name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பல்வகை
பல்வகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பல்வகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 23, 2020

பல்வகை (22) பிறரை மதிக்கக் கற்றுக் கொள்வோம் !

அனைவரையும் மதிப்போம் ! அப்பொழுது தான் நாமும் மதிக்கப்படுவோம் !




எதிரில் வருபவர் நமக்கு அறிமுகம் ஆனவராக இருந்தால் அவருக்கு வணக்கம் சொல்கிறோம். அவரும் நமக்கு வணக்கம் சொல்கிறார். இது தான் பண்பாடு. நாம் வணக்கம் சொன்னாலும் சிலர் நமக்கு திரும்ப வணக்கம் சொல்வதில்லை. இத்தகைய பண்பாடற்ற செயல் சிலரிடம் இருக்கத்தான் செய்கிறது !

யார் இத்தகைய பண்பாடில்லாத மனிதர்கள் ? (01) மேட்டுக் குடிமக்கள் எனத் தம்மை கருதிக் கொண்டிருக்கும் தன்முனைப்பு (ஆணவம்) எண்ணம் கொண்டவர்கள் (02) நம்மை விட எல்லா வகையிலும்  தாம் உயர்ந்த நிலையில்  இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் சில அதிகாரிகள் !

இத்தகைய பண்பாடற்ற மனிதர்களை நாம் திருத்த முடியாது. அவர்களாக உணர்ந்து திருந்தினால் தான் உண்டு. பாவம் ! இந்தபெரியமனிதர்களை விட்டுவிடுவோம் !

முகநூலில் நாம் ஒருகட்டுரை எழுதுகிறோம். அதைப் பலர் படிக்கிறார்கள். படித்துவிட்டு எதுவும் சொல்லாமல் சிலர் கடந்து போய்விடுகிறர்கள். “SEEN BY” என்று காணப்படும் குறிப்பைச் சொடுக்கிப் பார்த்தால், யார் யார் இப்படிக் கடந்து போனவர்கள் என்பதை முகநூல் பட்டியல் இட்டுக் காட்டிவிடுகிறது !

நம்முடைய இடுகைக்கு, தாம்விழைவு” (LIKE) கொடுத்தாலோ, அல்லது பின்னூட்டம் (COMMENTS) இட்டாலோ, தம் தரம் தாழ்ந்து விடும் என்ற மிதப்பு எண்ணம் கொண்ட இத்தகையமாமனிதர்களையும் நாம் திருத்த முடியாது. நம் இடுகையைப் படித்துக் கருத்துச் சொல்வதால்  அவர்களது தரம் தாழ்ந்து போகிறது என்றால், அவர்கள் உயரத்திலேயே இருக்கட்டும் ! அவர்களையும் விட்டு விடுவோம் !

இந்தமாமனிதர்கள் அல்லாமல் வேறு சிலர் நமது இடுகைக்குவிழைவு” (LIKE) தருகிறார்கள்; அல்லதுகருத்துரை” (COMMENTS) சொல்கிறார்கள்; அல்லதுபகிர்வு” (SHARE) மட்டும் செய்கிறார்கள் !

இரண்டொரு சொற்களில் கூட கருத்துரை (பின்னூட்டம்) எழுத நேரமில்லாமல் அல்லது மடிமை (சோம்பல்) கொண்டுவிழைவு” (LIKE) மட்டும் தருபவர்களையும் விட்டுவிடுவோம். அவர்களுக்கு என்ன மிகுதேவையோ (அவசரம்) “கருத்துரை” (COMMENTS) சொல்ல நேரமில்லை !

சிலர்பகிர்வு” (SHARE) மட்டும் செய்கிறார்கள். அவர்கள் கருத்துரை (COMMENTS) எழுதாவிட்டாலும் நம் வாழ்த்துக்குரியவர்கள். அவர்களை மனதிற்குள்ளேயே வாழ்த்துவோம். இவ்விரு வகையினரைத் தவிர்த்து, கருத்துரை (COMMENTS) எழுதுபவர்கள், தம் நேரத்தைச் செலவிட்டு, நம் இடுகையை முழுவதுமாகப் படித்துப் பார்த்து, ஒரு வரியிலோ அல்லது பல வரிகளிலோ தம் கருத்தினை வெளிப்படுத்துகிறார்கள் !

இவ்வாறு கருத்துரை (COMMENTS) எழுதுபவர்கள் நமது நன்றிக்கு உரியவர்கள். இடுகை செய்யும் நாம், நண்பர்களின் பின்னூட்டங்களையும் (கருத்துரையையும்) முழுமையாகப் படிக்க வேண்டும். என்ன சொல்கிறார்கள் என்பதை உள்வாங்கி,  அவர்களுக்கு அன்புடன் மறுமொழி (பதில்) தரவேண்டும் !

நமது மறுமொழி (பதில்), நேர்வுக்குத் தக்கபடி, ஒருவிழைவு” (LIKE) தருவதன் மூலமும் இருக்கலாம்; ஒரு சொல்லிலும் அமையலாம்; ஒரு வரியிலும்  அமையலாம்; பல வரிகளிலும்  அமையலாம். நமக்கு வணக்கம் சொல்பவருக்கு நாம் ஆற்றும் எதிர்வினையாக வணக்கம் சொல்வதுபோன்றது இச்செயல். எந்தவொரு வகையிலும் நமது நன்றியை அவருக்கு உணர்த்தாவிட்டால், அவரை நாம் மதிக்கவில்லை என்பதாக ஆகிவிடும் !

பல பின்னூட்டங்கள் (கருத்துரைகள்) இடுகையாளரின் எதிர்வினையின்றி (NIL RESPONSE) மொட்டை மரமாகக் காட்சி அளிப்பதைக் கண்டு மனம் வருந்தி இந்த இடுகையைச் செய்திருக்கிறேன். இடுகை செய்யும் அனைத்து நண்பர்களும், தம்மை மதித்துக் பின்னூட்டம் (கருத்துரை) இட்டவர்களை மதியுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன் !

அனைவரையும் மதிப்போம் ! அப்பொழுது தான் நாமும் மதிக்கப்படுவோம் !


----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)06]
{20-01-2020}
----------------------------------------------------------------------------------------------------------

     தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------

புதன், ஜனவரி 22, 2020

பல்வகை (21) முகநூல் - பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத தமிழர்கள் !

பொழுது போக்குவதற்கென்றே முகநூலில் உலவும் மடிமையாளர்கள்  !



முகநூல் என்பது சிற்றூர்களில் கூடும் சந்தை  போன்றது. என்னிடம் உள்ள பட்டறிவை (அநுபவம்), அறிவுச் செல்வத்தை  நான் அங்கு உங்கள் பார்வைக்கு வைக்கலாம். உங்களுக்குத் தேவையானவற்றை நீங்கள் வாங்கிச் செல்லலாம். உங்களிடமுள்ள பட்டறிவை, அறிவுச் செல்வத்தை நீங்கள் அங்கு பார்வைக்கு வைக்கலாம். அவற்றிலிருந்து எனக்குத் தேவையானவற்றை நான் வாங்கிக் கொள்ளலாம். சந்தைக்கும் முகநூலுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, சந்தையில் பணம் புழங்கும்; முகநூலில் கொள்வன, கொடுப்பன  எல்லாமே இலவயம்; அவ்வளவு தான் !


இத்தகைய பயன் மிகுந்த முகநூலைப் பலருக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிவதில்லை. சிலர் பாடல் (கவிதை) என்ற பெயரில் ஏதேதோ எழுதிப் படைக்கிறார்கள்; நேற்று எழுதிய பாடலை இன்று கேட்டால், எழுதியவருக்கே சொல்லத் தெரியாது. காற்றில் பறந்து செல்லும் எருக்கம் பஞ்சுகளாகப் பாடல்கள் முகநூலில் பறக்கின்றன !


வேறு சிலர், தமிழ் நாட்டில் பிறந்து, தமிழைப் படித்து, தமிழால் வளர்ந்து, தமிழால் அறிவூட்டம் பெற்று, “கவிஞர்என்ற பட்டத்தையும் சூட்டிக்கொண்டுசப்பானிய மொழிக்குச் சேவை செய்கிறார்கள். யார் இவர்கள் ? இவர்கள் தான்ஹைக்கூகவிஞர்கள் ! உண்பது தமிழ்ச் சோறு; உழைப்பது சப்பானிய மொழிக்கா ?


ஹைக்கூஎன்று சொல்ல இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது ? “துளிப்பாஎன்று சொல்லலாம்; அல்லதுசிந்தியல் தேன்பாஎன்று சொல்லலாம் ! இரண்டையும் விடுத்துஹைக்கூவாம் ! ஹைக்கூ ! ”ஹைக்கூவைப் பரப்புவதற்குப் பத்துக்கும் மேற்பட்ட முகநூற் குழுக்கள் ! தாய்மொழி உணர்வு இவர்களிடம் துளிக்கூட இல்லையே ! தாய்மொழி மீது பற்று இல்லாதவர்கள் தமிழர்களென்று எப்படிச் சொல்லிக் கொள்வது ! உலகம் இவர்களைப் பார்த்து நகைக்காதா !


அறிவைத் தேட வேண்டிய மாந்தர்கள் பொழுது போக்குவதற்கென்றே  நூற்றுக் கணக்கான முகநூற் குழுக்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட முகநூற் குழுவின் பக்கத்தைத் திறந்தாலே போதும் ! நம் கண்களில் படுபவைஹாய் மச்சான் ! எப்பிடி இருக்கே”?,   மாப்ளே ! நேத்திக்கு படம் பாத்தேன். என்னமா நடிச்சிருக்கான் அந்த ஒல்லிப் பிச்சான். சூப்பர்ரா” ! இன்னும் இவை போன்ற திருவாசகங்கள் தான் ! தமிழ் நாடு ஒருப்படுமா (உருப்படுமா) ?


தமிழுக்குச் சேவை (?) செய்வதற்கென்றே பல முக நூற் குழுக்கள் இயங்குகின்றன. ஒவ்வொன்றும் ஒரு விதம் ! ஒருவர் ஐயம் கேட்கிறார், “ஐயா பரிபாடலில் எத்தனை முறை சோறு என்ற வார்த்தை வருகிறது ?”. இதைத் தெரிந்து கொண்டு இவர் என்ன செய்யப் போகிறார் ? வார்த்தைஎன்பது தமிழ்ச் சொல் அன்று என்பதைக் கூடத் தெரியாத இவர்  பரிபாடலுக்குள் ஏன் நுழைய வேண்டும் ?


முகநூல் நண்பர் யாருக்காவது பிறந்த நாள் வந்து விட்டால் போதும் ! வாழ்த்து மழை தான் ! பெய்யும் மழை தமிழ் மழையாக இருந்தால் போற்றலாம்; ஆங்கில மழையாகவன்றோ அவை இருக்கின்றன ! HAPPY BIRTH DAY என்னும் சொற்களுடன் விதவிதமான படங்களை வெளியிட்டு, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இவர்கள் எல்லாம் இங்கிலாந்தில் பிறந்த எலிக் குஞ்சுகள் போலும் ! தமிழைப் புறக்கணிக்கும் இந்த வேக்காடு குறைந்த சோற்றுப் பருக்கைகள், நான்கு நிமிடமாவது ஆங்கிலத்தில் உரையாட வல்லவர்களா என்றால் அதுவும் இல்லை !


மடலாட்டக் கலைஞர்கள் (CRICKET PLAYERS) விராட் கோலியும், உரோகித் சர்மாவும்  ஆளுக்கு 7 கோடி உருபா ஆண்டுச் சம்பளம் வாங்கிக் கொண்டு மடலாடுகிறார்கள். அதைக் காணத் தன் உழைப்பிலிருந்து அல்லது தன் தந்தையின் உழைப்பிலிருந்து 1500 முதல்  5000 உருபா வரை கொட்டிக் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு  உள்ளே சென்று கரவொலி எழுப்பி ஆட்டத்தில் கட்டுண்டு மயங்கிப் போகிறார்கள் சுவைஞர்கள் (ரசிகர்கள்)  ! கோலியும், சர்மாவும் ஏனையோரும் பணம் வாங்காமல் நாட்டுக்காக விளையாடும் ஈகிகளா (தியாகிகளா) என்னசுவைஞர்கள் தம் பணத்தைக் கொட்டிக் கொடுக்க !


நுழைவுச் சீட்டு வாங்குவதற்காக இரவு 3-00 மணியிலிருந்து கண் விழித்து வரிசையில் காத்துக் கிடக்கும் இந்தச் சுவைஞர்கள், கோலியும் சர்மாவும் ஏனையோரும்  செல்வச் சீமான்களாக  உயர்ந்திட, நுழைவுச் சீட்டு என்ற பெயரில் பெருந்தொகையைச் செலவிடுவதே அறிவு மழுங்கிய செயல் ! அத்துடன் அமைதியடையாமல் இந்தச் சுவைஞர்கள் முகநூலுக்குள் நுழைந்து, செய்கின்ற அலம்பல் இருக்கிறதே, அதுவும் அறிவின்பாற் பட்ட செயலாக இல்லை !


விராட் கோலிக்கு நேற்றுவீழ்ச்சி” (OUT) கொடுத்தது  தப்பு மச்சான் ! கேனப்பயல் அந்த மூன்றாவது  நடுவர் தீர்ப்பு மகா மட்டம்”. ”பும்ராவுக்கு என்ன ஆயிற்று மாப்பிளே ! பந்தே போடத் தெரியவில்லையே !” என்று முகநூலில் அங்கலாய்ப்புச் செய்யும்அறிவாளிகள்  கூட்டம் முகநூலை வலிப்பற்று (ஆக்கிரமிப்பு) செய்து, அறிவுக் களஞ்சியமாகத் திகழவேண்டிய அதை நகராட்சிக் குப்பைக் கிடங்காக மாற்றி வரும் கொடுமையும் நடைபெறத்தான் செய்கிறது !


-----------------------------------------------------------------------------------------------------------

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)08]
{22-01-2020}

-----------------------------------------------------------------------------------------------------------
     
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, டிசம்பர் 20, 2019

பல்வகை (20) இந்தியாவின் முகம் !

நம் நாட்டுக்கும் ஒரு முகம் உண்டு  - அது என்ன முகம் ?

                       

மனிதனை அடையாளப் படுத்துவது முகம். அதுபோல் விலங்குகள் போன்ற நகரும் உயிரினங்களையும் அடையாளப் படுத்துவது முகமே ! முக வேறுபாடுகள் இல்லையேல் குழப்பம் குடிகொண்டுவிடும் !

நகரும் உயிரினங்களைப்  போல் நாடுகளுக்கும் முகங்கள் உள்ளன.  ஒவ்வொரு நாடும் பின்பற்றிவரும் கொள்கைகளே அவற்றின் முகம். அமெரிக்காவின் முகம் பிற நாடுகளை அடக்கியாள நினைப்பது. சீனாவின் முகம் தன் நாட்டின் நிலப்பரப்பை விரிவாக்கிக் கொள்கின்ற  பேராசை. இலங்கையின் முகம் புத்தம் சரணம் கச்சாமி என்று சொல்லிக் கொண்டே ஈழத் தமிழ் இனத்தைக் வேரறுப்பது. அதுபோல் நம் நாட்டுக்கும் ஒரு முகம் உள்ளது !

நம் நாட்டின் முகம் பிற நாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எந்த வகையில் என்று கேட்கிறீர்களா ? ஆய்வு செய்யலாம் வாருங்கள் !

