name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பெயரியல் ஆய்வு
பெயரியல் ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெயரியல் ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜனவரி 28, 2020

பெயரியல் ஆய்வு (02) - கிருஷ்ணசாமி !

கருப்புச்சாமி  கசக்கிறது ! கிருஷ்ணசாமி இனிக்கிறது !



தம் குழந்தைகளுக்குப் பெயர்  சூட்டுவதற்குப்  பெயரைத் தெரிவு செய்யும் பெற்றோர் சில வழிவகைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.  மூன்று  தலைமுறைகளுக்கு முன்பு பெற்றோர்கள்  தம் குழந்தைக்கு அதன் தாத்தா / பாட்டிப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தனர். இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய பெற்றோர் தங்களுக்குத் தெரிந்த கடவுள் பெயர்களைச் சூட்டி வந்தனர் !


சென்ற தலைமுறைப் பெற்றோர் ஏதாவதொரு வகையில் தங்கள் மனம் கவர்ந்த பெயர்களையோ, அழகிய தமிழ்ப் பெயர்களையோ தெரிவு செய்து சூட்டினர். இப்போதைய தலைமுறையினர் இணைய தளங்களில் பெயர்களைத் தேடி, அதன் பொருளைப் புரிந்து கொள்ளாமலேயே குழந்தைகளுக்குச் சூட்டுகின்றனர். !


குழந்தைக்குப் பெயர் வைப்பதென்பது, அக்குழந்தைக்கான அடையாளம். பெயர் தரும் அடையாளத்தை வைத்துத் தான் ஒரு குழந்தையை நாம் இனம் காண முடியும். மக்களுக்குப் பெயர் சூட்டி அடையாளம் காணும் முறை, தொன்று தொட்டு இருந்து வருகிறது !


ஒரு ஊரில் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, இரு குழந்தைகளுக்கு, முறையேகிருஷ்ணசாமி” “கறுப்பன்என்று பெயர் சூட்டி இருந்தனர். முன்னது வடமொழிப் பெயர். பின்னது தமிழ்ப் பெயர். இவ்விரண்டு பெயர்களில்கிருஷ்ணசாமிஎன்னும் பெயர் கடவுளின் பெயர் என்று தான் தெரியுமே தவிர அந்தப் பெயரின் பொருள் 75 % தமிழர்களுக்கு இன்றும் கூடத் தெரியாது !


கறுப்பன்என்னும் பெயர் வெளிப்படையாகப் பொருளை உணர்த்துகிறது. பொருள் தெரியாப் பெயர்கள் எல்லாமே தமிழர்களுக்கு அழகான பெயர்களாகத் தெரியும். வெளிப்படையாகப் பொருள் தெரியும் பெயர்கள் எல்லாம் அழகற்ற பெயர்களாகத் தமிழர்கள் மதிப்பிட்டனர் ! இன்றும் இந்த நிலை தான் தமிழ் மக்களிடையே நிலவி வருகிறது !


பெயர் தான் ஒரு மனிதனின் இனத்தையும், பண்பாட்டையும், தாய்மொழியையும் உணர்த்தும் கருவி. ஆனால் இதை அறியாத தமிழகத்துப் பெற்றோர்கள்  தம் குழந்தைகளுக்கு மனம் போன போக்கில் பெயர் வைக்கிறார்கள். பார்த்தசாரதிவடமொழிப்பெயர்; எலிசபெத்ஆங்கிலப் பெயர்; போஸ்வங்காளப் பெயர்; காந்திகுசராத்திப் பெயர். சிவாஜிமராட்டியப்பெயர்; சென்னகேசவன்தெலுங்குப் பெயர்; இப்படியெல்லாம் தம் குழந்தைக்குப் பெயர் வைப்பது நம் தமிழர்கள் தான் ! தமிழில் பெயர் வைப்பது அழகாக இருக்காது என்பது அவர்கள் கணிப்பு !


கிருஷ்ணசாமி என்னும் வடமொழிப் பெயரின் பொருள் என்ன ?  கிருஷ்ணம் என்றால் கறுப்பு என்று பொருள்.  கறுப்பு + சாமி = கறுப்புச்சாமி = கருப்புச்சாமி. கருப்புச்சாமி என்ற பெயர் அழகற்றதாகத் தோன்றும் தமிழர்களுக்கு, அதே பொருள் கொண்டகிருஷ்ணசாமிமட்டும் அழகான பெயராகத் தோன்றுகிறது !


கிருஷ்ணசாமிஎன்றாலும் திருமால் தான்; “கருப்புச்சாமிஎன்றாலும் திருமால் தான். வடமொழித் திருமாலை அழகானவராகவும், தமிழ்த் திருமாலை அழகற்றவராகவும் பார்க்கும் தமிழர்களின் கண்ணோட்டமே விந்தை தான் !


கிருஷ்ணம் = கருப்பு; சாமி = கடவுள். கருப்பு நிறமாக இருப்பதாக்க் கதைகளில் சொல்லப்படும்  கடவுள் யார் ? திருமால் !  தமிழில்கார்என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன . அவற்றுள்கருப்புஎன்பதும் ஒன்று. கருப்பு நிறக் கடவுளைக்கார் வண்ணன்என்று சொல்வது சரிதானே !


