name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: காளமேகம்
காளமேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காளமேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், செப்டம்பர் 02, 2019

காளமேகம் பாடல் (01) மூப்பான் மழுவும் முராரி !

      யானையை எலி இழுத்துப் போகின்றதே !


பெருச்சாளி வாகனத்தில் பிள்ளையார் அமர்ந்திருக்க, அந்தச் சிலையைப் பல்லக்கில் வைத்து தெருவில் ஊர்வலமாகக் கொண்டு செல்றார்கள். இதைப் பார்த்த காளமேகம் உடனடியாக ஒரு பாடல் புனைகிறார். இதோ அந்தப் பாடல்:-
-----------------------------------------------------------------------------------------------------
 பாடல்
-----------------------------------------------------------------------------------------------------


மூப்பான் மழுவும் முராரிதிருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ - மாப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை ஐயோ
எலியிழுத்துப் போகின்றது  ஏன்?

-----------------------------------------------------------------------------------------------------
பொருள்:-

பரமசிவன் கையில் ஏந்தும் மழுவும், திருமால் கையில் இருக்கும் சுதர்சனச் சக்கரமும், யமன் கையில் ஏந்தும் கதையும் எங்காவது காணாமல் போய் விட்டனவா என்ன?  இவ்வளவு பேர் இருந்தும், மிகுந்த வலிமை கொண்ட இந்த மதயானையை (பிள்ளையார்) ஒரு பெருச்சாளி தூக்கிக்கொண்டு போகிறது பாருங்களேன் !

{இகழ்வது போல் புகழும் வகையைச் சார்ந்தது இந்தப் பாடல்}
------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

மூப்பான் = சிவன் ; மழு = சிவனின் கையில் உள்ள ஆயுதம் ; முராரி = திருமால் ;  சக்கரமும் = சக்கராயுதமும் ; பார்ப்பான் = எமன் ;  கதை = கதாயுதமும்; பறி போச்சோ = யாராவது பறித்துக் கொண்டு போய்விட்டார்களோ ?; மாப்பார் = இந்த பெரிய உலகத்தில் ; வலிமிகுந்த = வலிமை மிகுந்த ; மும்மதத்து = கன்ன மதம், கைம்மதம், கோச மதம் எனச் சொல்லப்படும் மூன்று வகை மதங்களுக்கு ஆட்படும் ; வாரணத்தை = யானையை ;; எலி இழுத்துப் போகின்றது ஏன்? = பெருச்சாளி தூக்கிக் கொண்டு போகிறதே ! ; ஐயோ = ஐயகோ ! என்ன கொடுமை இது !

------------------------------------------------------------------------------------------------------
     “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, சுறவம்,6]
{20-01-2019}
------------------------------------------------------------------------------------------------------




காளமேகம் பாடல் (02) காரென்று பேர் படைத்தாய் !

மோர் விற்கும் பெண்ணைச் சீண்டும்  காளமேகம் !


நல்ல வெய்யில் நேரம் ! காளமேகத்திற்கு தொண்டை வறண்டு தாகம் எடுக்கிறது ! ஆயர் குலப் பெண் ஒருத்தி மோரோ மோர் என்று கூவியவாறு தெருவில் செல்கிறாள். அவளை அழைத்து ஒரு குவளை மோர் வாங்கி அருந்துகிறார்.  மோரில் தண்ணீர் மிகுதியாகக் கலந்து இருந்ததால்  அது நீர்த்துப் போய் சுவை குன்றி இருந்தது. அவருக்கு மோர் விற்றவள் ஒரு பெண் அல்லவா ! அதனால் அவளை வைய மனம் வரவில்லை. கோபத்தை வெளிக் காட்டாமல்   நகைச் சுவையோடு ஒரு பாடல் எழுதினார். அந்தப் பாடலைப் பாருங்கள் !
-----------------------------------------------------------------------------------------------------
பாடல்
-----------------------------------------------------------------------------------------------------
'கார்'என்று   பேர்படைத்தாய்     ககனத்து   உறும்போது;
'நீர்'என்று   பேர்படைத்தாய்    கொடுந்தரையில்  வந்ததற்பின்;
வார்ஒன்று    மென்முலையார்     ஆய்ச்சியர்கை   வந்ததற்பின்,
'மோர்' என்று   பேர்படைத்தாய்     முப்பேறும்   பெற்றாயே !
-----------------------------------------------------------------------------------------------------
பொருள்:-

மோரே ! (அதாவது மோர் என்று பெயர் கொண்டிருக்கும் நீரே ! ) நீ வானத்தில் இருக்கும் போது மேகம் என்ற பெயரைக் கொண்டிருந்தாய்.  பரந்த மண்ணுலகைச் சேர்ந்தவுடன் நீர் என்று பெயர் கொண்டாய்.  கச்சையணிந்த மென்மையான தனங்களையுடைய இடைச்சியர் கையில் சேர்ந்தவுடன் மோர் என்ற பெயரை பெற்றுக் கொண்டாய்.  இவ்வாறு கார்,  நீர், மோர் என்று மூன்று பெயரையும் பெற்றதால் முப்பேறும் (மூன்று தகுதிகளையும்) பெற்றுவிட்டாய் !

அதிகளவு நீர் கலக்கப்பட்ட மோர் என்பதை சிறிய எள்ளலும் நகைச்சுவையும் இழையோடப் பாடியிருக்கிறார் காள மேகம்.
-----------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

ககனத்து உறும்போது = ஆகாயத்தில் இருக்கும் போது; கார் என்று பேர் படைத்தாய் = மேகம் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறாய் ; கொடுந்தரையில் வந்ததன் பின் = இந்த பூமிக்கு வந்த பிறகு ; நீர் என்று பேர் படைத்தாய் = தண்ணீர் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறாய் ;  வார் ஒன்று = கச்சை அணிந்த ; ஆய்ச்சியர் கை வந்ததன் பின்  = ஆயர் குலப்பெண்னிடம் வந்த பின்பு ;  மோர் என்று பேர் படைத்தாய் = மோர் என்னும் பெயரைத் தாங்கி நிற்கிறாய்; (மோர் என்னும் பெயரில் இந்தப் பெண்ணின் பானையில் இருக்கும் தண்ணீரே ! நீ ) ; முப்பேறும் பெற்று விட்டாய் = ஒரே நேரத்தில், மேகமாகவும், தண்ணீராகவும், மோராகவும் அழைக்கப்படும் மூன்று பேறுகளையும் (தகுதிகளையும்) பெற்றுவிட்டாய்.
-----------------------------------------------------------------------------------------------------
     
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, சுறவம், 05]
{19-01-2019}
------------------------------------------------------------------------------------------------------




காளமேகம் பாடல் (03) சுருக்கவிழ்ந்த முன்குடுமி !

அவிழ்ந்த குடுமி ! உதிர்ந்த பாடல் !


[ஒருமுறை காளமேகப் புலவர் குடந்தைக்கு (கும்பகோணத்திற்கு) சென்றிருந்தார். அங்கு, ஒரு விடுதியில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, பக்கத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்த ஒருவரது குடுமி ( நீண்ட தலைமுடி ) அவிழ்ந்து, காளமேகத்தின் உணவில் விழுந்தது. உணவு பாழ்பட்டுப் போயிற்று. பசி மயக்கத்தில் இருந்த காளமேகத்திற்கு, உணவு கிடைத்தும் உண்ண முடியாமல் பாழ்பட்டுப் போயிற்றே என்ற ஆதங்கத்தில் கட்டுக்கடங்காத கோபம் வந்தது. அடக்கமுடியாச் சினமடைந்த  காளமேகம், குடுமி வைத்திருந்தவரைப் பார்த்து உடனடியாகப் பாடிய பாடல் இது]
-------------------------------------------------------------------------------------------------------------
பாடல்
-------------------------------------------------------------------------------------------------------------

சுருக்கவிழ்ந்த முன்குடுமிச்  சோழியா!  சோற்றுப்
பொருக்குலர்ந்த  வாயா ! புலையா ! – திருக்குடந்தைக்
கோட்டானே ! நாயே ! குரங்கே ! உனையொருத்திப்
போட்டாளே ! வேலையற்றுப்  போய் !
-------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-

முடிந்து வைத்திருந்த குடுமி அவிழ்ந்து என் இலையில் விழ,  என் உணவைப் பாழ்படுத்திவிட்ட சோழநாட்டு மானிடா ! உணவை நாகரிகமாக உண்ணத் தெரியாமல் வாய் ஓரங்களில் ஒட்டிக் கொள்ள, அவை உலர்ந்து காட்சியளிக்கும் இழிமகனே ! குடந்தை நகரில் வாழும் கோட்டானே! (பெரிய ஆந்தையே ), நாயினும் இழிந்தவனே !, வானரமே ! உன்னைப் போய் வேறு வேலையில்லாமல் பெற்றுப் போட்டாளே ஒருத்தி !
-------------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-

சுருக்கு = நீண்ட தலைமுடியை புரிமணை போல் சுற்றி முடிச்சுப் போட்டு வைத்தல்; முன்குடுமி = தலையின் முன் உச்சியில் வளையமாய்ச் சுற்றி வைத்த நீண்ட தலைமுடி; சோழியா = சோழ நாட்டவனே; சோற்றுப் பொருக்கு = உலர்ந்த சோறு;  புலையா = இழிமகனே; திருக்குடந்தை = குடந்தை நகரின் ; கோட்டானே = பெரிய ஆந்தையே ;
-------------------------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

      தமிழில் மேதைகளாக இருப்பவர்களுக்கு சினமும் கூடுதலாக இருக்குமோ ?
-------------------------------------------------------------------------------------------------------------

        ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 27]
(11-01-2019)
-------------------------------------------------------------------------------------------------------------



காளமேகம் பாடல் (04) வெங்காயம் சுக்கானால் !


வெங்காயம், சுக்கு, வெந்தயம் ! காளமேகத்தின் சொற் சிலம்பம் !


கற்றறிந்த பெரும் புலவர்கள் பலரையே மலைப்புக் கொள்ளச் செய்தவர் காளமேகப் புலவர்  !  இவரது  பாடல்  இயற்றும்  திறம்  ஈடு இணையற்றது ! இரட்டுற மொழிதல் (சிலேடை) என்றாலே நம் நினைவுக்கு வருபவர் கவி.காளமேகப் புலவர். அவருடைய பாடல்களைப் படிக்குந் தோறும் வியத்தகு முறையில் இரு பொருட்களை இணைக்கும் திறம் கண்டு மனம் மகிழும். அவருடைய பாடல்களில் பல ணையத்தில் வந்துள்ள. இணையத்தில் வராத ஒரு சிலேடைப் பாடல் !
---------------------------------------------------------------------------------------------------------
பாடல்
---------------------------------------------------------------------------------------------------------


வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் வதென்ன ?
இங்கார் சுமந்திருப்பார் ச்சரக்கை - மங்காத 
சீரகத்தைத்  தந்தீரேல்  தேடேன்  
பெருங்காயம்
ஏரகத்துச்  செட்டியா ரே
!

---------------------------------------------------------------------------------------------------------

இதை இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம்.

1.
மளிகைக்கடைக்காரர்;
பெரு வியாபாரியிடம்:


வெங்காயம் சுக்காக காய்ந்து விட்ட பின் வெறும் வெந்தயத்தை வைத்துக்கொண்டு எவ்வாறு வியாபாரம் செய்வது. வீணாகாத நல்ல சீரகம் கொடுத்தீர்களானால் பெருங்காயம் இல்லாவிட்டாலும் எப்படியாவது கடையை கொண்டு செலுத்தி விடலாம்.

2.
கடவுளின்; முன் அடியார்:


வெம்மையான இவ்வுடம்பு வற்றிக் காய்ந்து விட்ட பின் இவ்வுலகில் இவ்வுடம்பைச் சுமந்து வாழ்ந்திருப்பதால் என்ன பயன். சீர் பொருந்திய இடமாகிய உன் திருவடிகளை எனக்குக் கொடுத்து விடுவீரேயானால் இவ்வுடம்மைப் பற்றி யோசிக்கவே மாட்டேன்

எவ்வளவு அழகாக பொருந்திப் போகிறதென்று பாருங்கள் !
----------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

வெங்காயம் = (1) கறிக்கு உதவும் வெங்காயம் (2) (வெம்மை + காயம் )= வெப்பம் நிலவும் இந்த உடம்பு;

சுக்கானால் = (1) வெங்காயம் காய்ந்து சுக்குப் போல ஆகி விட்டால் (2) இந்த உடம்பு சுக்குப் போல காய்ந்து நலிந்து விட்டால் ;

வெந்தயம் = (1) சமையலில் பயன்படும் வெந்தயம் (2) வெம்மை + தேயம் = வெந்தேயம் ; வெந்தயம் ; ஆசைகளைச் சுமந்து கொண்டிருக்கும்  இந்த  உடம்பால்;

ஆவதென்ன = ஆகக்கூடியது என்ன ?

இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை = (1) காய்ந்த வெங்காயம், வெந்தயம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு எப்படி வியாபாரம் செய்வது ? (2) நலிந்து போன இந்த உடலை வைத்துக் கொண்டு வாழ முடியுமா ? ;

மங்காத சீரகத்தை = நல்ல தரமான கெட்டுப் போகாத சீரகத்தை (2) இறைவா ! சீர் பொருந்திய உன் திருவடிகளைத் தந்தாயானால்;

பெருங்காயம் தேடேன் = (1) சமையலுக்கு உதவும் பெருங்காயம் வேண்டும் என்று தேடிப் போக மாட்டேன் (2) ( பெருமை + காயம்) பெருமை மிக்க  நல்ல வலிமையான உடலைத் தா என்று தேடிக்கொண்டு உன்னிடம் வரமாட்டேன்;

ஏரகத்துச் செட்டியாரே = (1) என் கடைக்கு மளிகைப் பொருள்களை வழங்கும் செட்டியாரே ! (2) ஏரகம் என்று சொல்லப்படும் சுவாமிமலையில் வீற்றிருக்கும் முருகா ! (முருகனுக்குச் செட்டி என்று இன்னொரு பெயரும் உண்டு !)
----------------------------------------------------------------------------------------------------------
     
   ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
 வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 26.]
(10-01-2019)
----------------------------------------------------------------------------------------------------------















காளமேகம் பாடல் (05) முக்காலுக்கு ஏகாமுன் !

நரை, திரை தோன்றி, கோலூன்றி நடக்கும் முன் !


இரு பொருள்படப் பாடல் எழுதுவதில் மிகச் சிறந்தவர் காளமேகம். ஐந்நூற்றுக்கும் அதிகமான பாடல்களை இவர் எழுதியிருக்கிறார் ! முக்கால் அரைக்கால் என்று கணிதத்தில் புழங்கும் சொற்களைக் கொண்டு பாடல்களைப் பாடி இருக்கும் இவரது திறம் வியப்புக்குரியது !
------------------------------------------------------------------------------------------------------------
பாடல்
------------------------------------------------------------------------------------------------------------
முக்காலுக்  கேகாமுன்  முன்னரையில்  வீழாமுன்
அக்கா  லரைக்கால்கண்  டஞ்சாமுன்  -  விக்கி
இருமாமுன்   மாகாணிக்   கேகாமுன்   கச்சி
ஒருமாவின்  கீழரையின்  றோது
------------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்
------------------------------------------------------------------------------------------------------------
முக்காலுக்கு  ஏகாமுன்  முன்நரையில் வீழாமுன்
அக்காலரைக்  கால் கண்டு அஞ்சாமுன்  -  விக்கி
இருமாமுன்  மாகாணிக்கு ஏகாமுன்  கச்சி
ஒருமாவின்  கீழரை இன்று ஓது.
-------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-

இரண்டு காலகளும் வலுவிழந்து, கோல் ஊன்றி நடப்பதற்கு முன், தலை முடியின் முன் புறம் நரை தோன்றும் முன், அந்தக் காலனைக் கண்டு அஞ்சி நடுங்குவதற்கு முன், விக்கல் எடுத்து இருமி உயிர் போகும் முன், மரணமடைந்து சுடுகாட்டுக்குப் போகும் முன், காஞ்சி மாநகரில், எழுந்தருளியுள்ள ஏகாம்பரனை இன்றே நீ வணங்குவாய் மானிடனே !
-------------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள் :-

முக்காலுக்கு = மூன்றாவது காலான ஊன்று கோலுக்கு; ஏகாமுன் = மாறுவதற்கு முன்பு; முன் நரையில் வீழா முன் = தலைமுடியில் முன் பக்கம் நரை விழுவதற்கு முன்னதாக ; அக் காலரை = அந்தக் காலனாகிய எமனை; கண்டு = பார்த்து ; கால் அஞ்சா முன் = அஞ்சிக் கால்கள் நடுங்கித் தள்ளாடும் முன்னதாக ; விக்கி = விக்கலெடுத்து; இருமா முன் = இருமி இருமி உயிர் விடும் முன்பாக; மா = மரணம் ; காணிக்கு = நிலத்திற்கு, அதாவது சுடுகாட்டுக்கு; ஏகா முன் = செல்வதற்கு முன்னதாக ; கச்சி = கச்சி என்று சொல்லப்படும் காஞ்சி மாநகரில் உள்ள ஈசன் கோயிலில் உள்ள ; ஒருமாவின் கீழரை = ஒற்றையுடை தரித்தவரான ஏகாம்பரனை ; இன்று = இன்றே ; ஓது = பாமாலைகள் பாடி வணங்குவாய் மானிடனே !  [ஒருமாவின் கீழன் = ஏகாம்பரன் பாவாணரின் தமிழர் மதம்- பக்கம் 84 காண்க ]
-------------------------------------------------------------------------------------------------------------
இதில் வரக்கூடிய சொற்கள், பின்னங்களைப் (fractions) போல் தோன்றும் சொற்கள் !

அவை எந்த பின்னங்களைக் குறிக்கின்றன தெரியுமா ?

முக்கால் = ¾ (மூன்றின் கீழ் நான்கு)
முன்-ரை = ½ (ஒன்றின் கீழ் இரண்டு)
அக்-காலரைக்கால் = 3/8 (மூன்றின் கீழ் எட்டு)
இருமா = 1/10 (ஒன்றின் கீழ் பத்து)
மாகாணி = 1/16; வீசம் (ஒன்றின் கீழ் பதினாறு)
ஒரு மா = 1/20 (ஒன்றின் கீழ் இருபது)
-------------------------------------------------------------------------------------------------------------
      
 ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------------

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 20149, சிலை, 25.]
(09-01-2019)
-------------------------------------------------------------------------------------------------------------