name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கவிதை (53) (1984) கதிரவன் ஒளியில் காரிருள் மறையும் ! (குற்றம் புரிந்தவன்)

சனி, அக்டோபர் 26, 2019

கவிதை (53) (1984) கதிரவன் ஒளியில் காரிருள் மறையும் ! (குற்றம் புரிந்தவன்)





      கொத்து (01)                                                                         மலர் (024)
---------------------------------------------------------------------------------------------------------
              குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
                                     கொள்வது என்பதேது ?
                                                (ஆண்டு 1984)
----------------------------------------------------------------------
                 

                 கதிரவன்  ஒளியில்  காரிருள்  மறையும்
                    கருமுகில்  மறையாது ! --  முகிலின்
                       கருமையும்  விலகாது !

                 மதியுமிழ்  நிலவில்  மல்லிகை  மலரும்
                    மரையிதழ்  மலராது ! --  இதழில்
                       மதுமணம்  கமழாது !

                 உதிரும்  பனிமழை  ஒருமடு  நிறையும் !
                    ஊருணி  நிறையாது ! --  பயன்மிகு
                       நீர்நிலை  ஆகாது !

                 மதுவின்  பிடியில்  மயக்கம்  பெருகும் !
                    மகிழ்ச்சியும்  பெருகாது ! – வளமுறு
                       வாழ்க்கையும்  அமையாது !

                 குழலின்  இனிமையில்  கோநிரை  மயங்கும் !
                    கொடும்புலி  மயங்காது !  -- புலியின்
                       குணங்களும் உறங்காது !

                 அழலின்  சுடரில்  அடவியும்  கருகும் !
                    அறிவொளி  கருகாது !  -- அறிவின்
                        ஆற்றலும்  உருகாது !

                 கழனியில்  செந்நெல்  கதிர்மணி  சொரியும் !
                    காழகம்  சொரியாது !  -- நீலக்
                        கற்களும்  விளையாது !

                 பழகிட  நெஞ்சம்,  மஞ்சம்  கிடைக்கும் !
                    பாசம்  கிடைக்காது !  -- அன்புப்
                       பரிவும்  இருக்காது !

                 அறுசுவை  உணவு  நலம்பெற  உதவும் !
                    அறிவுற  உதவாது !  -- உலகியல்
                       அறிந்திட இயலாது !

                 குறுமணல்  வயலில்  கரும்புகள்  வளரும் !
                     குடைவரை  வளராது !  -- கொண்டல்
                        கொஞ்சிட  வாராது !

                 சிறுகயம்  பெருகும்  புனல்மிக  இனிக்கும் !
                     செந்நீர்  இனிக்காது !  -- வழியும்
                         கண்ணீர்  சுவைக்காது !

                 நறுமண  மதுவும்  நங்கையர்  உறவும் !
                     நல்கிடும்  இன்பம்மிகும் !  -- வாழ்வும்
                         நலிந்திடத் துன்பமுறும் !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

-------------------------------------------------------------------------------------------------------------------------




2 கருத்துகள்:

  1. அருமை, அருமை, நயம் மிகுந்த சொற்களும், கருத்தாழமும் கொண்ட இனிய கவிதை. நீண்ட நாட்கள் கழித்து நல்ல கவிதையை வாசித்ததில் மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைத்தியநாதன் வேதரெத்தினம்21 அக்., 2019, PM 10:00:00

      முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதை ! இப்போதெல்லாம் கவிதை எழுத நேரம் கிடைப்பதில்லை ! கவிதையைச் சுவைத்து மகிழ்வது ஒரு கலை ! அந்தக் கலையுள்ளம் தங்களுக்கு இருக்கிறது ! இத்தகைய கலையுள்ளம் உடையவர்கள் கவிஞர்களாகத்தான் இருப்பார்கள் ! தாங்களும் ஒரு கவிஞர் என்பதை அடையாளம் காட்டுகிறது தங்கள் கருத்துரை ! மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் !

      நீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .