name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 10/11/19

வெள்ளி, அக்டோபர் 11, 2019

சிந்தனை செய் மனமே (47) இயற்கை வளங்கள் அழிப்பு !

மக்களின் மனக் களிப்புக்காக மலைவளங்களை முற்றிலும் இழந்து விடத்தான் வேண்டுமா ? 



உலகின் நிலப்பரப்பு நான்கு வகைப்பட்டது. மலை, காடு, வயல் மற்றும் கடல் ஆகியவையே அவை. இதைத்தான் நம் மூதாதையர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று பகுத்து வைத்திருந்தனர் !

இவை ஒவ்வொன்றும் தனித் தன்மை வாய்ந்தவை. கடல் இல்லாவிட்டால் கார்முகில் உருவாகாது. மலைகள் இல்லாவிட்டால், மழைப் பொழிவு இருக்காது. காடுகள் இல்லாவிட்டால் மனிதன் உயிர்வாழ உயிர்வளி கிடைக்காது. வயல்கள் இல்லாவிட்டால், உண்பதற்கு உணவும் கிடைக்காது !

சுற்றுலா என்ற பெயரில் மலைவளம் தொடர்ந்து அழிக்கப்படுகிறது. புதிய குடியிருப்புகள் அமைப்பதற்காகவும் மனிதனின் மரத் தேவைகளுக்காகவும் வனவளம் அழிக்கப்படுகிறது. நிலத்தடி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவளி எடுப்புக்காக பயிர் செய்யும் வயல்வளம் அழிக்கப்படுகிறது. மாசு படிந்த கழிவு நீர் கலப்பு மற்றும் பவளப் பாறைகள் சிதைப்புகளால் கடல் வளம் அழிக்கப்படுகிறது !

மாநில அரசுகளும் நடுவணரசும் போட்டி போட்டுக் கொண்டு சுற்றுலாவை மேம்படுத்துகிறோம், அயல்நாட்டுப் பணத்தை (அந்நியச் செலாவணி) அள்ளிக் குவிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு மலைவளத்தையும், வனவளத்தையும் பெருமளவில் அழித்து வருகின்றன.  மலைவளம் அழிப்பு மற்றும் அதனால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றி மக்களிடையே இன்னும் போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை !

மலையும் மலை சார்ந்த இடங்களின் இயற்கை அமைப்பும் எத்தகையது ? உயர்ந்த மலை முடிகள், பசுமைப் போர்வைக்குள் உறங்கும் பாறைகள், விண்முட்ட ஓங்கி வளர்ந்த மரங்கள், அடர்ந்த புதர்கள், அரிய மூலிகைகள், சுற்றித் திரியும் வன விலங்குகள், சலசலத்து ஓடும் சிற்றோடைகள், அங்கேயே பிறந்து, வளர்ந்து வாழும் பழங்குடி இன மக்கள், எல்லாவற்றுக்கும் மேலாகக் குளிர்ந்த காற்றுஇவை தானே மலையின் இலக்கணம் !

சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் மலையின் இயற்கைச்சூழல்  பெருமளவு அழிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் மலைவளத்தைக் கண்டு களிக்க வசதி செய்து தருவதாகச்  சொல்லி, பாறைகள் உடைக்கப்பட்டு பல்வேறு சாலைகள் மலைப் பரப்பில் உருவாக்கப்படுகின்றன. அவர்கள் தங்குவதற்கெனத் துச்சில்கள் (LODGES), உடுவிடுதிகள் (STAR HOTELS), புற்றீசல்கள் போல மலைப் பரப்பெங்கும் முளைத்து வருகின்றன. உணவகங்கள் வரைமுறை இன்றிப் பல்கிப் பெருகி மலைப்புறத்தின் தூய்மைக்கு அச்சுறுத்தல் தருகின்றன !

மலையின் இயற்கைச் சூழ்நிலையைக் கெடுக்கும் இத்தகையக் கட்டடங்கள் அல்லாமல் செல்வச் செழிப்பில் மிதக்கும் தனியாரின்  வளமனைகள் (PRIVATE BUNGALOWS), வசதி படைத்தவர்களுக்காகவே இயங்கும் பள்ளிக் கூடங்கள், மருந்தகங்கள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என மலையெங்கும் கற்காரைக் கட்டடங்கள்  நாள்தோறும்  பெருகிவருகின்றன !

இத்தகையக் கட்டடங்களின் பெருக்கத்தால், ஓங்கி உயர்ந்து வளரும் மரங்கள் நாள்தோறும் அழிக்கப்படுகின்றன. மூலிகைப் பயிர்களும் புதர்களும் காணாமற் போகின்றன. உலா வரும் மக்கள் பெருக்கத்தால், மலையெங்கும் குப்பைக்  கூளங்கள் குவிந்து வருகின்றன. கழிவுநீர்த் தேங்கி நாற்றம் மலிந்துவிட்டது. ஊர்திகளின் பெருக்கத்தாலும், இயக்கத்தாலும், நச்சுக் காற்றும் புகையும் மலைப் பரப்பில் காற்றின் தூய்மையை மாசுபடுத்திப் பாழ்படுத்தி  வருகின்றன !

மாநில மற்றும் நடுவண் அரசுகளின் தவறான கொள்கைகளால், மலைகளும், பழங்குடியினர் வாழும் மலையூர்களும் தன் இயற்கை அழகை இழந்து வருகின்றன.. குளிர்ந்த காற்று மண்டலம் மறைந்து வருகிறது.. வெப்பக் காற்று மண்டலம் வியர்வைக்குக் கட்டியம் கூறி அழைப்பு விடுக்கிறது. மலையின் இயற்கைச் சூழல் சிதைக்கப்படுவதால், மழைப் பொழிவின் அளவும் ஆண்டுதோறும்  வீட்சியடைந்து வருகிறது !

சமவெளிகளைப் பாழ்படுத்திவிட்ட இந்த மனிதக் குமுகாயம், மலை வெளிகளையும் பாழ்படுத்தத் தொடங்கிவிட்டது. உதகமண்டலம், கோடைக்கானல், ஏற்காடு (ஏரிக்காடு) போன்ற மலைவாழிடங்கள் (HILL STATIONS)   கற்காரைக் கட்டடங்களின் வரைமுறையற்ற பெருக்கத்தால், பொலிவிழந்து போய்விட்டன. மழை பெய்விக்க வேண்டிய மலைகள் எல்லாம் தன் இயற்கை வளங்களை இழந்து நகரங்கள் ஆகிவிட்டன !

கோடைக் காலங்களில் இந்த மலைவாழிடங்களில் (HILL STATIONS)    குளிர்ச்சியைக் காண முடியவில்லை.  மழையின்மையால், பசுமைப் போர்வைகள் தீய்ந்து சருகாகிப் போகின்றன. மலையில் இருக்கும் அரியவகை மரங்களும் மூலிகைகளும் ஆண்டுதோறும் தீயின் கொடிய நாக்குகளால் சுழற்றி   விழுங்கப்படுகின்றன. மலைவாழ் விலங்குகள் மடிந்து போகின்றன !


உதகை, கோடைக்கானல், ஏற்காடு (ஏரிக்காடு) போன்ற மலை வாழிடங்கள் (HILL STATIONS)   எல்லாம்  முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையையும், இப்போது இருக்கும் நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள் ! மாநில, நடுவண் அரசுகளின் தவறான கொள்கைகளால் இயற்கையின் கொடையான மலைவளம் புயல் வீச்சைப் போலப் பொசுங்கி வருவது தெற்றென விளங்கும் !

காசுக்காக (அந்நியச் செலாவணி) நமது இயற்கை வளங்களை இழப்பதா ? மக்களின் மனக் களிப்புக்காக மலைவளங்களை முற்றிலும் இழந்து விடத்தான் வேண்டுமா ? மாநில அரசும் நடுவணரசும் சிந்திக்குமா ? காலம் தான் விடை சொல்ல வேண்டும் !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மடங்கல்(ஆவணி)05]
{22-08-2019}
----------------------------------------------------------------------------------------------------------
       “தமிழ்ப் பணி மன்றம்முக நூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------

புதிய தமிழ்ச் சொல் (53) அவிழகம் ( MESS )

புதுச்சொல் புனைவோம் !



உணவகங்களின்  பெயர்களும் உணவுகளும் !

--------------------------------------------------------------------------------------------

                          
                       அவிழகம்............- MESS

                       ஆர்கையகம்.....- SNACK BAR

                       அயிலகம்............- RESTAURANT

                       மிசைபுலம்.........- HOTEL

----------------------------------------------------------------------------------------------

 

வயிற்றுப் பசிக்கு உணவளிக்கும் கடைகள்  /  உணவகங்கள், பல்வேறு பெயர்களில்சிறிதும் பெரிதுமாக நாடெங்கும் பரவிக் கிடக்கின்றனஒவ்வொன்றும் அளிக்கும் உணவின் தன்மையும் வகையும்வேறுபட்டவை !

 

சிறுபசியைத் தணித்துக் கொள்ளச் சிற்றுண்டி நிலையம் (TIFFIN SHOP)  செல்கிறோம்மிகுபசி என்றால் மிசைபுலம்  (HOTEL) செல்கிறோம்.  இரண்டு நண்பர்கள் சேர்ந்தால் பொழுது போக்கவும், கொறிக்கவும் வசதியான வேறுவகை உணவகத்திற்குச் செல்கிறார்கள்இப்படிமனிதனின் தேவைகளை நிறைவேற்றுவதற்குத் தான் எத்துணை வகை வகையான உணவகங்கள் !

 

ஒவ்வொரு வகை உணவகத்திற்கும் ஆங்கிலத்தில் வெவ்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றனஅவற்றையும் அவற்றுக்கானத் தமிழ்ப் பெயர்களையும்  ஒவ்வொன்றாகப் பார்க்கலாமா ?

 

ஹோட்டல்(HOTEL)  என்பது அறுசுவை உணவு வழங்குமிடம். நண்பகல் உணவிற்கு இவை ஏற்ற இடங்கள். வெளியூர்ப் பயணிகள் தான் பெரும்பாலும் இங்கு உணவருந்த வருபவர்கள்ஆங்கில அகரமுதலி சொல்கிறது: “HOTEL MEANS   HOUSE FOR ENTERTAINMENT OF TRAVELLERS ETC., USUALLY LARGE INNS.  இத்தகைய  “ஹோட்டல்களைத் தமிழில்  “மிசைபுலம்”  என்று  அழைக்கலாம்

 

வித்தும் இடல்வேண்டும் கொல்லோவிருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் –  குறள்.85) ”மிசைபுலம்  என்னும் சொல் அல்லாமல்   உணவகம் என்று அழைப்பதும் பொருத்தமாக இருக்கும் !  (மிசை  =  உணவு;  மிசைதல்  =  உண்ணுதல்)

 

நண்பகல் உணவுக்கு ஏற்ற இன்னொரு இடம் “மெஸ்” (MESS). இங்கு உணவு அருந்துவோர் பெரும்பாலும் அலுவலகங்களில் பணி புரிபவர்களாகவும்,  அன்றாடம் வருபவர்களாகவும்  இருப்பார்கள். COMPANY OF PERSONS WHO TAKE MEALS  TOGETHER – என்கிறது ஆங்கில அகரமுதலி !

 

பெரும்பாலும் இங்கு வருபவர்கள்   நிலையான வாடிக்கையாளர்கள். இத்தகைய  “மெஸ்”  (MESS)  என்னும் உணவகத்தை நாம்  அவிழகம் என்று அழைக்கலாம் ! ”அவிழ்”  என்றால் சோறு என்று பொருள்.  அவிழ்ப்பதம்  கொள்க...”  என்பது  பொருநராற்றுப் படை  !(112)

 

இவற்றை அடுத்து, “ரெஸ்டாரண்ட்”  (RESTAURANT)  என்ற பெயரில் சில உணவகங்கள் இயங்குகின்றனஇதற்கு ஆங்கில அகரமுதலி தரும் விளக்கம்: PLACE WHERE MEALS OR REFRESHMENTS MAY BE HAD TO REINVIGORATE ONESELF. இங்கு முழு உணவும் (FULL MEALS) கிடைக்கும்சிற்றடிசிலும் (CURD RICE etc.)  கிடைக்கும்சுவைநீரும்  (DRINKS)  கிடைக்கும்இத்தகைய ரெஸ்டாரண்ட்” என்பதைத் தமிழில் அயிலகம்” என்று அழைக்கலாம். ”அயில்”  என்றால்  “உண்”,  அதாவது உண்ணுதல்”  என்று பொருள் ! பழஞ்சோறு அயிலும் முழங்கு  நீர்ப்  படப்பை...” என்பது  புறநானூறு  ! (399:11)

 

கபஃட்டேரியா” (CAFETERIA)” என்னும் பெயரில் சில நிறுவனங்கள், தனது உணவகங்களை நடத்தி வருகின்றன. இங்கு உணவருந்த வருபவர்கள்  “வழங்கிடம்” (COUNTER) அருகில் சென்று தமக்கு வேண்டியதைக் கேட்டுப் பெற்று, எடுத்து  வந்து  “ஊமணை” யில்  (DINING TABLE)  அமர்ந்து உண்ண வேண்டும் !

 

உணவு பரிமாறுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். CAFETERIA MEANS RESTAURANT IN WHICH CUSTOMERS FETCH WHAT THEY WANT FROM THE COUNTERS என்கிறது ஆங்கில அகரமுதலி.  வாடிக்கையாளர்கள் தமக்கு வேண்டியதைத் தானே சென்று பெற்று வரும் உணவகம் என்பதால் இதைத்  தற்பெறுகை  அயிலகம்”  என்று  தமிழில் சொல்லலாம் !

 

வடைபொரிக்கோள்  (போண்டா),  உப்பம்  (பஜ்ஜி),  மாச்சில்

(பிஸ்கட்போன் தின் பண்டங்களுடன் தேநீர்குளம்பி (காப்பி) போன்றவற்றைத்  தருகின்ற  சிற்றுணவகங்களை  “ஸ்னாக் பார்”  (SNACK BAR)  என்கிறோம் !

 

இவற்றை  SLIGHT  OR  CASUAL  OR  HURRIED  MEAL  SERVING PLACE என்கிறது ஆங்கில அகரமுதலிதமிழில்  “ஆர்கைஎன்றால் தின்னுதல்”  என்று பொருள்.  அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்...”  என்பது புறநானூற்று வரி  (391:06)  எனவே  “ஸ்னாக் பார்”  (SNACK BAR)  என்பதை நாம்  ஆர்கையகம் என்று  தமிழாக்கம் செய்யலாம் !

 

சில இடங்களில் “கஃபே” (CAFE) என்னும் பெயரில் சிற்றளவு உணவகங்கள் இயங்கி வருகின்றன.  ஆங்கிலத்தில்  CAFE  என்றால்  “குளம்பி” (COFFEE)  விற்பனையகம் என்றுதான் பொருள்.  CAFE MEANS COFFEE HOUSE  என்கிறது ஆங்கில அகரமுதலி !

 

நடைமுறையில்குளம்பியுடன் வேறு உணவுப் பொருள்களும் இங்கு விற்பனை செய்யப்படுவதைக் காண்கிறோம்ஆங்கிலச் சொல்லின் பொருளை அடியொற்றி நாமும்  CAFE   என்பதைக்  குளம்பியகம்  என்றே மொழியாக்கம்  செய்வோம் !

 

குளம்பி” (COFFEE) விற்பனையகங்கள்சில இடங்களில், COFFEE  BAR  என்ற பெயரிலும் இயங்கி வருகின்றனஇவற்றுக்குத் தனிப் பெயர்த் தேவையில்லைஇவற்றையும் குளம்பியகம்” என்றே அழைக்கலாம் !

 

“TEE STALL” உங்களுக்குத் தெரிந்த இடம்தான்இதைத் “தேநீர் நிலையம்”  அல்லது  “தேநீரகம்என்று சொல்லலாம்.  பல ஊர்களில் இவற்றைத்  “தேநீர் நிலையம்”  அல்லது  “தேநீரகம்”  என்னும் பெயர்களிலேயே நடத்தி வருவது மகிழ்ச்சிக்குரியதுஇங்கு தான் தமிழ்ச் சொல்  நம் கண்களுக்குத் தென்படுகின்றன !

 

தே + நீர்  =  தேநீர்  >  தேநீரகம்,  தேநீர் நிலையம்;  தேயிலைச் சாறு கலந்த நீர் என்பதால் தேநீர் என்பதே சரி.  தேன்  +  நீர்  =  தேனீர்;  தேன் கலந்த  நீரைத்தான்  ”தேனீர்”  என்று  சொல்ல  வேண்டும் !

 

மேற்கண்ட பத்திகளில் தரப்பட்டுள்ள ஆய்வு  முடிவுகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் தமிழ்ச் சொற்களும்

தொடர்புடைய  பிற  சொற்களும்  வருமாறு :-

 

=======================================================

 

HOTEL....................................= மிசைபுலம்

HOTEL....................................= உணவகம்

RESTAURANT.........................= அயிலகம்

SNACK BAR............................= ஆர்கையகம்

MESS......................................= அவிழகம்

CAFE.......................................= குளம்பியகம்

CAFETERIA............................= தற்பெறுகை அயிலகம்

COFFEE BAR..........................= குளம்பியகம்

TEA STALL..............................= தேநீரகம்

DINING TABLE........................= ஊமணை ( = உணவு)

DRINKS....................................= சுவைநீர்

COUNTER................................= வழங்கிடம்

TIFFIN......................................= சிற்றுண்டி

IDLY..........................................= இட்டளி  (இட்டு + அளி)

DOSAI.........................= தோய்செய்  (தோய் + செய்) (தோசை)

CHUTNY.....................= சத்துணி  (சத்து + உணி) (சட்டினி)

BONDA......................................= பொரிகோள்

BAJJI.........................................= உப்பம்

NON-VEG BRIYANI..................= ஊனடிசில் (ஊன் + அடிசில்)

VEG. BRIYANI..........................= காயடிசில் (காய் + அடிசில்)

MEALS......................................= சாப்பாடு

MINI MEALS.............................= சிற்றுணா (உணா = உணவு)

REFRESHMENTS.....................= ஊக்குணா (ஊக்கு + உணா)

VEGETARIAN MEALS..............= காயுணா (காய் + உணா)

VEGETARIAN HOTEL..............= காயுணா மிசைபுலம்

NON-VEGETARIAN MEALS.....= கறியுணா (கறி + உணா)

NON-VEGETARIAN HOTEL.....= கறியுணா மிசைபுலம்


=======================================================

 

சைவ உணவுஅசைவ உணவு என்னும் சொற்றொடர்கள் தவறானவைசிவன்  >  சிவம்  >  சைவம்.  சிவனைப் பின்பற்றுவோர் சிவனியர்”,  அதாவது  ”சைவர்கள்”. ”சைவர்கள்” கறியுணவு உண்ண மாட்டார்கள் என்னும் பொருளில்  “சைவம்”  வழங்குகிறது. சிவனியத்தைப் பின்பற்றுவோரில் கறி உண்பவர்களும் இருக்கிறார்கள்எனவே சைவத்திற்கும்  காயுணவுக்கும் தொடர்பே இல்லை !

 

========================================================

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2050,மடங்கல் (ஆவணி), 07]

{24-08-2019}

 

========================================================

       “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற

 கட்டுரை !

========================================================