name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நாலடியார்
நாலடியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாலடியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜனவரி 24, 2021

நாலடியார் (22) வாழ்நாட்கு அலகா வயங்கொளி மண்டிலம் !

வாழ்நாள் எனும் நாட்காட்டிச் சீட்டு  கதிரவனால் அன்றாடம் கிழிக்கப்படுகிறது !


சமண முனிவர்கள் பலரால் இயற்றப்பட்ட நாலடியார், நானூறு வெண்பாக்களைக் கொண்ட ஒர் அறநூல்.  கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியதாகக்  கருதப்படும் இந்நூல் பதினெண் கீழ்க் கணக்கு என்னும் வகைப்பாட்டின் கீழ் வருகிறது. திருக்குறளைப் போல அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று இயல்களைக் கொண்டது.  இதிலிருந்து ஒரு பாடல் !

 

------------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (22)

--------------------------

 

வாழ்நாட்  கலகா  வயங்கொளி  மண்டிலம்

வீழ்நாள்  படாஅ   தெழுதலால்  வாழ்நாள்

உலவாமுன்  ஒப்புர  வாற்றுமின்  யாரும்

நிலவார்  நிலமிசை  மேல்.

 

------------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------

 

வாழ்நாட்கு  அலகா  வயங்கு  ஒளி  மண்டிலம்,

வீழ்நாள்  படாஅது  எழுதலால்,  வாழ்நாள்

உலவா முன்  ஒப்புரவு  ஆற்றுமின் ! யாரும்

நிலவார்  நிலமிசை  மேல்.

 

------------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-------------------

மனிதன்  வாழும் நாள்களைக் கணிக்கும்   அளவு கோல்  போலஒளி மண்டிலமாகிய  சூரியன் அன்றாடம் எழுந்து, மறைந்து  அவனது வாழும் நாள்களைக்  கழித்துக் கொண்டிருக்கிறது !

 

ஆகையால், உங்கள் வாழ்நாள்  குறைந்து போவதற்கு முன், உங்களிடமுள்ள  செல்வத்தைப் பிறருக்கும் பகிர்ந்தளித்துக் கூடி வாழும் ஒப்புரவு வாழ்க்கையைக் கடைப்பிடியுங்கள் !

 

கூடி வாழாமல்  தனித்து,  இவ்வுலகில் யாரும் நிலையாக வாழ்ந்தது இல்லை  என்ற உண்மையை உணருங்கள் !

 

-------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

வாழ்நாட்கு = மனிதன் உயிரோடிருக்கும்  காலத்தினை  ; அலகு ஆய் = கணிக்கும் அளவு கோல் போல; வயங்கு ஒளி மண்டிலம் = விளங்குகிற ஒளி மிக்க சூரியன்;  வீழ்நாள் படாது =  பயனில்லாத காலம் என எதையும் கழிக்காமல்;  எழுதலால் = அன்றாடம்  கிழக்கே எழுந்து மேற்கே மறைவதால் ;  வாழ்நாள் உலவா முன் – உங்கள் வாணாள்   முடிவதற்கு முன்; ஒப்புரவு ஆற்றுமின் =  அறச் செயல்களைச் செய்து  ஒற்றுமையாகக் கூடி வாழுங்கள் யாரும் = (ஏனெனில்) எப்படிப்பட்டவரும்;  நிலமிசைமேல் = இந்தப்  பூமியின் மேல்;  நிலவார் = நிலையாக வாழ்வது கிடையாது !

 

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.பி:2052, சுறவம் (தை) 11]

(24-01-2021)

-------------------------------------------------------------------------------------------------------------

நாலடியார் (40) மான அருங்கலம் நீக்கி !

பிச்சை எடுக்கும் ஈன வாழ்வையும் கூட ஏற்பேன் - எப்போது ?


பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நாலடியார் திருக்குறளுக்கு அடுத்ததாக வைத்துப் போற்றப்படும்  அறநெறி நூல் ! சமண முனிவர்கள் பலரால் இயற்றப்பட்ட 400  வெண்பாப் பாடல்களைக் கொண்டுள்ள இந்நூல்  பல அறநெறிக் கருத்துகளை வலியுறுத்துகிறது !  இதிலிருந்து ஒரு பாடல் !

 

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (40)

-----------------------------------------------------------------------------------------------------------


மான  அருங்கலம்  நீக்கி இரவென்னும்

ஈன  இளிவினால்  வாழ்வேன்மன்  -  ஈனத்தால்

ஊட்டியக்  கண்ணும்  உறுதிசேர்ந்  திவ்வுடம்பு

நீட்டித்து  நிற்கு  மெனின் !

 

-----------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------------------


மான  அருங்கலம்   நீக்கி  இரவு  என்னும்

ஈன  இளிவினால்  வாழ்வேன்  மன்ஈனத்தால்

ஊட்டியக்  கண்ணும்  உறுதி  சேர்ந்து  இவ்வுடம்பு 

நீட்டித்து  நிற்கும் எனின் !

 

-----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-------------------

இந்த உடம்பானது அழிவே இல்லாமல்  நீடித்து  நிற்குமெனில் , மானமுடைமை என்னும் அரிய அணிகலனை நீக்கிவிட்டு பிச்சை எடுக்கும் ஈன வாழ்க்கையும் கூட வாழ்வேன்  !

 

[ அப்படி ஈனப் பிழைப்புப் பிழைத்தாலும்  இந்த உடம்பு நீடித்து இருப்பதில்லையே ! பின் எதற்காக ஈனப் பிழைப்புப் பிழைக்க வேண்டும் ? அறம் செய்து நற்பேறு பெறலாமே ! என்பது உள்ளுறைக் கருத்து ]

 

-----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

ஈனத்தால் = இழிவான செயல்களால்,; ஊட்டியக் கண்ணும் =  (சோறு முதலியவற்றை ஈட்டி ) துய்க்கச் செய்தும்; இவ்வுடம்பு = இந்த உடம்பானது ;  உறுதிசேர்ந்து =  உறுதிப்பட்டு; நீட்டித்து நிற்கும் எனின் = அழியாமல்  நீண்ட காலம் நிலைத்திருக்கும்  என்றால் ;  மான அருங் கலம் நீக்கி =  மானம்  என்னும் மதிப்பு மிக்க அணிகலனை  விலக்கிவிட்டு ;

 

இரவு என்னும் =  இரப்பது (பிச்சை எடுத்தல்)  என்று சொல்லுகிற; ஈன இளிவினால் =  தாழ்மையான  இழிசெயலைச் செய்தும் கூட  ; வாழ்வேன்மன்  =  உயிர் வாழ்வேன்.

 

[அப்படி ஈனப் பிழைப்புப் பிழைத்தாலும் இந்த உடம்பு நீடித்து இருப்பதில்லையே ! பின் எதற்காக ஈனப் பிழைப்புப் பிழைக்க வேண்டும் ?  அறச் செயல்களைச் செய்து நற்பேறு பெறலாமே !  என்பது உள்ளுறைக் கருத்து !]

 

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.பி:2052, சுறவம் (தை) 11]

(24-01-2021)

------------------------------------------------------------------------------------------------------------