name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பழமொழி நானூறு (32) தெருளாது ஒழுகும் திறனிலாரை !

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

பழமொழி நானூறு (32) தெருளாது ஒழுகும் திறனிலாரை !

எல்லோருக்கும் ஒரு விலையுண்டு  !


பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான பழமொழிஎன்பது முன்றுரை அரையனார் என்பவர் இயற்றிய நானூறு வெண்பாக்களால் ஆகிய ஒரு இலக்கியம். ஒவ்வொரு வெண்பாவிலும் ஈற்றடியில் ஒரு பழமொழியை அமைத்து இவ்விலக்கியத்தை அவர் படைத்துள்ளார் !

-------------------------------------------------------------------------------------------------------
பாடல். 32.
-------------------------------------------------------------------------------------------------------

தெருளா தொழுகும் திறனிலா தாரைப்
பொருளா லறுத்தல் பொருளே பொருள்கொடுப்ப,
பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? வேற்குத்தின்
காணியின் குத்தே வலிது.

--------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்.
--------------------------------------------------------------------------------------------------------

தெருளாது ஒழுகும் திறன் இலாதாரைப்
பொருளால் அறுத்தல் பொருளே பொருள் கொடுப்ப,
பாணித்து நிற்கிற்பார் யார் உளரோ? வேல் குத்தின்
காணியின் குத்தே வலிது.

---------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------

தனது தகுதியை உணராது ஆணவத்துடன் செயல்படும் திறமையற்ற பகைவரை, பொருள் (பணம்) கொண்டு அழித்தலே சரியான செயலாகும்.. (அந்த எதிரியை ஒழிக்கும் நோக்கில் கைக்கூலியாக) தேவையான (பணத்தை) பொருளைக் கொடுத்தால் பகைமையை விட்டொழிக்கத் தயங்குபவர் யாராவது இருக்கிறார்களா என்ன ? கூரிய வேலைக் கொண்டு அழிப்பதைக் காட்டிலும் பணத்தால் அடித்து  பகைவரை வெல்வதே  வலிமையானது !
----------------------------------------------------------------------------------------------------------

பழமொழி சொல்லும் பாடம்: எல்லோருக்கும் ஒரு விலையுண்டு, பணம் எதையும் சாதிக்க வல்லது; ஆகையால்  செல்வத்தைத் தக்க முறையில் பயன்படுத்தி எதிரி  நமக்கு இடையூறாக இருப்பதை நீக்கிட வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------

தெருளாது = தனது தகுதியை உணராது; ஒழுகும் = நடந்துகொள்ளும்; திறன்  இலாதாரை = திறமையற்ற பகைவரை; பொருளால் = பணம் கொடுத்து; அறுத்தல் = இல்லாமல் செய்தல் (அழித்தல்); பொருளே = சரியான செயலாகும். பொருள் கொடுப்ப = பணம் கொடுத்தால்; பாணித்து = தனது செயலிலிருந்து பின்வாங்காமல்; நிற்கிற்பார் = உறுதியாக நிற்பவர் ; யார் உளரோ = யார் இருக்கிறார்; வேல் குத்தின் = வேல் கொண்டு குத்தி அழிப்பதைவிட ;  காணியின் குத்தே = காணிக்கையாகக் பணம் கொடுத்து அவரைப் பணியவைப்பதே ; வலிது = வலிமை மிகுந்ததாகும் !

---------------------------------------------------------------------------------------------------------

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில். (குறள்: 759)

திருவள்ளுவரும் முன்றுரை அரையனாரின் கருத்தை வலியுறுத்துவதை மேற்கண்ட குறள் மூலம் அறியலாம்.

---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050:மடங்கல்(ஆவணி),21]
{07-09 -2019}
--------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .