name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: காளமேகம் பாடல் (08) கத்து கடல் நாகை காத்தான் !

திங்கள், செப்டம்பர் 02, 2019

காளமேகம் பாடல் (08) கத்து கடல் நாகை காத்தான் !

சினத்தில் விளைந்த செங்கரும்புத் துண்டு !


காளமேகம் பல ஊர்களுக்குச் சென்றுள்ளார். சென்ற இடங்களில் அவருக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை வைத்துச் சில பாடல்களைப் பாடியுள்ளார். இவ்வாறு நாகப்பட்டினத்திற்குச் சென்றிருந்த போது ஒரு சத்திரத்தில் அவர் நேர்கொண்ட வாய்ப்பைப் பற்றி இப்பாடலில் பாடியுள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------------
பாடல்
----------------------------------------------------------------------------------------------------------
கத்துக்கடல் நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்   போதில்   அரிசிவரும் - குத்தி
உலையிலிட   ஊர்அடங்கும்;   ஓரகப்பை   அன்னம்
இலையிலிட   வெள்ளி   எழும்.
------------------------------------------------------------------------------------------------------------
[காளமேகம் மதிய உணவுக்காக சத்திரத்துக்குச் சென்றபோது, உணவுக்காக நெடு நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. இதனால் கோபமுற்றவர் சத்திர ஆட்சியாளரை இகழ்ந்து பாடிய பாடல் இது ]
------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-
நாகப்பட்டினத்தில் உள்ள காத்தான் சத்திரத்தில் (உணவு விடுதியில்)  சாப்பிடலாம் என்று மதிய வேளையில் போனால், சூரியன் மறைந்த பின்புதான் சத்திரத்துக்கு அரிசி வந்து சேரும்; பழுப்பேறிய அதை உரலில் இட்டுக் குத்திப் புடைத்து உலையில் இடுவதற்குள் ஊர் மக்கள் எல்லாம் உறங்கிபோவர்.  பின்பு சோறாக்கி அதை எடுத்து வந்து என் இலையில் பரிமாறுவதற்குள் விடிந்து விடும்.
------------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-

கத்துக் கடல் = அலைகளின் ஆரவாரத்தால் எப்பொழுதும் ஒலி எழுந்து கொண்டிருக்கும் கடல்; நாகை = நாகப்பட்டினம்; காத்தான் சத்திரத்தில் = காத்தான் என்பவரது உணவு விடுதியில்; அத்தமிக்கும் போதில் = சூரியன் மறையும் நேரத்தில்; அரிசி வரும் = சமைப்பதற்காக அரிசி கொண்டு வருவார்கள்; குத்தி = பழுப்பு ஏறிய அந்த அரிசியை உரலில்  இட்டுக் குத்திப் புடைத்து; உலையில் இட = உலைப் பானையில் இட்டு வேகவைத்துச் சோறாக்குவதற்குள்; ஊர் அடங்கும் = ஊர் மக்கள் எல்லாம் உறங்கி விடுவர்;  ஓரகப்பை அன்னம் = வெந்த சோறினை எடுத்து வந்து அகப்பையால் முகந்து; இலையில் இட = சாப்பிடுவதற்காக அமர்ந்துள்ள என் இலையில் போடுவதற்குள்; வெள்ளி எழும் = இரவு விடிந்து வெள்ளியும் முளைத்துவிடும்.
---------------------------------------------------------------------------------------------------------
[ பின் குறிப்பு:- பாடலைக் கேட்டவுடன் சத்திர உரிமையாளர் ஓடிவந்து, வந்திருப்பவர் காளமேகப் புலவர் என்பதை அறிந்து, அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். மனமிரங்கிய காளமேகம், தான் பாடிய பாடலுக்கு வேறு பொருள் சொன்னார். எப்படி ?

இவ்வாறு :-

காத்தானது சத்திரத்தில், அத்தமிக்கும் நேரத்தில் அதாவது நாட்டில் உணவின்றி பஞ்சம் தலைவிரித்தாடும் காலத்தில் அரிசி மூட்டை மூட்டையாய் வந்திறங்கும். அரிசியைக் குத்தித் தூய்மையாக்கி உலையில் இட்டுச் சோறாக்கும் போது ஊர் மக்கள் எல்லாம், தமக்கு உணவு கிடைக்கவிருக்கும் மகிழ்ச்சியில் அமைதி காப்பார்கள்.  அங்கு பரிமாறும் உணவை உண்டு அந்த ஊரே பசி அடங்கும். இலையில்  அகப்பையால் பரிமாறப்படும் சோறு , வெள்ளை வெளேரென்று வெள்ளிக் கோள் போலத் தூய்மை  மிக்கதாக இருக்கும். “
------------------------------------------------------------------------------------------------------------
        
 ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெயிடப்பெற்ற கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை :
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[ தி.: 2049, சிலை, 23 ] 
(07.01.2019)
------------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .