name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: ஜனவரி 2020

புதன், ஜனவரி 29, 2020

பெயரியல் ஆய்வு (04) - மீனாட்சி !

கயற்கண்ணி என்னும் பெயரை மீனாட்சி ஆக்கி மகிழ்கிறோம் !



பண்டைத் தமிழர்களின் கடவுட் கொள்கை அறிவியல் அடிப்படையிலானது. ஒளியை உமிழ்வது சூரியன்; சூரியன் இல்லாவிட்டால் ஒளியுமில்லை; வெப்பமும் இல்லை; ஒளியும் வெப்பமும் (தீ) இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை !


இந்த அடிப்படையில் கதிரவனை வணங்கினர்; கதிரவனின் ஒளியையும் வெப்பத்தையும் விளக்கின் சுடரில் கண்டனர். இதிலிருந்து சுடர் வழிபாடு (தீப வழிபாடு) தோன்றியது. இதைத்தான், “அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த சோதியாகிஎன்று தாயுமானவரும், “அருட்பெரும் சோதி !” என்று வள்ளலாரும் போற்றினர் !


நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில்என்றார் சிவவாக்கியர். இறையாற்றலுக்கு  உருவமில்லை; கற்சிலைகளில் அஃது இருப்பதில்லை; உன் மனதிற்குள் இறையாற்றல் இருக்கையில், அதைத் தேடி நீ எங்கெங்கோ அலைகிறாயேஎன்றார் மானிடனைப் பார்த்து !


ஆரியரின் கடவுட் கொள்கை நம்பிக்கை அடிப்படையில் ஆனது. ”எல்லாம் வல்லவன் இறைவன்; அவனை வழிபட உருவம் தேவை; அவன் கோயிலில் மட்டுமே குடிகொண்டிருப்பவன்; அவனுக்கு ஆயிரமாயிரம் உருவங்கள் உண்டு; அவனுக்கு மனைவி மக்கள், விருப்பு, வெறுப்பு எல்லாம் உண்டுஎன்பது ஆரியர்களின் கொள்கை !


கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் தமிழகத்திற்குள் நுழைந்த ஆரியர்கள் மெல்ல மெல்ல தமிழர்களிடம் அவர்களது கடவுட் கொள்கையைப் புகுத்தினர். அதன் பல்படி வளர்ச்சியே ஊருக்கு ஒன்பது கோயிலும், விதம் விதமான கடவுள் உருவங்களும் இலங்கும் இன்றைய நிலை !


கடவுள்களைப் பற்றிக் கணக்கிட முடியாத அளவுக்குக் கற்பனைக் கதைகளை உருவாக்கி மக்கள் மனதில் ஒரு மாயையை ஏற்படுத்தி விட்டனர் கச்சியப்ப சிவாச்சாரியார் போன்ற ஆரியர்களும், அவர்களுக்கு அடிமையாகிப் போன பல தமிழர்களும். அவர்கள் உருவாக்கிய சடங்குகளில் ஒன்று தான் மீனாட்சித் திருக்கல்யாணம் !


மீனாட்சிசொக்கநாதர் படிமைகள் இருக்கும் கோயில்களில் ஆண்டு தோறும் மீனாட்சித் திருக்கல்யாணம் என்று ஒரு சடங்கினை நடத்துகின்றனர். வேள்வித் தீ வளர்த்து, மந்திரங்கள் ஓதி, ஒரு ஐயர் மீனாட்சி அம்மனின் படிமைக்குத் தாலி கட்டுகிறார். ஒரு மனிதன், அவன் வணங்கும் தெய்வத்திற்குத் தாலி கட்டுவதா ? தாய்க்கு ஒரு தனயன் தாலி கட்டுவது போறதல்லவா இச்செயல் ? தாலிகட்டும் ஐயர் மீனாட்சி அளவுக்குத் தெய்வமாக உயர்ந்து விட்டாரா அல்லது தெய்வம் மனிதன் அளவுக்குத் தாழ்ந்து விட்டதா ?


ஆரியர்கள் உருவாக்கிய கதைகளும், சடங்குகளும், மனிதப் பண்புகளுக்கு அப்பாற்பட்டவை ! அது போகட்டும் ! மீனாட்சி என்பது அழகிய தமிழ்ப் பெயர் போன்றல்லவா தோற்றமளிக்கிறது ! அஃது உண்மை தானா ?  மீன் + ஆட்சி = மீனாட்சி. வடமொழியில்அக்க்ஷம்என்பது தமிழில்அக்கம்என வழங்கப்படுகிறது. “அக்க்ஷம்என்ற சொல்லுக்குக்கண்என்று பொருள். உருத்திரன் + அக்க்ஷம் = உருத்திராக்க்ஷம் என்பதை நோக்குக !


