name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பல்வகை
பல்வகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பல்வகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 27, 2021

பல்வகை (27) சட்ட மன்றத் தேர்தல் 2021 - யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் ?

வாக்களிக்கும் முன் ஒரு கணம் சிந்தியுங்கள் !  

                                                      ************

உங்கள் வருவாயைத் திட்டமிட்டுச் செலவு செய்யாவிட்டால், பிற்காலத்தில், வாழ்க்கையில் நீங்கள் பல இடர்ப்பாடுகளைச் சந்திக்க நேரிடும்; அதுபோல், தேர்தலில் உங்கள் வாக்குரிமையைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால், உங்கள் வாக்குக்கு உரிய பயனின்றி உங்கள் வாக்குரிமை விழலுக்கு இறைத்த நீராகிப் போகக் கூடும் !

 

தேர்தலில் வலிமையான இரண்டு கட்சிகள் போட்டியிட்டால், 51% வாக்குகள் (51+49=100) பெறும் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறார். வலிமையான மூன்று கட்சிகள் போட்டியிடுகின்றன என்றால் 34% வாக்குகள் (34+33+33=100) பெறும் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறார் !

 

வலிமை வாய்ந்த நான்கு கட்சிகள் போட்டியிடுகின்றன என்றால் 26% வாக்குகள் (26+25+25+24=100) பெறும் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறார் !

 

செல்வாக்கு மிக்க ஐந்து கட்சிகள் ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிடுகின்றன என்றால் 21% வாக்குகள் (21+20+20+20+19=100) பெறும் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறார் !

 

வாக்காளர்களின் ஆதரவை 3%, 5%, என்று ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வைத்திருக்கும் எந்தக் கட்சியும் கூட்டணியின் ஆதரவின்றித் தமிழ் நாட்டில் வெற்றிபெற முடியவே முடியாது !

 

கடந்த 2016 சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளும் அவை பெற்ற வாக்குகளும் உங்கள் பார்வைக்கும் ஆய்வுக்கும் வைக்கப்படுகிறது !

-----------------------------------------------------------

 அ.இ.அ.தி.மு.க. தனித்துப் போட்டி

(01).அ.இ.அ.தி.மு.க.(.227.தொ)..1,76,17,060........41.06%

-----------------------------------------------------------

தி.மு.க.கூட்டணி

(02).தி.மு.க .....(173.தொ)..........1,36,70,517................31.86%

(03) காங்கிரஸ் ...(41.தொ).....0,27,74,075...............06.47%

(04)முஸ்லிம் லீக் (5.தொ).......0,03,13,808................00.73%

(05)புதிய தமிழகம் (4.தொ)..0,02,19,830................00.51%

(06).ம. நே. ம. க... .(5.தொ).......0,01,97,150................00.46%

----------------------------------------------------------------

கூடுதல்.............................................1,71,75,380.................40.03%

----------------------------------------------------------------

(07).பா. ம. க........ (234.தொ).......0,23,00,775.................05.36%

------------------------------------------------------------

(08)பா.ஜ.க ..........(234.தொ).........0,12,28,692.................02.86%

------------------------------------------------------------------

மக்கள் நலக் கூட்டணி

(09)தே.மு.தி.க...(104.தொ)..........0.10,34,384................02.41%

(10)ம.தி.மு.க. (28.தொ).................0,03,73,713................00.87%

(11)வல.கம்யூ..(25.தொ)...............0,03,40,290................00.79%

(12)வி.சி.க............(25.தொ).............0,03,31,849................00.77%

(13).இட.கம்யூ......(25.தொ)...........0,03,07,303................00.72%

(14).த.மா.கா.......(26.தொ).............0,02,30,711...............00.54%

------------------------------------------------------------------

(15)நாம் தமிழர் (234.தொ)........0,04,58,104................01.07%

-----------------------------------------------------------------

(16).கொங்கு நா. ம.கட்சி...........0,01,67,560................00.39%

(17)பகுஜன் சமாஜ்..........................0,00,97,823................00.23%

(18).இந்திய ச.. கட்சி......................0,00,65,978................00.15%

(19).சுயேச்சைகள் (234.தொ)...0,06,17,907................01.44%

(20).நோட்டா.......................................0,05,61,244................01.31%

 

-------------------------------------------------------------------

கடந்த சட்ட மன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே முறையே 41.06%, 31.86% வாக்குகளைப் பெற்றுள்ளன. அ.இ.அ.தி.முக. தனித்து நின்று 41.06% வாக்குகளைப் பெற்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் அதன் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 40.03% வாக்குகளைப் பெற்றுள்ளது !


இரண்டுக்கும் இடையே 1.03% மட்டுமே வேறு பாடு !

 

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் விழுக்காடு வருமாறு ! அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளது 2016 சட்டமன்றத் தேர்தலில் பெற்ற விழுக்காடு !

 

--------------------------------------------------------------

(01).தி.மு.க................................................32.76%.........(31.86%)

(02).அ.தி.மு.க.........................................18.48%.........(41.06%)

(03).காங்கிரஸ்......................................12.76%.........(06.47%)

(04).பாட்டாளி.மக்கள் கட்சி.........05.42%........(05.36%)

(05)நாம் தமிழர் கட்சி.......................03.89%........(01.07%)

(06)பாரதிய .ஜனதாகட்சி..............03.66%........(02.86%)

(07).வலது.கம்யூ....................................02.43%.........(00.79%)

(08).இடது.கம்யூ.....................................02.40%........(00.72%)

(09).தே.மு.தி.க........................................02.19%........(02.41%)

(10).முஸ்லீம் லீக்...................................01.11%.......(00.73%)

 

--------------------------------------------------------------

 

ஊடகங்களால் பெரிதாகப் பேசப்படும் மக்கள் நீதி மையம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னை (1,03,167), தென்சென்னை (1,35,465), திருப்பெரும்புதூர் (1,35,525 ) கோவை (1,45,104) ஆகிய நான்கு தொகுதிகளில் மட்டுமே 1 இலட்சத்துக்கு மேல் வாக்குகள் பெற்றிருந்தது !


பெற்றிருந்த வாக்கு விழுக்காடு: வடசென்னை = 11.24% , தென் சென்னை =12.51% ,, திருப்பெரும்புதூர் = 10.01% , கோவை = 12.02%.


மக்கள் நீதி மையத்தின் கொள்கைகள் என்னவென்று இந்த நிமிடம் வரை யாருக்கும் தெரியாது; சொல்லப்படவுமில்லை; கொள்கையே இல்லாமல் ஒரு கட்சி !

 

புதிய வேளாண் சட்டங்கள், புதிய கல்விக் கொள்கை, இந்தியக் குடியுரிமைச் சட்டம், நீட் தேர்வு, சமஸ்கிருதத் திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, எட்டு வழிச் சாலை, விளை நிலங்களில் எண்ணெய்க் குழாய்கள் பதிப்பு, ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ திட்டம், போன்ற பல பொருண்மைகள் பற்றிய ம.நீ.மையத்தின் நிலைப்பாடு அறிவிக்கப்படவில்லை !

 

வேட்பு விண்ணப்பத் தகவலின் படி 177 கோடி சொத்து உடைய கமலகாசனும், 165 கோடி சொத்து உடைய டாக்டர். மகேந்திரனும் ம.நீ.மைய வேட்பாளர்கள் !

 

தெருப்பொறுக்கி, ஓடு காலி யார் வந்தாலும் தன்னுடன் கூட்டணி சேர்த்துக் கொள்ளும் கமலகாசன் நீதி, நேர்மை, ஒழுக்கம் பற்றி எல்லாம் பேச என்ன தகுதி இருக்கிறது ? தனி மனித வாழ்வில் ஒழுக்கமில்லாதவர்கள் அரசியலில் நல்லொழுக்கத்தை நிலைநாட்டப் போகிறார்களாம். வெட்கக்கேடு !


கோவை தெற்குத் தொகுதியில் 12.02% வாக்குகளை மட்டுமே வைத்துள்ள கமலகாசன் யாரை வெற்றிகொள்ளப் போகிறார் ? கூட்டணி பலமுள்ள காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரையா ? அல்லது அதிகார பலமும் பணபலமும் உள்ள வானதி சீனிவாசனையா ?

 

இவர் கட்சி வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் கோடீசுவரர்கள ஸ்ரீபிரியா, சந்தோஷ் பாபு போல ! மக்களை நம்பாமல் கோடிகளை நம்பும் மக்கள் நீதி மையம் சட்டமன்றத் தேர்தலையும் BIGG BOSS நிகழ்ச்சி போலக் கருதுகிறது போலும் !

 

நடிகரைப் பார்க்கக் கூடும் கூட்டத்தை எல்லாம் தனது ஆதரவுக் கூட்டம் என்று கணக்குப் போடும் கமலகாசன், திரைத்துறையிலிருந்து தேர்தல் அரசியலுக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார், கருணாஸ், விஜயகாந்த் போன்றோர் சொலிக்க முடியாமல் போன காரணத்தை அறியார் போலும் !

 

தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் களத்தில் நடமாடுவது, பிற நேரங்களில் நடிக்கும் தொழிலைப் பார்ப்பது என்னும் நோக்குடைய பகுதி நேர அரசியல்வாதி கமலகாசன் ஒருக்காலும் அரசியலில் சுடர்விட்டு ஒளிரமுடியாது !

 

35 நாடாளு மன்றத் தொகுதிகளில் ஒற்றை இலக்க விழுக்காட்டில் ஆதரவைப் பெற்றிருக்கும் கமலகாசன் முதல்வர் வேட்பாளராம் ! மக்களை முட்டாள்களாகக் கருதும் இவரைப் போன்றோருக்கு நாம் அளிக்கும் வாக்குகள் சாக்கடையில் ஊற்றிய பால் போல் வீணாகிப் போகும் என்பது உறுதி ! ! அவரது கட்சிக்கு வாக்களித்து நம்மை நாமே முட்டாளாக்கிக் கொள்ளத் தேவையில்லை !

 

அடுத்து , நாம் தமிழர் கட்சியைப் பற்றிப் பார்ப்போம். இந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான். இவர் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரனைத் தன் தலைவர் என்கிறார். தலைவராக, வழிகாட்டியாகக் கொள்ளத் தமிழ்நாட்டில் தகுதியுள்ள தலைவர் யாருமே இல்லை போலும் !

 

இவரது கட்சியின் கொள்கை, தமிழனைத் தமிழனே ஆள வேண்டும் என்பது ! நல்ல கொள்கை தான் ! குறை சொல்ல முடியாது ! ஆனால், தமிழ் நாட்டுத் தலைவர்கள் எல்லோருமே இவருக்குத் தெலுங்கர்களாகத் தென்படுகின்றனர் !

 

இவரது கூற்றுப்படி, மறைந்த கருணாநிதி தெலுங்கர், தேர்தல் களத்தில் இருக்கும் ஸ்டாலின் தெலுங்கர், வைகோ தெலுங்கர், திருமாவளவன் தெலுங்கர், மதுசூதனன் தெலுங்கர், கடம்பூர் இராஜு தெலுங்கர், புதுச்சேரி வைத்தியலிங்கம் தெலுங்கர் ! இந்தப் பட்டியல் இன்னும் நீள்கிறது ! இவர்களது முன்னோர்கள் பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர் போலும் சீமான் !

 

தமிழனைத் தமிழனே ஆளவேண்டும் என்று சொல்லும் இவர், முன்பு செல்வி செயலலிதாவை ஆதரித்த போது அவர் கன்னடத்துக் காரர் என்பது தெரியாது போலும் ! ம.கோ.இரா. மலையாள நாட்டினர் என்பது மறந்துவிட்டது போலும் !

 

தெலுங்கு பேசும் மக்களான நாயுடு, நாயக்கர், ரெட்டியார், ராஜு, பத்மசாலியர், 24 மனைத் தெலுங்குச் செட்டியார், தேவாங்கர், தெலுங்கு பிராமணர், தெலுங்குச் செட்டியார், கம்மவார், வளையல்காரர்,ஆதி ஆந்திரர், அருந்ததியர், ஒட்டர் , குருமன், போன்ற ஒரு கோடி மக்களின் வாக்குகள் இல்லாமல் தமிழர்களின் வாக்குகளை மட்டுமே பெற்று இவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக நினைக்கிறார்; சூரியன் தெற்கில் உதித்தாலும் உதிக்குமே தவிர இவர், தமிழ்நாட்டின் முதலமைச்சராக முடியவே முடியாது ! !

 

கடந்த 2016 சட்ட மன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு 1.07% வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி 2019 நாடாளு மன்றத் தேர்தலில் 3.89% வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. அதிக பட்சமாக திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் 6.33% வாக்குகளும், குறைந்த பட்சமாக கன்னியாகுமரி தொகுதியில் 1.65% வாக்குகளையும் இக்கட்சி பெற்றிருந்தது.

 

இந்த அழகில், சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது இக்கட்சி. இதன் பொருளென்ன ? சீமானைத் தவிர எஞ்சிய 233 வேட்பாளர் குடும்பங்களும் அண்டா குண்டா, நகை நட்டுகளை எல்லாம் விற்றுத் தேர்தல் செலவு செய்து நொடித்துப் போகப் போகிறது ! ஒவ்வொரு தேர்தலிலும் பல குடும்பங்களை நொடித்துப் போகச் செய்வது தான் இக்கட்சியின் அணுகுமுறை போலும் !

 

எனவே, நண்பர்களே ! வெற்றி வாய்ப்புள்ள கட்சிகளுக்கு மட்டுமே வாக்களியுங்கள். தோற்கப் போகும் கட்சிகளுக்கு வாக்களித்து உங்கள் வாக்குரிமையை வீணாக்கி விடாதீர்கள் !

 

[பின் குறிப்பு] கட்டுரையின் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு என்றால் பலருக்கும் பகிர்வு செய்யுங்கள்; நீங்கள் மட்டும் படித்தால் போதாது !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.பி.2052, மீனம் (பங்குனி)04]

{17-03-2021}

------------------------------------------------------------------------------------------------------------

 

வெள்ளி, செப்டம்பர் 11, 2020

பல்வகை (26) வந்து ! வந்து ! வந்து ! - ஊடகக் கொலையாளிகள் !

திக்கித் திணறும் தொலைக் காட்சி ஊடகச் செய்தியாளர்கள் !



ஆய கலைகள்  அறுபத்து  நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை.....” என்று நாமகளைப் போற்றிப் பாடுகிறார் கம்பர்.  கலைகளின் எண்ணிக்கை மொத்தம் அறுபத்து நான்கு என்பது தமிழ்ர்களின் பகுப்பீடு !  பேச்சுக் கலையும் அவற்றுள் ஒன்று !

பேச்சுக் கலை என்பது ஓரிரு மாதங்களில் கற்றுக் கொள்ளக் கூடிதன்று ! பள்ளிப் பருவத்தில் இருந்தே இதற்கான பயிற்சித் தொடங்க வேண்டும்.  பேச்சுக்கலையின் அடிப்படை, தமிழ் இலக்கணத்தை அறிவதிலிருந்து தொடங்குகிறது !

எழுத்துகளின் வகை, அவற்றின் பிறப்பிடம், அவை ஒவ்வொன்றும் ஒலிக்கும் மாத்திரை அளவு ஆகியவற்றை முறையாகக் கற்றுக் கொள்ளும் மனிதனே பிற்காலத்தில் பேச்சுக் கலையில் சிறந்து விளங்கமுடியும் !

இக்காலக் கல்வித் திட்டம் தமிழில் உரையாற்றும் திறனை மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் இல்லை. இதற்குக் காரணங்கள்  இரண்டு !  (01) தமிழ்ப் பயிற்று மொழிப் பள்ளிக் கூடங்கள் எண்ணிக்கை அருகிவருகிறது; ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் பெருகி வருகிறது.  (02) தமிழ் வழிக் கல்விக் கூடங்களில் தமிழைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களிடம் தமிழுணர்வும் இல்லை;  தமிழறிவும்  நிறைவாக இல்லை !

ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களில் அனைத்துப் பாடங்களுமே ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகின்றன;  தமிழுக்கு இங்கு இடமே இல்லை ! ஆனால் இங்கு படிக்கும்  பிள்ளைகள் அனைவருமே தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் தமிழ்ப் பிள்ளைகள் !

இந்தப் பிள்ளைகளுக்குத் தமிழைச் சொல்லிக் கொடுப்பது யார் ?  யாருமே இல்லை ! பெற்றோரும், உற்றார் உறவினரும், அண்டை அயலாரும் பேசுகின்ற உரையாடலை உள்வாங்கிக் கொண்டு வளர்ந்து வரும் இந்தப் பிள்ளைகளுக்கு தமிழ் எழுத்துகளின் வகைகளும் தெரியாது, அவ்வெழுத்துகளின் பிறப்பிடமும் தெரியாது, அந்த எழுத்துகள் ஒலிக்கும் மாத்திரை அளவும் தெரியாது ! தமிழில் எழுதவும் தெரியாது !

இப்படி ஒரு தலைமுறை உருவாகி வந்து விட்டது; இன்னும் சில தலைமுறைகள் அடுத்தடுத்து உருவாகப் போகின்றன.  இத்தகைய நிலை எதை நோக்கித் தமிழர்களை இட்டுச் செல்கிறது தெரியுமா  ?  நாடோடிக் கூட்டத்தினரைப் போல, பேச்சு மொழியாக  மட்டுமே தமிழ் இருக்கும்;  தமிழர்களின் எழுத்தில் தமிழ் இருக்காது; அந்த இடத்தில் ஆங்கிலம் வந்து அட்டாணிக்கால் போட்டுக் குந்தி கொண்டு தமிழர் இல்லங்களை ஆட்சி செய்யும் !

கல்வியாளர்கள் கல்வி அமைச்சர்களாக இல்லாத நாட்டில் கல்வி என்பது விற்பனைச் சரக்காகத் தான் இருக்குமே தவிர,  பிள்ளைகளின் அறிவுக் கண்களைத் திறந்து வைக்கும் ஊடகமாக இருக்காது !  அறிவூட்டம் பெறுதல்  என்னும் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டிய நம் கல்வித் திட்டம் பணத்தைத் தேடிப் பல்லக்கில் ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறது !

தமிழர் என்னும் குடிப்பிறந்த  எவருமே தமிழில் பேசி, தமிழில் எழுதி, தமிழில் சிந்தித்து தம் வாழ்வைக் கொண்டுசெலுத்தினால் தான் தமிழ் வளரும்; வாழும் !  தமிழ்க் குடியில் பிறந்த  இளைஞர்கள் தமிழைத்  துறந்து,  ஆங்கில வழியில் படித்து, ஆங்கில வழியில் எழுதி, ஆங்கில வழியில் சிந்தித்து வந்தால், ஆங்கிலம் வளரும்; வாழும்; தமிழ் தளரும்; தாழும் ! அப்புறம் நமக்குத் தமிழர் என்னும் அடையாளம் எதற்கு ? தமிழ்ப் பண்பாடு எதற்கு ? தமிழ்நாடு என்று ஒரு நாடு தான் எதற்கு ?

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், முதலில் அந்த இனத்திற்குரிய மொழியை அழிக்க வேண்டும் என்றான் ஒரு  அறிஞன் ! இன்று தமிழ்நாட்டில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது !

தமிழர் என்னும் இனத்தை அழிப்பதற்கு முன்னோட்டமாகத் தமிழ் வழிப் பள்ளிகளை எல்லாம் மூடிவிட்டு ஆங்கில வழிப் பள்ளிகளை ஆயிரக் கணக்கில்  திறந்து கல்வியையே வணிகமாயமாக்கி வரும்  தமிழக அரசும், அதன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும்  அரசியல் ஆளிநரும்  தமது தவறை உணரவில்லையானால், அடுத்த நூற்றாண்டில் தமிழ் என்ற ஒரு மொழியே இருக்காது; தமிழர் என்னும் ஒரு இனமும் இருக்காது !

ஆங்கில வழிப் பள்ளியில் படித்துவிட்டு, தனது வயிற்றுப் பாட்டுக்காகத் தொலைக்காட்சிச் செய்தி ஊடகங்களில் பணியாற்றிவரும்  தமிழ் இளைஞர்களின்  நாவில் தமிழ் எவ்வாறு தாண்டவமாடுகிறது பாருங்கள் !

“நாடாலு மன்ற  கூட்டத் தொடர் வந்து வருகிர 14-ஆம் தேதி வந்து கூட்டப்பட இருக்கிரது. இதற்கான  ஏர்பாடுகள் வந்து வேகமாக  நடைபெற்றுக் கொண்டு  இருக்கிறது. குடியரசுத் தலைவர் வந்து இதர்கான அரிவிப்புகலை வந்து வெலியிட்டு இருக்கிறார்.  கூட்டத் தொடர் வந்து நடைபெற இருப்பதை முன்னிட்டு பிரதமர் வந்து மற்ற அமைச்சர்கலை வந்து அலைத்து ஆலோசனை செய்ய இருக்கிறார் !

நாடாலுமன்ற சபாநாயகர்  வந்து  அதிகாரிகலை வந்து அலைத்து தக்க ஏற்பாடுகலை வந்து  செய்யுமாரு அருவுறுத்தி இருக்கிறார்.  நாடாலுமன்ற விவகார அமைச்சர் வந்து எதிர்கட்சி தலைவர்களுடன் வந்து  கூட்டத்தை  சுமுகமாக வந்து நடத்துவது பற்றி  பேச இருக்கிறார். நாடாலுமன்றக் கட்டிடத்தை சுற்ரிலும் வந்து தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் வந்து செய்யப்பட இருக்கின்ரது.  முகில் தொலைக்காட்சிக்காக  ஒலிபதிவாலருடன் கூமுட்டைத் தமிழன் “

“மீண்டும் தளைப்புச் செய்திகள். நாமக்கல்லில் கோளி முட்டை விளை வீள்ச்சி அடைந்து விட்டது. தொட்டியத்தில் வாளைப்பளம்  வாங்குவார் இள்ளாமல் குவிந்து கிடக்கிறது. வியாளக் கிளமை தமிழ்நாடெங்கும் மளை பெய்ய வாய்ப்பு. இத்துடன் தளைப்புச் செய்திகள் நிரைவடைகின்றது”

ஆங்கில வழிக் கல்வி நமக்கு அளித்திருக்கும் அவலம் தான் தமிழைத் தமிழாகப் பேசத் தெரியாத, தமிழில் எழுதத் தெரியாத இளைஞர்கள் கூட்டம் ! வல்லின மெல்லின இடையினம் தெரியாத  ஒரு தலைமுறை ! “ர”கர “ற”கர வேறுபாடு தெரியாத  எதிர்காலத் “தமிழ்” மன்னர்கள் !  நிமிடத்திற்கு ஏழு முறையாவது “வந்து” “வந்து” ”வந்து” சொல்லி நம் செவிகளில் காய்ச்சிய ஈயத்தை ஊற்றிக் கொண்டிருக்கும் “கரிகால் வளவர்கள்”. அன்புடன் கேட்டுக் ”கொல்கிறேன்” என்று  தமிழையும் கொன்று, அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நம்மையும் “கொல்கிற”  ”தமிலர்கள்” வால்க ! வலர்க !

-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, மடங்கல் (ஆவணி),18]
{03-09-2020}
----------------------------------------------------------------------------------------------------------
            தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------



சனி, ஏப்ரல் 04, 2020

பல்வகை (25) பாராட்டுங்கள் ! நீங்களும் பாராட்டப்படுவீர்கள் !

பிறரிடம் காணும் நற்குணங்களைப் பாராட்டுங்கள் ! அவர்களது உழைப்பைப் பாராட்டுங்கள் !



அன்பின் வழியது உயிர்நிலை, அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு. அன்பு செலுத்துபவனே உயிருள்ள மனிதன்; அவ்வாறு இல்லாதவன் எலும்பும் தோலும் போர்த்திய உயிரற்ற பிணம். எத்துணைச் சினம் இருந்தால் வள்ளுவர் இப்படிச் சொல்லியிருப்பார் !

அன்பு மனதில் இருந்தால் போதாது; அதை வெளிப்படுத்தவும் வேண்டும் ! அன்பின் வெளிப்பாடு பல வழிகளில் தோன்றுகின்றன. நமக்குக் காவலாக இருக்கும் ஞமலி (DOG) வாஞ்சையுடன் நம்மைப் பார்க்கிறது. அதை மெல்லத் தடவிக் கொடுக்கிறோம். அது நமது அன்பின் வெளிப்பாடு

பால் கொடுக்கும் ஆமா (COW) கழுத்தில் விரல்களால் வருடுகிறோம். அதுவும் நன் அன்பின் வெளிப்பாடு. வளர்ப்புப் புறாவைக் கையில் எடுத்து அதன் சிறகுகளைத் மெல்லத் தடவிக் கொடுக்கிறோம். அதுவும் நமது அன்பின் வெளிப்பாடுதான்.

ஐந்தறிவு படைத்த உயிரினங்களிடம் ஏதோவொரு வகையில் நமது அன்பை வெளிப்படுத்துகிறோம். ஆறறிவு படைத்த மாந்தர்களிடம் நாம், நமது அன்பை எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் ?

மனிதர்களிடம் நமது அன்பை வெளிப்படுத்துகின்ற வழிகளில் ஒன்று தான் பாராட்டுதல் ! வாய்ப்பு வருகையில் மனதாரப் பாராட்டுங்கள் ! அது தான் நமது அன்பை முழுமையாக வெளிப்படுத்தும் !

பரிசுகள் தரவேண்டாம்; பகட்டான ஆடை அணிகலன்கள் தரவேண்டாம்; பாராட்டுங்கள் ! பிறரிடம் காணும் நற்குணங்களைப் பாராட்டுங்கள் ! அவர்களது உழைப்பைப் பாராட்டுங்கள் ! அவர்களது திறமையைப் பாராட்டுங்கள் ! அதுவொன்றே உங்கள் அன்பை முழுமையாக வெளிப்படுத்தும் வலிமையான கருவியாகும் !

நாள்தோறும் சுவையாகச் சமையல் செய்வதில் சலிப்பின்றி உழைக்கும் மனைவியை, மனதாரப் பாராட்டுங்கள். அடுத்த வேளை உணவை இன்னும் சுவைபடச் சமைக்க வேண்டும் என்னும் உந்தலுணர்வு அவரிடம் தானாகத் தோன்றும். மனைவியின் உழைப்பிற்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு மிக்க பரிசு, பாராட்டுரையன்றி வேறெதுவும் இருக்கமுடியாது ! அதுதான் மனைவியின் பால் நீங்கள் செலுத்தும் அன்பின் வெளிப்பாடு !

மாதாந்திரத் தேர்வில் 60 % மதிப்பெண்கள் எடுக்கும் உங்கள் மகன் / மகளைப் பாராட்டுங்கள். அவர்கள் மனம் மகிழ்ச்சியடையும். ”உன்னிடம் திறமை இருக்கிறது; அடுத்த தேர்வில் 80 % எடுக்க முயற்சி செய்; அது உன்னால் முடியும்” என்று சொல்லிப் பாருங்கள். அவர்கள் படிப்பில் வளர்ச்சி காண்பார்கள். பாராட்டுரை தான் மகன் / மகளிடம் நீங்கள் காட்டும் அன்பின் வெளிப்பாடு !

உங்கள் வீட்டுப் பணியாளிடம் “உனக்குத் தந்த வேலையை மிகச் செம்மையாகச் செய்து முடித்திருக்கிறாய்; உன் திறமை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்; பாராட்டுகள்” என்று சொல்லிப் பாருங்கள். அடுத்த நாள் அவர் தனது வேலைகளை இன்னும் துப்புரவாகவும் செவ்வையாகவும் செய்து முடித்திருப்பார். உழைப்பவருக்கு நீங்கள் தரும் மதிப்பு, அவரது திறமைகளைப் பாராட்டுவது தான்.

பணம் ஈட்டித் தராத பலன்களைப் பாராட்டு உங்களுக்கு ஈட்டித் தரும். ஏன் தெரியுமா ? பாராட்டு என்பது உரியவரிடம் நாம் அன்பு வைத்திருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவது மட்டுமன்றி அவரை நாம் உயர்வாக மதிக்கிறோம் என்பதையும் வெளிப்படுத்துகிறது.

மனைவியைப் பாராட்டுங்கள் – அவர் உழைப்பை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதற்கு அடையாளமாக ! மகன் / மகளைப் பாராட்டுங்கள் - அவர்களது திறமையில் உங்களுக்கு மதிப்பும் நம்பிக்கையும் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக ! பணியாளைப் பாராட்டுங்கள் – அவரது உழைப்பை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதற்கு அடையாளமாக !

தமிழ்ப் பணி மன்றத்தில் தங்கள் கருத்துகளை, இடுகைகளாகப் பதிவு செய்யும் நண்பர்களைப் பாராட்டிக் கருத்துரை (COMMENTS) எழுதுங்கள் – அவர்கள் உழைப்பை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதற்கு அடையாளமாக ! அவர்கள் மீது நீங்கள் அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதற்கு அடையாளமாக !

தேடித் தேடி, தேனீ போல ஓடியோடி, உழைத்து, தேன் துளிகளாய் நல்ல நல்ல செய்திகளை உங்களுக்குப் படைக்கும் அவர்களுக்கு நீங்கள் என்ன செய்துவிட முடியும் – பாராட்டுவதைத் தவிர ! பல நண்பர்கள் பாராட்டுவதில் கருமித்தனம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். விழைவு (LIKE) மட்டும் தெரிவிப்பவர்கள் எல்லாம் இந்த வகையினரே !

இடுகை பிடித்திருக்கிறது என்று விழைவு (LIKE) தெரிவிப்பவர்கள், கூடுதலாக சில நொடிகள் எடுத்து கருத்துரையும் (COMENT) எழுதுங்களேன் ! என்ன குறைந்து விடப்போகிறது ? எழுத்துகள் மூலம் பாராட்டுங்கள் ! அது தான் உங்கள் அன்பின் வெளிப்பாடாக அமையும் !

இடுகைகளைப் படித்து விட்டு, ஒவ்வொன்றாகப் படித்து விட்டு, கருத்துரை எதுவும் சொல்லாமல் கணினியை / எழினியை (MOBILE) மூடி வைக்கும் நண்பர்களே ! பிறரை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் ; அப்போது தான் நீங்களும் மதிக்கப்படுவீர்கள். பிறரது உழைப்பை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்; அப்போது தான் நீங்களும் மதிக்கப் படுவீர்கள் !

இடுகைகள் செய்வோர் மீது அன்பு வையுங்கள்; அப்போது தான் உங்கள் மீதும் மற்றவர்கள் அன்பு வைப்பார்கள். அன்பின் வழியது உயிர்நிலை; அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு !

-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[13-12-2018}

-------------------------------------------------------------------------------------------------------------

             தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------

சனி, பிப்ரவரி 01, 2020

பல்வகை (24) வெற்றியும் ! தோல்வியும் ! (குடமுழுக்கில் தமிழ் பற்றிய தீர்ப்பு)

தஞ்சைப் பெரிய கோயில் - குடமுழுக்கு - தீர்ப்பு !


தஞ்சைப் பெரிய கோயில் திருக்குட நன்னீராட்டு நிகழ்வுகளைத் தமிழில் நடத்த வேண்டும் என்னும் வழக்குத் தொடர்பாக, மாநில  முறை மன்ற மதுரைக் கிளை  (உயர் நீதி மன்றம்) அளித்துள்ள தீர்ப்பு, தமிழர்களுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாகக் கருத வேண்டும் !

கோயில்களும், அங்குள்ள தெய்வங்களும், முற்றிலும் தங்களுக்கே உரிமையானவை என்பது போலச் சொந்தம் கொண்டாடிவரும் பார்ப்பனர்களுக்கு மாநில முறை மன்றம் முதல் அடியைக் கொடுத்திருக்கிறது.  தமிழக அரசு உறுதி அளித்துள்ளபடி, திருக்குட நன்னீராட்டு நிகழ்வுகளைத் தமிழ், சமற்கிருதம் இரண்டிலும் நடத்த வேண்டும் என்று உத்தரவு இட்டிருக்கிறது !

சமற்கிருதத்தில் மட்டுமே நிகழ்வுகளை நடத்தி வந்த வழக்கம் மாறி, தமிழ், சமற்கிருதம் இரண்டிலும் நடத்த வேண்டும் என்னும் நிலை உருவாகி இருப்பது, சமற்கிருத முகவர்களுக்குக் கிடைத்த முதல் தோல்வி என்பதில் ஐயமில்லை. அதே போல் முதன் முறையாகத் தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் தமிழ் நுழையப் போகிறது என்னும் வகையில், இது தமிழ் ஆர்வலர்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி என்பதிலும் ஐயமில்லை !

இதில் தோற்றுப் போன இன்னொரு ஆளுமை எது தெரியுமா ? அது தான் தமிழக அரசு ! இந்திய மக்கள் கட்சி ( பாரதிய சனதா கட்சி ) விரும்பியபடி, திருக்குட நன்னீராட்டு நிகழ்வுகளைச் சமற்கிருதத்தில் நடத்தி அவர்களிடம் நல்லபெயரும் வாங்க முடியவில்லை; தமிழக மக்களின் விருப்பப்படி, தமிழில் நடத்தி, மக்கள் மன்றத்தின் அன்பையும் பெற முடியவில்லை !

இரண்டு ஆடுகளிடம் ஊட்டிய குட்டிஎன்று ஒரு சொலவடை உண்டு. அதுபோல் இந்திய மக்கள் கட்சி ( பாரதிய சனதாக் கட்சி ), தமிழக மக்கள் ஆகிய  இரண்டு பக்கத்தினரின் கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற முடியாமல், இருவரது உதைகாலையும் (ஆதரவு) இழந்திருக்கிறது தமிழக அரசு !

பார்ப்பனர்கள் இத்துடன் அமைதியாக இருப்பார்கள் என்று தோன்றவில்லை. முகனை முறை மன்றத்திற்குச் (உச்சநீதி மன்றம்)  சென்று தடையாணை கோரக் கூடும். தமிழர்களும் தமிழ் அமைப்புகளும் விழிப்பாக இருக்க வேண்டிய வேளையிது. முன்கணிப்பு விண்ணப்பம் (CAVEAT PETITION) ஒன்றை முகனை முறை மன்றத்தில் (உச்ச நீதி மன்றம்) அளித்து வைப்பது நல்லது !

இந்த வழக்குத் தொடர்பாக இரு கருத்துகளை இங்கு அலசி ஆய்வு செய்யலாம் என்று கருதுகிறேன். இத்தகைய ஆய்வு தமிழ் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியாக இருக்கும் !

தமிழ் நாட்டுக்குள், தமிழர்களால் கட்டப்பெற்ற கோயில்களைச் சமற்கிருத மொழியாளர்களும் அவர்களது முகவர்களான பார்ப்பனர்களும் தங்களுடைய சொந்த உடமைகளாகக் கருதுகின்றனர். “கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிகொண்டது போல்என்று ஊர்ப் புறங்களில் ஒரு சொலவடை உண்டு. தமிழ் மக்களின் பணத்தில், தமிழ்த் தொழிலாளர்களின்  உழைப்பில், தமிழ் விற்பன்னர்களின் கலையில் உருவான தமிழ் நாட்டுக் கோயில்களை எல்லாம்  பார்ப்பனர்கள், ஆகமம் ஐதீகம் மந்திரம் என்று புரியாத புன்மொழிகளைக் கூறித் தமிழர்களிடமிருந்து வலிந்து பற்றிக் கொண்டு, தங்கள் பிழைப்பை மிக மேன்மையாக நடத்திக் கொண்டிருக்கின்றனர் !

சரி ! போகட்டும் ! அவர்களும் மனிதர்கள் தானே என்று இரக்கம் காட்டினால், நம்மைக் கருவறைக்குள் வராதே, என்று கட்டுப்பாடு விதிக்கின்றனர். கருவறைக்குள் நாம் சென்றால், இறைவனுக்கு ஏற்காதா ? அல்லது நாம் தீண்டத் தகாத  தெறுக்கால் (தேள்) பூச்சிகளா ? நமக்குத் தெரிந்த தமிழில், பூசனை (அர்ச்சனை) செய்தாலும், சரி போகட்டும் என்று விட்டு விடலாம். ஆனால், நமக்குப் புரியாத சமற்கிருதத்தில் தான் மந்திரம் சொல்வேன் என்று அடம் பிடித்து அழிவழக்கு செய்வது என்ன ஞாயம் ?

கதலி (வாழை) வைப்பவன் ஒருவன், கனி தின்பவன் இன்னொருவனா ? இல்லம் கட்டுபவன் ஒருவன், அங்கே இமை மூடிப் பஞ்சணையில் துயில்கொள்பவன் இன்னொருவனா ? ஆமா (பசு) வாங்குபவன் ஒருவன்; அதன் அமுதை (பாலை)த் துய்ப்பவன் இன்னொருவனா ? தமிழன் காசுகளை உண்டு  உயிர்வாழ்ந்து, தமிழ் மக்களின் கண்களான  தமிழை இகழ்ந்து, வடமொழிக்கு வாழ்த்துப் பாடும் பார்ப்பனர்களுக்கு நம் கோயில்களில் யார் தந்தது இந்தத் தனியுரிமை?

இந்த ஏமாற்றுக்காரர்களை இனம் கண்டு கொண்டு விட்டது எங்கள் தமிழினம் ! சிலரை ஏமாற்றிச் சில காலம் வாழலாம் ! ஆனால் பலரையும் ஏமாற்றிப் பல காலம் வாழமுடியாது ! இது உலகியல் உண்மை !

பார்ப்பனர்களின் பாடசாலையாகத் திகழும் பாரதிய சனதாக் கட்சிக்கு  எல்லா வகையிலும் இணங்கிப் போகும் இன்றைய தமிழக ஆட்சியாளர்கள்,  தங்களுக்கு வாழ்வு தந்த தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் எதிராகக் கொலைக் குற்றத்திற்கும் மேலான கொடுஞ் செயலைப் புரிந்திருக்கிறார்கள் ! தமிழின் உரிமையைக் காலடியில் போட்டு நசுக்கிவிட்டு, திருக்குட நன்னீராட்டு நிகழ்வுகளில் சமற்கிருதத்தையும் இணைத்துக் கொண்ட கொடுமையை என்னவென்று சொல்வது ? சுரணையுள்ள எந்தத் தமிழனாலும் இதை ஏற்றுக் கொள்ளவே இயலாது !.

எனது நாடு தமிழ் நாடு ! என் தாய்மொழி தமிழ் ! என் தாய் பேசிய மொழி தமிழ் மொழி ! என் தந்தை எனக்குக் கற்றுத் தந்த மொழி தமிழ் மொழி ! என் ஆசிரியர் எனக்கு முதன் முதல் சொல்லித் தந்த மொழி தமிழ் மொழி ! என் அரசின் ஆட்சி மொழி தமிழ் மொழி ! என் மக்கள் அன்றாடம் பேசும் மொழி தமிழ் மொழி !

என் மக்கள் வழிபடும் கோயில்கள் இருக்குமிடம் தமிழகம் !;  என் மக்களின் கோரிக்கை, தமிழ் வழியில் குடமுழுக்கு ! என் தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்கிறேன்என்று மாநில முறை மன்றத்தில் துணிவுடன் சொல்லத் தவறிய அந்த நொடியிலேயே, ஆட்சித் தலைமையும், அமைச்சர் பெருமக்களும் மக்கள் பார்வையில்  புறமுதுகிட்ட போர் வீரர்களாகத் தான்  காட்சி தருகிறார்கள் !

மக்களிடம் தோற்றுத் தலைகுனிந்து நிற்கிறது அரசு ! ஆட்சி மொழியாக அறிவிக்கப் பெற்ற தமிழ் மொழிக்கு அரணாக இருக்க வேண்டிய அரசு, மாநில முறை மன்றத்தில் சமற்கிருதத்திற்கு ஆலவட்டம் வட்டம் வீசிய ஆர்வம் கரைக்கமுடியாத களங்கமாக வரலாற்றில் பதிவாகி இருக்கிறது !

பதவி ஆசை, கண்களை மறைக்கிறது ! ஆட்சியில் அழகு முத்திரை பதிக்க வேண்டிய அரசியல் ஆளிநர்கள், மாநில உரிமைகளை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக விட்டுக் கொடுத்துவிட்டு, மண்ணின் மொழியான மணித் தமிழின் உரிமைகளையும்  விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் !

எப்போது விழிக்கப் போகிறது தமிழினம் ?

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)17]
{31-01-2020}

--------------------------------------------------------------------------------------------------------
    
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

--------------------------------------------------------------------------------------------------------




வெள்ளி, ஜனவரி 24, 2020

பல்வகை (23) முகமூடி எதற்கு ? முகநூலில் முழு விவரமும் தாருங்கள் !

அச்சப்படுபவர்கள்  முகநூல் போன்ற பொது வெளிக்கு ஏன் வரவேண்டும் ?


தமிழ்ப் பணி மன்றத்தில் உறுப்பினராக இருப்பவர்களைப் பற்றிய தரவல்களை  (தகவல்களை) அறிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் உண்டு. ஒரு நண்பர் சிறப்பாக வடிவமைக்கப்பெற்ற ஒரு இடுகையைச் செய்திருந்தால், அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவது இயல்பு தானே !

அருமையான கருத்தை ஒரு நண்பர் பதிவிட்டிருப்பதைப்  பார்த்தால் எனக்கு அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆவல் எழும் ! சில நண்பர்களது பின்னூட்டங்கள், நமது அறிவுக்கு அறைகூவல் விடுப்பதைப் போல் அமைந்து இருக்கும் ! திறமை எங்கிருந்தாலும் மதிக்கப்பட வேண்டியது நமக்கிருக்க வேண்டிய நற்பண்புகளில் ஒன்றல்லவா ?

தமிழ்ப் பணி மன்றத்தைத் தொடங்கி கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறேன். பல்வேறுபட்ட ஆற்றல் உள்ள மனிதர்களை அடையாளம் காண இது எனக்கு உதவி இருக்கிறது ! குறிப்பிடத்தக்க ஒரு துய்ப்பு (அனுபவம்) ஏற்படுகையில், அதற்குக் காரணமாக இருக்கும் நண்பரைப் பற்றி அறிந்து கொள்ள மிகவும் முயல்வேன் !

இவ்வாறு, நண்பர்களைப் பற்றி அறிந்து கொள்ள முயலும் ஒவ்வொரு நேர்விலும் எனக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைத்திருக்கிறது. ஒரு நண்பரைப் பற்றிய தரவல்களை (தகவல்களை) எவ்வாறு அறிந்து கொள்வது ? நேரில் சந்திக்கும் நிகழ்வு ஏற்படுகையில் கேட்டறியலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் அரிது ! மற்றொரு வழி, அந்த நண்பர்களின் முக நூற் பக்கத்தைத்  திறந்து பார்த்து அறிவது !

ஒரு நண்பரின் முகநூற் பக்கத்தில், அவரது பெயர், பிறந்த நாள், அகவை, படிப்பு, பாலினம், வாழ்விடம், ஏற்றிருந்த பணிகள், இப்போதைய பணி, திருமண நிலை, மின்னஞ்சல் முகவரி, எழினி (MOBILE) எண் மற்றும் இன்ன பிற தரவல்களும் (தகவல்கள்) தரப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், ஒரேயொரு தரவலை (தகவல்) மட்டுமே தந்து - அதாவது அவர் பிறந்த நாள் சூன் 10 – என்னும் தரவலை மட்டுமே தந்து, முகநூலில் கணக்கு தொடங்கி இருக்கும் விந்தையை நான் முதன் முதல் பார்க்கையில், மிகவும் திகைத்துப் போனேன் !

இந்தக் குறிப்பிட்ட கணக்குக்கு உரியவர் , ஆனா ? பெண்ணா ? – தெரியாது. பிறந்த  ஆண்டுதெரியாது ! வாழும் ஊர்தெரியாது ! படித்தவரா ? படிக்காதவரா ? – தெரியாது ? அகவை ? – தெரியாது ! என்ன பணி செய்கிறார் ? – தெரியாது ! திருமணம் ஆனவரா ? – தெரியாது ! எந்தத் தரவலையும் (தகவலை) சொல்ல விரும்பாதவருக்கு முகநூற் கணக்கு எதற்கு ?

