name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: வீரராகவர் பாடல் (05) வாழுமிலங்கைக் கோமானில்லை !

சனி, ஏப்ரல் 30, 2022

வீரராகவர் பாடல் (05) வாழுமிலங்கைக் கோமானில்லை !

தம்பிக்கு எதிராக கைகளில் வில்லை ஏந்திடலாமா ?

-----------------------------------------------------------------------------------------------------

 

சீர்காழிப் பகுதியை ஆண்ட சிற்றரசன் அபிராமன். அவனுடைய தம்பி அபிராமனுக்கு எதிராகச் செயல்பட்டதால், அவனுடன் போரிட்டு அடக்க முடிவு செய்து, கைகளில் வில்லுடன் போர்க்களம் புக முற்பட்டான் அபிராமன் !

 

இதைக் கேள்விப்பட்ட வீரராகவர், அபிராமனிடம் சென்று பரதனுக்கு எதிராக இராமன் போர் தொடுத்ததில்லை. அபிராமன் தன் தம்பிக்கு எதிராக வில்லைக் கையில் எடுக்கலாமா என்று சொன்ன நல்லுரை அபிராமனின் போர் முடிவைக் கைவிடச் செய்தது !

 

சிற்றரசன்  அபிராமனை இராமாயணக் கதை இராமனோடு ஒப்பிட்டு வீரராகவர் பாடிய பாடல் இதோ:

 

-----------------------------------------------------------------------------------------------------

 

வாழுமிலங்கைக் கோமானில்லை, மானில்லை !

ஏழுமரா மரமோ வீங்கில்லை - ஆழி

அலையடைத்த செங்கை யபிராமா வின்று

சிலையெடுத்த வாறெமக்குச் செப்பு.

 

-----------------------------------------------------------------------------------------------------

 பொருளுரை:

-------------------------

 

(அபி) ராமா ! நீ இலங்கைக் கோமான் இராவணனும் இல்லை; மாய மானை அனுப்பி சீதாபிராட்டியை ஏமாற்றியவனும் இல்லை; ஏழு மரா மரங்களுக்குப் பின்புறம் ஒளிந்திருந்து அம்பு விட்டு வாலியைக் கொன்றவனும் இல்லை ! நீ இராமனில்லை;  உன் பெயர் அபிராமன். சீர்காழி நகருக்குள் கடல் அலை பெருகி வந்தமையால், அதைத் தடுக,  தடுப்புச் சுவர் அமைத்து மக்களைக் காத்தவன் நீ ! அத்தகைய மாட்சிமை பொருந்திய நீ உன் தம்பிக்கு எதிராக  உன் கைகளில்  சிலையை (வில்) எடுக்கலாமா ? சொல் !

 

------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------

 

வாழும் இலங்கைக் கோமான் இல்லை = இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் நீ இராவணனுமில்லை  ; மானில்லை = மாயமானை அனுப்பி யாரையும் ஏமாற்றியவனும் இல்லை ; ஏழு மரா மரமோ ஈங்கு இல்லை = ஏழு மரா மரங்களும் இங்கு இல்லை ; ஆழி அலை அடைத்த = கடல் அலைகள் பெருகி வந்த போது அதற்குத் தடுப்புச் சுவர் எழுப்பி காப்புச் செய்த நீ (இராமாயணக் காலத்து இராமனில்லை; இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் அபிராமன்)  ; செங்கை அபிராமா = சிவந்த கைகளையுடைய அபிராமா ; இன்று = இத்தகைய மாண்புடைய நீ இப்பொழுது ; சிலை எடுத்த ஆறு = தம்பிக்கு எதிராக உன் கைகளில் வில்லை ஏந்தியது ஏன் ; எமக்குச் செப்பு = எனக்குச் சொல்வாயாக !

 

-------------------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 17]

{30-04-2022}

-------------------------------------------------------------------------------------------------------



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .