name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 01/09/20

வியாழன், ஜனவரி 09, 2020

தமிழ் (27) மங்கிவரும் தமிழுணர்வு ! (03)

 இஃதென்ன வெட்கக் கேடான செயல் !



நாம் வாழும் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு; நமது ஆட்சி மொழி தமிழ்; ஆனால் அனைத்து அதிகாரிகளின் பெயரும் அவர்களது அலுவலகங்களின் பெயரும் ஆங்கிலத்தில் வைக்கப்பெற்று பின்னர் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்படுகிறது ! இஃதென்ன வெட்கக் கேடான செயல் !

நமது தாய்மொழி தமிழ்; நமது  இல்லத்தில் புழங்குவது  தமிழ்; ஆனால் நாம் எழுத்திலும் பேச்சிலும் இடையறாது பயன்படுத்துவது ஆங்கிலம் ! என்ன இழிவான துன்பியல் முரண்பாடு !

நாம் ஏன் தமிழுணர்வு இல்லாத பொட்டுப் பூச்சிகளாய்ப் புன்மைத் தேரைகளாய் வாழ்கிறோம் ? தாயை எவனாவது  பழித்துவிட்டால் அவன்  தலையைக்  கொய்திடத் துடிக்கிறோம்; ஆனால் தாய்மொழியாம் தமிழைச் சீரழிக்கின்ற திரைத்துறை, தொலைக்காட்சி ஊடகத் துறை, செய்தித் தாள் துறையினருக்கு விழா எடுத்து விருதுகள் வழங்கிப் புளகாங்கிதம் அடைகிறோம் ! இஃதென்ன நேர்மையற்ற பண்பாடு !

நம் தன்மான உணர்வு எங்கே போயிற்று ? தெருவில் கொட்டிக் கிடக்கும் குப்பை கூளங்களாக ஏன் இழிந்து போனோம் ? நம் நிலை தாழ்ந்து போனதற்குக் காரணம் என்ன ? அல்லது யார் காரணம் ? எப்போதாவது சிந்தித்து நம்மைச் சீர்திருத்திக் கொள்ள முயன்று இருக்கிறோமா ?

அரசின் கல்வித் திட்டமானது, இளநிலை அகவையினரையும் இடைநிலை அகவையினரையும் தாய்மொழியின் பால் ஆர்வம் இல்லாத அல்லுயிர்ப் பொருள்களாக (ஜடம்)  ஆக்கிவருகிறது  ! தாய்மொழிப் பற்றும் பெருமித உணர்வும் இல்லாத பீழைபிடித்த உருட்டுக் கற்களாக  உருவாக்கி வருகிறது !

தாய்ப்பால் எப்படி ஒரு குழந்தையை வலுவுள்ளதாக உருவாக்குகிறதோ, அதுபோன்றே தாய்மொழிக் கல்வியும் இளஞ் சிறார்களை, சிந்தனைத் திறன் மிக்க செம்மல்களாக உருவாக்குகிறது என்னும் அடிப்படை கூடத் தெரியாத அதிகாரிகளிடமும் ஆட்சியாளர்களிடம் கல்வித் துறை சிக்கிக் கொண்டுச்  சீரழிந்து வருகிறது !

தமிழ்நாடு என்று பெயர் வைத்துக் கொண்டு, தமிழ் தான் நமது ஆட்சி மொழி என்று சட்டம் இயற்றிக் கொண்டு , ஆங்கில வழிக் கல்வி அளிக்கும் பள்ளிகளைத் திறக்க இசைவளித்து ஆணை வழங்குதல் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது ! பண்பாட்டுக்குப் புறம்பானது !

ஆங்கிலவழிக் கல்வி அளிக்கும் பதின்மப் பள்ளிகளையும், நடுவணரசின் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத் திட்டப் பள்ளிகளையும் திறந்து நடத்தும் கல்வி வணிகர்களின் செயல் அதுவும் தமிழன் என்று கூறிக் கொண்டு நடமாடிவரும் பேராசைக்காரர்களின் பித்துக்கொளிச் செயல் - பெற்ற தாயைக் கொலை செய்வதற்கு ஒப்பானது !

ஏனிந்த சூழ்நிலை நிலவுகிறது ? தமிழர்களே தமிழ் வழிக் கல்விக்கு எதிராகச் செயல்படுவது ஏன் ? அரசும் அமைச்சர்களும் ஆங்கிலவழிக் கல்விக்கு உறுதுணையாகச் செயல்படுவது ஏன் ? அனைத்து வினாக்களுக்கும் விடை ஒன்று தான் ! தமிழர்களிடையே தமிழுணர்வு மங்கிப் போய்விட்டது ! தமிழைப் பற்றிய அக்கறை செத்துப் போய்விட்டது ! இந்நிலை எப்போது மாறும் ? எப்படி மாறும் ? இதற்கு என்ன செய்ய வேண்டும் ?

கலைக் கல்லூரிகளில் படிப்பவர்களில் பெரும்பான்மையோர், தமிழக அரசுப் பணியிலோ, தமிழக அரசின் ஆளுமையின் கீழ்ச் செயல்படும் மின்வாரியம், போக்கு வரத்துத் கழகம், நுகர் பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு அமைப்புகள், மாநகராட்சி, நகராட்சி, பல்கலைக் கழகங்கள் போன்ற அமைப்புகளிலோ பணியில் அமர விரும்புபவர்கள். எஞ்சியோர் சொந்தத் தொழில் தொடங்கி  நடத்த விரும்புபவர்கள். இவர்களுக்குத் தமிழும் ஆங்கிலமும் மட்டும் தெரிந்தால் போதுமானது !

கணித ஆசிரியராக வருகின்ற  வாய்ப்பு சில ஆயிரம் பேருக்கு மட்டுமே  இருக்கையில் நூறாயிரக் கணக்கான மாணவர்களுக்கு (a + b) (a – b) = ? என்று கணிதப் பாடத்தை வலுக் கட்டாயமாகத் திணிப்பது  தவறான கொள்கையல்லவா  ?

சில ஆயிரம் பேர் மட்டுமே வேதியியல் அல்லது இயற்பியல் அல்லது பயிரியல் அல்லது விலங்கியல் ஆசிரியராக அமர்வு பெற முடியும் என்ற நிலையில், நூறாயிரக் கணக்கான  மாணவர்களை வேதியியலும், இயற்பியலும், பயிரியலும், விலங்கியலும் படிக்கச் சொல்லி வல்லுணர்வுடன் திணிப்பது அறிவுடைமை ஆகுமா ?

கணிதவியல், இயற்பியல், வேதியியல், வணிகவியல், உளவியல், அளவையியல், என்று என்னென்னவோ பாடங்களை எல்லாம் திணித்து, தமிழ் படிக்கும் பாட வேளைகளைக் குறைத்துவிட்ட தமிழக  அரசின் கல்விக் கொள்கையே, தமிழ் வளர்ச்சிக்குப் பெருங் கேடாக அமைந்துவிட்டது !  போதுமான அளவுக்கு முனைப்பாகவும், ஆழமாகவும், உள்வாங்கியும்  தமிழ் படிக்காததால், தமிழ் மீது பற்றும் குறைந்துவிட்டது; தமிழ் உணர்வும் அருகிப் போய்விட்டது !

மக்களிடையே தமிழ் உணர்வை ஊட்டி, தமிழ்ப் பற்றை  ஊதிப் பெருக்க வேண்டுமென்றால், இப்போதுள்ள கல்விக் கொள்கையை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும். தமிழும் ஆங்கிலமும் மட்டுமே 70 % மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். எஞ்சிய 30 மாணவர்கள் தாம் விரும்பும் பிற பாடங்களில் ஏதாவதொன்றை எடுத்துப் படிக்க வாய்ப்பளிக்க வேண்டும் !

ஒரு அரசு அலுவலகத்தில் பணி புரியத் தமிழும் ஆங்கிலமும் போதாதா ? ஒரு மாநகராட்சியில் பணிபுரிய இயற்பியலும், வேதியியலும், உளவியலும் தேவைதானா ?

ஆகவே, சில முதன்மையான சீர்திருத்தங்களை  தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழும் வளர்ச்சி பெறும்; தமிழுணர்வும் எழுச்சி பெறும். இதன் தொடர்பாகச் சில கருத்துருக்களை முன் வைக்கிறேன். அவை வருமாறு :-

(01) அரசுக் கலைக் கல்லூரிகளில் 75 % கல்லூரிகளைத் தமிழை முதன்மைப் பாடமாகவும், ஆங்கிலத்தைத் துணைப்பாடமாகவும் கற்றுத் தரும் வகையில் தமிழ்க் கல்லூரிகளாக மாற்ற வேண்டும். இக்கல்லூரிப் பாடத் திட்டத்தில் வேறு பாடப்பிரிவுகள் எதுவும் இருக்கலாகாது !

(02) தமிழை மட்டுமே சொல்லித் தரும்செந்தமிழ்க் கல்லூரிகள்  ஒவ்வொரு மாவட்டத்திலும்  மாவட்டத்திற்கு ஐந்து வீதம் அரசின் சார்பில் தொடங்கப்பட வேண்டும். இங்கு ஐந்து ஆண்டுகள் படித்துபுலவர்பட்டம் பெறுபவர் மட்டுமே பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியமர்த்தம் செய்யப்பட வேண்டும் !

(03) அரசின்செந்தமிழ்க் கல்லூரிகளில் ஐந்து ஆண்டு புலவர் பட்டப் படிப்புடன் மேலும் மூன்று ஆண்டுகள் படித்துபேராசிரியர்பட்டம் பெற்றவர் மட்டுமே கல்லூரிகளில் பேராசிரியர்களாக அமர்வு செய்யப்பட வேண்டும் !

(04) அரசின்செந்தமிழ்க் கல்லூரியில் படித்துப் பேராசிரியர் பட்டம் பெறுவதுடன், தமிழ் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்து செய்தித் தாளில் தொடர் கட்டுரை வெளியிட  வேண்டும். இதற்காக அரசு தனியாக ஒரு செய்தித் தாள் வெளியிட வேண்டும்.  அத்துடன் தமிழ் மரபுக்கேற்ப  100 புதிய சொற்களையும் புனைந்து  25 கல்வியாளர்கள் சூழ்ந்த திறந்த வெளி அரங்கில் அரங்கேற்றம் செய்ய வேண்டும். அவர்களது வினாக்களுக்கு விடையளித்துத் தேர்ச்சியும் பெறவேண்டும். இவர்களுக்கு மட்டுமே முனைவர் பட்டம் அளித்து பல்கலைக் கழகங்களில் தமிழ்ப் பேராசிரியர்களாகப் பனியமர்த்தம் செய்ய வேண்டும் !

(05) அரசின் தமிழ்க் கல்லூரி அல்லது செந்தமிழ்க் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர் மட்டுமே அரசு அலுவலகங்களில் பணி அமர்வு செய்யப்பட வேண்டும் !

(06) அனைத்துப் பாடங்களையும் ஆங்கில வழியில் சொல்லித் தரும் பதின்மப் பள்ளிகள் உள்பட எந்தப் பள்ளியாயினும் அவை தடை செய்யப் பெற வேண்டும்.

(07) விளம்பரப் பலகைகளில் பிறமொழிக் கலப்பற்ற தமிழ்ச் சொற்கள் மட்டுமே இருத்தல் வேண்டும் !

(08) தமிழ் நாட்டரசின் ஆட்சி மொழியாகத் தமிழ் அறிவிக்கப் பெற்றிருப்பதால், தமிழைச் சீரழிக்கும் வகையில் எழுதுதல் ஒறுப்புக் குரிய குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும் !

(09) திரைப்படத் துறை, தொலைக்காட்சித் துறை ஆகியவற்றின் படைப்புகள்  தமிழறிஞர்களைக் கொண்ட தணிக்கைக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சான்று வழங்கும் நிலை வரவேண்டும் !

(10) வடமொழி வளர்ப்புக்காகவே உருவான கணியம் (சோதிடம்) தடை செய்யப்பட வேண்டும்.

(11) திருக்கோயில்கள் தமிழ்ப் புலவர்கள் ஐவர் அடங்கிய குழுவின் ஆளுகைக்கு உட்படுத்தப்படவேண்டும் !

இத்தகைய சீர்திருத்தங்களைத் தமிழக அரசு மேற்கொண்டால், தமிழ் நாட்டில் தமிழ் வளர்ச்சி மேலோங்கும்; மக்களிடையே தமிழுணர்வும் தழைத்தோங்கும்; தமிழ் தான் தமிழ் நாட்டரசின் ஆட்சி மொழி என்பதற்கு முழுமையான மதிப்பும் அப்போது தான் கிடைக்கும் !
-
---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2050, சிலை (மார்கழி),21]
{06-01-2020}

-----------------------------------------------------------------------------------------------------------
              
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------




தமிழ் (26) மங்கிவரும் தமிழுணர்வு (02)

தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களிடம் ஆழ்ந்த தமிழறிவும்  இல்லை;   அப்பழுக்கற்ற  தமிழுணர்வும் இல்லை !



தாய் மீது எத்துணைப் பற்று வைத்து இருக்கிறோமோ, அதற்குச் சற்றும் குறையாத அளவிற்குத் தாய்மொழி மீதும் பற்று இருத்தல் வேண்டும். ஏன் அப்படி ? பெற்ற தாய் நமக்கு உருக்கொடுத்து, உயிரூட்டி இவ்வுலகில் உலவச் செய்தவள். தாய் இல்லையேல் நாம் இந்த உலகில் பிறந்திருக்கவே முடியாது !

தாய்மொழி, இந்த உலகத்தை நமக்கு அடையாளம் காட்டிய ஒளிவிளக்கு; நமது அறிவுக் கண்களைத் திறந்து வைத்த ஊடகம்.  நாம் விலங்குகளாக வாழாமல் அறிவை ஊட்டி வளர்த்து  அறிவுடைய மனிதனாக நம்மை உயர்த்தி இருப்பது தாய்மொழி !

தாயையும், தமிழையும் மதிக்காதவன் தமிழனாக இருக்க முடியாது ! அத்தகையவன் விலங்கினும் கீழ்மையான ஈனப் பிறவி ! தாயை போற்றாத இழிபிறவிகளையும் காண்கிறோம்; தமிழை மதிக்காத ஈனப் பிறவிகளையும் காணமுடிகிறது ! ஏன் இந்த நிலை ?

நூறாண்டுகளுக்கு முன்பு திண்ணைப் பள்ளிகள் மட்டுமே இருந்தன. ஒரேயொரு ஆசிரியர், ஐந்தாறு மாணவர்களுக்குத் தமிழையும் கணிதத்தையும்  சொல்லிக் கொடுப்பார். அப்போது தமிழை ஆழமாகக் கற்றுத் தந்தனர். தமிழைக் கற்றுத் தந்ததுடன் தமிழ் உணர்வையும் சேர்த்து மாணவர்களுக்கு ஊட்டி வந்தனர் ! திண்ணைப் பள்ளிகளில் படித்த பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள், போன்றோர் தமிழ் உணர்வாளர்களாக இருத்தமைக்கு இதுவே காரணம் !

திண்ணைப் பள்ளிகள் மெல்ல மெல்ல மறைந்து தொடக்கப் பள்ளிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றின. இங்கும் தமிழ் செப்பமுறக் கற்பிக்கப்பட்டது. ஆங்கிலம், வரலாறு, புவியியல், பயிரியல், விலங்கியல் என்று பாடத் திட்டம் விரிவாகாதக் காலம்; தமிழ்ப் பாடங்களுடன், தமிழில் பலுக்குதலும் (உச்சரித்தல்) முறையாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டன !

தொடக்கப் பள்ளிகளும், உயர்நிலைப் பள்ளிகளும் பல்கிப் பெருகிய அதே நேரத்தில், செந்தமிழ்க் கல்லூரிகளும் தோன்றி தமிழை முனைப்பாகக் கற்றுத் தரத் தொடங்கின. சைவத் திருப்பணி மடங்களும் தமிழ்க் கல்லூரிகளைத் தொடங்கி, தமிழில் புலவர் பட்ட வகுப்புகளை நடத்த முனைந்தன !

இவ்வகையில், தருமபுரம் திருமடம், திருவாவடுதுறைத் திருமடம், திருப்பனந்தாள் திருமடம், பேரூர் திருமடம், போன்றவை தமிழ்க் கல்லூரிகளைத் தொடங்கி, மாணாக்கர்களைத் தமிழில் வல்லமை மிக்க புலவர்களாக உருவாக்கின. திருவையாறில் அரசர் கல்லூரியும், தஞ்சாவூர், கரந்தையில் தமிழ்ச் சங்கக் கல்லூரியும், தமிழ்ப் புலவர் பட்ட வகுப்புகளைத் தொடங்கி நடத்தின !

மதுரைத் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளும் மாணாக்கர்களுக்குத் தமிழறிவைப் புகட்டுவதில் முன்னணியின் இருந்துவந்தன. தமிழ் நாடெங்கும் பல தனியார் அமைப்புகளும் செந்தமிழ்க் கல்லூரிகளை நடத்திவரலாயினர் ! இத்தகைய தமிழ்க் கல்லூரிகளில் பயின்ற மாணாக்கர்கள், உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ்  ஆசிரியர்களாகப் பணியில் அமர்ந்து, தமது மாணவர்களுக்குத் தமிழைத் துளக்கமறக் கற்றுத் தந்ததுடன், தமிழில் ஆர்வத்தையும், உணர்வையும் ஊட்டி வந்தனர் !

கி.பி.1940 முதல் 1970 வரைத் தமிழகத்தில் தமிழுணர்வு உச்சநிலையில் ஒளிவிட்டு இலங்கியமைக்குக் காரணம் தமிழ்க் கல்லூரிகளும், அங்கு பயின்றுவித்வான்”, ”புலவர்  பட்டம் பெற்று ஆசிரியர்களாக அமர்வு பெற்ற தமிழாசிரியர்களுமே என்றால் அது மிகையாகாது !

பின்னர், சைவத் திருமடங்கள் தன் கருத்தைத் தமிழை விட்டு முற்றிலுமாக விலக்கி ஆரியத்திற்கு அடிமைப்பட்டு, முழுக்க முழுக்கத் திருக்கோயில்கள் பக்கம் திருப்பலாயினர். இதன் விளைவாக தமிழ்க் கல்லூரிகளை மூடினர் அல்லது வருமானம் ஈட்டும் வகையில் கலைக் கல்லூரிகளாக மாற்றினர். செந்தமிழ்க் கல்லூரிகளை நடத்தி வந்த பிற அமைப்புகளும், தனியாரும் அக்கல்லூரிகளைக் கலைக் கல்லூரிகளாக மாற்றத் தொடங்கினர் !

கலைக் கல்லூரிகளில் தமிழ் ஆழமாகக் கற்றுத் தருவது நீர்த்துப் போயிற்று. தமிழுடன் தேவையற்ற பிற பாடங்களையும் பாடத் திட்டத்தில் சேர்த்து, தமிழில் புலமை பெறும் வாய்ப்பினைத் துப்புரவாக  அடைத்துவிட்டனர்.  கலைக் கல்லூரிகளில் தமிழ் படித்துப் பட்டம் பெற்று வெளியில் வருவோர் போதிய தமிழறிவு இல்லாதவர்களாகவும், தமிழுணர்வு அற்றவர்களாகவுமே இருந்தனர்; இருக்கின்றனர் !

இதற்கு அடுத்ததாக,  பள்ளி இறுதி வகுப்பு முடித்து, இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து (SECONDARY GRADE TEACHER) அஞ்சல் வழியில் கலையியல் வாலை (B.A), இலக்கிய வாலை (B.Lit), கலையியல் மேதை (M.A) போன்ற பட்டங்களைப் பெற்றுத் தமிழாசிரியராகப் பணி மாற்றம் அடைந்து  பாடம் சொல்லிக் கொடுக்கும் நிலை உருவாகியது !

அஞ்சல் வழிக் கல்வியின் தரம் அகழிக்குள் (அதல பாதாளத்தில்) வீழ்ந்து கிடக்கையில், பணிமாற்றம் பெற்றுத் தமிழ் சொல்லிக் கொடுக்கும் தமிழாசிரியர்களிடம் தரத்தை எப்படி எதிர்பார்க்க முடியும் ? அவர்களிடம் தமிழுணர்வு பொங்கி வழிந்திடுமா என்ன ? 

கலையியல் மேதை (M.A), மெய்யியல் மேதை (M.Phil) போன்ற பட்டங்களை எப்படியோ பெற்று, யாரோ எழுதிக் கொடுக்கும் ஆய்வுக் கட்டுரையைத் (THESIS) தன்னுடையதாக்கிக் காட்டி, பெயரளவுக்கு நடக்கும் வாய்மொழித் தேர்விலும் எளிதாகத் தடை கடந்து முனைவர் பட்டம் (Ph.D) பெறும் ஒருவர், கல்லூரியில் பயிற்றுவிப்புப் பணியை ஏற்கும் நிலை நிலவுகையில், அவரிடம் ஆழ்ந்த தமிழ்ப் புலமையையோ, தமிழுணர்வையோ எப்படி எதிர்பார்க்க முடியும் ?

தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களிடம் ஆழ்ந்த தமிழறிவும் இல்லை; அப்பழுக்கற்ற தமிழுணர்வும் இல்லை. பணியில் சேர்ந்த பிறகாவது தமது ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் உந்துதலும் கிடையாது., அவர்களிடம் பயிலும் மாணாக்கர்களிடம் மட்டும் அவை இருந்துவிடுமா என்ன ?

கடந்த சில பத்தாண்டுகளாக (FEW DECADES) தமிழகத்தில் தமிழின் நிலையில் சீரழிவு ஏற்பட்டமைக்கும், பெரும்பாலான இளநிலை, இடைநிலை அகவையினரிடம் தமிழுணர்வு அற்றுப் போனமைக்கும், காரணம் தமிழ் கற்பிக்கும் பணியை முனைப்பாகவும் முறையாகவும் திறம்படவும் செய்யாத தமிழாசிரியர்களும், தமிழ்ப் பேராசிரியர்களுமே என்பதில் எள்ளளவும்  ஐயமில்லை !

யாரையும் குற்றம் குறை சொல்வதற்காக, இக்கட்டுரை வடிக்கப் பெறவில்லை ! தமிழர்களாகிய நாமே தமிழின் சீரழிவுக்குக் காரணமாக இருக்கிறோமே என்னும் மனத் துன்பத்தின் வெளிப்பாடாக இதைக் கருதுங்கள் !


-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2050, சிலை (மார்கழி),20]
{05-01-2020}

----------------------------------------------------------------------------------------------------------
     
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------

தமிழ் (25) தமிழில் உரையாடுதல் தமிழர்களின் கடமை !

அன்னைத் தமிழிருக்க அயல்மொழி நமக்கெதற்கு ?


எழிலரசி: மலர் ! வா ! வா ! நலமாக இருக்கிறாயா ? கடைத் தெருவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன் .என்னுடன் வருகிறாயா ? ஒருதுயிலி” (NIGHTY) வாங்கி வர வேண்டும் ! எனதுபேடுருளியிலேயே (MPOED) சென்று வரலாம் !

மலர்மதி: சரி எழிலரசி ! வருகிறேன் ! ”பேடுருளிஎதற்கு? எனது பாவையூர்தியில் (SCOOTY) சென்று வரலாமே ?

எழிலரசி: சரி ! அப்படியே செய்வோம் ! வண்டிக்குக் காப்புறுதிச் சான்று (INSURANCE CERTIFICATE) கைவயம் வைத்திருக்கிறாயா ? நீ உகையுரிமம் (DRIVING LICENCE) வைத்திருக்கிறாயா ?

மலர்மதி: இரண்டுமே இருக்கின்றன ! கவலைப் படாதே ! தலைச் சீரா (HELMET) மட்டும் உங்கள் வீட்டிலிருந்து இரண்டு எடுத்துக் கொள் !

எழிலரசியின் அப்பா: எழில் ! திரும்பி வரும்போது கபிலர் தெருவுக்குச் சென்று தாங்குதளம் கட்டுநரைப் (CENTERING FITTER) பார்த்து, நாளை வந்து என்னைப் பார்க்கச் சொல் !

எழிலரசி: சரி அப்பா ! நாங்கள் சென்று வருகிறோம் !

மலர்மதி: எழில் ! உன் தந்தை தாங்கு தளம் கட்டுநர் என்றாரே  ! அப்படியென்றால் யார் அவர் ?

எழிலரசி: மலர் ! புதிதாக  வீடு கட்டும் போது, கற்காரைக் கலவையைக் கொட்டிக் கூரை அமைப்பதற்கு வாய்ப்பாகப் பலகைகளையும், முட்டுக் கம்புகளையும் கொண்டு கிடைமட்டத் தளம் அமைக்கிறாரே அவர் தான் தாங்குதளக் கட்டுநர் (CENTERING FITTER). ஆங்கிலத்தில் CENTERING என்றால் தமிழில் தாங்குதளம் என்று பொருள் !

மலர்மதி: நல்ல தமிழ்ச் சொல்லாக இருக்கிறதே ! உங்கள் வீட்டில் தமிழ்ச் சொற்கள் நிரம்பவும் புழங்குமோ ?

எழிலரசி: ஆமாம் ! என் பெயர் உனக்குத் தெரியும் ! தந்தையின் பெயர் அருள்நம்பி ! தாயார் இளம்பிறை ! தம்பி இளமுருகு ! எங்கள் வீட்டில் ஆங்கிலச் சொல் ஒன்று கூடப் புழங்கக் கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டுள்ளோம் !

மலர்மதி: நல்ல முடிவு ! இங்கிலாந்து மக்களோ, அமெரிக்க மக்களோ தமிழில் பேசுவதில்லை ? தமிழக மக்கள் தான் சுரணை கெட்டுப் போய், ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள் ! தெரிந்த தமிழ்ச் சொற்களைக் கூடத் தவிர்த்துவிட்டு ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள் !

எழிலரசி: ஆமாம் மலர் ! “இன்று மாலை வருகிறேன் என்பதை விடுத்து இன்னிக்கு ஈவ்னிங் வர்ரேன்என்பது என்ன ஞாயம் ? இந்த அழகில்தமிழ் தான் எனக்கு மதர் டங்என்று பீற்றல் வேறு !

மலர்மதி: சரி விடு எழில் ! உங்கள் வீட்டுக்குளிர்ப்பேழையில் (REFRIGERATOR) பனிக்கட்டி நீக்கமைப்பு (DEFROST CONTROL) இருக்கிறதா ? எங்கள் பேழையில் அஃது இல்லை !

எழிலரசி: அப்படியா ! வேறு பேழை வாங்குவது தானே !

மலர்மதி: வாங்க வேண்டும் ! எந்த நிறுவனத்தின்  வனைவை (MAKE) வாங்கலாம் ?

எழிலரசி: குறிஞ்சி நிறுவன வனைவை (MAKE) வாங்குங்கள் ! நன்றாக இருக்கும் !

மலர்மதி: சரி எழில் ! பேசிக்கொண்டே கடைத் தெருவுக்கு வந்துவிட்டோம் ! எந்தத் துணிக் கடைக்குச் செல்லலாம் ?

எழிலரசி: அழகேசன்  அணிய ஆடையகத்திற்குச் (READY MADE STORE) செல்வோம் ! அங்கு துயிலிமட்டுமே விற்கப்படுகிறது ! ஞாயமான விலையில் தரமான துயிலிகள் கிடைக்கின்றன !

[இருவரும் கடைக்குள் செல்கின்றனர்]

மலர்மதி: ஐயா ! எனக்குத் துயிலி (NIGHTY) ஒன்று வேண்டும் ! நான்கைந்து துயிலிகளை எடுத்துப் போடுங்கள் !

அழகேசன்: தருகிறேன் அம்மணி ! தம்பி ! ஆதவனிடம் சென்று இரண்டு செவ்விளநீர் சீவி விரைவாக வாங்கி வா !

எழிலரசி: நான் தான் துயிலி வாங்க வந்தேன் ! நீயும் வாங்கப் போகிறாயா ?

மலர்மதி: ஆமாம் எழில் ! ”துயிலிஎன்ற பெயரைக் கேட்டவுடனேயே, ஏதோவொரு இனம்புரியாத உந்துதல் என்னுள் எழுந்து விட்டது ! அழகிய தமிழ்ச் சொல் துயிலி !

[”துயிலிகளைப் பார்வையிட்டு எதைத் தேர்வு செய்யலாம் என்று சில நிமிடங்கள் குழம்பி நிற்கின்றனர்]

அழகேசன்: தம்பி ! இளநீர் வாங்கி வந்து விட்டாயா ? உறிஞ்சு குழலைப் (STRAW) போட்டு அம்மணிகளிடம் கொடு !

மலர்மதி: ஐயா ! அணிய ஆடையகத்தில் பல்லவி (PRESSURE COOKER), வறுகலன் (FRYING PAN), உண்கலம் (MEALS PLATE), நீர்க்குவளை (TUMBLER), சேமச் செப்பு (THERMOS FLASK), எல்லாம் வைத்திருக்கிறீர்களே ? அவை எதற்கு ?

அழகேசன்: அம்மணி ! ஒளியுருக்கில் (STAINLESS STEEL) செய்த இன்னும் பல அடுகலன்களும் (UTENSILS) உள்ளே இருக்கின்றன ! எங்களிடம்துயிலிவாங்கும் ஒவ்வொருவருடைய பெயரையும் பதிவு செய்து கொள்வோம். மாத இறுதியில் குலுக்கல் முறையில் 10 பேரைத் தேர்வு செய்து இந்தப் பொருள்களைப் பரிசாக வழங்குவோம் !

