மன வயிரம் கொள்ளல் மாண்பு தராது !
முற்றிலும் வெண்பாக்களால் யாக்கப் பெற்ற நூல் நான்மணிக்கடிகை. கடவுள் வாழ்த்து உள்பட இந்நூலில் மொத்தம் 106 செய்யுள்கள் உள்ளன . கடைச்சங்க காலத்ததான இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு வகையைச் சார்ந்தது ! இதிலிருந்து ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------------------
பாடல்: எண் (13).
-----------------------------------------------------------------------------------------------------------
கன்றாமை வேண்டுங்  கடிய  பிறர்செய்த
நன்றியை நன்றாக்  கொளல்வேண்டும் – என்றும்
விடல்வேண்டுந்  தங்கண்  வெகுளி  அடல்வேண்டும்
ஆக்கஞ்  சிதைக்கும்
வினை.
-----------------------------------------------------------------------------------------------------------
பொருள்:
----------------
பிறர் செய்கின்ற அஞ்சத்தக்கக, கடுஞ் செயல்களை நினைந்து
நினைந்து மனதில் கறுவாமை  (மன
வயிரம் கொள்ளாதிருத்தல்)
வேண்டும்
!
பிறர் செய்யும் நன்மைகளை மறவாமல் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் !
தம்மிடம் உண்டாகும்  பெரும்
சினத்தை  வளரவிடாமல்
மனதைவிட்டு நீக்குதல் வேண்டும்
!
அதுபோல், முற்போக்கான பயன் தரும் செயல்களைக் கெடுத்து  அழித்துவிடும் தவறான  முனைவுகளை முற்றாக ஒழித்துவிட வேண்டும் !
------------------------------------------------------------------------------------------------------------அருஞ்சொற்பொருள்:
------------------------------------
கன்றாமை = நினைத்து நினைத்துப் புழுங்கி மன வயிரம் கொள்ளாதிருத்தல்; கடிய = பிறர்
செய்யும் அஞ்சத்தக்க கடுஞ் செயல்களை ; நன்றாக் கொளல் = மறவாமல்
நினைவில் இருத்துதல்; விடல் வேண்டும் = விட்டுவிட
வேண்டும்; வெகுளி
= பெருஞ்சினம்;  அடல் வேண்டும் = ஒழித்தல் வேண்டும்; ஆக்கம் = முற்போக்கான
பயன் தரும் செயல்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2052,கும்பம் (மாசி),20]
{04-03-2021}
-----------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .