name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: ஜூலை 2020

வெள்ளி, ஜூலை 31, 2020

சிந்தனை செய் மனமே (77) இயற்கை வளங்களை அழிக்காதீர் - மருத நிலம் !

உணவுப் பொருள்களை விளைவிக்க  இயற்கையால் படைக்கப் பெற்ற  இடம் மருத நிலம் !


பண்டைத்  தமிழ் இலக்கியங்கள் இந்நிலவுலகின் மொத்தப் பரப்பையும்  நான்கு  வகைகளாகப் பகுத்துப் பேசுகின்றன என்பதைப் பகுதி (01) -இல் பார்த்தோம்.  மருதம் என்பது அவற்றுள் ஒன்று. வயலும் வயல் சார்ந்த பகுதிகளும் மருதம் என்று அழைக்கப்படுகிறது !

மனிதன் நிலத்தை பண்படுத்தித் தனக்கு வேண்டிய உணவுப் பொருட்களை விளைவித்துக் கொள்ளும் நிலப்பரப்புக்கு வயல் என்று பெயர்.  வயலைச் சுற்றிலும் வரப்புகள் அமைத்து நீர்ப் பாசன வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு நெல் போன்ற உணவு தானியங்களைத் தொன்றுதொட்டு மனிதன் விளைவித்து வருகிறான் !

மருத நிலப் பகுதியை  நீர்ப்பாசன வசதியுள்ள வேளாண்  மண்டலம் என்றும்  வானவாரி வேளாண் மண்டலம் என்றும் இரண்டாக வகைப்படுத்தலாம் ! இற்றைத்  தமிழகத்தில் பெரும்பான்மை நிலப்பகுதி வயலும் வயல் சார்ந்த மருத நிலம் ஆகும் !

வேளாண்மை செய்வதற்கு  வளமான நிலமும் போதுமான நீரும் அடிப்படைத் தேவைகள் ஆகும் ! நிலத்தின் வளத்தைப் பெருக்குவதற்கு நிலத் திணைகளின் (தாவரங்களின்) இலை தழைகளும், ஆடு மாடு போன்ற கால்நடைகளின்  கழிவுகளும் பெரிதும் பயன் படுகின்றன. இயற்கையில் கிடைக்கும் இவை நிலத்தை  வளப்படுத்துகின்றன !

அரைநூற்றாண்டுக் காலமாக  நிலத்திற்கு உரமாக வேதிப்பொருட்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தொடக்கத்தில் இத்தகைய உரங்கள் விளைச்சலை ஊக்குவித்தாலும், காலப்போக்கில் இவை   வளத்தைச் சீர்குலைத்து நிலத்தை மலடாக்கி விட்டன !

நிலவளம் கெட்டுப் போனதற்கு வேதி உரங்களும் (CHEMICAL FERTILIZERS) வேதிப் பொருள்களான பூச்சி  மருந்துகளுமே காரணம். வேதி உரங்கள் நிலத்தில் படிந்துள்ள நன்மை தரும் நுண்ணுயிரிகளைக் கொன்று விடுகின்றன. இதனால் இலை, தழை, சருகு போன்ற  நிலத் திணைக் கழிவுகளை மக்கச் செய்து  எருவாக மாற்றிக் கொள்ளும் தன்மை நிலத்திற்குக் குறைந்து போய் விடுகிறது !

பூச்சி மருந்துகளால், பயிர்களுக்கு நன்மை விளைவிக்கும் சிலந்திபோன்ற இனங்கள் அழிந்து போகின்றன. பயிர்களைத் தாக்கும் வெட்டுக்கிளி, பொறி வண்டுகள், இலைச் சுருட்டுப் புழு, ஆனைக்கொம்பன் ஈ , தண்டு துளைப்புழு போன்றவற்றை  பயிர்ச் சிலந்திகள் பிடித்து உண்பதால் பயிர்கள் காப்பாற்றப்பட்டன. ஆனால் பூச்சி மருந்துகள் வழக்கிற்கு வந்த பிறகு பயிர்ச் சிலந்திகள் அழிந்து விட்டதால், பயிர்கள் பூச்சிகளால் தாக்கப்பட்டு, விளைச்சல் குறைந்து விட்டது !

நச்சுத் தன்மையற்ற சாரை போன்ற பாம்புகளும் கூட அவற்றின் தோலுக்காகப்   பிடிக்கப்பட்டதால், எலிகள் பெருகிவிட்டன. எலிகளை உண்டு வாழும் ஆந்தை, கோட்டான், பருந்து போன்ற பறவை  இனங்கள் பூச்சி மருந்துகளால் அருகிப் போய்விட்டன. வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளை பிடித்து உண்ணும் கரிச்சான் குருவிகளும் சிட்டுக் குருவிகளும்  காணாமற் போவிட்டன. பூச்சி மருந்துகள் பூச்சிகளைக் கட்டுப் படுத்துவதற்கு மாறாக, வேளாண் பெருமக்களுக்கு நன்மை செய்யும் பறவை இனங்களை அருகச் செய்துவிட்டன !

வயலும் வயல் சார்ந்த இடங்களுமான மருத நிலத்தில் இக் காலத்தில் வேளாண் பயிர்களை  நட்டுப் பயிராக்குவது ஆதாயம் தரும் தொழிலாக இல்லாமற் போய்விட்டது !

வேளாண் பயிர்களுக்கு முகாமையான அடுத்தத் தேவை தண்ணீர்.  தண்ணீர் தரும் மூலங்களான ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகள் தூர் வாரப் படாமல் ஆழம் குறைந்துபோய்விட்டன. தமிழ் நாட்டை ஆண்ட பண்டைய மன்னர்கள்  ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை நாடெங்கும் நிரம்பவும் ஏற்படுத்தினர் . அண்மைக் காலங்களில் இந்த நீர் நிலைகள் எல்லாம் தூர்க்கப்பட்டு கட்டட மயமாகி விட்டன !

நீர்நிலைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இருக்கும் நீர்நிலைகளின் கரையோரங்களில் நிகழும் வலிப்பற்றினால் (ஆக்கிரமிப்பு) அந்த நீர் நிலைகளின் பரப்பளவும் சுருங்கிக் கொண்டே வருகின்றது. ஆட்சியில்  இருப்போர்  கண்களுக்கு இவையெல்லாம் தெரிந்தும் சொந்த ஆதாயம் கருதிக் கண்களை இறுக  மூடிக் கொண்டிருக்கின்றனர் !

ஆற்றுப் பாசனம் உள்ள இடங்களில், நீர்த் தட்டுப்பாட்டினல் வேளாண்மை செய்யும் பரப்பளவு ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் பாய்ந்து நீர்வளம் பெருக்கும் ஆறுகள் காவிரி, தென்பெண்ணை, தாமிர பரணி, அமராவதி, நொய்யல், போன்றவை. இவற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்துவிட்டதால் இந்த ஆறுகளில் ஓரிரு மாதங்கள் மட்டுமே நீர்வரத்து இருக்கிறது !

காடுகள் அழிக்கப்பட்டதாலும், ஆறுகளின் தோற்றுவாய் அமைந்துள்ள மாநிலங்களின் பேராசையாலும், இவ்வாறுகளில் நீர் வரத்து ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது !

ஆற்றுப்படுகைகளில் படிந்து இருக்கின்ற மணல், பஞ்சு மெத்தை போன்றது. இந்த மணல் படிவுகளின் பருமன் (THICKNESS) பல அடி ஆழத்திற்கு இருக்கும்.  ஆற்று மணலை அள்ள அள்ள, ஆற்றின் நீர்மட்டம் தாழ்ந்து போவதால்  கிளை வாய்க்கால்களில் தண்ணீர் ஏறிச் செல்வதில் தடங்கல் ஏற்படுகிறது. விளை நிலங்களுக்கு இதனால் தண்ணீர் போய் சேருவது தடைப்படுகிறது !

நீரோட்டம் இருக்கும் போது,  ஆற்றுப் படுகைகளில் இருக்கும் பல அடி பருமன் உள்ள  மணல்  படிவுகள், ஆற்று நீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும். இதனால் நிலத்தடி நீர்மட்டம்  உயர்வதுடன்  கோடைக் காலங்களில் ஆற்றுக்கு இருபுறமும் உள்ள ஊர்களில் உள்ள கிணறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில், நீர் மட்டம் குறையாமல் இருக்கும் !

பேராசை பிடித்த மனிதர்கள் ஆற்றுப்படுகைகளில் படிந்துள்ள மணலை  தும்பியூர்தி (BOKELINE ) கொண்டு பல அடி ஆழத்திற்குத் தோண்டி அள்ளிச் செல்கின்றனர். இதனால்  இந்த மணல் படிவின் பருமன் குறைந்து போவதால்  நீரை உறிஞ்சித் தேக்கி வைத்துக் கொள்ளும்  ஆற்றலை இது  பெருமளவுக்கு இழந்து விடுகிறது.  மணல் படிவுகளின் இந்த  ஆற்றல் இழப்பு நிலத்தடி நீர்மட்டத்தை மிகு ஆழத்திற்குக் கொண்டு போய் விடுகிறது !

இதன் விளைவாக ஆற்றுக்கு இருபுறமும் உள்ள ஊர்களில் நீர்நிலைகள், கோடைக்காலங்களில் வற்றிப்போய் விடுகின்றன.  குடிநீர்ப் பஞ்சம்  ஏற்படுகிறது.  காலநடைகளுக்குப்  போதுமான நீர் கிடைப்பதில்லை. கோடைப் பயிர் விளைச்சல் கனவாகிப் போய்விடுகிறது !

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை என்றார் வள்ளுவர்.  உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலக மக்கள் தமது உணவுக்காக உழவனைச் சார்ந்தே இயங்க வேண்டி இருக்கிறது. உழவன் இல்லையேல் உணவு கிடையாது. அதனால் எத்தனைத் துன்பங்கள்  இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது என்பது இக்குறளின் பொருள் !

இத்துணை உயர்வான வேளாண்மையை முற்றிலும் அழிக்கும் வண்ணம், விளை நிலங்களை எல்லாம் வீட்டு மனைகளாக்கி  விற்றுப் பணம் பண்ணும் கூட்டம் பெருகி வருவதும், அரசே அதற்குத் துணையாக இருப்பதும்  கடுமையான மனத் துன்பத்தை  அளிக்கிறது !

இப்படிக் கோணல் சிந்தனை கொண்டு பணம் சேர்க்கும் கூட்டத்தைப் பார்த்து ஔவையார் பாடியபடிகேடு கெட்ட மானிடரே கேளுங்கள் ! கூடு விட்டு ஆவிதான் போன பின்பு யாரே அனுபவிப்பார், பாவிகாள் இந்தப்  பணம் என்று கேட்கத் தோன்றுகிறது !

நேர்மைக் குணமும் உயரிய கோட்பாடும் இல்லாத மனிதர்கள் வயலும் வயல் சார்ந்த பகுதிகளுமான மருத நிலத்தைப் பாழ்படுத்தி வருகிறார்கள் ! இத்தகைய கேடு கெட்ட மாந்தர்கள் திருந்தாவிட்டால், உலக மக்கள் உணவின்றி  மடிந்து போகும் காலம் விரைவில் வந்தே தீரும் !

-------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, கடகம் (ஆடி),16]
{31-07-2020}
-------------------------------------------------------------------------------------------------------
       தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------







சிந்தனை செய் மனமே (76) இயற்கை வளங்களை அழிக்காதீர் - முல்லை நிலம் !

விலங்குகளின் வாழ்விடமாகப் படைக்கப் பெற்றது முல்லை நிலம் !

தமிழனின் வகைப்படுத்தலின் படி காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலம் எனப்படும். உயர்ந்து வளர்ந்திருக்கும் மரங்களும், அவற்றைப் பற்றிப் படர்கின்ற பசுங் கொடிகளும், பல்லாயிரக் கணக்கில் மண்டிக் கிடக்கும் புதர்களும், குறுஞ்செடிகளும், காட்டுக்குள்ளேயே அமைந்திருக்கின்ற சின்னஞ்சிறு புல்வெளிகளும் காடு என்னும் இலக்கணத்திற்கு அணி சேர்ப்பவை !

மனிதனின் வாழ்விடம் மருதமும், நெய்தலும் என்றால் விலங்குகளின் வாழ்விடம் முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும்  ஆகும். விலங்குகளுக்குத் தேவையான உணவும், பாதுகாப்பும் இங்குதான் அவைகளுக்குக் கிடைக்கின்றன. கொன்றுண்ணிகளாக (CORNIVORUS) இருந்தாலும் சரி, பயிருண்ணிகளாக (HERBIVORUS) இருந்தாலும் சரி அவை வாழ்வதற்கேற்ற சூழல் காடுகளிலும் மலைகளிலும் தான் அமைந்திருக்கின்றன !

அரிமா (சிங்கம்), வரிமா (புலி), உளிமா (கரடி), கயமா (யானை), கடமா (காட்டுப்பசு), கான்மா (காட்டுப்பன்றி), முண்மா (முள்ளம்பன்றி), மைம்மா (காட்டெருமை), நரிமா (காட்டுநரி), பரிமா (காட்டுக் குதிரை) போன்ற விலங்குகளும் பறவைகளும், புழு பூச்சிகளும் வாழ்வதற்காகப் படைக்கப் பட்டவை காடுகள் ! இயற்கையின் படைப்பின் படி மனிதன் தன்னை மருதம், நெய்தல் நிலங்களுடன் கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும் ! முல்லை நிலத்திற்குள் நுழைய மனிதனுக்கு உரிமை இல்லை !

மழைப் பொழிவுக்கு மலைகளும் மலை சார்ந்த இடங்களும் எத்துணை அளவுக்கு உதவுகின்றனவோ, அத்துணை அளவுக்குக் காடுகளும் காடு சார்ந்த இடங்களும் உதவுகின்றன. காடுகளின் குளிர்ந்த சூழல், சூல்கொண்ட மேகங்களைக் குளிர்வித்து மழைப் பொழிவைத் தூண்டி மழையை வருவிக்கிறது ! எந்த நாட்டில் கானகப் பரப்பு மிகுதியோ அங்கு மழைப் பொழிவும் மிகுதி என்பது மறுக்க முடியாத உண்மை !

பகலில் சூரியக் கதிர்களின் உதவி கொண்டு கானக நிலத்திணைகள் (தாவரங்கள்) தமது இலைகளின் மூலம் தமக்கு வேண்டிய உணவை உருவாக்குகையில், காற்று மண்டலத்தில் உள்ள கரிம வளியை (CARBON DIOXIDE) உள்ளிழுத்துக் கொண்டு உயிர் வளியை (OXYGEN) வெளியேற்றுகின்றன. மனிதனும், விலங்குகளும், புழு பூச்சிகளும் உயிர் வாழ்வதற்குத் தேவையான உயிர்வளியை (OXYGEN) முல்லை நிலம் தான் உருவாக்கித் தருகிறது !

ஆனால் தன்முனைப்பின் உச்சியில் நின்று கொண்டு தறிகெட்டு அலையும் மனிதனுக்கு இந்த உண்மைகள் தெரிந்தும், பேராசை மற்றும் தன்னல உணர்வின் முனைப்புக் காரணமாகக் காடுகளையும் காடு சார்ந்த பகுதிகளையும் கட்டுப்பாடின்றி அழித்துக் கொண்டிருக்கிறான் !

குடியிருப்புகளை அமைத்துக் கொள்ளக் காடும் சார்ந்த நிலங்களும் அழிக்கப்படுகின்றன. அறைகலன்கள் (FURNITURES)  உருவாக்கம்,  கட்டுமானத் தேவைகள் (CONSTRUCTION NEEDS), சாலைகள் அமைத்தல், மின் தடங்கள் அமைத்தல், சுற்றுலாத் தலங்கள் உருவாக்கம், அணைகள் கட்டுதல், வேளாண் பண்ணைகள் அமைத்தல் மற்றும் இன்ன பிற பயன்பாடுகளுக்காகக்  கானகங்கள் (FORESTS) பெருவாரியாக அழிக்கப்படுகின்றன !

மனிதனின் தன்முனைப்பின் வெளிப்பாடே கானக அழிப்பு. இருக்கின்ற கானகப் பரப்பு ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது. இதன் விளைவாக மழைப் பொழிவும் குறைகிறது. மழைப் பொழிவுக் குறைகையில் கானக நீர்நிலைகள் நிரம்புவதில்லை. சலசலக்கும் நீரோடைகள் விரைந்து வற்றிப் போகின்றன !

நீர்ப் பற்றாக் குறையால், காடுகளில் நிலத்திணை (தாவரங்கள்) வளர்ச்சி குன்றிப் போகிறது. கோடைக் காலங்களில் கானகத்தில் வளர்ந்துள்ள புல் பூண்டுகளும் புதர்களும் கருகிப் போகின்றன. மலைவாழ் நிலத் திணைகளும் இதே இடையூறுகளைச் சந்திக்கின்றன !

பேராசை பிடித்த மாந்தன் காடுகளுக்குத் தீ வைத்து  மரக்கரியைத் திரட்டி சந்தைகளுக்கு விற்பனைக்குக் கொண்டு வருகிறான்.  இயற்கைத் தீ, செயற்கைத் தீ இரண்டினாலும் காடுகள் அழிந்து கொண்டிருக்கின்றன. கோடைக்காலத்தில் புதர்களின் அழிவினாலும், நீர்நிலைகள் வற்றிப் போவதாலும், யானை, சிறுத்தை காட்டெருமை, மான்  போன்ற  விலங்குகள் உணவையும் குடிநீரையும் தேடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன !

ஊருக்குள் இத்தகைய வன விலங்குகளின் வருகையால்,  வேளாண் பெருமக்கள் பயிரிட்டுள்ள வாழை, தென்னை, கரும்பு, சோளம் போன்ற பயிர்கள் பெருமளவில் அழிவை எதிர்கொள்கின்றன. மனிதனுக்குரிய இருப்பிடமான மருத நிலத்தை விட்டு, முல்லை நிலத்துக்குள் அவன் ஊருறுவும் போது, விலங்குகள் என்ன செய்யும் ? காட்டுக்குள் உணவும் குடிநீரும் இல்லாமற் போகும்போது, அவை ஊருக்குள் வருவதில் வியப்பில்லையே !

சிங்கம், புலி, சிறுத்தை போன்ற கொன்றுண்ணிகளுக்கு உணவாகும் மான், முயல், காட்டுப் பன்றி போன்ற விலங்குகளையும் பறவைகளையும் மனிதன் வேட்டையாடித் தனக்கு உணவாக்கிக் கொண்டால், கொன்றுண்ணிகள் உணவுக்கு எங்கே போகும் ? உணவை நாடி ஊருக்குள் அவை வரத்தானே செய்யும் !

நாட்டில் இயங்கி வரும் மர அறுவை ஆலைகளை எல்லாம் இழுத்து மூடிவிட்டால், காடுகளின் அழிவைப் பெருமளவில் தவிர்க்க முடியும். தனது தேவைகளுக்கான மரப்பொருள்களுக்கு மாற்றாக வேறு ஆதாரங்களை மனிதன் தேடிக் கொள்ள முடியும் !

சுற்றுலா என்ற பெயரில் வனப்பகுதிக்குள் மனிதன் ஊடுறுவுவதை நிறுத்த வேண்டும். முதுமலை போன்ற வனப்பகுதிகளுக்குள் இருக்கும் கட்டடங்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும் !

சுற்றுலா என்ற காரணத்தைச் சொல்லிக் கொண்டு, காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் மனிதன் புகுவதைத் தடை செய்துவிட்டால், அடுத்த பத்தாண்டுகளில் வனப்பகுதி அதன் இழந்த பொலிவை மீண்டும் பெறும். காடுகள் வளர்ச்சி அடையும். மழைப் பொழிவு மிகுதியாகும். வனவிலங்குகள் ஊருக்குள் வருவது நின்று போகும் !

இதற்குத் தேவை அமைச்சர் பதவியில் அமர்வோர் அனைவரும் வல்லுநர்களாக இருக்க வேண்டும். வல்லுநர்கள் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தால் தான் வனவளம் பெருகும்; மழைப் பொழிவு மிகும்; விளைச்சல் பெருகும்; குடிநீர்த் தட்டுப்பாடு நீங்கும்; நாடு செழிக்கும் !

இயற்கை வளங்களை அழிக்கும் அல்லது அதற்குத் துணை போகும்  எந்த மனிதன் கையிலும் ஆட்சி அதிகாரம் இருத்தலாகாது !

--------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, கடகம் (ஆடி),14]
{29-07-2020}
--------------------------------------------------------------------------------------------------------
       தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------








திங்கள், ஜூலை 27, 2020

சிந்தனை செய் மனமே (75) இயற்கை வளங்களை அழிக்காதீர் - குறிஞ்சி நிலம் !

மழைப் பொழிவுக்கான பற்றுக்கோடு மலையும் மலைவாழ் நிலைத் திணைகளுமே  ஆகும்.


கடந்த மாதம் (15-06-2020) மணிப்பூர் உயர் அறமன்றம் முகாமையான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விலங்குகளிடமிருந்து தான் நோய்மிகள் (VIRUS) பரவுகின்றன என்றும், விலங்குகளை காடுகளிலேயே வாழ விடுங்கள் என்றும், காடுகளை அழிக்காதீர்கள் என்றும் பொதுநல வழக்கு ஒன்றின் தீர்ப்பில் உயர் அறமன்றம் தெரிவித்துள்ளது !

இந்த உலகம் நான்கு வகையான நிலப் பரப்புகளைக் கொண்டது. இதைத் தான் பண்டைத் தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று வகைப்படுத்தினர் !

மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி ! காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை ! வயலும் வயல் சார்ந்த இடங்களும் மருதம் ! கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் ! குறிஞ்சியும் முல்லையும் தம் நிலையிலிருந்து (வறட்சி முதலியவற்றால்) திரியும் போது பாலை என்று அழைக்கப்பெற்றது !

மலையும் மலை சார்ந்த இடங்களும் மனிதன் வாழ்வதற்காகப்  படைக்கப் பட்டவை அன்று; மழைப் பொழிவுக்கான பற்றுக்கோடு மலையும் மலைவாழ் நிலத்திணைகளுமே (தாவரங்கள்) ஆகும்.

கடல் போன்ற நீர் நிலைகளில் இருந்து கதிரவனின் வெப்பத்தால் ஆவியாகும் நீர் கார்முகில்களாகத் திரள்கின்றன. இவை காற்றினால் இடம் பெயர்ந்து உலா வருகையில் மலைகளால் தடுக்கப்படுகிறன்றன. மலையில் வளரும் நிலத் திணைகளால் உருவாகும் நளிர்மை (குளிர்ச்சி), மேகக் கூட்டங்களைக் குளிர்வித்து மழையாகப் பொழியச் செய்கிறது !

இந்த நிலவுலகில் தானே வல்லவன் என்னும் தன்முனைப்பால் (ஆணவத்தால்) மனிதன் மலைகளையும் மலை சார்ந்த இடங்களையும் வலிந்து பற்றிக் கொண்டு, அவற்றின் இயற்கை அமைப்பைச் சீர் குலைத்து வருகிறான் !

சுற்றுலா என்பது மனிதன் தன் மனக் களிப்புக்காக உருவாக்கிக் கொண்டுள்ள ஒரு ஏந்து (வசதி). மலையின் உச்சி வரை சென்று, காட்சிகளைக் கண்டு களிப்பதற்காக மலைச் சரிவுகளை உடைத்து சாலை அமைக்கிறான். சாலைகளில் செல்லும் ஊர்திகள் வெளியிடும் நச்சுப் புகையால், மலையில் உலவும் காற்று மாசு பட்டுப் போகிறது  !

ஊர்திகளில் மலை உச்சிக்குச் செல்லும் மனிதன் அங்கே சில நாள்கள் தங்கி வாழ்ந்திட விடுதிகளை (LODGES) அமைக்கிறான். பணம் படைத்த செல்வந்தர்கள் மலையின் இயற்கை வளத்தைச் சீர்குலைத்து ஏராளமான விடுதிகளை அங்கு உருவாக்குகிறார்கள் !

சில மனிதர்கள் அங்கேயே நிலையாக வாழும் பொருட்டு வீடுகளையும் அமைத்துக் கொள்கிறார்கள். மனித இருப்பும் நடமாட்டமும்  மலைகளில் கூடும் போது, உணவகங்கள், கடைகள், பள்ளிக் கூடங்கள், கோயில்கள், விளையாட்டுத் திடல்கள், மருத்துவ மனைகள், மருந்தகங்கள், உடற் பயிற்சிக் கூடங்கள், ஆடை வெளுப்பகங்கள், முடி திருத்தகங்கள், விற்பனைக் கூடங்கள், அரசு அலுவலகங்கள்  என நிறையக் கட்டடங்கள் அங்கே முளைக்கின்றன !

மலைகளில் நெடிதுயர்ந்து வளர்ந்துள்ள உயிர்மரங்கள் வீழ்த்தப்பட்டு, மர அறுவை ஆலைகளுக்கு (SAW MILLS) அனுப்பப் படுகின்றன. அங்கு அவை சட்டங்களாகவும் பலகைகளாகவும் அறுக்கப்பட்டு மனிதத் தேவைக்குப் பயன்படுத்தப் படுகின்றன !

மலைவளர் காடுகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்களும், குளம்பி (COFFEE)த் தோட்டங்களும், ஏலக்காய்த் தோட்டங்களும், மலர்த் தோட்டங்களும் உருவாக்கப் படுகின்றன !

சாலைகள் அமைப்பதற்கும், கட்டடங்கள் கட்டுவதற்கும், விளையாட்டுத் திடல் அமைப்பதற்கும், பணப்பயிர்த் தோட்டங்கள் அமைப்பதற்கும் மலைவளர் காடுகள் அழிக்கப்படுகின்றன. அரியவகை மூலிகைகள் பொசுக்கப்படுகின்றன !

புகையும் தூசும், மனிதன் வெளியிடும் வெப்பக் காற்றும், ஊர்திகளில் வெளியாகும் நச்சுக் காற்றும், மலையின் இயற்கைத்  தன்மையையும் தூய காற்று மண்டலத்தையும் பெரிதும் பாழ்படுத்தி வருகின்றன !

மனிதனது தன்முனைப்பால் (ஆணவத்தால்) மலையும் மலை சார்ந்த இடங்களுமான குறிஞ்சி நிலம் தன் நிலை திரிந்து பாலையாக மாறி வருகிறது. குறிஞ்சி நிலம் எல்லா வகையிலும் குறிஞ்சியாக இருந்தால் தான் மழைப் பொழிவு மிகுதியாக இருக்கும் !

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் நீலமலையில் வாழும் மக்கள் தங்களுக்கு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று கேட்டார்களா ? மலையின் இயற்கைச் சூழ்நிலையை அழித்து விட்டு அங்கு மருத்துவக் கல்லூரியும் அதனுடன் இணைந்த மருத்துவ மனையும் அங்கு உருவாக்குவது அறிவார்ந்த செயலாகுமா ?

இப்படியெல்லாம் வரைமுறை  இல்லாமல் மலை வளத்தை அழித்து, மலைவளர் காடுகளை அழித்து, மலையில் நிலவும் குளிர்மைச் சூழ்நிலையை அழித்து,  கட்டடங்களைக் கட்டிக் கொண்டிருந்தால் மழைப் பொழிவு எப்படி இருக்கும் ? தமிழ் நாட்டில் வேளாண்மை எப்படிச் செழிக்கும் ? மலைவளத்தைக் காக்க வேண்டிய அரசே மலை வளத்தை அழிக்கும் செயல்களில் ஈடுபடுவது முறைதானா ?

குறிஞ்சியின் இயற்கைத் தன்மையை அழித்து விட்டு, மழை பெய்யவில்லை என்று புலம்புவதில் என்ன பொருள் இருக்கிறது ? மழை பெய்ய  வேண்டி  கோயில்களில் வழிபாடு நடத்தி இறைவனை வேண்டிக் கொள்வதில் என்ன ஞாயம் இருக்கிறது ? மழை பெய்வதற்காக வேள்விகள் நடத்துவதில் என்ன அறிவார்ந்த செயல் அடங்கி இருக்கிறது ?  