எழிலரசி: ஐயா ! இப்படிப் பரிசு தருவதற்கு உங்களுக்குக் கட்டுப்படி ஆகிறதா ?

அழகேசன்: அம்மணி ! அழகிய தமிழில்துயிலிஎன்று கேட்டு வாங்குவோருக்கு அளிக்கும் இந்தப் பரிசு, அவர்களுக்கு அளிக்கும் பரிசு அன்று ! தமிழுக்கு அளிக்கும் பரிசு  ! தமிழனாகப் பிறந்து, தமிழையே பேசி, வாழ்ந்து வரும் நான் என் அன்னைத் தமிழுக்கு இதைக் கூடச் செய்யவில்லை எனில், நான் தமிழன் என்று சொல்லிக் கொள்ளத் தகுதி இல்லாதவன் !

[எழிலரசி, மலர்மதி இருவரும் திகைத்து நிற்கின்றனர். சுரணையுள்ள தமிழர்கள் இன்னும் இருக்கவே செய்கின்றனர்]

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.;2050,நளி (கார்த்திகை) 27]
{13-12-2019}

---------------------------------------------------------------------------------------------------------
   
  தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற 
கட்டுரை !

---------------------------------------------------------------------------------------------------------

வரலாறு பேசுகிறது (16) ந.மு.வேங்கடசாமி நாட்டார் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !


.மு.வேங்கடசாமி நாட்டார் !


தோற்றம்:

தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் நடுக்காவிரி என்னும் சிற்றூரில் 1884 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் நாள் பிறந்தவர் வேங்கடசாமி நாட்டார். இளமையில் இவருக்கு இடப்பட்ட பெயர் சிவப்பிரகாசம். இப்பெயர் பிறகு வேங்கடசாமி என மாற்றிக் கொள்ளப்பட்டது இவரது தந்தையார் பெயர் முத்துச்சாமி நாட்டார். தாயார் தைலம்மாள். திருவையாறிலிருந்து திருக்காட்டுப் பள்ளி வழியாக கல்லணை செல்லும் வழியில் காவிரிக் கரை ஓரமாக அமைந்துள்ளது நடுக்காவிரி !

தொடக்கக் கல்வி:

அக்கால வழக்கப் படி நடுக்காவிரியில் இருந்த திண்ணைப் பள்ளியில் நான்காம் வகுப்பு வரை வேங்கடசாமி படித்தார். பின்னர் தம் தந்தையார் மூலம் ஆத்திச் சூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, ஆகிய நூல்களையும் அந்தாதி, கலம்பகம் வகை நூல்களையும் படித்தார் ! சாவித்திரி வெண்பா என்னும் நூலை இயற்றிய ஐ.சாமிநாத முதலியாரின் தூண்டுதலால், ஆசிரியர் துணையின்றி, தானே தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார் !

புலவர் படிப்பு:

மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஓர் உறுப்பான செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் நுழைவுத் தேர்வு” (1905), ”இளம் புலவர்தேர்வு (1906), ”புலவர் தேர்வு” (1907) ஆகியவற்றில் முதல் மாணாக்கராகத் தேர்வு பெற்றார் ! ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டிய இப்புலவர் படிப்பை மூன்றே ஆண்டுகளில் முடித்துச் சாதனை நிகழ்த்தியவர் வேங்கடசாமி நாட்டார் அவர்கள் !

தமிழாசிரியர் பணி:

வேங்கடசாமி நாட்டார் தமது 24 ஆம் அகவையில் திருச்சி எசு.பி.சி. கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியில்  அமர்ந்தார். பின்பு கோவையில் தூய மைக்கேல் உயர்நிலைப்பள்ளியில் ஓராண்டு காலம் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இதை அடுத்து, திருச்சி பிசப் ஈபர் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக 24 ஆண்டுகள் பணி புரிந்தார் !

பல்கலைக் கழகப் பேராசிரியர்:

திருச்சிக்குப் பின் சிதம்பரம் வந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக ஏழாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார் ! பணி ஓய்வுக்குப் பின் தஞ்சாவூர் கரந்தையில் உள்ள புலவர் கல்லூரியில்  (சம்பளம் பெறாமல்)  மதிப்பியல் முதல்வராக நான்கு ஆண்டுகள் பணியாற்றித் தமிழ்த் தொண்டாற்றினார் !

பாரதியார் சந்திப்பு:

வேங்கடசாமி நாட்டார் அவர்களின் 28 ஆவது அகவையில் (1912 ஆம் ஆண்டு) பாரதியார் அவர்கள் நாட்டாரின் வீட்டிற்கு வருகை தந்து, சிலப்பதிகாரக் காவியத்தின் சில பகுதிகள் குறித்து தனக்கிருந்த ஐயங்களைத் தெரிவித்து, விளக்கம் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பினார் ! தொல்காப்பியத்திலும் சில விளக்கங்களைக் கேட்டறிந்தார் !

சிறந்த நூலாசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்த வேங்கடசாமி நாட்டார், பெரும்புலவர் மு.இராகவையங்கார்  எழுதியவேளிர் வரலாறுஎன்னும் நூலில் இருந்த பிழைகளைச் சுட்டிக் காட்டித் தமிழறிஞர்களை ஏற்கச் செய்தார் !

படைப்புகள்:

வேளிர் வரலாறு, நக்கீரர், கபிலர், கள்ளர் சரித்திரம், கண்ணகி வரலாறும் -  கற்பும் மாண்பும், சோழர் சரித்திரம், கட்டுரைத் திரட்டு, காந்தியடிகள் நெஞ்சு விடு தூது ஆகிய நூல்களை வேங்கடசாமி நாட்டார் எழுதியுள்ளார்.

உரை எழுதிய நூல்கள்:

எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான அகநானூறுக்கு  உரை எழுதியுள்ளார். பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார்.  சிலப்பதிகாரம், மணிமேகலைக் காப்பியங்களுக்கு உரை எழுதியுள்ளார் !

வரலாற்று நூல்:

கள்ளர் சரித்திரம் என்பது ஒரு சமூகம் சார்ந்த நூலாகத் தோன்றினாலும், தமிழக மக்களைப் பற்றி விவரிக்கும் வரலாற்று நூல் என்பதே உண்மை ! இந்நூலைத் தமிழ்த் தாத்தா  .வே.சா அவர்கள் பாராட்டியதுடன், பல்கலைக் கழகங்களில் பாடநூலாக வைக்கத் தக்க தகுதி பெற்றது என்று பாராட்டி இருக்கிறார் !

பிற நூல்கள்:

அதிவீரராம பாண்டியன் இயற்றிய வெற்றிவேற்கை, ஔவையாரின் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி,  உலகநாதனார் இயற்றிய உலகநீதி, சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நன்னெறி ஆகிய நூல்களுக்கு சொற்பொருளும், பொழிப்புரையும் எழுதி தமிழ் மக்களுக்கு அறவழி காட்டி அருளியுள்ளார் !

நாவலர் பட்டம்:

வேங்கடசாமி நாட்டார் தமிழ்ச் சொற்பொழிவில் வல்லவர். அவரது சொற்பொழிவு ஆற்றல் கண்டு வியந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 1940 ஆம் ஆண்டு நடத்திய மாநாட்டில், அவருக்குநாவலர்என்னும் பட்டத்தை வழங்கிப் பெருமைபடுத்தியது !

தமிழ்ப் பல்கலைக் கழகக் கோரிக்கை:

தமிழ், தமிழர் வளர்ச்சி குறித்து, எண்பது ஆண்டுகளுக்கு முன்னரே, சிந்தித்த  வேங்கடசாமி நாட்டார், தமிழுக்கெனத் தனிப் பல்கலைக் கழகம் வேண்டும் எனக் கோரிக்கை வைத்துக் குரல் கொடுத்து வந்தார் !

மொழிக் கலப்பு விரும்பாதவர்:

வேற்று மொழிச் சொற்கள் தமிழில் கலப்பதை நாட்டார் அவர்கள் விரும்பியதில்லை. புதிய சொற்களைக் காலம்தோறும் படைத்து தமிழுக்கு வளம் சேர்க்க வேண்டும் என்பதை அவர் அழுத்தமாக வலியுறுத்தி வந்துள்ளார். தமிழுக்குப் பல்லாற்றானும் வளம் சேர்த்துத் தொண்டாற்றி வந்துள்ள நாவலர் வேங்கடசாமி நாட்டார் அவர்களுக்கு மணி விழா நடத்த தமிழன்பர்கள் ப்லர் ஒருங்கிணைந்து குழு அமைத்துச் செயலாற்றி வந்தனர்.

மறைவு:

1944 ஆம் ஆண்டு, மே மாதம் 8 ஆம் நாள் மணிவிழாவை நடத்துவதென்றும் முடிவு செய்திருந்தனர். ஆனால் நாவலர் வேங்கடசாமி நாட்டார் அவர்கள் 40 நாள்கள் முன்னதாக 1944 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28 ஆம் நாளன்று  அவரது  அறுபதாம் அகவையில்  தம் பூதவுடலை நீங்கிப் புகழுடம்பு எய்தினார் !

முடிவுரை:

தமிழ்த் தாய் தலைசிறந்த ஒரு தவப் புதல்வனை இழந்துவிட்டாள்; தமிழுலகம் ஒரு வரலாற்று அறிஞரை, ஆராய்ச்சி அறிஞரை இழந்து தவிக்கிறது ! தமிழர்கள் தம்மை வழிநடத்திச் செல்லத் தகுதிபெற்ற மனிதர்கள் இல்லாமல், மடிமைக்கு இடம் தந்து மயங்கிக் கிடக்கிறார்கள் !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி..2050:சிலை (மார்கழி)22]
{07-01-2020}
------------------------------------------------------------------------------------------------------------
     
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளயிடப் பெற்ற 
கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------