name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கீழ்க்கணக்கு (06) களவழி நாற்பது !

புதன், அக்டோபர் 02, 2019

கீழ்க்கணக்கு (06) களவழி நாற்பது !

களவழியை ஊன்றிப் படிப்பவர்கள் போரை வெறுப்பார்கள்; அமைதியையே விரும்புவார்கள் !


கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் நிகழ்ச்சியாகிய போர்ச்செய்தி பற்றியது களவழி நாற்பது ஒன்றே. ஏர்க்களம் பற்றியும், போர்க்களம் பற்றியும் பாடப்பெறும் பாடல்கள் களவழி எனப்படும் !

இந்நூலில் உள்ள செய்யுள்கள் எல்லாம்களத்துஎன்றே முடியும் வகையில் வெண்பாக்களால் யாக்கப்பெற்றுள்ளன. நேரிசை வெண்பா, பஃறொடை வெண்பாக்களால் இந்நூல் அமைந்துள்ளது !

சோழன் செங்கண்ணான் என்பவன், சேரமான் கணைக்கால் இரும்பொறை என்பவனுடன் போர்புரிந்தான். இந்தப் போர் கழுமலம் என்னும் ஊரிலே நடந்தது. இப்போரில் சேரன் தோற்றான்; சோழன் வென்றான். தோற்ற சேரன் சோழனால் சிறைப்படுத்தப்பட்டான். சேரனுடைய நண்பர் பொய்கையார் என்னும் புலவர். அவர் சோழனுடைய வெற்றியைப் புகழ்ந்து பாடிச் சேரனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தார். இதுவே இந்நூல் தோன்றுவதற்குக் காரணமாகக் கூறப்படும் வரலாறு !


இந்நூலிலே யானைப் போரைப் பற்றிய பாடல்களே மிகுதியாகக் காணப்படுகின்றன. சேரமானிடம் யானைப் படைகளே அதிகம். சேரநாட்டில்தான் யானைகள் மிகுதி. ஆதலால், சேரனுக்கும், சோழனுக்கும் நடந்த போரிலே யானைப் படைகளின் சிதைவைப் பற்றிக் கூறுவது வியப்பன்று !


போர்க்களத்தில் நடைபெறும் கொடுமை; போரால் மக்கள் மாண்டு மடியும் குலைநடுங்க வைக்கும் காட்சி; பார்ப்போர் உள்ளத்திலே அச்சத்தை ஊட்டும் போர்க்களக் காட்சி; இவற்றை இக்களவழிப் பாடல்களிலே காணலாம். இந்நூலை ஊன்றிப்  படிப்போர் போரை வெறுப்பார்கள்; அமைதியையே விரும்புவார்கள். இக்கருத்தை இந்நூலின் பாடல்களிலே காணலாம் !

போர்க்களத்தில், மடிந்து வீழ்ந்த வீரர்களின் உறவினர்கள் அவர்தம் உடல்களைத் தேடி அங்குமிங்கும் ஓடுகின்றனர்.; உடலத்தை கண்டு அழுது அரற்றுகின்றனர்; இக்காட்சி, மரங்கள் அடர்ந்த சோலையிலே, பெருங்காற்று புகுந்து சுழன்று சுழன்று அடிப்பதைக் கண்டு, அஞ்சிய மயிலினங்கள், வெவ்வேறு திசைகளிலே சிதறி ஓடுவதைப்போல இருந்தது என்று கூறுகின்றது ஒரு செய்யுள். இதோ அந்தப் பாடல் :-

----------------------------------------------------------------------------------------------------

கடிகாவில் காற்று உற்று எறிய, வெடிபட்டு
  வீற்றுவீற்று ஓடும் மயில் இனம்போல்-நாற்றிசையும்
  கேளிர் இழந்தார் அலறுபவே; செங்கண்
  சினமால் பொருத களத்து.

----------------------------------------------------------------------------------------------------

மற்றொரு பாட்டிலே மரவினைஞர் (தச்சர்) வேலை செய்யும் இடத்தையும், போர்க்களத்தையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார் புலவர். இக்காட்சியைக் காணும்போது யாருடைய உள்ளமும் உருகாமல் இருக்காது. தச்சர் வேலை செய்யும் இடத்தைப் பார்த்தால் அலங்கோலமாகத்தான் காணப்படும். வேலை செய்யும் கருவிகள் பல இடங்களிலே கிடக்கும்; அறுபட்ட மரங்கள்; துளை  இடப்பட்ட சட்டங்கள்; செதுக்கிய சிராய்த் தூள்கள்; இவை எங்கு பார்த்தாலும் சிதறிக் கிடக்கும். 


போர்க்களத்திலும் ஆயுதங்கள் சிதறிக்கிடக்கும்;  பிணங்கள் குவிந்து கிடக்கும்; துண்டிக்கப்பட்ட  கை கால்கள் சிதறிக் கிடக்கும்; சிதைந்த உடல்கள்  உருமாறிக் கிடக்கும். யானை, தேர், குதிரை முதலியனவும் வீழ்ந்து கிடக்கும். இத்தகைய போர்க்களத்திற்குத் தச்சுப்பட்டறையை ஒப்பிட்டது மிகவும் பொருத்தமானது !

-------------------------------------------------------------------------------------------
 ‘
கொல்யானை பாயக் குடைமுருக்கி எவ்வாயும்
 புக்கவாய் எல்லாம் பிணம் பிறங்கத், தச்சன்
 வினைபடு பள்ளியில் தோன்றுமே செங்கண்
 சினமால் பொருத களத்து.

------------------------------------------------------------------------------------------

இதுபோல் போர்க்களத்தின் காட்சியைக் காட்டும் பாடல்கள் பல. அற்றைத் தமிழில் படைக்கப்பெற்ற பாடல்கள் இற்றைத் தமிழர்கள் படித்துப் புரிந்து கொள்வது பெரிதும் கடினமே ! மூலமும் உரையுமாக அமைந்த இக்கால நூல் கிட்டலாம். படித்துப் பண்டைத் தமிழகத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்ளுங்கள் !

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,26]
{11-07-2019}
--------------------------------------------------------------------------------------------------------
        ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .