name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: தனிப்பாடல்
தனிப்பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனிப்பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், நவம்பர் 26, 2020

தனிப்பாடல் (518) நாலெழுத்தாம் ஏமம் ! மத்தி நண்ணும் !

நான்கெழுத்துச் சொல்லை வைத்து  ஒரு புதிர் !


தமிழில்  ஈடுபாடு  மிக்க  அறிஞர் பெருமக்கள் பாடல் வாயிலாகவே விடுகதைகள்  சொல்வதில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். அப்படிப்பட்ட   புலவர் ஒருவர் சொன்ன விடுகதை இதோ ! இந்தப் புலவரைப் பற்றிய வரலாறும்  கிடைத்தில !

------------------------------------------------------------------------------------------------------------

 

நாலெழுத்தா  மேமத்தி  னண்ணுமுத   னீக்கிடினோ

வேல்விழியா   மிரண்டுவிடி   னேநிசியாம்  -  காற்றலையும்

வல்லபுலி   முன்னிரண்டும்   வாளியா   நான்கி  லொன்று

நல்லமதி  யீதெனவே   நாட்டு.

 

------------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரிக்காமல் எழுதிய நிலையில் பாடலின் பொருளை விளங்கிக் கொள்வது அத்துணை எளிதன்று ! எனவே உங்களுக்காக இப்பாடலைச் சந்தி பிரித்துத் தருகிறேன் !

------------------------------------------------------------------------------------------------------------

 

நாலெழுத்தாம் , ஏமம்மத்தி  நண்ணும்  முதல்  நீக்கிடினோ,

வேல்விழியாம்,   இரண்டு விடின்  நிசியாம்,  -  கால் தலையும்

வல்ல புலிமுன் இரண்டும்  வாளியாம்நான்கில்  ஒன்று

நல்ல மதி,  ஈது எனவே நாட்டு !

 

-------------------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:-

-------------------

 

நான்கு எழுத்து உள்ள ஒரு சொல்இச்சொல்லில் உள்ள முதல் எழுத்தை நீக்கி விட்டால்மங்கைஎன்று பொருள் படும்முதல் இரண்டு எழுத்துகளை நீக்கிவிட்டால்இரவுஎன்று பொருள் ஆகும்முதலெழுத்தும் கடைசி எழுத்தும் சேர்ந்தால்  “புலிஎன்று பொருள்முதல் எழுத்தும் இரண்டாவது எழுத்தும் சேர்ந்தால்அம்புஎன்று பொருள் கிடைக்கும்நான்கு எழுத்துகளில் ஒன்றை மட்டும் கருதினோமானால்   ஒரு மாதத்தின் பெயர் வரும்; இஃது என்ன சொல் என்பதைச் சொல்லுங்களேன் !

 

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:-

-------------------------------------

நாலெழுத்தாம் = நான்கு எழுத்துகள் உள்ளஏமத்தில்  = இச்சொல்லில் ; நண்ணும் முதல் நீக்கிடினோ = அமைந்துள்ள முதல் எழுத்தை நீக்கிவிட்டால் ; வேல்விழியாம் = வேல்விழி என்று சொல்லப்படுகிறமங்கைஎன்பதாகும்இரண்டு விடின் =முதல் இரண்டு எழுத்துகளை விட்டுவிட்டால்நிசியாம் = நிசி என்று சொல்லப்படும்  இரவு என்பதைக் குறிக்கும்கால் தலையும் வல்ல புலி = இச்சொல்லில் காலாகவும் தலையாகவும் இருக்கிற முதலெழுத்தையும் கடைசி எழுத்தையும் சேர்த்தால்  வருகின்ற சொல் புலியைக் குறிக்கும்; முன் இரண்டும் வாளியாம் = முதலிரண்டு எழுத்துகளைச் சேர்த்தால்  வரும் வாளிஎன்னும் சொல்லைக் குறிக்கும் (வாளி = அம்பு); நான்கில் ஒன்று = இந்த நான்கு எழுத்துகளில் ஒன்று ; நல்லமதி =  நல்ல மாதங்களில் ஒன்று ! ஈது எனவே நாட்டு = இது தான் அந்த விடை என எனக்குச் சொல்வாயாக !

 

-----------------------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, துலை (ஐப்பசி),19]

{04-11-2020}

 

-----------------------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------

 

 

தனிப்பாடல் (510) மாங்குயில் மொழி கொண்ட வனிதையே !

மாநிலத்தில்   இல்லாத  புதுமையைக் கேளடி என் கண்மணி  !


பாலாற்றங்கரையில் ஒரு ஊர்;  சேண்பாகை என்று பெயர் ! அந்த ஊர் எப்படிப் பட்டது தெரியுமா ?  கோங்கு, சண்பகம், கொன்றை, பொற்கூவிளம், மா, தென்னை, வாழை, பலா  ஆகிய  மரங்கள் சூழ்ந்த சோலைகள் நிறைந்த வளமான ஊர் !

------------------------------------------------------------------------------------------------------------

 

இந்த ஊரை நிலைக்களமாக வைத்து, ஒரு புலவர் பாடல் ஒன்றைப் படைத்திருக்கிறார். பாடல் வாயிலாகப் புலவர் பேசுகிறார் !

------------------------------------------------------------------------------------------------------------

 

மாங்குயில் போன்ற இனிய குரல் வளம் மிக்க பெண்ணே ! கேள் ! இந்த மாநிலத்திலேயே இல்லாத  ஒரு புதுமை நிகழ்வு இவ்வூரில் நடந்தேறி இருக்கிறது ! ஆம் ! சேண்பாகையின் நெருங்கிய  தெரு வழியாக யாவரும் பார்க்கும் வேளையிலே ஒரு எலி மீது யானை ஒன்று அமர்ந்து செல்கிறது. அதன் அருகில் புல் சிதறிக் கிடக்கிறது ! என்ன வியப்பு இது ? இப்படியும் நடக்குமா ? ”

 

 இதோ அந்தப் பாடல் :-

------------------------------------------------------------------------------------------------------------

 

                                   மாங்கு   யின்மொழி   கொண்ட   வனிதையே

                                   .....மாநி   லத்தில்   இலாத  புதுமைகேள் !

                                   கோங்கு   சண்பகங்   கொன்றைபொற்   கூவிளம்

                                   .....கோதின்   மாதெங்கு   வாழை   வருக்கையார்

                                   பாங்கு   பால்கதி   சூழுஞ்சேண்   பாகைவாழ்

                                    .....பன்னும்   வீதியில்   யாவரும் பார்க்கவே

                                   வீங்கும்   ஓரெலி   மேலொரு   யானைகொல்

                                    ....வெம்பு   லிப்பல   கொண்டு   நடந்ததே !

------------------------------------------------------------------------------------------------------------

 

பாடலைச் சந்தி பிரித்து எழுதித் தருகிறேன் !

------------------------------------------------------------------------------------------------------------

 

                                   மாங்குயில்   மொழி   கொண்ட   வனிதையே !

                                    .....மாநிலத்தில்   இலாத   புதுமை   கேள் !

                                   கோங்கு   சண்பகம்,   கொன்றை,   பொற்கூவிளம்,

                                   .....கோது இல்  மா, தெங்கு, வாழை, வருக்கை  ஆர்,

                                   பாங்கு   பால்கதி   சூழும்   சேண்பாகை   வாழ்

                                    .....பன்னும் வீதியில்   யாவரும்   பார்க்கவே

                                   வீங்கும்   ஓர் எலிமேல்   ஒரு   யானை கொல் !

                         .          ....வெம்   புலிப் பல கொண்டு நடந்ததே !  

------------------------------------------------------------------------------------------------------------

எலியின் மேல் யானை அமரமுடியுமா ? அப்படி அமர்ந்தால், எலி  நசுங்கிக் கூழாகித் துறக்கம்  (சொர்க்கம்) போயிருக்காதா ? எப்படி அது இயலும் ? சொல்லுங்களேன் !

 

இந்த அழகிய பாடலை எழுதிய புலவர் பெயர் வரலாற்றில் பதிவாக வில்லை ! வரலாற்றின் பக்கங்களுக்குள் வராத எத்துனையோ புலவர்களுள் இவரும் ஒருவர் !

 

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, துலை (ஐப்பசி),24]

{09-11-2020}

-----------------------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளிடப் பெற்ற கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------

 

 

தனிப்பாடல் (509) சந்தப்பா ! விருத்தப்பா ! கலிப்பா !

அப்பப்பா ! என்னப்பா ! இந்தப்பா ?


சென்னையை அடுத்த திருப்போரூரில் முருகன் கோயில் ஒன்று இருப்பது  பலருக்கும் தெரியும்; ஒருசிலருக்குத் தெரியாமல் இருக்கலாம் ! இங்கு குடிகொண்டிருக்கும்  முருகன் மீது அன்பு பூண்ட ஒரு புலவர் பாடிய ஒரு பாடலைப் பாருங்கள் !

------------------------------------------------------------------------------------------------------------

 

                                சந்தப்பா  விருத்தப்பா  கலிப்பா  வெண்பா

                               .....தாழிசைப்பா,  கொச்சகப்பா,   தனிப்பா  வுக்கும்

                                விந்தைப்பா  வாகிய   கிரந்தப்  பாவும்

                                .....வெல்லப்பா   வதுபோல  விகடப்   பாவும்

                                எந்தப்பா   வுரைத்திடினு   மொருபே   றில்லா

.                               ....ஏதப்பா   விக்குநின   திணைப்பா   தத்தைக்

                                கந்தப்பா   முருகப்பா  போரி   வாழ்வே

.                               ....கையப்பா   மெய்யப்பா   காட்டப்   பாவே !

 

-----------------------------------------------------------------------------------------------------------

சற்றுக் கடினமான பாடலாகச்  சிலர்   கருதக்கூடும்.  எனவே பாடலைச் சந்தி பிரித்துத் தருகிறேன் !

------------------------------------------------------------------------------------------------------------

 

                               சந்தப்பா,   விருத்தப்பா,   கலிப்பா,   வெண்பா !

                              .....தாழிசைப்பா,  கொச்சகப்பா,   தனிப்பாவுக்கும்,

                               விந்தைப்   பாவாகிய   கிரந்தப்   பாவும்,

                              .....வெல்லப்பா   ஆவதுபோல்   விகடப் பாவும்,

                               எந்தப்பா   உரைத்திடினும்   ஒரு பேறு   இல்லா,

                               .....ஏதப்    பாவிக்கு   நினது   இணைப்பாதத்தை,

                               கந்தப்பா !   முருகப்பா !  போரிவாழ்வே,

                               .....கையப்பா,   மெய்யப்பா,  காட்டு,   அப்பாவே !

----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:-

 -----------------------

சந்தப்பா இசைத்தாலும்,  கலிப்பா, வெண்பா, கலித்தாழிசைப்பா, கொச்சகக் கலிப்பா  எழுதி  நின் திரு முன்னே பாடினாலும், இவற்றுள் வாராத வேறொரு  தனிப்பாடல் எழுதி இசைத்தாலும்,  கிரந்த எழுத்துகளைக் கொண்டு புதுவகைப்  பாடல் எழுதி இசைத்தாலும், அல்லது வெல்லம் போல் இனிக்கக் கூடிய நகைச்சுவைப் பாடலொன்று இசைத்தாலும், எந்தப் பாடலை உன் திரு முன்னே பாடினாலும் , ஒருவகையான பயனும் மில்லாத, குற்றங்குறைகள் நிறைந்த இந்தத் தீவினையாளனுக்கு, திருப்போரூரில்  (போரி)  குடிகொண்டிருக்கும்  எந்தன் கந்தப்பனே ! எனதருமை முருகப்பனே ! நின் திருப்பாதங்களைக் காட்டியருள்வாய் ! அடைக்கலம் அளிக்கும் நின் திருக்கரத்தையும் திருமேனியையும் எனக்குக் காட்டி அருள்வாய் ! என் அப்பனே திருமுருகா !

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருளுரை:-

 ---------------------------------------------

சந்தப்பா = சந்தங்கள் நிறைந்த பாடல் ; விருத்தப்பா = ஆசிரிய விருத்தப் பாடல்;  தாழிசைப்பா = கலித் தாழிசைப்பாடல்; கொச்சகப்பா = தரவுக் கொச்சகக் கலிப்பா;  விந்தைப்பா = விந்தை மிக்க பாடல்; கிரந்தப்பா = , , க்ஷ, , ஹ போன்ற கிரந்த எழுத்துகளைப் பூட்டி எழுதிய பாடல்;  வெல்லப்பா = வெல்லம் போல் இனிக்கும் பாடல் ; விகடப்பா = நகைச்சுவைப் பாடல்;  எந்தப்பா உரைத்திடினும் = எந்தப் பாடலை எழுதி உன் முன்னே இசைத்தாலும் ;  ஒரு பேறு இல்லா = ஒருவகையான பயனும் இல்லாத ; ஏதம் = குற்றம்; பாவிக்கு = இந்தத் தீவினையாளனுக்கு; நினது = உன்னுடைய ; இணைப்பாதத்தை = இரு திருவடிகளையும் ; போரி வாழ்வே = திருப்போரூரில் வாழும்; கந்தப்பா = கந்தப்பனே ! ; முருகப்பா = முருகப்பனே ! ; காட்டு அப்பாவே = எனக்குக் காட்டி அருள்வாய் என் அப்பனே திருமுருகா !


அப்பா, அப்பா என்ற  ஒலி  திரும்பத் திரும்ப வருகின்ற இப்பாடலும் சந்தப்பா வகையைச் சார்ந்ததே !  இத்தகைய அருமையான பாடலைப் புனைந்து  முருகனை வணங்கிய இப்பெரும் புலவர் யார் என்பது  வரலாற்றில் பதிவாக வில்லை !  வரலாற்றில் பதிவாகாத எத்துணையோ புலவர்களுள் இவரும் ஒருவராக  நம் நெஞ்சில் நிறைந்திருக்கிறார் ! 

 

நாமும் இவரைப் போல தமிழில் ஆற்றலை வளர்த்துக் கொண்டோமானால், அதுவே இவரைப் போன்ற தமிழ்ப் பெருமக்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாக அமையும்  !

 

-------------------------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, துலை (ஐப்பசி),26]

{11-11-2020}

-----------------------------------------------------------------------------------------------------------

 

தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------------