குளத்துக்கு அணி என்ப கொள்ளை எழில் தாமரைப் பூ !
-----------------------------------------------------------------------------------------------------------
கடைச்சங்க காலமான கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இலக்கியம் நான்மணிக் கடிகை என்னும் நூல். கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்களைக் கொண்டிருக்கும் இந்நூலில் அனைத்துப் பாடல்களுமே வெண்பாக்களால் ஆனவை ! விளம்பி என்னும் ஊரைச் சேர்ந்த நாகனார் என்னும் புலவர் படைத்துள்ள இந்நூலில் இருந்து ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------------------
பாடல்: எண் (11).
-----------------------------------------------------------------------------------------------------------
நிலத்துக்  கணியென்ப  நெல்லுங்  கரும்பும்;
குளத்துக்  கணியென்ப  தாமரை;
பெண்மை
நலத்துக்  கணியென்ப  நாணந்  தனக்கணியாம்
தான்செல்  உலகத்
தறம். 
-----------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்;
-----------------------------------------------------------------------------------------------------------
நிலத்துக்கு  அணியென்ப  நெல்லும்  கரும்பும்;
குளத்துக்கு  அணியென்ப  தாமரை;  பெண்மை
நலத்துக்கு அணியென்ப  நாணம், தனக்கு
அணியாம்
தான்செல்  உலகத்து
அறம்.
-----------------------------------------------------------------------------------------------------------
பொருள்:
---------------
பச்சைப் பசேலென்று காணப்படும்   நெற்பயிரும், கரும்பின் பயிரும்
வயலுக்கு அழகென்று உலகத்தார் சொல்வார்கள் !
தாமரைக் கொடியும் இலையும் மலரும்  நிறைந்து இருக்கும் கண் கொள்ளாக் காட்சியே குளத்திற்கு  அழகு என்றும் உலகத்தார்  சொல்வார்கள் !
பெண்மையே அழகுதான்;
எனினும் பெண்களிடம் காணப்படும் நாணம் தான் உயர்வான அழகு என்றும்
உலகத்தார்  சொல்வார்கள் !
அதுபோல், மனிதன் செய்கின்ற அறச் செயல்கள் தான்  அவன்  எங்கு
சென்றாலும் அவனுக்கு மதிப்பு மிக்க அழகைத் தருகிறது  என்றும் உலகத்தார் சொல்வார்கள் !
------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------
நிலத்துக்கு = வயலுக்கு;
அணி
= அழகு; குளத்துக்கு = நீர்
நிறைந்த பொய்கைக்கு;  பெண்மை
நலத்துக்கு = பெண்மைக்கு; தான் செல் உலகத்து = தான்
செல்லும் இடங்களில்; அறம்
= அறச் செயல்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2052,கும்பம்(மாசி),20]
{04-03-2021}
-----------------------------------------------------------------------------------------------------------


