகள் வருகின்றன !

---------------------------------------------------------------------------------------------------

 

(01) புள் அணி நீள் கொடிச் செல்வன் ( திருமால்),

(02) உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண் (சிவன்),

(03) யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன் (இந்திரன்),

(04) நான்முக ஒருவற் சுட்டி (பிரம்மா)

(05) ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் (பார்ப்பனர்)

----------------------------------------------------------------------------------------------------

 

சங்க கால நூல்களில் தொடங்கி இன்று வரை ஆரியர்களின் மேலாளுமை முனைப்பாக இருந்தே வருகிறது. தங்கள் மொழியையும், பண்பாட்டையும் தமிழர்கள் மீது திணிப்பதற்கு அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் தான் ‘”கடவுள்” !

 

கடவுளின் பெயரால் தான், தமிழ் நாட்டில் மாந்தர்களின் பெயர்களெல்லாம்வடமொழி:”ப் பெயர்களாகவே இருக்கின்றன. மாந்தர்களுக்குப் பெயர் சூட்டுவதில் தமிழை அடியோடு ஒதுக்கி வைத்து விட்டது ஆரியம். இது புரியாமல் நாம் இன்னும் ஆரியத்துக்கு அடிமைப்பட்டு, வடமொழிப் பெயர்களாகவே வைத்துக் கொண்டிருக்கிறோம் !

 

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, கன்னி (புரட்டாசி),12]

{28-09-2020}

---------------------------------------------------------------------------------------------------------

             தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற

 கட்டுரை !

--------------------------------------------------------------------------------------------------------

 

 

 

செவ்வாய், செப்டம்பர் 22, 2020

புதிய தமிழ்ச் சொல் (58) பயின் ( RUBBER )

புதுச்சொல் புனைவோம் !

பயின் - RUBBER

------------------------------------------------------------------------------------------------

ஒரு ஆங்கிலச் சொல்லைத் தமிழில் மொழியாக்கம் செய்கையில் சில அடிப்படை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விதிகளைப் பின்பற்றினால், அழகிய தமிழ்ச் சொற்களை நாம் நிரம்பவும் உருவாக்க முடியும் !

 

அடிப்படை விதிகள் யாவை என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் ! (01) இயன்றவரை. ஆங்கிலச் சொல்லின் பொருளை உள்ளடக்கியதாக உருவாக்கப்படும் தமிழ்ச் சொல் இருக்க வேண்டும் (02) இஃது இயலவில்லையேல், அச் சொல்லுக்கு  உரிய பொருளின் வடிவம், பண்பு, பயன், தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய தமிழ்ச் சொல் உருவாக்கலாம் ! (03) புதிய சொல் தமிழ் மரபுக்கும் இலக்கணத்திற்கும் இயைபுடையதாக இருத்தல் வேண்டும். (04) வடிவில் சிறியதாக இருக்க வேண்டும் (05) ஓசை நயம் உடையதாக இருக்க வேண்டும் !

 

இந்த வரையறைகளுக்கு உட்பட்டு, உருவாக்கப்படும் சொற்களே மொழிக்கு வளம் சேர்ப்பதாக அமையும். ஆனால், மொழியுணர்வோ  மொழிப்பற்றோ  இல்லாத ஒருசிலர்  அவர்கள் விருப்பப்படி ஏதேதோ சொற்களை உருவாக்கி உலவவிட்டு  வருகிறார்கள் !

 

இத்தகைய ஆளிநர் மிக எளிதாகக் கையாளும் முறை  வினைச் சொல்லின் அடிப்படையில் பெயர்ச் சொற்களை உருவாக்குதல்.  எப்படி என்கிறீர்களா ? ERAZE என்பது ஒரு வினைச்சொல் ! இதற்கு அழி என்று பொருள். இதன் அடிப்படையில் ERAZER = “அழிப்பான்என்ற சொல்லை உருவாக்கி விட்டார்கள் !

 

வினையடிப் பெயர்ச் சொற்கள் தமிழுக்கு வளம் சேர்க்கா ! அரிதாக ஓரிரு பெயர்ச் சொற்கள் வினையடிப் பெயர்களாக -- மண்வெட்டி, களைக்கொத்தி, பாக்குவெட்டி போன்றுஇருக்கலாமே தவிர பெருவாரியான சொற்கள் இவ்வாறு அமைவது மொழியின் பண்பையே உருமாற்றிவிடும் ! மேற்கண்ட சொற்களும்கர விகுதி பெற்றவையே தாவிரஆன்விகுதி பெற்றவை அல்ல !