அக்க்ஷம்உடையவள்அக்க்ஷி”; மீன் + அக்க்ஷி = மீனக்க்ஷி = மீனாக்க்ஷி. வடமொழியில் உள்ள மீனாக்க்ஷி என்ற பெயர் நமது அக்காலப் புலவர்களால்மீனாட்சிஎன்று தமிழ்ப் படுத்தப் பட்டுவிட்டது. மீன் = கயல்; அக்க்ஷி = கண்ணி (கண் உடையவள்) எனவே மீனாட்சி = கயற் கண்ணி !



------------------------------------------------------------------------------------------------------------


                     மீனாட்சி.......................= கயற்கண்ணி, கயல்விழி
                     மீனாட்சி.......................=அங்கயற்கண்ணி (அழகிய மீன் 
                                                                   போன்ற கண் உடையவள்)
                     மீனாட்சி.......................= கண்ணம்மை
                     மீனாட்சியம்மை.......= கயற்கண்ணியம்மை
                     மீனா...............................= கயல்
                     மீனு.................................= கயல்விழி
                     மீனாட்சி சுந்தரன்.....= அழகிய நம்பி


------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)15]
{29-01-2020}

------------------------------------------------------------------------------------------------------------

     
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------


செவ்வாய், ஜனவரி 28, 2020

பெயரியல் ஆய்வு (03)- சௌந்தரராசன் !

தமிழில் அழகு !  வடமொழியில் சௌந்தரம் !


மனிதனுக்கு அழகைப் போற்றும் தன்மை உண்டு. அழகாக இருப்பவற்றை அவன் விரும்வுவான். வளர்ந்த விலங்குகளை விட அவற்றின் குட்டிகள் அழகாக இருக்கும்.  பறவைகளும் கூட குஞ்சுப் பருவத்தில் அழகாக இருப்பதுண்டு !


வளரும் பயிர், எழுகின்ற கதிர், எல்லாமே இளம் பருவத்தில் நம் மனதைக் கவரும் தன்மை படைத்தவையே. இளமை மட்டுமல்ல முதுமையும் சில நேர்வுகளில் அழகானவை. முதிர்ந்த நிறைமதி, விளைந்த மாங்கனி, போன்றவையும் கண்கவரும் எழில் மிக்கவையே. இவற்றை  எல்லாம் சுவைக்கும் மனிதன், அவன் நம்பும் கடவுளை மட்டும் விட்டுவிடுவானா ?


இயற்கையின் கூறுகளான கதிரவனையும், தீயையும், நீரையும் தொழுத பண்டைத் தமிழன் பின்பு ஆரியர்களின் தமிழக வருகைக்குப் பிறகு, அவர்களால் புனைந்து சொல்லப்பட்ட, பல்வேறு  கடவுட் கதைகளையும் நம்பி குழந்தை முருகன் மட்டுமன்றி முதிர்ந்த சிவபெருமான் உருவங்களையும் வகைவகையாகப்  படைத்து  வழிபாட்டில் ஈடுபடலானான். அவர்களின் வழிகாட்டுதலின் படி கோயில்களைக் கட்டி அங்கெல்லாம் அழகிய கற்படிமைகளை நிறுவி,  அவற்றுக்கு  அழகிய தமிழில் பெயர்களையும் சூட்டித் தொழலானான் !


தன்னைப் பின்பற்றத்  தொடங்கிய தமிழர்களை ஆரியர்கள் அத்துடன் விட்டுவிடவில்லை. கோயில் இருந்த ஊர்களின் பெயர்களை எல்லாம் மெல்ல மெல்ல  சமற்கிருதப் பெயர்களாக மாற்றி அழைக்கலானார்கள். கோயிலில் நிறுவப்பட்டிருந்த  கடவுட் படிமைப் பெயர்களும் சமற்கிருதமயமாயின !


இவ்வாறு சமற்கிருத மயமான ஒரு கடவுட் பெயர் தான் சௌந்தரராசன் ! சிவனியர்கள் (சைவர்கள்) தாங்கள் வணங்கிய இறைவனைச் சௌந்தர ராசன் என்று அழைக்க, மாலியர்களோ (வைணவர்கள்), தமது கடவுளைச் சௌந்தர்ராசப் பெருமாள் என்று அழைக்கலாயினர் !


சௌந்தர்யம்என்னும் வடமொழிச் சொல் தான், தமிழ்ப் படுத்துகையில்சுந்தரம்ஆயிற்று. (விஷயம் என்ற வடசொல் தமிழில் விடயம் ஆன கதை தான்) சௌந்தர்யம், சுந்தரம் இரண்டுக்கும் ஒரே பொருள் தான்அதாவது அழகு அல்லது எழில் என்று பொருள் !


மதுரையில் குடிகொண்டுள்ளகயற்கண்ணிஅழகியநம்பிஆகிய கடவுட் பெயர்கள் இரண்டும் வடமொழியாளர்களின் முயற்சியால்மீனாட்சிசுந்தரேஸ்வரன்எனப் மாற்றுருப் பெற்றன. சௌந்தரம் = அழகு, எழில்; சுந்தரம் = அழகு, எழில் ! சௌந்தர்ராசன் என்றாலும் சுந்தர்ராசன் என்றாலும் தமிழில் அழகரசன் அல்லது எழிலரசன் என்று பொருள் !


இந்த அடிப்படையில், மக்களிடையே வழங்கப் பெறும் வேறு சிலசுந்தரப் பெயர்களையும் அவற்றுக்கு இணையான தமிழ்ப் பெயர்களையும்   காண்போமா ?


------------------------------------------------------------------------------------------------------------

                     சௌந்தரம் (பெண்).......................= அழகி
                     சௌந்தரம் (ஆண்).........................= அழகன்
                     சௌந்தர்ராசன்...............................= அழகரசன், எழிலரசன்.
                     ஞானசௌந்தரி...............................= அறிவழகி
                     ரூபசௌந்தரி...................................= வடிவழகி
                     சுந்தரம்................................................= எழிலன்
                     சுந்தர்....................................................= அழகு, எழில்
                     சுந்தரமூர்த்தி....................................= அழகப்பன்
                     சுந்தரராசன்.......................................= எழிலரசு
                     சுந்தரபாண்டியன்...........................= எழில்மாறன்
                     சுந்தரேசன்.........................................= அழகியநம்பி
                     சுந்தராம்பாள்...................................= அழகம்மை
                     ஞானசுந்தரம்....................................= அறிவழகன்
                     அழகுசுந்தரம்...................................= பேரழகன்
                     நாகசுந்தரம்.......................................= அரவழகன்
                     கல்யாணசுந்தரம்............................= பொன்னழகு
                     இராமசுந்தரம்...................................= பேரெழிலன்


---------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)14]
{28-01-2020}

----------------------------------------------------------------------------------------------------------
     
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------

பெயரியல் ஆய்வு (02) - கிருஷ்ணசாமி !

கருப்புச்சாமி  கசக்கிறது ! கிருஷ்ணசாமி இனிக்கிறது !



தம் குழந்தைகளுக்குப் பெயர்  சூட்டுவதற்குப்  பெயரைத் தெரிவு செய்யும் பெற்றோர் சில வழிவகைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.  மூன்று  தலைமுறைகளுக்கு முன்பு பெற்றோர்கள்  தம் குழந்தைக்கு அதன் தாத்தா / பாட்டிப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தனர். இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய பெற்றோர் தங்களுக்குத் தெரிந்த கடவுள் பெயர்களைச் சூட்டி வந்தனர் !


சென்ற தலைமுறைப் பெற்றோர் ஏதாவதொரு வகையில் தங்கள் மனம் கவர்ந்த பெயர்களையோ, அழகிய தமிழ்ப் பெயர்களையோ தெரிவு செய்து சூட்டினர். இப்போதைய தலைமுறையினர் இணைய தளங்களில் பெயர்களைத் தேடி, அதன் பொருளைப் புரிந்து கொள்ளாமலேயே குழந்தைகளுக்குச் சூட்டுகின்றனர். !


குழந்தைக்குப் பெயர் வைப்பதென்பது, அக்குழந்தைக்கான அடையாளம். பெயர் தரும் அடையாளத்தை வைத்துத் தான் ஒரு குழந்தையை நாம் இனம் காண முடியும். மக்களுக்குப் பெயர் சூட்டி அடையாளம் காணும் முறை, தொன்று தொட்டு இருந்து வருகிறது !


ஒரு ஊரில் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, இரு குழந்தைகளுக்கு, முறையேகிருஷ்ணசாமி” “கறுப்பன்என்று பெயர் சூட்டி இருந்தனர். முன்னது வடமொழிப் பெயர். பின்னது தமிழ்ப் பெயர். இவ்விரண்டு பெயர்களில்கிருஷ்ணசாமிஎன்னும் பெயர் கடவுளின் பெயர் என்று தான் தெரியுமே தவிர அந்தப் பெயரின் பொருள் 75 % தமிழர்களுக்கு இன்றும் கூடத் தெரியாது !


கறுப்பன்என்னும் பெயர் வெளிப்படையாகப் பொருளை உணர்த்துகிறது. பொருள் தெரியாப் பெயர்கள் எல்லாமே தமிழர்களுக்கு அழகான பெயர்களாகத் தெரியும். வெளிப்படையாகப் பொருள் தெரியும் பெயர்கள் எல்லாம் அழகற்ற பெயர்களாகத் தமிழர்கள் மதிப்பிட்டனர் ! இன்றும் இந்த நிலை தான் தமிழ் மக்களிடையே நிலவி வருகிறது !


பெயர் தான் ஒரு மனிதனின் இனத்தையும், பண்பாட்டையும், தாய்மொழியையும் உணர்த்தும் கருவி. ஆனால் இதை அறியாத தமிழகத்துப் பெற்றோர்கள்  தம் குழந்தைகளுக்கு மனம் போன போக்கில் பெயர் வைக்கிறார்கள். பார்த்தசாரதிவடமொழிப்பெயர்; எலிசபெத்ஆங்கிலப் பெயர்; போஸ்வங்காளப் பெயர்; காந்திகுசராத்திப் பெயர். சிவாஜிமராட்டியப்பெயர்; சென்னகேசவன்தெலுங்குப் பெயர்; இப்படியெல்லாம் தம் குழந்தைக்குப் பெயர் வைப்பது நம் தமிழர்கள் தான் ! தமிழில் பெயர் வைப்பது அழகாக இருக்காது என்பது அவர்கள் கணிப்பு !


கிருஷ்ணசாமி என்னும் வடமொழிப் பெயரின் பொருள் என்ன ?  கிருஷ்ணம் என்றால் கறுப்பு என்று பொருள்.  கறுப்பு + சாமி = கறுப்புச்சாமி = கருப்புச்சாமி. கருப்புச்சாமி என்ற பெயர் அழகற்றதாகத் தோன்றும் தமிழர்களுக்கு, அதே பொருள் கொண்டகிருஷ்ணசாமிமட்டும் அழகான பெயராகத் தோன்றுகிறது !


கிருஷ்ணசாமிஎன்றாலும் திருமால் தான்; “கருப்புச்சாமிஎன்றாலும் திருமால் தான். வடமொழித் திருமாலை அழகானவராகவும், தமிழ்த் திருமாலை அழகற்றவராகவும் பார்க்கும் தமிழர்களின் கண்ணோட்டமே விந்தை தான் !


கிருஷ்ணம் = கருப்பு; சாமி = கடவுள். கருப்பு நிறமாக இருப்பதாக்க் கதைகளில் சொல்லப்படும்  கடவுள் யார் ? திருமால் !  தமிழில்கார்என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன . அவற்றுள்கருப்புஎன்பதும் ஒன்று. கருப்பு நிறக் கடவுளைக்கார் வண்ணன்என்று சொல்வது சரிதானே !


எனவேகிருஷ்ணசாமிஎன்னும் கடவுள் பெயரைத் தம் குழந்தைக்கு வைக்க விரும்பும் பெற்றோர் இனி மனம் சுளிக்காமல்கார் வண்ணன்என்று பெயர் சூட்டலாம் !


                            ---------------------------------------------------------------------
        
                                      கிருஷ்ணசாமி.......= கார்வண்ணன்,
                                      கிருஷ்ணன்.............= முகில் வண்ணன் (கரிய நிற
                                                                                மேகம் போன்றவன்)
                                      கிருஷ்ணமூர்த்தி..= கடல் வண்ணன்,
                                      கிருஷ்ணராஜ்.........= கார் வேந்தன்


                            ---------------------------------------------------------------------


பின் குறிப்பு: 

தமிழ் நெடுங் கணக்கில் முது பண்டைக் காலத்தில் தோன்றியதுகரம். அதற்குப் பின்பு தோன்றியதேகரம். “கரம் தோன்றாத காலத்தில் அதன் தொழிலைகரமே ஆற்றி வந்தது. முரிதல் > முறிதல் (வளைதல்); கருப்பு > கறுப்பு (கரிய நிறம்) சான்று: பாவாணரின் வேர்ச் சொற் கட்டுரைகள் நூல், பக்கம்,8


----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)11]
{25-01-2020}

-----------------------------------------------------------------------------------------------------------
     
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------



பெயரியல் ஆய்வு (01) - சரவணன் !

நாணற் பொய்கையருகில் பிறந்தவனா சரவணன் !


தமிழர்கள் எத்தனையோ வகைகளில் தங்கள் மூலத்தை (ORIGINALITY) இழந்து விட்டார்கள். அந்த வகையில் தங்கள் பெயரும் அதில் அடங்குகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. தாங்கள் சூட்டிக் கொண்டிருக்கும் பெயர் தமிழ்ப் பெயரா என்பது பற்றிய புரிதல் கூடப் பெரும்பான்மை மக்களுக்கு இல்லை. அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப் போகும் பெயர் சரவணன் !


சரம்என்றால் வடமொழியில் நாணல் என்று பெயர். “அணன்என்றால் பொருந்தியவன். ஒரு குளக்கரையில் நாணற் புல் மண்டிக் கிடந்ததாம். அந்த நாணற் புற்களுக்கு இடையே ஒரு குழந்தை கிடந்ததாம். அதைக் கொண்டு வந்து மலைமகள் (பார்வதி தேவி) வளர்த்தாளாம். அந்தக் குழந்தையே வளர்ந்துசரவணன்என்னும் பெயர் தாங்கி முருகனாகக் குன்று தோறும் குடி கொண்டு விளங்கினானாம் !


தமிழர்களை நம்ப வைக்க வடமொழியாளர்கள் கட்டி விட்ட கதைகளில் இதுவும் ஒன்று. இப்பொழுது தெரிந்து கொண்டிருப்பீர்களே ! சரவணன் என்றால் முருகன் என்று பொருள். “சரவணன்என்பது தமிழ்ச் சொல் அன்று என்பதும் உங்களுக்கு விளங்கி இருக்கும் !


சரி ! சரவணன் என்னும் வடமொழிப் பெயரைத் தமிழில் எப்படி அழைக்கலாம் ? ”நாணற் செல்வன்நேரடி மொழி பெயர்ப்புச் சொல். வேறு வகையில் எப்படி அழைக்கலாம் ? சரவணன் என்பது முருகனைக் குறிக்கும் சொல் அல்லவா ? முருகன் குன்றுகளில் (மலைகளில்) குடிகொண்டவன் என்பது உங்களுக்குத் தெரியும். அறுபடை வீடுகளும் குன்றின் மீதான கோயில்கள் அல்லவா ?


தமிழில் மலை என்பதைக் குறிக்கும் சொல்சிலம்பு”.  மலை என்றாலும் குன்று என்றாலும் ஒன்று தானே ! குன்றில் குடி கொண்ட முருகன், சிலம்பின் செல்வன் அல்லவா ! அதாவது சிலம்பில் குடிகொண்ட செல்வன் ! ஆகையால் சரவணன் என்னும் வடமொழிப் பெயரைத் தமிழில்சிலம்புச் செல்வன்என்று அழைக்கலாம்.


-----------------------------------------------------------------------------------------------------------

சரவணன்.........................= சிலம்புச் செல்வன்
சரவண மூர்த்தி.............= குன்றக் குரிசில் (குன்றின் தலைவன்)
சரவணக் குமார்............= குன்றவாணன்  (குன்றில் வாழ்பவன்)

-----------------------------------------------------------------------------------------------------------

உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் சிலம்புச் செல்வன் என்று பெயர் சூட்டுங்கள் ! பெயரன் பிறந்தாலும் இதே பெயரைச் சூட்டுங்கள் !


-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)11]
{25-01-2020}


------------------------------------------------------------------------------------------------------------
   
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------

வரலாறு பேசுகிறது (21) முனைவர்.மா.இராசமாணிக்கனார் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !


முனைவர் மா.இராசமாணிக்கனார் ! 


தோற்றம்:

முனைவர் மா.இராசமாணிக்கனார்  1907 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 12 ஆம் நாள் ஆந்திர மாநிலம் கர்நூலில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் மாணிக்கம் பிள்ளை. அன்னை பெயர் தாயாரம்மாள் !

மாணிக்கம் பிளளை நில அளவைத் துறையில் பணி புரிந்ததால், அவர் ஆந்திராவில் பணிபுரிகையில், இராசமாணிக்கம் பிறந்தார். ஆந்திராவில் பிறந்தாலும், இராசமாணிக்கனார் இனத்தால் மொழியால்  தமிழர் ! மாணிக்கம்பிள்ளைதாயாரம்மாள் இனையருக்கு  ஏழு குழந்தைகள் பிறந்தன. அவர்களுள் எஞ்சியவர்கள், இராசமாணிக்கமும் அவரது அண்ணன் இராமகிருட்டிணனுமே !

தொடக்கக் கல்வி:

மாணிக்கம் பிள்ளை, வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்றுப் பல ஊர்களில் பணிபுரிந்திருக்கிறார். அவர் ஆந்திர மாநிலம் கர்நூல், சித்தூர் ஆகிய ஊர்களில்  பணிபுரிந்தமையால், இராசமாணிக்கம் நான்காம் வகுப்பு வரைத் தெலுங்கினைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி பயின்றார் ! பின்பு, மாணிக்கம் பிள்ளை இடமாற்றலாகி மதுரை மாவட்டம் நிலக் கோட்டைக்கு வந்த பின்பே இராசமாணிக்கம் தமிழ் பயிலத் தொடங்கினார்.  மாணிக்கம் பிள்ளையின் மறைவுக்குப் பின் இராசமாணிக்கம் அவரது அண்ணன் இராமகிருட்டிணன் பாதுகாப்பில் வளர்ந்தார் !

பள்ளிக் கல்வி:

வறுமை காரணமாக, இராசமாணிக்கம் [ இப்போதைய திருவாரூர் மாவட்டம் ] நன்னிலத்தில் ஒரு தையற்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். பின்பு ஒருமுறை, தஞ்சாவூர் புனித பீட்டர் பள்ளியின் தலைமை ஆசிரியரை அவர் சந்திக்க நேர்ந்தது. அவரிடம், தனது படிப்புக்கு உதவி வேண்டினார். அவர் உதவியால் இராசமாணிக்கம் அப்பள்ளியில் சேர்ந்து பள்ளி இறுதி வகுப்பு வரைப் படித்துத் தேர்ச்சி பெற்றார் !

தமிழ்ப் பயிற்சி:

இராசமாணிக்கத்தின் படிப்பார்வத்தைக் கண்ட  கரந்தைக் கவிஞரும் ஆசிரியருமான இரா. வேங்கடாசலம், அவரைக் கரந்தை உமாமகேசுவரன் பிள்ளை, .மு.வேங்கடசாமி நாட்டார், இரா. இராகவையங்கார் ஆகியோரிடம் அனுப்பி தமிழில் மேலும்  பயிற்சி  பெறச்செய்தார் !

பட்டப் படிப்பு:

பின்பு 1928 ஆம் ஆண்டு தமது 21 –ஆம் அகவையில் சென்னை வண்ணாரப் பேட்டையில் உள்ள தியாகராயர் நடுநிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். ஏழு ஆண்டுகள் கழித்து 1935 ஆம் ஆண்டு, தமிழில்வித்வான்பட்டம் பெற்றார். நான்காண்டுகள் சென்றபின், 1939 ஆம் ஆண்டு கீழைமொழி வாலை (B.O.L.) பட்டம் பெற்றார் ! ”பெரியபுராண ஆராய்ச்சிஎன்னும் ஆய்வுக் கட்டுரை எழுதி 1945 ஆம் ஆண்டு கீழைமொழி மேதை (M.O.L) பட்டம் பெற்றார். 1951 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார் !

முற்போக்குச் சிந்தனையாளர்:

இவரது இளமைக் காலத்தில் சித்தர் பாடல்கள், வடலூர் வள்ளலாரின் திருவருட்பா போன்றவைகளை ஆழ்ந்து படித்தார். அதன் விளைவாக இவரிடம் தன்மானச் சிந்தனைகள் (சுயமரியாதை) மேலோங்கி நின்றன. சாதி ஒழிப்பு பற்றிப் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். வேள்வித் தீவளர்த்து சடங்குகள் செய்து மந்திரம் சொல்லித் திருமணங்கள் நடத்தப்படுவதை ஏற்க மறுத்தார் ! அதற்காகவேதமிழர் திருமணம்என்னும் முற்போக்குச் சிந்தனைகள் அமைந்த நூலை எழுதி, தன்மானத் திருமணங்களை வரவேற்றார் !

தமிழ்ப் பேராசிரியர்:

சென்னை விவேகானந்தர் கல்லூரியில் 1947 முதல் 1953 வரை  தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். இராசமாணிக்கனார் 1951 ஆம் ஆண்டுசைவ சமய வளர்ச்சிபற்றி ஆய்வு செய்துமுனைவர்பட்டம் பெற்றார்.  பிறகு,  1953 ஆம் ஆண்டில் மதுரை தியாகரசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்றுத் துறைத் தலைவராகவும் விளங்கினார் !

தமிழ்த் துறைத் தலைவர்:

பின்பு 1959 தொடங்கி 1967 வரை, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றினார் ! 1966 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்றுசங்க காலத் தமிழ்ச் சமுதாயம்என்னும் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார் !

திருமண வாழ்வு:

இராசமாணிக்கம் 1930 -ஆம் ஆண்டு தனது 23 ஆம் அகவையில் கண்ணம்மாள் என்னும் மங்கையை மணந்தார். இவ்விணையருக்குப் பிறந்த குழந்தைகளுள், கலைக்கோவன் என்பவர் திருச்சியில் கண் மருத்துவராகவும், ”மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையஆட்சியராகவும் இருந்து வருகிறார் !

சிறப்புப் பட்டங்கள்:

சைவசித்தாந்தம் குறித்த இவரின் ஆய்வுகளும், கட்டுரைகளும், நூல்களும்  பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனால் திருவாவடுதுறை மடத்தின் தலைவர்  இவருக்குசைவ வரலாற்று  ஆராய்ச்சிப் பேரறிஞர்என்னும் பட்டத்தை வழங்கினார். மதுரை திருஞானசம்பந்தர் மடத்தின் தலைவரிடமிருந்துஆராய்ச்சிக் கலைஞர்என்னும் பட்டத்தைப் பெற்றார்.  தருமபுரம் மடத்தின் தலைவர்சைவ இலக்கியப் பேரறிஞர்என்னும் பட்டத்தை அளித்துப் பெருமைப்படுத்தினார் !

படைப்புகள்:

இராசமாணிக்கனார், தமிழ், வரலாறு, இலக்கியம், சைவம் போன்ற பல துறைகளில் ஆய்வு நூல்களை எழுதி இருக்கிறார். (01) பல்லவர் வரலாறு, (02) பல்லவப் பேரரசர், (03) மொகஞ்சதாரோ அல்லது சிந்து வெளி நாகரிகம், (04) தமிழக வரலாறும் பண்பாடும், (05) தமிழ் மொழி இலக்கிய வரலாறு, (06) சோழர்வரலாறு, (07) தமிழ் இனம், (08) தமிழக ஆட்சி, (09) தமிழ் அமுதம், (10) தமிழ் நாட்டு வட எல்லை, (11) தமிழகக் கலைகள், (12) புதிய தமிழகம், (13) சிலப்பதிகாரக் காட்சிகள், (14) சேக்கிழார், (15) சேக்கிழார் ஆராய்ச்சி, (16) சைவ சமயம், (17) சைவ சமய வளர்ச்சி (18) பெரிய புராண ஆராய்ச்சி (19) நாற் பெரும் புலவர்கள் (20) பத்துப் பாட்டு ஆராய்ச்சி  எனப் பல நூல்களை எழுதியிருக்கிறார் !

மறைவு:

பல வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு, உண்மையான நிகழ்வுகளை வெளிக் கொணர்ந்த முனைவர் மா.இராசமாணிக்கனார், சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகையில் 1967 ஆம் ஆண்டு, மே மாதம், 26 ஆம் நாள், தமது 60 ஆம் அகவையில் காலமானார் !

முடிவுரை:

தமிழன்னை வரலாற்று ஆய்வறிஞர் ஒருவரை இழந்தாள் ! இவருக்குப் பின் இத்தகைய ஆய்வறிஞர்கள் தமிழகத்தில் தோன்றாதது நமது தவக்குறையே !


--------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)14]
{28-01-2020}

------------------------------------------------------------------------------------------------------------
    
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------








சனி, ஜனவரி 25, 2020

வரலாறு பேசுகிறது (20) முனைவர்.மு.வரதராசனார் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !


பேராசிரியர் மு.வரதராசனார் !


தோற்றம்:

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் நாள் வரதராசன் பிறந்தார். தந்தையார் பெயர் முனுசாமி முதலியார். தாயார் அம்மாக்கண்ணு அம்மையார். வரதராசனுக்கு இளமையில் பெற்றோர் சூட்டிய பெயர் திருவேங்கடம்; எனினும் அவரது பாட்டனாரின் பெயராகிய வரதராசன் என்னும் பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது !

பள்ளிக் கல்வி:

வரதராசனின் தொடக்கக் கல்வி வேலூர் மாவட்டம், வாலாசாபேட்டையை அடுத்த வேலம் என்னும் சிற்றூரில் தொடங்கி வளர்ந்தது. பின்பு உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் தொடர்ந்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை அங்கு பயின்றார்  வரதராசன் !

தமிழ் கற்றல்:

பின்பு சிறிது காலம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணி புரிந்தார் ! இவ்வாறு அவர் பணியாற்றுகையில் அவருக்கு உடல் நலம் குன்றியது. ஆகையால் பணியை விட்டு விலகி, சிறிது ஓய்வுக்குப் பின் திருப்பத்தூர் முருகைய முதலியார் என்பவரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார் !

வித்வான் தேர்வு:

1931 ஆம் ஆண்டு தமிழில்வித்வான்முதனிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தாமே பயின்று 1935 ஆம் ஆண்டில் தமது 23 -ஆம் அகவையில் வித்வான்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்வு பெற்றார் !

திருமணம்:

தனது மாமன் மகளான இராதா என்னும் மங்கையை 1935 –ஆம் ஆண்டு வரதராசன் மணந்துகொண்டார்..  இவ்விணையருக்குத்  திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய ஆண்மக்கள் பிறந்தனர் !

தமிழாசிரியர்:


திருப்பத்தூர் உயர்நிலைப் பள்ளியில் 1935 முதல் 1938 வரை மூன்று ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்பு 1939 –ஆம் ஆண்டு தனித் தேர்வராகத் கீழை மொழி வாலைத் (B.O.L) தேர்வெழுதி பட்டம் பெற்றார் !

விரிவுரையாளர்:

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1939 –ஆம் ஆண்டு தமிழ் விரிவுரையாளராகப் பொறுப்பில் இணைந்தார்.. “தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்என்னும் தலைப்பில் ஆராய்ச்சி செய்து 1944 ஆம் ஆண்டு கீழைமொழி மேதைப் (M.O.L) பட்டம் பெற்றார் !

பேராசிரியர்:

சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பணிபுரிந்து வருகையில், “சங்க இலக்கியத்தில் இயற்கைஎன்னும் தலைப்பில் 1948 ஆம் ஆண்டு ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில்முனைவர்பட்டம் பெற்றார். தனது பணியை பச்சையப்பன் கல்லூரியிலேயே தொடர்ந்த வரதராசனார், 1939 முதல் 1961 வரை 22 ஆண்டுகள் பேராசியராகவும், தமிழ்த் துறைத் தலவராகவும் பணியாற்றினார் !

துணைவேந்தர்:

1961 முதல் 1971 வரை பத்தாண்டுகள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார். இவரது சீரிய பணிகள் அரசினரைக் கவர்ந்ததால், 1971 ஆம் ஆண்டு மதுரைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக அமர்வு செய்யப் பெற்றார் ! 1974 வரை இப்பொறுப்பில் இருந்தார் !

பிற பணிப் பொறுப்புகள்:

இவர், சென்னை, திருப்பதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் ஆட்சிக் குழு (SENATE) உறுப்பினராகவும், கேரள, மைசூர், உசுமானியா, பெங்களூர், ஆந்திர, தில்லி, மதுரை, கேம்பிரிட்சு பல்கலைக் கழகங்களின் கல்வி வாரிய உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார். அமெரிகாவின் உசுட்டர் பல்கலைக் கழகம் இவருக்குஇலக்கியப் பேரறிஞர்” (D.Lit) என்ற சிறப்புப் பட்டத்தை 1972 ஆம் ஆண்டு வழங்கிச் சிறப்புச் செய்தது !

பன்மொழிப் புலமை:

வரதராசனார் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய் மொழிகளில் தேர்ச்சி பெற்று பன்மொழிப் புலமை பெற்றிருந்தார். கல்லூரிக் கட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு, தேடிச் சென்று பண உதவிகளைச் செய்து வந்தார். இத்தகைய பண உதவியை அடுத்தவர் அறியா வண்ணம் கமுக்கமாகச் செய்வதையே அவர் விரும்பினார் !

படைப்புகள்:

புதினங்கள், சிறு கதைகள், சிறுவர் இலக்கியம், நாடகங்கள், இலக்கணம், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை, மொழி பெயர்ப்பு, முன்னுரைகள், மேற்கோள்கள் என 91 நூல்களைத் தமிழுக்குத் தநதுள்ள பெருமகனார் முனைவர்.மு.வரதராசனார் !

புகழ் பெற்ற புதினங்கள்:

மு.. எழுதிய செந்தாமரை, கள்ளோ? காவியமோ?, தமிழ் நெஞ்சம், அந்த நாள், பாவை, மணல் வீடு, பெற்ற மனம், அல்லி, கரித் துண்டு, நெஞ்சில் ஒரு முள், அகல்விளக்கு, வாடாமலர், மண்குடிசை, கி.பி. 2000, கயமை, ஆகிய நூல்கள் தமிழ் மக்களின் மனம் கவர்ந்த புதினங்கள் !  காலத்தால் கருகாத வாடாமலர்கள் !

இவரது திருக்குறள் தெளிவுரையை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிட்டுள்ளது. மு.. தான் எழுதிய நூல்களுள் பெரும்பாலானவற்றைத் தனது சொந்த நிறுவனமான தாயகம்வழியாகவே வெளியிட்டார் !

திறமைகளின் கருவூலம்:

நல்லாசிரியர், சிறந்த பண்பாளர், சமுதாயச் சிற்பி, மாபெரும் சிந்தனையாளர், மொழி ஆய்வறிஞர் போன்ற பன்முகத் தன்மை கொண்ட பேராசிரியர் மு.வரதராசனார். தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தை நிலையாக ஏற்படுத்திக் கொண்டுள்ளார் !

மறைவு:

இத்தகைய மாமனிதர் 1974 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 10 ஆம் நாள் தமது 62 ஆம் அகவையில் நம்மிடமிருந்து மறைந்தார். அவரது பூதவுடல் மறைந்தாலும், அவர்தம் புகழ் என்றென்றும் நம்மிடையே நிலைபெற்று இருக்கும் என்பதில் ஐயமில்லை !

முடிவுரை:

உழைப்பால் உயர் நிலையை அடைந்தவர்களுக்கு எடுத்துக்காட்டு முனைவர். மு. வரதராசனார். எத்துணையோ தமிழ்ச் சிற்பிகள் புதினங்களைப் படைத்து இருக்கிறார்கள். ஆனால் நூலகத்தைத் தேடிச் சென்று அமர்ந்து புதினம் படிக்கும் ஈர்ப்பை மக்களிடையே ஏற்படுத்திய எழுத்துக்குச் சொந்தக்காரர் வரதராசனார் என்றால்  அது மிகையில்லை !


------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)11]
{25-01-2020}

-----------------------------------------------------------------------------------------------------------
     
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------