கொத்து (01)                                                                        மலர் (08)
--------------------------------------------------------------------------------------------------------
                                         புலவர்க்கோர் அறைகூவல் !       
புதுகையில் பிறந்த அலைச்சீறல்
(ஆண்டு 1971)
புதுகையில் பிறந்த அலைச்சீறல்
(ஆண்டு 1971)
--------------------------------------------------------------------------------------------------------
       ஆட்சிமொழி    தமிழென்றார்     ஐம்பத்து     எட்டுமுதல் !
           ஆயினும்  நடைமுறையில்  செயற்படலில்  விரைவில்லை !
       மாட்சிமிகு    அமைச்சர்கள்,   மாணவர்கள்,     பணியாளர்,
           மனம்வைத்தால்  செயலாக்கம்  விரையாதோ ?  வளராதோ ?
       ஊருக்கு      ஊர்கூட்டம்       கூடுகிறீர்,    பேசுகிறீர் !
           உருப்படியாய்     ஏதேனும்      சொல்லாக்கம்  நடந்ததுவா ?
       பேருக்குச்      சிலபேர்கள்       கருத்தரங்கு   ஏறியதால்
           பெற்றபயன்     
யாதோகாண் !   பெரியீரே     சிந்திப்பீர் !
       தமிழ்நாட்டில்   தமிழுணர்வு  நாள்தோறும்   குறைகிறது !
            தமிழ்க்கல்வி   நிலையங்கள்   ஒவ்வொன்றாய்  மறைகிறது !
       அமிழ்தான    மொழிவடிவம்    ஊடகத்தால்    சிதைகிறது !
            அய்யகோ      இதைத்தடுக்க    அரசினர்தான்   வாராரோ ?
       பொங்குதமிழ்     அங்காடிப்     பலகைகளால்     வீழ்கிறது !
             புற்றீசல்    போல்பதின்மப்    பள்ளியெங்கும்     சூழ்கிறது !
       தங்குதடை     இன்றிதமிழ்ப்    பேசுதற்கு     ஆளில்லை !
              தரமில்லா   தாளிகைகள்   மொழிக்கலப்பில் மூழ்குதையா !
       ஆன்றோரே !    சான்றோரே !   
அரங்கிலுள்ள  இளையோரே !
            அன்னைமொழி    நலிவடைதல்  அழகாமோ ? அறமாமோ ?
       மன்பதையில்   நம்மொழியும்   மாண்புதனைப்   பெறவேண்டும் !
            மனம்வைத்தால் அத்துணையும் வயமாகும் ! இஃதுண்மை !
       கலைச்சொற்கள்   தமிழூற்றில்   ஊருணியாய்   வரவேண்டும் !
           கற்றோர்தம்     கடனாற்றி    மொழிக்கேற்றம்  தரவேண்டும் !
       அலையலையாய்  பிறசொற்கள்  மொழிமாற்றம்  பெறவேண்டும் !
           ஆங்கிலம்போல்  நம்மொழியை  உலகறியச் செயல்வேண்டும் !
       ”பேண்ட்”போல்    பலசொற்கள்   தமிழ்க்குடிலில்   இன்றுண்டு !
           பீடுடைய  இணைச்சொற்கள்  தமிழின்கண்  எவையுண்டு ?
       புரியாமல்    தடுமாறும்     போதுகளாம்     எமையழைத்துப்
           புரியவைக்க   யாருண்டு ?    புலவர்காள்     விளம்பிடுவீர் !!
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
-----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .