name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நவம்பர் 2019

சனி, நவம்பர் 30, 2019

தமிழிலக்கியம் (02) திருவாசகம் !

திருவாசகத்துக்கு மனமுருகார், ஒரு வாசகத்துக்கும் உருகார் !



சைவ சமயக் குரவர்கள் நால்வரில், தேவாரத்தைப் படைத்தவர்கள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர். திருவாசகத்தை அளித்தவர் மாணிக்கவாசகப் பெருமான் ! சிவபெருமான் மீது பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே திருவாசகம் ! இஃது எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப் பெற்றுள்ளது !

மாணிக்கவாசகர், பாண்டிவள நாட்டில் மதுரைக்குக் கிழக்கே 24 கி.மீ தொலைவில் உள்ள திருவாதவூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். தந்தையார் பெயர் சம்புபாதர். தாயார் சிவஞானவதி. கி.பி .9 –ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்க வாசகர் இளமையிலேயே அறிவாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார் !

மாணிக்க வாசகரின் மேதைமையை கேள்வியுற்ற பாண்டிய மன்னன் அரிமர்த்தனன், அவரை வரவழைத்து தனது அரசவையில் அமைச்சர் பொறுப்பை வழங்கினான். அவரது செயலாற்றலை உற்று நோக்கி வந்த பாண்டிய மன்னன், மாணிக்க வாசகருக்குதென்னவன் பிரமராயன்என்னும் பட்டத்தையும் அளித்து மகிழ்ந்தான் !

உயர்ந்த பதவி, செல்வம் அனைத்தும் இருந்தும், மாணிக்கவாசகர், அவற்றில் அதிக ஈடுபாடு காட்டாமல், சிவ வழிபாட்டிலேயே நாட்டம் கொண்டிருந்தார் ! அதன் வெளிப்பாடு தான் அவர் இயற்றிய திருவாசகம் !

திருவாசகத்தில்  51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன.  சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித்  திருவகவல் என்னூம் நான்கு பெரும் பகுதிகள் இதிலுள்ளன !


--------------------------------------------------------------------------------------------
அம்மையே அப்பா ! ஒப்பிலா மணியே !
அன்பினில் விளைந்த ஆரமுதே !
பொய்ம்மையே பெருக்கிப்  பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப்  புலையலேன்  தனக்குச்
செம்மையே ஆய  சிவபதம்  அளித்த
செல்வமே சிவ பெருமானே !
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது இனியே !
--------------------------------------------------------------------------------------------


இறைமைச் சுவையும், இனிமைத் தமிழும் ஒருங்கே இணைந்த இத்தகு பாடல்கள் திருவாசகத்தின்கண் நிரம்ப உள்ளன !

மார்கழித் திங்களில் கோயில்களில் ஒலிபரப்பப் படும் திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களை அனைவரும் செவி மடுத்திருக்கிறோம். திருவெம்பாவை மொத்தம் 20 பாடல்கள் ஆகும். இவற்றை இயற்றியவர் மாணிக்க வாசகரே. திருவாசகத்தின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் திருவெம்பாவையில் எட்டாவது பாடல் இதோ இப்படித் தொடங்குகிறது !


----------------------------------------------------------------------------------------
 கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்;
.......ஏழில் இயம்ப  இயம்புவெண் சங்கெங்கும்;
----------------------------------------------------------------------------------------


இப்பாடலில் வரும்ஏழில்என்னும் சொல் இக்காலத்தில்நாதஸ்வரம்என்றும்நாகஸ்வரம்என்றும் பலவாறாகச் சொல்லப்படும் இசைக் கருவியைக் குறிக்கிறது. “ஏழில்என்னும் தமிழ்ச் சொல் மறைந்து போய்நாதஸ்வரம்என்னும் வடமொழிச் சொல் கோயில்களில் மட்டுமன்றி, தமிழர்களின் நாவிலும் புழங்குவது தான் தமிழ் மீது வடமொழி மேலாண்மை செலுத்துவதன் அடையாளம் !

தமிழை விட வடமொழியே உயர்ந்தது என்னும் கொள்கையுடைய பார்ப்பனர் குலத்தில் பிறந்திருந்தாலும், வடமொழி மேலாண்மை முனைப்பாக வேரூன்றித் தழைத்து வந்த அக்காலத்திலும் கூட, அழகிய தமிழில் பாடல்களைப் படைத்து, தமிழ்கூறும் நல்லுலகத்தில், தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி வைத்திருக்கும் மாணிக்க வாசகர்  என்றென்றும் போற்றுதற்குரியவரே !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ் பணி மன்றம்.
[தி.:2050: நளி (கார்த்திகை) 12]
{28-11-2019}
-------------------------------------------------------------------------------------------------------
             தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற  
                                                           கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------


புதன், நவம்பர் 27, 2019

தமிழிலக்கியம் (01) தேவாரம் !

மாசில் வீணையும் மாலை மதியமும்  ! மறக்கமுடியாத  இனிய தமிழமுது !



தேவாரம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப் பெற்ற பதிகங்கள் அடங்கிய நூல். அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரும் தேவாரம் பாடிய நாயன்மார்கள் !

திருநாவுக்கரசரும் (அப்பர்), திருஞானசம்பந்தரும் கி.பி. 7 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். சுந்தரமூர்த்தி நாயனார் கி.பி 8 –ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தேவாரம் பதிக வடிவிலேயே பாடப்பட்டுள்ளது பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது !

கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல்லவர்கள் ஆட்சி செய்து வந்தனர். இந்தச் சமயத்தில் பௌத்தமும் சமணமும் தமிழ்நாட்டில் செல்வாக்குடன் இருந்தன. இம்மதங்களின் செல்வாக்கை முறியடித்து, சைவ சமயத்தைத் தமிழ்நாட்டில் மீண்டும் மலர்ச்சி பெறச் செய்ய அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் ஊர் ஊராகச் சென்று சமயப் பரப்புரை செய்து வந்தனர் !

ஆங்காங்கே இருந்த கோயில்கள்மீது தேவாரங்களைப் பாடினர். சுந்தரமூர்த்தி நாயனார் இவ்வாறு பாடிய தேவாரப் பாடல்கள் பல்லாயிரம் என்று சொல்லப்பட்டாலும், 1026 பாடல்களே கிடைத்துள்ளன. திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்களில் கிடைத்துள்ளவை  எண்ணிக்கை 3066. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களில் கிடைத்துள்ளவை 4158 ஆகும் !

அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரின் மறைவுக்குப் பிறகு தில்லைவாழ் பார்ப்பனர்கள் இவர்கள் பாடல்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளை கோயிலில் ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. நடராசர் ஆலயத்தில் பூட்டப்பெற்ற  அறையில் கேட்பாரற்றுக் கிடந்த தேவார ஓலைச் சுவடிகளில் பெரும்பகுதி சிதலுக்கு (கரையான்) இரையாகி அழிந்து போயிருந்தது. கி.பி.பத்தாம் நூற்றாண்டில் மாமன்னன் இராசராசன் எஞ்சிய சுவடிகளை மீட்டு வந்து நம்பியாண்டார் நம்பி என்பவரைக் கொண்டு பாதுகாத்து தொகுக்கச் செய்தார் என்று கூறப்படுகிறது !

நம்பியாண்டார் நம்பி இவ்வாறு தொகுத்த  நூல்களுக்குபன்னிரு திருமுறைஎன்று பெயர். 1, 2, 3 ஆம் திருமுறைகளில் திருஞனசம்பந்தர் பாடிய தேவாரமும், 4, 5, 6 ஆம் திருமுறையில் திருநாவுக்கரசர் பாடிய தேவாரமும், 7 ஆம் திருமுறையில் சுந்தரர் பாடிய தேவாரமும் மாணிக்கவாசகரின் திருவாசகமும், திருக்கோவையாரும் 8 ஆம் திருமுறையிலும், திருமூலரின் திருமந்திரம் 10 ஆம் திருமுறையிலும், சேக்கிழாரின் பெரியபுராணம் 12 ஆம் திருமுறையிலும் இடம்பெற்றுள்ளன ! 

திருஞான சம்பந்தர், சீர்காழியில் உள்ள தோணியப்பர் மீதுதோடுடைய செவியன்என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார் !

திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடியகூற்றாயினவாறு விலக்கலீர்என்று தொடங்கும் பதிகமே திருநாவுக்கரசரின் முதற் பதிகம் ஆகும் !

பித்தா பிறைசூடி, பெம்மானே !” என்று தொடங்கும் தேவாரப் பாடல் தான் சுந்தரமூர்த்தி நாயனாரின் முதற் பதிகமாகும் !

தேவாரப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை.............= 8250 ஆகும்.

----------------------------------------------------------------------------------------------------------
திருமுறை.........................................பாடியவர்...........பாடல் எண்ணிக்கை
----------------------------------------------------------------------------------------------------------

முதலாம் திருமுறை..............திருஞானசம்பந்தர்.....................1469
இரண்டாம் திருமுறை..........திருஞானசம்பந்தர்.....................1331
மூன்றாம் திருமுறை.............திருஞானசம்பந்தர்.....................1358
                          கூடுதல்...........................................4158
.................................................................................................................................
நான்காம் திருமுறை.............திருநாவுக்கரசர்..........................1070
ஐந்தாம் திருமுறை.................திருநாவுக்கரசர்.........................1015
ஆறாம் திருமுறை..................திருநாவுக்கரசர்..........................0981
                          கூடுதல்...........................................3066
................................................................................................................................
ஏழாம் திருமுறை....................சுந்தரர்.........................................1026
                          கூடுதல்...........................................1026

--------------------------------------------------------------------------------------------------------
தொகு மொத்தம்..................................................................8250
--------------------------------------------------------------------------------------------------------


கடலூர் மாவட்டம் திருமுனைப்பாடி பகுதியைச் சேர்ந்த திருவாமூர் என்னும் ஊரில் திருநாவுக்கரசர் பிறந்தார்.  இவருடைய இயற்பெயர் மருள் நீக்கியார்.  இவருடைய தமக்கையார் திலகவதியார்.  சைவ சமயக் குடும்பத்தில் பிறந்த  மருணீக்கியார், பின்பு சமண மதத்தைத் தழுவி தருமசேனர் என்னும் பெயருடன் சமயப் பணியாற்றினார். மீண்டும் சைவ சமயத்திற்கு மாறி, நாவுக்கரசர் என்னும் பெயருடன் சிவத்தொண்டு புரியலானார் !

தாம் சென்ற திருத்தலங்களுக்கு எல்லாம், தந்தை இல்லாச் சிறுவனான திருஞான சம்பந்தரை இவர் தம் தோளில் தூக்கி சுமந்து சென்றதால், திருஞானசம்பந்தர் இவரை அப்பர்என்று அழைத்தார். அதுமுதல் திருநாவுக்கரசர்அப்பர்ஆனார் !

------------------------------------------------------------------------------------
மாசில்  வீணையும்  மாலை   மதியமும்
வீசு   தென்றலும்   வீங்கிள  வேனிலும்
மூசு  வண்டறைப்  பொய்கையும்  போன்றதே
ஈசன்  எந்தை இணையடி நீழலே.
-----------------------------------------------------------------------------------

திருநாவுக்கரசரின் இப்பாடல், இறைவணக்கப் பாடலாக பல நிகழ்ச்சிகளில் இன்றும் பாடப்படுகிறது ! இறைத் தொண்டுடன் தமிழ்த் தொண்டும் புரிந்த அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர், தமது 81 –ஆம் அகவையில், இவ்வுலக வாழ்வை நீத்தார் !

சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் ஆதி சைவர் குலத்தில் பிறந்தார்.. இவரது இயற்பெயர் நம்பியாரூரன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேவாரப் பாடகளை அளித்த  சுந்தரமூர்த்தி நாயனார்,  தனது 18 ஆவது வயதில் மறைந்தார் !

திருஞானசம்பந்தர், நாகை மாவட்டம் சீர்காழி என்னும் ஊரில் பார்ப்பனர் குலத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ஆளுடைய பிள்ளை. இவர் வாழ்ந்த காலம் 16 ஆண்டுகளே என்று சொல்லப்படுகிறது !

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050: நளி (கார்த்திகை)10]
{26-11-2019}
--------------------------------------------------------------------------------------------------------

                    தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

--------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, நவம்பர் 17, 2019

பல்வகை (19) ஆங்கில மொழியின்பால் அகத்தியமற்ற ஈர்ப்பு !

இஃது அக்கரைப் பச்சை போன்றதொரு  ஈர்ப்பு !


ஆங்கில மொழியின்பால் சிலருக்கு அளவு கடந்த ஈர்ப்பு இருப்பதைக் காண்கிறோம் ! ஆங்கிலத்தை முழுமையாக அறிந்து உள்வாங்கிக் கொண்டதால் ஏற்பட்ட ஈர்ப்பு என்று இதைச்  சொல்ல முடியுமா ? முடியாது !

ஒருவன்காச்சு மூச்சுஎன்று தப்பும் தவறுமாக ஆங்கிலத்தில் உளறிக் கொட்டினாலும், அதைச் செவி மடுக்கும் அரைகுறை ஆங்கில அறிவு பெற்ற இன்னொருவன், “ஆகா ! எத்துணை அழகாகத் தங்கு தடையின்றிப் பேசுகிறான்  என்று இனம் புரியாத ஒரு மயக்கத்தில் ஆழ்ந்து போகிறான் ! அதனால், ஆங்கிலத்தின் மீது  அவனுக்கு இயல்பாக ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது ! காரணம் அயலிடம் சார்ந்த எதுவாயினும் அதற்கு ஈர்ப்பு அதிகம் என்பது உளவியல் சார்ந்த உண்மை !

அயல்நாட்டுக் கருவிகள் மீது ஈர்ப்பு ! அயல் நாட்டுத் துணிகள் மீது ஈர்ப்பு ! அயல்நாட்டு எழினிகள் (MOBILES) மீது ஈர்ப்பு ! அயல்நாட்டுச் செருப்பின் மீது ஈர்ப்பு ! ஏன் - அயல்நாட்டுத் துடைப்பத்தின் மீதும்  ஈர்ப்பு ! அதுபோல் அயல் நாட்டு மொழிகளின் மீதும் ஒரு ஈர்ப்பு ! இஃது அக்கரைப் பச்சை போன்றதொரு  ஈர்ப்பு !

ஆங்கிலத்தின் மீது ஈர்ப்புக் கொள்வோர், பெரும்பாலும் ஆங்கிலம் கற்காத ஆளிநரே (நபர்களே) ! ஆங்கிலம் முழுமையாகக் கற்ற  ஆளிநர் (நபர்கள்) என்று எவரும் நம்நாட்டில் இருக்க முடியாது ! ஏனெனில், ஆங்கிலம் எளிய மொழி போலத் தோன்றினாலும், கற்பதற்கு மிகவும் கடினமான மொழி ஆகும் !

ஆங்கிலத்திற்கு என்று ஒரு கட்டமைப்பு இல்லை ! ஆங்கில மொழிக்கென்று ஒரு அடித்தளம் இல்லை ! ஆங்கிலச் சொற்களில் பெருபாலானவற்றுக்கு வேர்களே (ROOT) இல்லை ! உலகத்தில் உள்ள எல்லா மொழிகளில் இருந்தும் கடன் வாங்கிய சொற்களின் கலவையே ஆங்கிலம் ! இதனால் ஆங்கிலத்தின் அடியையும் முடியையும் கண்டவர் இந்த உலகத்தில் எவருமே இலர் !

தமிழில்அம்மாஎன்று எழுதினால், அதைத் தமிழறிந்த அத்துணை பேரும்அம்மாஎன்று தான் ஒலிப்பார்கள் ! ஆங்கிலத்தில் அப்படி அன்று ! EDUCATION என்னும் ஆங்கிலச் சொல்லை ஒருவர்எஜுகேஷன்என்கிறார். இன்னொருவர்எடுகேஷன்என்கிறார். புதிதாக ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் ஒருவர்எடுகேடியான்என்கிறார். இவற்றுள் யார் சொல்வது சரி ? எந்த இலக்கணத்தை அடிப்படையாக வைத்து இதற்குத் தீர்ப்புச் சொல்வது ?

நாம்அயர்ன்” (IRON) என்பதை என் நாகர்கோயில் நண்பர் ஒருவர் ஐரன்என்றுதான் பலுக்குகிறார். மேனாள் ஆளுநர் மறைந்த கே.கே.சா அவர்கள் OPPORTUNITY என்பதைஅப்பார்ச்சூனிட்டிஎன்று தான் குறிப்பிட்டு வந்தார். ஆங்கிலத்தைப் பலுக்குவதில் (உச்சரிப்பதில்) வரைமுறை ஏதுமில்லை ! அவரவர் விருப்பம் போல் பலுக்கலாம் ! இத்தகைய கட்டுப்பாடு இன்மை தான் அம்மொழியைக் கற்றுக் கொள்வதில் பெரும் இடையூறாக உருவெடுத்து நிற்கிறது !

எந்த விதிகளின் அடைப்படையிலும்  அமையாமல், நூறாயிரக் கணக்கில் ஆங்கிலச் சொற்கள் இருக்கின்றன. பல சொற்களின் எழுத்துக் கட்டமைப்பு  ஒருவிதமாகவும், அவற்றின் ஒலிப்பு வேறு விதமாகவும் இருக்கிறது !

சைக்காலஜி (PSYCHOLOGY) என்னும் சொல்லை, அதன் எழுத்துக்களின் அடிப்படையில் பலுக்கினால்பிசிக்கோலோஜிஎன்று தான் ஒலிக்க முடியும் !   CACHE (காஷ்) , ENTREPRENEUR (ஆந்த்ரபிரனர்), PHARMACEUTICAL (பார்மாசூட்டிகல்), PNEUMONIA (நிமோனியா), PSEUDONYM (சுடோநிம்), METEOROLOGY (மெட்ரியாலஜி), போன்ற சொற்களில் எழுத்துகளுக்கும் ஒலிப்புக்கும் தான்  எத்துணை வேறுபாடு !

எழுத்துகளுக்கு ஏற்ப ஒலிக்கமுடியாத இன்னல் ஆங்கிலத்தில் இருப்பதை எவரும் மறுக்கமுடியாது ! இத்தகைய இடையூறுகளால் தான் ஆங்கிலம் கற்பது என்பது பிற மொழியினருக்கு அத்துணை எளிய செயலாக இல்லை !

ஆங்கிலத்தில் தங்கு தடையின்றிப் பேசும் ஒரு ஆளிநரை (நபரை), அவர் பேசியதை எழுத்தில் வடிக்கச் சொல்லுங்கள் ! எழுத்துப் பிழைகள் (SPELLING MISTAKES) ஏராளமாகக் இருப்பதைக் காண்பீர்கள்  ! எப்பொழுதும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டே இருப்பவர்களுக்கு, எழுதுகின்ற வாய்ப்பு அரிதாகத்தான் ஏற்படுகிறது. ஆகையால் ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு எந்தெந்த ஆங்கில எழுத்துகளை இட்டு எழுத வேண்டும் என்பது அவருக்கு மறந்து போய்விடுகிறது ! இதுதான் ஆங்கிலத்தின் இயல்பு !

மருந்துச் சீட்டு எழுதித் தரும் மருத்துவரின் கையெழுத்தை நாம் படிக்க முடிகிறதா ? தெளிவாக எழுதினால். எழுத்துப் பிழை நம் கண்களுக்குத் தெரிந்துவிடுமே !

இப்போது ஆங்கிலப் பயிற்று மொழி வாயிலாகக் கல்வி பயிலும் மாணவர்கள், பிறருடன் ஆங்கிலத்தில் உரையாடும் திறனை ஓரளவு பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மையே ! ஆனால் அவர்களது உரையாடல், ஆங்கில இலக்கணத்தின் வழி அமைவதில்லை ! அவர்களது உரையாடலில் எழுவாய் (SUBJECT), பயனிலை (PREDICATE) செயப்படுபொருள் (OBJECT), எதுவும் முறைப்படி அமைந்திருக்காது !

BROTHER என்பதை BRO ஆக்கிவிட்டார்கள் ! DADY என்பவர் DAD, ஆகிவிட்டார். MUMMY சுருங்கி MOM ஆகிவிட்டார். ஆங்கில அகரமுதலியிலேயே இல்லாத  Wanna, Gonna, Yah Yah, நாவின் நுனியில் விளையாடுகின்றன.  கொச்சை ஆங்கிலத்தில் (SLANG)  பேசும் திறனைத் தான் அவர்களிடம் காணமுடிகிறது. இதற்குத்தான்  பெற்றோர்கள் நூறாயிரக் கணக்கில் கொட்டிக் கொடுத்து, பதின்மப் பள்ளிகளுக்கும் (MATRICULATION SCHOOLS), நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத் திட்டப் பள்ளிகளுக்கும் (C.B.S.C. SCHOOLS) தம் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் !

ஆங்கிலமொழி தங்கள் பிள்ளைகளை உயர்ந்த நிலையில் உட்கார வைத்து விடும் என்று பெற்றோர்கள் குருட்டுக் கனவு காண்கிறார்கள் ! ஆனால், எதைப் பற்றியும் சிந்திக்கக்கூடிய ஆழ்ந்த ஆற்றலைத் தாய்மொழி போல, அயல்மொழியான ஆங்கிலம்  தரமுடியாது  என்பதை அவர்கள் உணர்வதே இல்லை !

அறிவியல் அறிஞர்கள் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, அரியலூர் வளர்மதி, சிவன் பிள்ளை  போன்ற ஒப்பற்ற ஒளிவிளக்குகள் எல்லாம் தமிழ்வழியில் கல்வி பயின்றவர்கள் என்னும் உண்மையை உரக்கச் சொன்னாலும் பெற்றோர்கள் புரிந்துகொள்வதில்லை; தம் பிள்ளைகளை ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள் !

ஏமாறுவது எங்கள் பிறப்புரிமை என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் இருக்கும் வரை ஏமாற்றுவதற்கென்றே பதின்மப் பள்ளிகள் தோன்றிக் கொண்டேதான் இருக்கும் ! தடுக்கவேண்டிய அரசு தன் இரு கண்களையும் இறுக மூடிக் கொண்டிருக்கையில் நாம் விழிப்புணர்வூட்டி எழுதுவதன்றி வேறு என்னதான் செய்ய முடியும் ?


----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,துலை (ஐப்பசி),01]
{18-10-2019}

----------------------------------------------------------------------------------------------------------
     
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------





பல்வகை (18) இல்லத்தில் எழில் பேணல் !

    அழகுணர்ச்சி இல்லாத மனிதன் விலங்குக்குச் சமமானவன் !


ஒவ்வொரு மனிதனும் அழகாகத் தோற்றமளிக்கவே விரும்புகிறான். தன்னைக் காண்பவர்களின் கருத்தைத் தன்பால் ஈர்க்க வேண்டும் என்னும் ஆவலே இதற்குக் காரணம். மனிதன் என்ற சொல் இங்கு ஆடவர், மகளிர் என இருபாலரையுமே குறிக்கும் !

உச்சி முதல் பாதம் வரை தன் அழகு, சுடர் விட்டு  மிளிர, மனிதன் எடுத்துக் கொள்ளும் அக்கறைக்கு அளவே இல்லை ! முடியலங்காரம், உடையலங்காரம், அணியலங்காரம், என ஒவ்வொன்றுக்கும் செலவிடும் நேரம் மிகுதி ஆகிக்கொண்டே போகிறது !

இத்தகைய அழகுணர்ச்சி தவறன்று ! கட்டாயம் தேவை தான் ! ஏனெனில், அழகுணர்ச்சி இல்லாத மனிதன் விலங்குக்குச் சமமானவன் ! அவனது வாழ்க்கை சுவையற்றுப் போகும். உப்புச் சுவை சேராத உணவுப் பண்டமாக தாழ்வுற்றுப் போகும் !

அழகுணர்ச்சி, அனைத்து மனிதர்களிடமும் இருக்கிறதா, என்றால், “ஆம்என்று தான் சொல்லமுடியும் ! ஆனால், அதன் அளவு தான் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது !

ஒரு நாள் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். ஈராண்டுகளுக்கு முன்பு கட்டப் பெற்ற கற்காரைக் கூரை (CONCRETE MOLDING ROOF) வீடு. முன்றிலைக் (PORTICO) கடந்ததும் எதிர்ப்படும் வேலைப்பாடு அமைந்த நிலைவாயில் ! உள்ளே அகலறை (DRAWING HALL). வலப்புறம் சாளரம் (WINDOW)  அருகில் 4’ X 4’ மிசைப் பலகை (TABLE). அதன் எதிரில் அன்னக் கழுத்து அமரிருக்கை (CHAIR)  ! அறையின் இடப்புறம் நீண்ட இணையணை (SOFA) !

இணையணையை அடுத்து நான்கு ஞெகிழி (PLASTIC) நாற்காலிகள் ! தலைவாயிலுக்கு நேர் எதிரில் காட்சி மாடம் (SHOW CASE) ! அதையடுத்து மரத் தளியில் (WOODEN STAND) தொலைக்காட்சிப் பேழை !  மற்றும் இன்னொரன்ன பொருள்கள் !

நான் சென்ற நேரத்தில் நண்பர் வீட்டிலில்லை ! அவர் மனைவி தான் என்னை வரவேற்றார் ! ஆனால் நான் அமர்வதற்கு இருக்கை எதுவும் வெட்புலமாக (VACANT) இல்லை !  அன்னக் கழுத்து அமர் இருக்கையில் (SWAN NECK TYPE CHAIR) குழந்தைகளின் புத்தகப் பைகள் இடம் பிடித்திருந்தன ! இணையணையில்  பழைய செய்தித் தாள் கட்டுகள் சிலவும், அழுக்குத் துணிகள் பொதியும், பழைய கோரைப் பாய் ஒன்றும் காணப்பட்டன !

ஞெகிழி நாற்காலிகளில், அட்டைப் பெட்டிகள் சில இடம் பிடித்திருந்தன ! அவற்றுள் ஒன்றை வெட்புலமாக்கி என்னை அமரச் செய்தார் நண்பரின் மனைவி ! சில நிமிடங்களில் நண்பர், கையில் காய்கறிக் கூடையுடன் வந்தார். ”வாருங்கள் அன்பரசு !   நலமாக இருக்கிறீர்களா ?” என்று உசாவியவர்இதோ வந்து விடுகிறேன்எனச் சொல்லிக் காய்கறிக் கூடையுடன் உள்ளே சென்றார் !

கிடைத்த ஓரிரு நிமிடங்களில் அகலறையை நோட்டமிட்டேன் ! மிசைப் பலகையில் மூடியின்றித் திறந்த நிலையில் ஒரு மைத் தூவல் (INK PEN) ! அருகில்அயோடக்சு’ (IODEX BOTTLE)  குப்பி ஒன்று  கவிழ்ந்த நிலையில்  ! ஐந்தாறு தலைவலி மாத்திரைகள் பொதிக்கப் பெற்ற அட்டை (STRIP) !. நாள்காட்டியில் (DAILY SHEET) கிழித்த அன்றைய நாளுக்கான தாள் ! சுருட்டிய நிலையில் ஒரு கைக்குட்டை ! குளம்பி (COFFEE)  அருந்திய கழுவாத கோப்பை !

நான்கைந்து சில்லறைக் காசுகள் ! மின்கட்டண அட்டை  ! கொட்டிக் கிடக்கும் ஒரு கைப்பிடி  பயின் வளையங்கள் ((RUBBER BANDS) ! எழினிக்கு (MOBILE) மின்னேற்றம் செய்யும் சூலி (CHARGER)  !  சிறிய பீங்கான் தட்டு ஒன்றில் கொஞ்சம்  கதம்ப நொறுவை (MIXTURE) ! ஊர்தி ஓட்டுகையில் அணியும் தலைச் சீரா (HELMET) ! இன்னும் சிற்சில பொருள்கள் !

சுவரெங்கும் கரிக்கோடுகள் (PENCIL LINES), ஊதாக்கோடுகள் (MARKER LINES)  ! குழந்தைகளின் கைவண்ணம் போலும் ! அரத்தம் (BLOOD) குடித்த கொசுக்கள் நசுக்கப் பெற்ற  சிவப்புத் தடங்களும்  சுவரில் இடம் பிடித்திருந்தன ! அழுக்குப் படிந்த பந்துகள் சுவரில் மோதிப் பதித்த, கலங்கலான வரிகள் இக்கால ஓவியங்களாய்க் (MODERN ART) காட்சியளித்தன ! குழந்தைகளின்  காலணிகள் திசைக்கு ஒன்றாகத் திரும்பிக் கிடந்தன !

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நகரம் போல் அந்த வீட்டின் அகலறை (DRAWING HALL) காட்சியளித்தது ! அகலறையே (DRAWING HALL) இப்படி இருந்தால், அடுக்களை (KITCHEN), துயிலறை (BED ROOM), குளியலறை (BATH ROOM) பூசை அறை (POOJA ROOM) போன்றவை எத்துணை அழகாகக் காட்சியளிக்கும் என்று மனதிற்குள் கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருக்கையில், நண்பர் உள்ளிருந்து வந்தார் ! ஒரு நாற்காலி சுமந்து கொண்டிருந்த அட்டைப் பெட்டிகளைக் கீழே இறக்கி வைத்து விட்டு, அதில் அமர்ந்தார் !

சில நிமிட உரையாடல்களுக்குப் பின், அவர் தந்த குளம்பியை (COFFEE) மனக் குமட்டலுடன் சிறிது ஒப்புக்கு அருந்திவிட்டு, என் இல்லம் வந்து சேர்ந்தேன் ! துப்புரவும் ஒழுங்கும் இல்லாத வீட்டில், குளம்பியின் ஒவ்வொரு துளியும் கற்றாழைச் சாறாக மனதிற்குள்  கசந்தது !

நண்பர் மிடுக்கானவர் ! அழகாகத் தலைவாரி, உடையுடுத்தி, சில கூடுதல் ஒப்பனைகளையும் செய்து கொண்டு காண்போரைக் கவரும் வனப்புக் கொண்டவர் ! தன் தோற்றத்தைப் பொறுத்தவரை அழகுணர்ச்சியை முழுமையாக வெளிப்படுத்தும் இயல்பு வாய்ந்தவர் ! அவரது இல்லமா இப்படி ?

நேர்த்தியாக உடை உடுத்தி உலா வரும் ஒருவர், குப்பைக் கிடங்கிற்குள் குடி இருப்பதைப் போல் அன்றோ நண்பரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன ! தனது தோற்றத்தை எழிலாக வெளிப்படுத்த விரும்பும் அவர், தனது இல்லத்தைத் எழில் மிகுந்த மாளிகையாகப் பேணுவதில் ஏன் அக்கறை செலுத்துவதில்லை ?

குப்பைக் கிடங்குகள் நாய்கள்  உறங்கும் இடமன்றோ ? நண்பர் தன்னை நாயின் நிலைக்குத் தாழ்த்திக் கொள்வது, அவரது அறியாமையாலா ? அக்கறை இன்மையாலா ? அல்லது அவரது பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடா ?

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2050, கன்னி(புரட்டாசி),30]
{17-10-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
      
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------

பல்வகை (17) புதுச் சொல் புனைவு - அரசு முனைப்புக் காட்ட வேண்டும் ! !

சொல்லாக்கத்திற்கு   தமிழக அரசில் புதிய துறையை உருவாக்க வேண்டும் !



தமிழ் இலக்கியங்கள் பல, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. கி.பி முதலாம் நூற்றாண்டுக்குப் பிறகு இயற்றப் பெற்ற இலக்கியங்களும் அளவிறந்தவை ! கடைச் சங்க காலமான கி.மு. 600 – கி.பி. 200 இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பிறமொழிக் கலப்பில்லாதவை. இவற்றில் தமிழர் வரலாறும், தமிழர் நாகரிகமும், தமிழ்ப் பண்பாடும் இலைமறை காயாகப் பதிவு செய்து வைக்கப் பெற்றிருக்கின்றன !

கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு, தமிழகத்தில் வடமொழி ஊடுறுவல் தொடங்கியது. எனவே இதற்குப் பிறகு தோன்றிய இலக்கியங்களில் வடமொழிச் சொற்கள் கலப்பு மிகுதியாகக் காணப்படுகின்றன !

கடந்த 1800 ஆண்டுகளாக, வடமொழியின் மேலாண்மையிலிருந்து தமிழால் விடுபட முடியவில்லை. இன்றைய நிலையில் நாம் பயன்படுத்தும் சொற்களில், எவை வடமொழிச் சொற்கள், எவை தமிழ்ச் சொற்கள் என்று பகுத்துப்பார்க்க முடியாத அளவுக்குக் கலப்படம் மிகுதியாகிவிட்டது !

வடமொழிச் சொற்களின் கலவையால், மலையாளம், கன்னடம், துளுவம், தெலுங்கு போன்ற புதிய மொழிகள் தோன்றி, தமிழின் ஆட்சி எல்லை சுருங்கிப் போயிற்று ! வடமொழிக் கலப்பை மட்டுப் படுத்த, பல்லாண்டுகளாகப் பல தமிழறிஞர்கள்  முயன்று வந்துள்ளனர். எனினும் அவர்களது உழைப்பிற்குப் போதிய பலன் கிடைக்காமலேயே போயிற்று !

இன்றைய தமிழகத்தில், மக்கள் பெயர்களில் 95 % வடமொழிப் பெயராகவே உள்ளன. கோயில் பெயர்களும், கோயிலில் உறைகின்ற கடவுளர் பெயர்களும் 99 % வடமொழிப் பெயராகவே இருக்கின்றன. ஆண்டுகளின் பெயர்களும், மாதங்களின் பெயர்களும் வடமொழிப் பெயர்களாகவே திகழ்கின்றன !

வடமொழியின் மேலாண்மையிலிருந்து தமிழும் தமிழக மக்களும் விடுபடுதல் என்பது அத்துணை எளிய செயலன்று ! தமிழை ஒரு படி உயர்த்தி வைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டால், இரண்டு படிகள் கீழே இறக்கி வைக்கும் செயலில் சில அமைப்புகள் இடையறாது ஈடுபட்டு வருகின்றன !

இத்தகைய இடையூறுகளைத் தமிழ் எதிர்கொண்டிருக்கையில், தமிழகத்தில் ஆங்கில மொழியின் ஊடுறுவல் அதிவிரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ! படிப்பறிவில்லாத பாமரன் வாயிலிருந்து உதிரும் சொற்களில் ஆங்கிலச் சொற்களின் அணிவகுப்பு காணப்படுவது கவலை அளிப்பதாக உள்ளது . பஸ், டிக்கட், கண்டக்டர், டிரைவர், காப்பி, டீ, சோடா, சிகரெட், சினிமா, டிரெய்ன், ஏரோப்ளேன், எம்.எல்., எம்.பி, கலெக்டர், தாசில்தார், போலீஸ் மற்றும் இன்னோரன்ன ஆங்கிலச் சொற்கள் பாமர மக்கள் வாயிலும் வரைமுறையின்றிப் புழங்குகின்றன !

மொழிவாரி மாநிலம் அமைந்து, தமிழ்நாடும் அதற்கென ஒரு அரசும் இயங்கி வருகிறது. தமிழ்நாடு என்று பெயரைத் தாங்கி இருப்பதால், தமிழையும் உயர்த்திப் பிடிக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டு அரசுக்கு இருக்கிறது. தமிழை வளப்படுத்தும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டால் தான் தமிழ் வளரும்; வாழும் ! அரசின் அரவணைப்பு இல்லையேல் தமிழ் தளர்ந்துபோகும்; வீழ்ந்தும் போகும் !

தமிழ் வளர்ச்சிக்குத் தமிழக அரசு இன்னும் நிரம்பச் செய்யலாம். பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியைக் கட்டாயமாக்கக் கூடுதலாக சில சட்டங்களை இயற்ற வேண்டும். பதின்மப் பள்ளிகள் தமிழை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்டு இயங்க, புதிய  சட்டங்களை இயற்ற வேண்டும்.  தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு மட்டுமே  அரசு வேலை என்பதைக் கட்டாயமாக்க  வேண்டும் !

தமிழ்ச் சொல்லாக்கத்திற்கு  என்று தமிழக அரசில் புதிய துறையை உருவாக்க வேண்டும். முனைவர் ப.அருளி போன்ற தமிழறிஞர்களை, அகவை மேல்வரம்பு விதிக்காமல், சொல்லாக்கத் துறையின் இயக்குநராக அமர்த்தம் செய்ய வேண்டும்.  இத்துறையில், தமிழ் வல்லுநர்கள் அடங்கிய பெருங்குழு ஒன்றை உருவாக்கி, இந்நாள்வரைத் தமிழாக்கம் செய்யப் பெறாமல் இருக்கும் ஆங்கிலச் சொற்களைத் திரட்டி, அவற்றுக்கு உரிய தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும் !

இப்பணியில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திட்டங்கள் வரையப்பட வேண்டும். சொல்லாக்கத் துறையின் ஆய்வுக்குப் பின், மாதம் இருமுறை, அனைத்துச் செய்தித் தாள்களிலும், புதிய சொற்களை, கட்டணமின்றி (அரசுக்குச் செலவின்றி) வெளியிடும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் !

புதிய கலைச் சொற்கள் பாடப் புத்தகங்களுக்குள் தனிப் பட்டியலாக முடங்கிக் கிடக்கின்றன. பல்கலைக் கழகங்கள் தொகுக்கும் கலைச் சொற்கள் அவர்களது நூலகத்தை விட்டு வெளியில் வருவதில்லை. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதிக்கெனத் தனித் துறையே உள்ளது. இத்துறையினர் தொகுத்த கலைச் சொற்கள், நூல் வடிவில் அப்பல்கலைக்கழக நூலகத்தில் முடங்கிக் கிடக்கிறது. புதிய சொற்கள் மக்களிடம் சென்று சேர அரசு செய்தித் தாள்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் !

மாதம் இருமுறை சொல்லாக்கத் துறையால் வெளியிடப் பெறும் புதிய தமிழ்ச் சொற்களை செய்தித்தாள்கள் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் வகையில் சட்டம் இயற்றிச் செயல்படுத்த வேண்டும் !

தமிழ் வளர்ச்சித் துறை, தனது பணிகளை அரசு அலுவலகங்களை ஆய்வு செய்வதுடன் முடித்துக் கொள்கிறது. அரசு அலுவலகங்களுக்கு அப்பாலும் தனது பார்வையை இத்துறை செலுத்த வேண்டும் !

தமிழின் பெயரை உள்ளடக்கியதமிழ்நாடு அரசுதமிழ் வளர்ச்சிக்கு முனைப்பாக உதவ வேண்டும் ! தமிழ் உணர்வாளர்களின் ஒற்றை வேண்டுகோள் இதுவே !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, துலை(ஐப்பசி) 02]
{19-10-2019}

-----------------------------------------------------------------------------------------------------------
       
தமிழ்ப் பணிமன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------


பல்வகை (16) ”ஐக்கூ” எனச் சொல்லாதீர் !

 மூன்று அடிகளால் ஆன “ஐக்கூ” பாடலை “சிந்தியல்     தேன்பா” என்போம் !


சப்பான் நாட்டு நன்கொடையாக இரண்டு சொற்களை நாம் பயன்படுத்தி வருகிறோம் ! ஒன்றுசுனாமி”, இரண்டாவதுஹைக்கூ” !

2005 ஆம் ஆண்டு ஆழிப் பேரலை தமிழ் நாட்டில் பேரழிவை உண்டாக்கிய போது இறக்குமதியான சொல்சுனாமி”. வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு.இரமணன் அவர்கள் எத்துணையோ முறைஆழிப் பேரலைஎன்று சொல்லிச் சொல்லிப் பார்த்தார். ஆனால், செய்தித் தாள்களும் தொலைக் காட்சி ஊடகங்களும் விடாப்பிடியாகசுனாமிஎன்ற சொல்லைப் பயன்படுத்தியதால், தமிழ்நாட்டில்சுனாமிநிலைத்துவிட்டது !

அடுத்ததாக ஹைக்கூஎன்னும் சொல், தமிழர்களின் நாவில் தாண்டவமாடுகிறது ! மூன்று வரியிலான இவ்வகைப் பாடலுக்கு சில ஆன்றோர் “துளிப்பாஎன்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் ! ஆனாலும்ஹைக்கூதமிழ்நாட்டில், சில ஊடகங்களில், குறிப்பாக, முகநூலில் செழித்து வளர்ந்து வருகிறது !

தமிழில் போதிய அறிவும் ஆற்றலும் இருப்பவர்கள் தான் கவிதை எழுத முடியும் ! இந்த வகையில்ஹைக்கூகவிஞர்கள் எல்லாம் தமிழில் ஆர்வமும் ஆற்றலும்  மிக்கவர்களே என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை ! 

ஒரு சமுதாயத்தை விழிப்படையச் செய்வதில் கவிஞர்களின் பங்கு அளவிட முடியாதது ! கவிஞர்களின் சொல்லாற்றலுக்கு இருக்கும் வலிமை வேந்தர்களின் வாளுக்குக் கூடக் கிடையாது !

கவிஞர்களுக்கு இரண்டு கடமைகள் இருப்பதாகச் சான்றோர்கள் சொல்கிறார்கள் ! (01) மொழியைக் கட்டிக் காப்பது (02) சமுதாயத்தைத் தட்டி எழுப்புவது ! இந்த இரண்டு கடமைகளும் கவிஞர்களுக்கு இரண்டு கண்கள் போன்றவை !

முதல் கடமையான மொழியைக் கட்டிக் காப்பது என்பதில்ஹைக்கூகவிஞர்களின் பங்களிப்பு கண்டிப்பாக வேண்டும் ! தமிழ் நம் தாய்மொழி ! தமிழில் படித்தோம்; தமிழில் எழுதினோம்; தமிழில் சிந்தித்தோம்; இன்று தமிழால் உயர்ந்திருக்கிறோம், கவிஞர்களாக !

தமிழுக்குப் பெருமை பிறமொழிக் கலப்பு இன்றித் தனித்து இயங்கும் வல்லமை உடைமை ! இந்தப் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் வல்லமை கவிஞர்களுக்கும் உள்ளது ! அழகான உங்கள் கவிதைகளைப் படிக்கும் போது மனம் களிநடம் புரிகிறது ! சர்க்கரைப் பொங்கல் சாப்பிடும் போது ஒரு கல் கடிபடுவதைப் போல உங்கள் அருமையான கவிதைகளைச் சுவைக்கும் நேரத்தில்ஹைக்கூஎன்னும் சொல் பற்களுக்கு இடையே புகுந்து  தொல்லை தருகிறது !

இடைக்காலத் தமிழர்கள், தமிழில் பிறமொழிச் சொல் கலப்பைத் தடுக்கத் தவறியதால் , மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளுவம் போன்ற மொழிகள் உருவாகித் தமிழ் நிலம் சுருங்கிப் போயிற்று !

நடப்புக் காலத்தில், வடமொழிச் சொற்களும், ஆங்கிலச் சொற்களும், இந்திச் சொற்களும் வரைமுறையின்றித் தமிழில் கலந்து தமிழுக்குப் பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்கின்றன ! இதை எதிர்கொண்டு, தமிழின் நலத்திற்குக் கேடுவிளையாமல் காக்கும் பெரும் பொறுப்பு தமிழார்வம் மிக்க ஒவ்வொருவருக்கும் உள்ளது !

தலைப்பில் குறிப்பிட்டுள்ளதைப் போல நான் உங்களுக்கு வைக்கும்  வேண்டுகோள் மிக எளியது ! இந்த வேண்டுகோள்ஹைக்கூகவிஞர்களுக்கு மட்டுமல்ல, முகநூற் கணக்கை ஆட்சிபுரிந்து நெறிப்படுத்தும் ஆட்சியர்களுக்கும் தான் ! ஏனெனில் அவர்களும் கவிஞர்களே !

யாப்பிலக்கணத்தில் மூன்று சீர்களால் ஆன அடிக்குசிந்தடிஎன்று பெயர். மூன்று அடிகளால் ஆன பாடலுக்குசிந்தியல் பாஎன்று பெயர். “அடி மூன்றில் வந்தால் சிந்தியலாகும்என்பது யாப்பருங்கலக் காரிகை நூற்பா 28. எனவே மூன்று அடிகளால் ஆனஹைக்கூபாடலைசிந்தியல் தேன்பாஎன்று அழைக்கலாம். பொருத்தமாக  இருக்கும் !

எனவே, அருள் கூர்ந்துஹைக்கூஎன்னும் சொல்லைக் கைவிட்டுசிந்தியல் தேன்பாஎன்னும் சொல்லை வழக்கிற்குக் கொண்டு வாருங்கள் ! அல்லது சிலர் வழக்கிற் கொள்வது போல துளிப்பா எனும் பழைய பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள் ! நீங்கள் ஆற்றும் தமிழ்ப் பணிக்குஹைக்கூஎன்னும் பிறமொழிச் சொல் சர்க்கரைப் பொங்கலிடையே உருளும் சிறு கல்லாக தமிழ் ஆர்வலர்களின்  மனதை உறுத்துகிறது !

உறுத்தும் கல்லை விலக்கி, இனிக்கும் பொங்கலைத் தொடர்ந்து பரிமாறுங்கள் ! சுவைத்து மகிழ்கிறோம் ! அன்னைத் தமிழுக்கு நமது நன்றிக் கடனாகஹைக்கூசொல் துறப்பு அமையட்டும் ! “சிந்தியல் தேன்பாவழக்கிற்கு வரட்டும் !

நமது பணி தமிழுக்குஅணிசேர்ப்பதாக அமையட்டும் ! “பிணிசேர்ப்பதாக அமையலாகாது !

-------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050:துலை (ஐப்பசி)27]
{13-11-12019}
-------------------------------------------------------------------------------------------------------
     தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------