பதினெட்டு அகவை நிறைந்த எனக்கு வாக்களிக்கும் தகுதி  இருக்கிறது. வாக்காளர் பட்டியலிலும் என் பெயர் இருக்கிறது; ஆனால் என்னால் வாக்களிக்க முடியவில்லை; காரணம் என் வாக்கினை இன்னொருவன் கள்ளத்தனமாகப் போட்டுவிட்டுப் போய்விடுகிறான் ! உண்மையான வாக்காளனான என்   உரிமைக்கு இங்கு மதிப்பு இல்லை; கள்ளத்தனம் பண்ணியவனின் வாக்கு கணக்கில் சேர்க்கப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகிறது ! இதுதான் நம் நாட்டின் முகம் !

அடித்தட்டு மற்றும் நடுத்தர இனத்தவருக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் தேர்தலில் போட்டியிட முடிகிறதா ? முடியாது ! ஏனென்றால் அதற்கான கட்டுத் தொகையைச் (DEPOSIT)   செலுத்த அவர்களால் முடியாது. எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்போம்; ஆனால் கட்டமுடியாத அளவுக்குப் பெரிய தொகையைக் கட்டுத்தொகையாக வரையறை செய்து  அடித்தட்டு மற்றும் நடுத்தர இன மக்களைத் தேர்தல் களத்திலிருந்து விலக்கி வைப்போம். இதுதான் இந்தியாவின் முகம் !

காந்தியாருக்கு ஊரெங்கும் சிலை வைப்போம். அவர் பிறந்த நாள், இறந்த நாள்களில் அவர் படத்திற்கு மாலை அணிவித்து, புகழஞ்சலி செலுத்துவோம். அமைச்சர்கள் காந்தியைப் பற்றி விலாவாரியாகப் பேசுவார்கள். நிகழ்ச்சி முடிந்தவுடன் மதுக் கடைகளை இன்னும் எங்கெங்கு திறக்கலாம் என்று அதிகாரிகளுடன்  கலந்துரையாடுவார்கள். இதுதான் இந்தியாவின் முகம் !

சாதி வேறுபாடு கூடாது என்று பேசுவோம்; எழுதுவோம். சாதி மறுப்புத் திருமணங்கள் தான் சாதி ஒழிப்புக்கு முதற்படி என்று தொண்டை கிழியப் பேசுவோம். கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று அறிக்கை விடுவோம். ஆனால் தேர்தல் களத்தில் சாதி பார்த்துத் தான் வேட்பாளர்களை நிறுத்துவோம். சாதிக் கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம். இதுதான் இந்தியாவின் முகம் !

தாய்மொழியின் மேன்மை பற்றி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் புகழுவோம்.  தாய்மொழி வழிக் கல்வி தான் மாணவர்களை அறிவாளிகளாக்கும் என்று பள்ளிவிழாக்களில் பறைசாற்றுவோம். எங்கள் ஆட்சியில் தாய்மொழி வழிக்கல்விக்கு எத்தனை கோடிப்பணம் ஒதுக்கினோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வோம். ஆனால் ஊரெங்கும் ஆங்கில வழிப் பள்ளிகளை யாராவது சில முகமறைவு (பினாமி) ஆளிநரின் பெயரில் திறந்து கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவோம். இதுதான் இந்தியாவின் முகம் !

குற்றங்களைத் தடுக்கக் காவல் துறைக்கு நிரம்பப் பணம் ஒதுக்குவோம். நிரம்பப் புதிய பதவிகளை உருவாக்குவோம். சிறைச்சாலைகளை விரிவாக்குவோம். கூடுதலாகப் பல முறை மன்றங்களைத் (COURTS) திறப்போம். குண்டர் தடுப்புச் சட்டம் போல பல சட்டங்களைக் கொண்டு வருவோம். ஆனால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை, குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டோரை, சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக்கி அமைச்சர் பொறுப்பிலும் அமர்த்தி அழகு பார்ப்போம். இதுதான் இந்தியாவின் முகம் !

பொதுவாழ்க்கையில் நேர்மை வேண்டும், என்று வலியுறுத்துவோம். ஊழல் செய்வோருக்கு வாக்களிக்கக்கூடாது என்று மக்களிடம் பரப்புரை செய்வோம். எதிர்க்கட்சியினரைப் பார்த்து வசைமாரி பொழிவோம். ஆனால், தேர்தல் முடிவில் போதுமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கிடைக்கவில்லை என்றால், கோடிகளைக் கொட்டிக் கொடுத்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்போம் ! இதுதான் இந்தியாவின் முகம் !

உழவன் சேற்றில் கால் வைத்தால் தான் நாங்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்று எதுகை மோனையுடன் பேசி உழவனின் மேன்மையை உயர்த்திப் பிடிப்போம். சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்று வள்ளுவனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வேளாண்மைக்கு ஈடு இணை ஏதுமில்லை என்று  உழவனைக் குளிரக் குளிரக் குளிப்பாட்டி வாக்குக் கேட்போம். விளைநிலங்களில் எண்ணெய்க் கிணறுத் துரப்பணப் பணியை மேற்கொள்ளாதீர்கள், எங்கள் விளை நிலங்கள் பாழாகிவிடும் என்று உழவன் போராடினால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் காவல் துறையைக் கொண்டு அவனை அடித்து உதைத்துச் சிறையில் அடைப்போம். இதுதான் இந்தியாவின் முகம் !

பூஞ்சுருட்டு (CIGARETTE) வனையும் பன்னாட்டு நிறுவனங்ளை அழைத்துத் தொழில் தொடங்கச் சொல்வோம். பூஞ்சுருட்டு வனைவைத் தடை செய்ய மாட்டோம். ஆனால் புகை பிடிக்காதீர்; புற்றுநோய் வரும் என்று பரப்புரை செய்யப் பலகோடிச் செலவழிப்போம். இதுதான் இந்தியாவின் முகம் !

ஞெகிழி வனைவுத் தொழிற்சாலைகளுக்கு உரிமம் தருவோம். அவை செயல்படுவதைத் தடை செய்ய மாட்டோம்; ஊக்குவிப்போம். ஆனால்,  ஞெகிழிப் பயன்பாடு உடல் நலத்திற்குக் கேடு என்று பரப்புரை செய்வோம். அதிகாரிகளை ஏவிக் கடைகளில் ஞெகிழிப் பைகள் இருக்கின்றனவா என்று தேடுதல் மேற்கொள்ளச் சொல்வோம். வைத்திருப்போரை முறை மன்றத்தில் (COURT) நிறுத்தி ஒறுப்போம் (தண்டிப்போம்). இதுதான் இந்தியாவின் முகம் !

இந்தியப் பண்பாடு மிக உயர்ந்தது என்று அயல்நாடுகளில் உரையாற்றுவோம். தொன்மங்கள் (புராணங்கள்), மறவனப்புகள் (இதிகாசங்கள்), தோற்றரவுகள் (அவதாரங்கள்) பற்றி எல்லாம் பரப்புரை செய்வோம். ஆனால் முத்தக் காட்சி, முதலிரவுக் காட்சி, முக்காலே அரைக்கால் ஆடை துறப்பு (நிர்வாணம்) நடனக் காட்சிகள் அமைத்து, பண்பாட்டைச் சீரழிக்கும் திரைப்படங்களைத் தடைசெய்யாமல் விருது கொடுத்துப் பாராட்டுவோம். இதுதான் இந்தியாவின் முகம் !

செல்வச் சீமான்களுக்கு உரிமம் கொடுத்துத் தொலைக்காட்சித் தொடங்கச் செய்வோம். அவர்கள் எதையெதை  ஒளிபரப்புகிறார்கள் என்பதைக் கண்டுகொள்ள மாட்டோம். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பழிவாங்கல், வன்புணர்வு, சிறார் கொடுமை ஆகியவற்றை எல்லாம் விலாவாரியாகத்  நாடகமாக்கிக் காட்டிப் பணம் குவிக்கும் கொடுமையைக் கண்டுகொள்ள மாட்டோம். நல்லொழுக்கம் பற்றிப் பேசும் அரசினரும் அதிகாரிகளும் இவற்றைக் கண்டு கொள்ளமாட்டார்கள். இதுதான் இந்தியாவின் முகம் !

திட்டப் பணிகளுக்காக நூறு கோடி ஒதுக்குவோம். இந்த நூறு கோடியில் 75 கோடி அவருக்கு, இவருக்கு, என்று தரகாகப் (COMMISSION) பங்கு போட்டுக் கொள்வோம். எஞ்சிய 25 கோடியில், ஒப்பந்தக் காரரின் ஆதாயம் (PROFIT) 20 கோடி போக மீதமுள்ள 5 கோடியில் மிக வலுவாகப் பணிகளைச் செய்து முடிப்போம். இது தான் இந்தியாவின் முகம் !

எங்கள் முக அழகை எவராவது ஏளனம் செய்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம். முறைமன்றத்தில் (COURT) அவர்களை நிறுத்தி இழப்பீடு கோருவோம் !

வாழ்க எங்கள் பண்பாடு ! வளர்க ஊழல்வாதிகளின் கூட்டணி ! வெல்க எங்கள் குடியாட்சிக் கோட்பாடு !

----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050: சிலை (மார்கழி) 04]
{20-12-2019}
------------------------------------------------------------------------------------------------------------
      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற
 கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------


ஞாயிறு, நவம்பர் 17, 2019

பல்வகை (19) ஆங்கில மொழியின்பால் அகத்தியமற்ற ஈர்ப்பு !

இஃது அக்கரைப் பச்சை போன்றதொரு  ஈர்ப்பு !


ஆங்கில மொழியின்பால் சிலருக்கு அளவு கடந்த ஈர்ப்பு இருப்பதைக் காண்கிறோம் ! ஆங்கிலத்தை முழுமையாக அறிந்து உள்வாங்கிக் கொண்டதால் ஏற்பட்ட ஈர்ப்பு என்று இதைச்  சொல்ல முடியுமா ? முடியாது !

ஒருவன்காச்சு மூச்சுஎன்று தப்பும் தவறுமாக ஆங்கிலத்தில் உளறிக் கொட்டினாலும், அதைச் செவி மடுக்கும் அரைகுறை ஆங்கில அறிவு பெற்ற இன்னொருவன், “ஆகா ! எத்துணை அழகாகத் தங்கு தடையின்றிப் பேசுகிறான்  என்று இனம் புரியாத ஒரு மயக்கத்தில் ஆழ்ந்து போகிறான் ! அதனால், ஆங்கிலத்தின் மீது  அவனுக்கு இயல்பாக ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது ! காரணம் அயலிடம் சார்ந்த எதுவாயினும் அதற்கு ஈர்ப்பு அதிகம் என்பது உளவியல் சார்ந்த உண்மை !