மனிதனைநாகரிகம் அடைந்த ஒரு விலங்கு” (CIVILIZED BEAST) என்று கூறினார் மேனாட்டு அறிஞர் ஒருவர். ஆனால் விலங்குகளிடம் உள்ள சில நல்ல குணங்கள் கூட மனிதனிடம் இல்லை. எந்த விலங்கும் இயற்கை வளங்களை அழிப்பதில்லை; இந்தநாகரிகம் அடைந்த விலங்குதான் இயற்கை வளங்களை எல்லாம் அழித்துக்கொண்டு தனக்குத் தானே அழிவையும் தேடிக் கொண்டு வருகிறது !

------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, கடகம் (ஆடி),12]
{27-07-2020}
------------------------------------------------------------------------------------------------------
       தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------





சனி, ஜூலை 25, 2020

புதிய தமிழ்ச் சொல் (56) வட்டா & தும்பா (TOWERA & TUMBLER)

புதுச்சொல் புனைவோம் !

வட்டா -  TOWERA .
தும்பா -  TUMBLER.
------------------------------------------------------------------------------------------------------------
எனக்கு அகவை 16 அல்லது 17 இருக்கும். பள்ளி இறுதி வகுப்புப் படிப்பை முடித்துவிட்டு மாமாவின் பலசரக்குக் கடையில் ஈராண்டுகள் உதவிக்கு இருந்தேன். கடைக்குப் பக்கத்தில் ஒரு தேநீர்க் கடை !

காலையில் எழுந்ததும் வேளாண் கூலித் தொழிலாளர்கள் தேநீர் அருந்த அங்கு வருவார்கள். ஐயா ஒரு சாயம் போடுங்கள்” ! அதாவது பால் கலவாத தேநீர் ! சாயம்என்பது வண்ண நீர் அல்லது கலவை தானே ! தமிழில் புழக்கத்தில் உள்ள சாயம் இந்தியில் சாயாஆகிவிட்டது !

இப்படித்தான் பல சொற்களைப் பிறமொழிகளுக்கு விட்டுக்கொடுத்து விட்டு இப்போது அவையெல்லாம் பிறமொழிச் சொற்கள் என்று ஒதுக்கிக் கொண்டிருக்கிறோம் ! எனக்கு அப்போதெல்லாம் மொழியாய்வு செய்யும் சிந்தனை இருந்ததில்லை !

தேநீர்க் கடைக்காரர் வினவுகிறார், “கிளாசில் (GLASS) போடவா” ? “வேணாங்க ! வட்டா செட்டில் போடுங்கள்அதாவது இப்போது சொல்கிறோமே டவராஅதுதான் வட்டா”. டவரா & டம்ளர் தான் வட்டா செட் ! அரசுப் பணிக்கு வந்த பிறகு சொல்லாராய்ச்சியில் மனம் முனைப்பாக ஈடுபட்டிருந்த போது வட்டாஎன்ற சொல்லைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினேன் !

கழகத் தமிழ் அகரமுதலியைப் புரட்டிப் பார்த்தேன். அதில் வட்டகைஎன்னும் சொல்லுக்கு, பிற பொருள்களுடன் சிறு கிண்ணம்”, எனப் பொருள் சொல்லப்பட்டிருந்தது ! வட்டகைஎன்பதிலிருந்து திரிந்த வட்டாஎன்னும் சொல்லுக்கு, “தட்டம்”, “தாம்பாளம்என்றும் வட்டில்என்னும் சொல்லுக்கு உண்கலம்”, “கிண்ணம்என்றும் பொருள் தரப்பட்டிருக்கிறது !

டவரா + டம்ளர்என்பதில் டவராஎன்பது வட்டமாக உள்ள ஒரு குடிகலன் தானே ! அக்காலத்தில் தேநீர் (TEA) அல்லது குளம்பி (COFFEE) டவரா + டம்ளரில் தான் தருவது வழக்கம். இப்போது கோப்பை + குடிதட்டு (CUP & SAUCER) புழக்கத்தில் வந்துவிட்டது !

டவராஎன்னும் சொல்லை எருதந்துறை அகரமுதலியில் (OXFORD DICTIONARY) தேடினேன்; கிடைக்கவில்லை; உருது, அரபி அல்லது ஆங்கிலம் அல்லாத பிறமொழிச் சொல் போலும் !டவராஎன்பதைத் தான் சீறூர்களில் (கிராமங்களில்) வட்டாஎன்று சொல்கிறார்கள் !

[
சிறுமை + ஊர் = சிற்றூர் (அ) சீறூர்.பருவ வானத்துப் பா மழை கடுப்ப, கரு வை வேய்ந்த கவின் குடிச் சீறூர் என்பது பெரும்பாணாற்றுப்படை வரிகள் 190,191. சீறூர் = VILLAGE = கிராமம். கிராமம் என்பது தமிழ்ச் சொல் அன்று ! ]

திருமண அரங்கங்களில் சமையற்கூடம் பக்கம் போயிருக்கிறீர்களா ? கூட்டு, கறி ஆகியவற்றைச் செய்வதற்கு, அடிப்பக்கம் தட்டையாகவும், வடிவத்தில் வட்டமாகவும் இருக்கும் பெரிய கலன்களைச் சமையற் கலைஞர்கள் பயன்படுத்துவார்கள். இந்தக் கலன்களை அவர்கள் வட்டாஎன்று சொல்வதைக் காணலாம். இந்த வட்டாவின் சிற்றுரு ( MINIATURE SIZE ) தான் நாம் குளம்பி அல்லது தேநீர் அருந்துவதற்கு வீடுகளில் பயன்படுத்தும் டவரா” !

சீறூர்களில், தந்தை தன் மகளிடம் வட்டாவையில் கொஞ்சம் எண்ணெய் கொண்டு வா !என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம். இங்கு சிறு கிண்ணம் என்னும் பொருளில் வட்டகை” (வட்டாவை) என்னும் சொல் எடுத்தாளப் படுகிறது !

வட்டாஎன்பதன் முன் வடிவம் வட்டகை”. வட்டகையில் இருந்து திரிந்த சொல் தான் வட்டா”. இனி நாம் டவராஎன்று சொல்வதை விடுத்து வட்டாஎன்று சொல்லிப் பழகுவோமே !

அடுத்து டம்ளர்என்னும் சொல்லைப் பார்ப்போம் ! டம்ளர்என்பது ஒரு குடிகலன் ! தமிழில் துல்என்னும் வேர் வளைதற் கருத்தை உணர்த்துவது. துல்  துள்  -  துண்பு  -  தும்பு = உட்டுளை, துளையுள்ள உறுப்பு, உறிஞ்சி !

துல் - துள் - துண்பு - தும்பு - தும்பா = (1) குடிகல வகை (2) குடுக்கைக் கலம் (3) உட்டுளையுள்ள சுரைக் குடுக்கை (பக்.281.பாவாணரின் வேர்ச் சொற் கட்டுரைகள்).

தும்பா = குடிகல வகை ! தும்பாஎன்னும் தமிழ்ச் சொல் தான் ஆங்கிலத்தில் டம்(ப்)ளர்” (TUMBLER) ஆகியிருக்கிறது. தும்பாவை மறந்து விட்டு நாம் டம்ளர்என்பதைப் பிடித்துக் கொண்டோம் ! எனவே இனி டம்ளர்என்று சொல்லாமல் தும்பாஎன்று சொல்லிப் பழகுவோமே !

நண்பர்கள் வீட்டிற்குச் செல்கையில் ஒரு டம்ளர்தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று கேளாமல் ஒரு தும்பாதண்ணீர் கொண்டு வாருங்கள்என்று கேட்போம் !

பொதுவாக, தமிழர்கள் ஆங்கிலத்தில் எதைச் சொன்னாலும் மறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்வார்கள். தமிழில் கட்டுமரம் என்பதை ஆங்கிலத்தில் CATAMARAN என்கிறார்கள். தமிழ்ச் சொல்லின் பலுக்கல்படி KATTUMARAM என்று தானே சொல்ல வேண்டும். CATAMARAN என்பது சரியன்று என்று எந்தத் தமிழரும் வாதிடுவதில்லை !

புகை பிடிக்கப் பயன்படும் சுருட்டுஆங்கிலத்தில் “CHEROOT” ஆகியிருக்கிறது. “SURUTTU” என்று சொல்லாமல் “CHEROOT” என்று ஏன் சொல்கிறாய் என்று எந்தத் தமிழனும் ஆங்கிலேயர்களைப் பார்த்துக் கேட்பதில்லை !

ஆனால் தமிழில் புதிதாக எந்தவொரு சொல்லை அறிமுகப் படுத்தினாலும் அதை ஏற்காமல் ஆயிரம் குறை சொல்லுவார்கள். குறை சொல்கிறார்களே என்பதற்காக நாம் புதிய சொற்களை அறிமுகப் படுத்தாவிட்டால் தமிழில் சொல் வளம் எப்படிப் பெருகும் ? என்னும் எத்துணைக் காலத்திற்கு டவரா, டம்ளர்என்றே சொல்லிக் கொண்டிருப்பது ?

நறுமணத்துடன் குளம்பி (COFFEE) அருந்துவது போல் புது மெருகுடன் தமிழ்ச் சொற்களைப் புழக்கத்திற்குக் கொண்டு வருவோம் !

==============================================================

                                 TOWERA..........................= வட்டா
                                 TUMBLER.........................= தும்பா
                                 TOWERA  + TUMBLER....= வட்டா + தும்பா
                                 TOWERA SET...................= வட்டாக் கணம்
                                  GLASS TUMBLER...........= கண்ணாடித் தும்பா
                                  PLASTIC TUMBLER........= ஞெகிழித் தும்பா
                                  SILVER TUMBER.............= வெள்ளித் தும்பா


==============================================================

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, கடகம் (ஆடி),10]
{25-07-2020}
==============================================================
             தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
==============================================================



வட்டா & தும்பா