 

வினையடிப் பெயர்ச் சொற்களை நாம் ஏற்றுக் கொண்டால் என்னவாகும் ? வினைச்சொல்லுடன்ஆன்விகுதி சேர்த்து துளைப்பான், அறுப்பான், வழிப்பான், கடைவான், உடைப்பான், தெளிப்பான், சீவுவான், கோலுவான், வகிர்வான், பகிர்வான், தணிப்பான், துணிப்பான், கழுவுவான், ஏற்றுவான், இறைப்பான், முறிப்பான், இணைப்பான், பிணைப்பான், தழுவுவான், உழுவான், பிழிவான், மழிப்பான், குழிப்பான், திரிப்பான், பிரிப்பான், ஓட்டுவான், கூட்டுவான், கரைப்பான், கலைப்பான், ஊட்டுவான், குறைப்பான், குளிர்விப்பான், என்று பல்லாயிரக் கணக்கில் சொற்கள் உலவத் தொடங்கிவிடும் !

 

துளைப்பான், தெளிப்பான் என்னும் சொற்களை வேளாண்மைத் துறையில் காணலாம். கரைப்பான், வடிப்பான், குறைப்பான், மிதப்பான் போன்ற சொற்களைப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் காணலாம். மடிமையாளர்களின் (சோம்பேறிகளின்) கண்டுபிடிப்பு இந்தச் சொற்கள் !!

 

படித்தது தமிழ்நாட்டில் ! பணி புரிவது தமிழ்நாட்டில் ! வாழ்வது தமிழ்நாட்டில் ! அப்படி இருக்கையில் தமிழ் மரபுப்படிச் சொற்களை உருவாக்காமல் மரபுகளுக்கு மாறாக உயர்திணை ஆண்பால் விகுதியானஆன்விகுதியைக் கொண்டு அஃறிணைப் பொருள்களுக்குப் பெயர் சூட்டுவது அறிவார்ந்த செயலாகுமா ? ”ஆன்விகுதிச் சொற்களை உருவாக்கிப் புழக்கத்தில் விடும் இந்த மடிமையாளர்களை என்னவென்று அழைப்பது ?  இத்தகைய மடிமையாளர்களால் கற்ற தமிழுக்கும் பயனில்லை ! காலூன்றி வாழும் நாட்டுக்கும் பயனில்லை ! இந்தக் குமுகாயத்திற்கே எந்தப் பயனும் இல்லை !

 

தமிழில்பயின்என்று ஒரு சொல் உண்டு. ”சிதையும் கலத்தைப் பயினான் திருத்தும்என்பது பரிபாடல் (10:54). “சிறு காரோடன் பயினொடு சேர்த்திய...” என்பது அகநானூறு (1:5) .பயின் என்பதற்குப் பிசின் என்று பொருள். ஆங்கிலத்தில் RUBBER  என்று சொல்லப்படும் பொருள், ஒரு மரத்திலிருந்து வடித்தெடுக்கப்படும் பால் இறுகுவதால் உண்டாகும் பிசின் தானே !

 

தமிழில் RUBBER என்னும் ஆங்கிலச் சொல்லைஇரப்பர்என்றும்அழிப்பான்என்றும்தேய்ப்பான்என்றும்இழுவைஎன்றும்  பலவாறாகச் சொல்லி வருகிறோம். இலக்கியங்களில் காணப்படும்பயின்என்னும் சொல்லை RUBBER என்பதைக் குறிக்கும் சொல்லாக நாம்   பயன்படுத்தலாமே !

 

RUBBER என்பதன் மூல வடிவம்  ஒரு மரத்தின் பால். இந்தப் பால் இறுகிப் பிசினாகிறது. நமக்கு அறிமுகமான கருவேலம் பிசின், முருங்கைப் பிசின், வேப்பம் பிசின் ஆகியவையும் அடிப்படையில் பாலாக வடிந்து பின்பு பிசினாக இறுகுவது தானே !

 

பயின்என்ற சொல் பொருள் வகையில் பொருந்தி வருகிறது; வடிவில் சிறியதாக இருக்கிறது; ஒலிநயம் மிக்கதாக இருக்கிறது; தமிழ் மரபுக்கு ஏற்ப இருக்கிறது. அப்புறம் என்ன ?  Rubber என்பதைக் குறிக்கும் சொல்லாகபயின்என்னும் சொல்லை ஏற்போம் !  பயின் என்னும் சொல்லின் அடிப்படையில் தோன்றும் பிற சொற்களையும்  பார்ப்போமா ?


-------------------------------------------------------------------------------------------------------------

                              RUBBER..................................= பயின்

                               RUBBER GOODS..................= பயின் பொருள்கள்

                               RUBBER MAT........................= பயின் பாய்

                               RUBBER TUBE......................= பயின் குழல்

                               RUBBER STAMP....................= பயினச்சு

                               RUBBER SHEET....................= பயின் ஏடு

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை: 

வை.வேதரெத்தினம், 

(veda70.vv@gmail.com) 

ஆட்சியர், 

தமிழ்ப் பணி மன்றம். 

தி.பி: 2051, கன்னி (புரட்டாசி),03] 

{19-09-2020}

-------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை

-------------------------------------------------------------------------------------------------------------