முக்காடு போட்டுக் கொண்டு ஒரு ஆள் ஊரில் உலவுகிறார் என்றால் என்ன பொருள் ? அவர் ஏதோ தப்புச் செய்திருக்கிறார்அதனால் தான் மற்றவர்களைக் கண்டு அவர் அஞ்சுகிறார்என்று தானே யாரும் சொல்வார்கள் ?

இப்படி அச்சப்படுபவர்கள்  முகநூல் போன்ற பொது வெளிக்கு ஏன் வரவேண்டும் ? அச்சப்படுபவர்கள், வீட்டிற்குள்ளேயே அடக்கமாக இருப்பது தான் நல்லது ! பிறந்த நாள் சூன். 10 என்ற ஒரு செய்தியை மட்டும் குறிப்பிட்டு, முகநூல் கணக்கு தொடங்கி இருப்பவர், அவரது அகவை என்ன என்று சொல்வதில் என்ன தவறு ? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரிவிப்பதில் அவருக்கு என்ன இடையூறு ஏற்பட்டு விடும் ? அவர் படிப்பு, பணி போன்ற செய்திகளைத் தெரிவிப்பதால் அவருக்கு என்ன இன்னல் ஏற்பட்டுவிடும் ?

தமிழ்ப் பணி மன்ற உறுப்பினர்களில்  ஆசிரியர்கள் எண்ணிக்கை எத்துனை ? தமிழாசிரியர்கள் எண்ணிக்கை எவ்வளவு ? பேராசிரியர்கள் எண்ணிக்கை எத்துணை ? பாவலர்கள் எண்ணிக்கை  என்ன ? அரசுப் பணிகளில் இருப்போர் எத்துணை ? பட்டதாரிகள் எண்ணிக்கை எத்துணை ? என்பன போன்ற விவரங்களைத் திரட்டுவதற்காக, ஒவ்வொரு நண்பரின் முகநூற் கணக்கையும் நான் திறந்து பார்க்கையில் தான், எனக்குப் புரிந்தது, 90 % நண்பர்கள்இருப்பூர்தி நட்புகள்” (இரயில் சிநேகிதர்கள்) என்று !

இருப்பூர்தியில் (இரயிலில்)  செல்கையில், எதிரெதிர் இருக்கையினர் மிக நெருக்கமாகப் பேசிக் கொண்டு வருவார்கள்; அவரவர்  இறங்கும் நிலையம் வந்தவுடன், ஒருவர்க்கொருவர் மதிப்பியல் நிமித்தம்சென்று வருகிறேன்என்று கூடச் சொல்லிக்  கொள்ளாமல் போய்க் கொண்டே இருப்பார்கள். தமிழ்ப் பணி மன்ற உறவும் இப்படிப்பட்டது தானோ ?

இருப்பூர்தி நண்பர்களைப் போல் அல்லாமல் நாம் ஏன் உண்மை நண்பர்களாக இருக்கக் கூடாது ? தருமபுரி செல்கையில் நல்லம்பள்ளி சென்று நண்பர் அழகேசனை என்னால் சந்திக்க முடியும் ! பெரியகுளம் செல்ல நேர்ந்தால், எண்டப்புளி சென்று நண்பர் பாலு இராமச்சந்திரனைச் சந்திக்க முடியும். புதுக்கோட்டை சென்றால், நண்பர் கார்மேகம் வீரையாவைச் சந்திக்க முடியும் ! இதுபோல் ஒருவர்க்கொருவர் சந்திக்க வேண்டுமானால், நண்பர்களின் இருப்பிட முகவரியோ, எழினி எண்ணோ, மின்னஞ்சல் முகவரியோ கண்டிப்பாகத் தேவை !

இந்த இடுகையைப் படிக்கும் ஒவ்வொரு நண்பரும், வீட்டு முகவரி போன்ற ஓரிரு செய்திகளை மட்டும் மறைத்து விட்டு, இருப்பிடம், பிறந்த நாள், அகவை, படிப்பு, பணி, போன்ற பிற செய்திகள் அனைத்தையும் கட்டாயம் உங்கள் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யுங்கள் ! இத்தரவல்களைத் தருவதால் நமக்கு எந்த இன்னலும் ஏற்படாது ! நாம் தவறு ஏதும் செய்வதில்லை ! நமக்கு எதற்கு முக்காடு ?

என்னுடைய  எழினி எண்ணை முன்பு பதிவு செய்திருந்தேன்.  இதனால், நேரம் காலம் இல்லாமல், யாராரோ என்னை அழைக்கத் தொடங்கினார்கள். பின்பு அதை பிறர் காணாத வகையில் மறைத்துவிட்டேன் ! அதனால் தான் என் எழினி எண்ணை இப்போது யாருக்கும் தருவதில்லை. நான்கு பேருக்குத் தெரிந்த ஆள் என்றால் இத்தகைய இன்னல்கள் வரும் போலும் ! எனது  மின்னஞ்சல் முகவரியை நான் தந்திருப்பதால், நண்பர்கள் அதன் மூலம் என்னைத் தொடர்பு கொள்ளத் தடையில்லை ! ஏனைய தரவல்கள் அனைத்தையும் நான் என் முகநூல் பக்கத்தில் தந்திருக்கிறேன் !

தமிழறிஞர்கள் பேரவைஅல்லதுதமிழார்வலர்கள் பேரவைஅமைப்பு தொடர்பாகக் கூடுதல் செய்திகள் தேவைப்படுகின்றன. பணியிலிருக்கும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள், தமிழார்வம் மிக்க நண்பர்கள், பாவலர்கள் போன்றோர் உடனடியாகத் தங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்குத் தெரிவியுங்கள் !

செய்தக்க அல்ல செயக் கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்என்றார் வள்ளுவர்.

நாம் தமிழுக்குக் கட்டாயம் ஒரு அரண் அமைத்தாக வேண்டும். தமிழ் வளர்ச்சி, தமிழ்ப் பாதுகாப்பு, தமிழினப் பாதுகாப்பு போன்றவை தொடர்பாக ஒரு அமைப்பு வழியாக அரசுக்குக்  கோரிக்கை வைக்கப்பட்டால் அது நிறைவேற்றப் படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இன்றைய நிலையில் அமைப்பு ஏதும் இல்லாததால், தமிழுக்குப் பாதுகாப்பே இல்லை ! “செயத் தக்க செய்யாது போவதும்தவறு என்பதை உணர்ந்து செயல்படுவோம் !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)10]
{24-01-2020}

-----------------------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------