எனவேகிருஷ்ணசாமிஎன்னும் கடவுள் பெயரைத் தம் குழந்தைக்கு வைக்க விரும்பும் பெற்றோர் இனி மனம் சுளிக்காமல்கார் வண்ணன்என்று பெயர் சூட்டலாம் !


                            ---------------------------------------------------------------------
        
                                      கிருஷ்ணசாமி.......= கார்வண்ணன்,
                                      கிருஷ்ணன்.............= முகில் வண்ணன் (கரிய நிற
                                                                                மேகம் போன்றவன்)
                                      கிருஷ்ணமூர்த்தி..= கடல் வண்ணன்,
                                      கிருஷ்ணராஜ்.........= கார் வேந்தன்


                            ---------------------------------------------------------------------


பின் குறிப்பு: 

தமிழ் நெடுங் கணக்கில் முது பண்டைக் காலத்தில் தோன்றியதுகரம். அதற்குப் பின்பு தோன்றியதேகரம். “கரம் தோன்றாத காலத்தில் அதன் தொழிலைகரமே ஆற்றி வந்தது. முரிதல் > முறிதல் (வளைதல்); கருப்பு > கறுப்பு (கரிய நிறம்) சான்று: பாவாணரின் வேர்ச் சொற் கட்டுரைகள் நூல், பக்கம்,8


----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)11]
{25-01-2020}

-----------------------------------------------------------------------------------------------------------
     
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------



பெயரியல் ஆய்வு (01) - சரவணன் !

நாணற் பொய்கையருகில் பிறந்தவனா சரவணன் !


தமிழர்கள் எத்தனையோ வகைகளில் தங்கள் மூலத்தை (ORIGINALITY) இழந்து விட்டார்கள். அந்த வகையில் தங்கள் பெயரும் அதில் அடங்குகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. தாங்கள் சூட்டிக் கொண்டிருக்கும் பெயர் தமிழ்ப் பெயரா என்பது பற்றிய புரிதல் கூடப் பெரும்பான்மை மக்களுக்கு இல்லை. அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப் போகும் பெயர் சரவணன் !


சரம்என்றால் வடமொழியில் நாணல் என்று பெயர். “அணன்என்றால் பொருந்தியவன். ஒரு குளக்கரையில் நாணற் புல் மண்டிக் கிடந்ததாம். அந்த நாணற் புற்களுக்கு இடையே ஒரு குழந்தை கிடந்ததாம். அதைக் கொண்டு வந்து மலைமகள் (பார்வதி தேவி) வளர்த்தாளாம். அந்தக் குழந்தையே வளர்ந்துசரவணன்என்னும் பெயர் தாங்கி முருகனாகக் குன்று தோறும் குடி கொண்டு விளங்கினானாம் !


தமிழர்களை நம்ப வைக்க வடமொழியாளர்கள் கட்டி விட்ட கதைகளில் இதுவும் ஒன்று. இப்பொழுது தெரிந்து கொண்டிருப்பீர்களே ! சரவணன் என்றால் முருகன் என்று பொருள். “சரவணன்என்பது தமிழ்ச் சொல் அன்று என்பதும் உங்களுக்கு விளங்கி இருக்கும் !


சரி ! சரவணன் என்னும் வடமொழிப் பெயரைத் தமிழில் எப்படி அழைக்கலாம் ? ”நாணற் செல்வன்நேரடி மொழி பெயர்ப்புச் சொல். வேறு வகையில் எப்படி அழைக்கலாம் ? சரவணன் என்பது முருகனைக் குறிக்கும் சொல் அல்லவா ? முருகன் குன்றுகளில் (மலைகளில்) குடிகொண்டவன் என்பது உங்களுக்குத் தெரியும். அறுபடை வீடுகளும் குன்றின் மீதான கோயில்கள் அல்லவா ?


தமிழில் மலை என்பதைக் குறிக்கும் சொல்சிலம்பு”.  மலை என்றாலும் குன்று என்றாலும் ஒன்று தானே ! குன்றில் குடி கொண்ட முருகன், சிலம்பின் செல்வன் அல்லவா ! அதாவது சிலம்பில் குடிகொண்ட செல்வன் ! ஆகையால் சரவணன் என்னும் வடமொழிப் பெயரைத் தமிழில்சிலம்புச் செல்வன்என்று அழைக்கலாம்.


-----------------------------------------------------------------------------------------------------------

சரவணன்.........................= சிலம்புச் செல்வன்
சரவண மூர்த்தி.............= குன்றக் குரிசில் (குன்றின் தலைவன்)
சரவணக் குமார்............= குன்றவாணன்  (குன்றில் வாழ்பவன்)

-----------------------------------------------------------------------------------------------------------

உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் சிலம்புச் செல்வன் என்று பெயர் சூட்டுங்கள் ! பெயரன் பிறந்தாலும் இதே பெயரைச் சூட்டுங்கள் !


-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)11]
{25-01-2020}


------------------------------------------------------------------------------------------------------------
   
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------