அயல்நாட்டுக் கருவிகள் மீது ஈர்ப்பு ! அயல் நாட்டுத் துணிகள் மீது ஈர்ப்பு ! அயல்நாட்டு எழினிகள் (MOBILES) மீது ஈர்ப்பு ! அயல்நாட்டுச் செருப்பின் மீது ஈர்ப்பு ! ஏன் - அயல்நாட்டுத் துடைப்பத்தின் மீதும்  ஈர்ப்பு ! அதுபோல் அயல் நாட்டு மொழிகளின் மீதும் ஒரு ஈர்ப்பு ! இஃது அக்கரைப் பச்சை போன்றதொரு  ஈர்ப்பு !

ஆங்கிலத்தின் மீது ஈர்ப்புக் கொள்வோர், பெரும்பாலும் ஆங்கிலம் கற்காத ஆளிநரே (நபர்களே) ! ஆங்கிலம் முழுமையாகக் கற்ற  ஆளிநர் (நபர்கள்) என்று எவரும் நம்நாட்டில் இருக்க முடியாது ! ஏனெனில், ஆங்கிலம் எளிய மொழி போலத் தோன்றினாலும், கற்பதற்கு மிகவும் கடினமான மொழி ஆகும் !

ஆங்கிலத்திற்கு என்று ஒரு கட்டமைப்பு இல்லை ! ஆங்கில மொழிக்கென்று ஒரு அடித்தளம் இல்லை ! ஆங்கிலச் சொற்களில் பெருபாலானவற்றுக்கு வேர்களே (ROOT) இல்லை ! உலகத்தில் உள்ள எல்லா மொழிகளில் இருந்தும் கடன் வாங்கிய சொற்களின் கலவையே ஆங்கிலம் ! இதனால் ஆங்கிலத்தின் அடியையும் முடியையும் கண்டவர் இந்த உலகத்தில் எவருமே இலர் !

தமிழில்அம்மாஎன்று எழுதினால், அதைத் தமிழறிந்த அத்துணை பேரும்அம்மாஎன்று தான் ஒலிப்பார்கள் ! ஆங்கிலத்தில் அப்படி அன்று ! EDUCATION என்னும் ஆங்கிலச் சொல்லை ஒருவர்எஜுகேஷன்என்கிறார். இன்னொருவர்எடுகேஷன்என்கிறார். புதிதாக ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் ஒருவர்எடுகேடியான்என்கிறார். இவற்றுள் யார் சொல்வது சரி ? எந்த இலக்கணத்தை அடிப்படையாக வைத்து இதற்குத் தீர்ப்புச் சொல்வது ?

நாம்அயர்ன்” (IRON) என்பதை என் நாகர்கோயில் நண்பர் ஒருவர் ஐரன்என்றுதான் பலுக்குகிறார். மேனாள் ஆளுநர் மறைந்த கே.கே.சா அவர்கள் OPPORTUNITY என்பதைஅப்பார்ச்சூனிட்டிஎன்று தான் குறிப்பிட்டு வந்தார். ஆங்கிலத்தைப் பலுக்குவதில் (உச்சரிப்பதில்) வரைமுறை ஏதுமில்லை ! அவரவர் விருப்பம் போல் பலுக்கலாம் ! இத்தகைய கட்டுப்பாடு இன்மை தான் அம்மொழியைக் கற்றுக் கொள்வதில் பெரும் இடையூறாக உருவெடுத்து நிற்கிறது !

எந்த விதிகளின் அடைப்படையிலும்  அமையாமல், நூறாயிரக் கணக்கில் ஆங்கிலச் சொற்கள் இருக்கின்றன. பல சொற்களின் எழுத்துக் கட்டமைப்பு  ஒருவிதமாகவும், அவற்றின் ஒலிப்பு வேறு விதமாகவும் இருக்கிறது !

சைக்காலஜி (PSYCHOLOGY) என்னும் சொல்லை, அதன் எழுத்துக்களின் அடிப்படையில் பலுக்கினால்பிசிக்கோலோஜிஎன்று தான் ஒலிக்க முடியும் !   CACHE (காஷ்) , ENTREPRENEUR (ஆந்த்ரபிரனர்), PHARMACEUTICAL (பார்மாசூட்டிகல்), PNEUMONIA (நிமோனியா), PSEUDONYM (சுடோநிம்), METEOROLOGY (மெட்ரியாலஜி), போன்ற சொற்களில் எழுத்துகளுக்கும் ஒலிப்புக்கும் தான்  எத்துணை வேறுபாடு !

எழுத்துகளுக்கு ஏற்ப ஒலிக்கமுடியாத இன்னல் ஆங்கிலத்தில் இருப்பதை எவரும் மறுக்கமுடியாது ! இத்தகைய இடையூறுகளால் தான் ஆங்கிலம் கற்பது என்பது பிற மொழியினருக்கு அத்துணை எளிய செயலாக இல்லை !

ஆங்கிலத்தில் தங்கு தடையின்றிப் பேசும் ஒரு ஆளிநரை (நபரை), அவர் பேசியதை எழுத்தில் வடிக்கச் சொல்லுங்கள் ! எழுத்துப் பிழைகள் (SPELLING MISTAKES) ஏராளமாகக் இருப்பதைக் காண்பீர்கள்  ! எப்பொழுதும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டே இருப்பவர்களுக்கு, எழுதுகின்ற வாய்ப்பு அரிதாகத்தான் ஏற்படுகிறது. ஆகையால் ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு எந்தெந்த ஆங்கில எழுத்துகளை இட்டு எழுத வேண்டும் என்பது அவருக்கு மறந்து போய்விடுகிறது ! இதுதான் ஆங்கிலத்தின் இயல்பு !

மருந்துச் சீட்டு எழுதித் தரும் மருத்துவரின் கையெழுத்தை நாம் படிக்க முடிகிறதா ? தெளிவாக எழுதினால். எழுத்துப் பிழை நம் கண்களுக்குத் தெரிந்துவிடுமே !

இப்போது ஆங்கிலப் பயிற்று மொழி வாயிலாகக் கல்வி பயிலும் மாணவர்கள், பிறருடன் ஆங்கிலத்தில் உரையாடும் திறனை ஓரளவு பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மையே ! ஆனால் அவர்களது உரையாடல், ஆங்கில இலக்கணத்தின் வழி அமைவதில்லை ! அவர்களது உரையாடலில் எழுவாய் (SUBJECT), பயனிலை (PREDICATE) செயப்படுபொருள் (OBJECT), எதுவும் முறைப்படி அமைந்திருக்காது !

BROTHER என்பதை BRO ஆக்கிவிட்டார்கள் ! DADY என்பவர் DAD, ஆகிவிட்டார். MUMMY சுருங்கி MOM ஆகிவிட்டார். ஆங்கில அகரமுதலியிலேயே இல்லாத  Wanna, Gonna, Yah Yah, நாவின் நுனியில் விளையாடுகின்றன.  கொச்சை ஆங்கிலத்தில் (SLANG)  பேசும் திறனைத் தான் அவர்களிடம் காணமுடிகிறது. இதற்குத்தான்  பெற்றோர்கள் நூறாயிரக் கணக்கில் கொட்டிக் கொடுத்து, பதின்மப் பள்ளிகளுக்கும் (MATRICULATION SCHOOLS), நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத் திட்டப் பள்ளிகளுக்கும் (C.B.S.C. SCHOOLS) தம் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் !

ஆங்கிலமொழி தங்கள் பிள்ளைகளை உயர்ந்த நிலையில் உட்கார வைத்து விடும் என்று பெற்றோர்கள் குருட்டுக் கனவு காண்கிறார்கள் ! ஆனால், எதைப் பற்றியும் சிந்திக்கக்கூடிய ஆழ்ந்த ஆற்றலைத் தாய்மொழி போல, அயல்மொழியான ஆங்கிலம்  தரமுடியாது  என்பதை அவர்கள் உணர்வதே இல்லை !

அறிவியல் அறிஞர்கள் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, அரியலூர் வளர்மதி, சிவன் பிள்ளை  போன்ற ஒப்பற்ற ஒளிவிளக்குகள் எல்லாம் தமிழ்வழியில் கல்வி பயின்றவர்கள் என்னும் உண்மையை உரக்கச் சொன்னாலும் பெற்றோர்கள் புரிந்துகொள்வதில்லை; தம் பிள்ளைகளை ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள் !

ஏமாறுவது எங்கள் பிறப்புரிமை என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் இருக்கும் வரை ஏமாற்றுவதற்கென்றே பதின்மப் பள்ளிகள் தோன்றிக் கொண்டேதான் இருக்கும் ! தடுக்கவேண்டிய அரசு தன் இரு கண்களையும் இறுக மூடிக் கொண்டிருக்கையில் நாம் விழிப்புணர்வூட்டி எழுதுவதன்றி வேறு என்னதான் செய்ய முடியும் ?


----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,துலை (ஐப்பசி),01]
{18-10-2019}

----------------------------------------------------------------------------------------------------------
     
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------





பல்வகை (18) இல்லத்தில் எழில் பேணல் !

    அழகுணர்ச்சி இல்லாத மனிதன் விலங்குக்குச் சமமானவன் !


ஒவ்வொரு மனிதனும் அழகாகத் தோற்றமளிக்கவே விரும்புகிறான். தன்னைக் காண்பவர்களின் கருத்தைத் தன்பால் ஈர்க்க வேண்டும் என்னும் ஆவலே இதற்குக் காரணம். மனிதன் என்ற சொல் இங்கு ஆடவர், மகளிர் என இருபாலரையுமே குறிக்கும் !

உச்சி முதல் பாதம் வரை தன் அழகு, சுடர் விட்டு  மிளிர, மனிதன் எடுத்துக் கொள்ளும் அக்கறைக்கு அளவே இல்லை ! முடியலங்காரம், உடையலங்காரம், அணியலங்காரம், என ஒவ்வொன்றுக்கும் செலவிடும் நேரம் மிகுதி ஆகிக்கொண்டே போகிறது !

இத்தகைய அழகுணர்ச்சி தவறன்று ! கட்டாயம் தேவை தான் ! ஏனெனில், அழகுணர்ச்சி இல்லாத மனிதன் விலங்குக்குச் சமமானவன் ! அவனது வாழ்க்கை சுவையற்றுப் போகும். உப்புச் சுவை சேராத உணவுப் பண்டமாக தாழ்வுற்றுப் போகும் !

அழகுணர்ச்சி, அனைத்து மனிதர்களிடமும் இருக்கிறதா, என்றால், “ஆம்என்று தான் சொல்லமுடியும் ! ஆனால், அதன் அளவு தான் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது !

ஒரு நாள் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். ஈராண்டுகளுக்கு முன்பு கட்டப் பெற்ற கற்காரைக் கூரை (CONCRETE MOLDING ROOF) வீடு. முன்றிலைக் (PORTICO) கடந்ததும் எதிர்ப்படும் வேலைப்பாடு அமைந்த நிலைவாயில் ! உள்ளே அகலறை (DRAWING HALL). வலப்புறம் சாளரம் (WINDOW)  அருகில் 4’ X 4’ மிசைப் பலகை (TABLE). அதன் எதிரில் அன்னக் கழுத்து அமரிருக்கை (CHAIR)  ! அறையின் இடப்புறம் நீண்ட இணையணை (SOFA) !

இணையணையை அடுத்து நான்கு ஞெகிழி (PLASTIC) நாற்காலிகள் ! தலைவாயிலுக்கு நேர் எதிரில் காட்சி மாடம் (SHOW CASE) ! அதையடுத்து மரத் தளியில் (WOODEN STAND) தொலைக்காட்சிப் பேழை !  மற்றும் இன்னொரன்ன பொருள்கள் !

நான் சென்ற நேரத்தில் நண்பர் வீட்டிலில்லை ! அவர் மனைவி தான் என்னை வரவேற்றார் ! ஆனால் நான் அமர்வதற்கு இருக்கை எதுவும் வெட்புலமாக (VACANT) இல்லை !  அன்னக் கழுத்து அமர் இருக்கையில் (SWAN NECK TYPE CHAIR) குழந்தைகளின் புத்தகப் பைகள் இடம் பிடித்திருந்தன ! இணையணையில்  பழைய செய்தித் தாள் கட்டுகள் சிலவும், அழுக்குத் துணிகள் பொதியும், பழைய கோரைப் பாய் ஒன்றும் காணப்பட்டன !

ஞெகிழி நாற்காலிகளில், அட்டைப் பெட்டிகள் சில இடம் பிடித்திருந்தன ! அவற்றுள் ஒன்றை வெட்புலமாக்கி என்னை அமரச் செய்தார் நண்பரின் மனைவி ! சில நிமிடங்களில் நண்பர், கையில் காய்கறிக் கூடையுடன் வந்தார். ”வாருங்கள் அன்பரசு !   நலமாக இருக்கிறீர்களா ?” என்று உசாவியவர்இதோ வந்து விடுகிறேன்எனச் சொல்லிக் காய்கறிக் கூடையுடன் உள்ளே சென்றார் !

கிடைத்த ஓரிரு நிமிடங்களில் அகலறையை நோட்டமிட்டேன் ! மிசைப் பலகையில் மூடியின்றித் திறந்த நிலையில் ஒரு மைத் தூவல் (INK PEN) ! அருகில்அயோடக்சு’ (IODEX BOTTLE)  குப்பி ஒன்று  கவிழ்ந்த நிலையில்  ! ஐந்தாறு தலைவலி மாத்திரைகள் பொதிக்கப் பெற்ற அட்டை (STRIP) !. நாள்காட்டியில் (DAILY SHEET) கிழித்த அன்றைய நாளுக்கான தாள் ! சுருட்டிய நிலையில் ஒரு கைக்குட்டை ! குளம்பி (COFFEE)  அருந்திய கழுவாத கோப்பை !

நான்கைந்து சில்லறைக் காசுகள் ! மின்கட்டண அட்டை  ! கொட்டிக் கிடக்கும் ஒரு கைப்பிடி  பயின் வளையங்கள் ((RUBBER BANDS) ! எழினிக்கு (MOBILE) மின்னேற்றம் செய்யும் சூலி (CHARGER)  !  சிறிய பீங்கான் தட்டு ஒன்றில் கொஞ்சம்  கதம்ப நொறுவை (MIXTURE) ! ஊர்தி ஓட்டுகையில் அணியும் தலைச் சீரா (HELMET) ! இன்னும் சிற்சில பொருள்கள் !

சுவரெங்கும் கரிக்கோடுகள் (PENCIL LINES), ஊதாக்கோடுகள் (MARKER LINES)  ! குழந்தைகளின் கைவண்ணம் போலும் ! அரத்தம் (BLOOD) குடித்த கொசுக்கள் நசுக்கப் பெற்ற  சிவப்புத் தடங்களும்  சுவரில் இடம் பிடித்திருந்தன ! அழுக்குப் படிந்த பந்துகள் சுவரில் மோதிப் பதித்த, கலங்கலான வரிகள் இக்கால ஓவியங்களாய்க் (MODERN ART) காட்சியளித்தன ! குழந்தைகளின்  காலணிகள் திசைக்கு ஒன்றாகத் திரும்பிக் கிடந்தன !

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நகரம் போல் அந்த வீட்டின் அகலறை (DRAWING HALL) காட்சியளித்தது ! அகலறையே (DRAWING HALL) இப்படி இருந்தால், அடுக்களை (KITCHEN), துயிலறை (BED ROOM), குளியலறை (BATH ROOM) பூசை அறை (POOJA ROOM) போன்றவை எத்துணை அழகாகக் காட்சியளிக்கும் என்று மனதிற்குள் கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருக்கையில், நண்பர் உள்ளிருந்து வந்தார் ! ஒரு நாற்காலி சுமந்து கொண்டிருந்த அட்டைப் பெட்டிகளைக் கீழே இறக்கி வைத்து விட்டு, அதில் அமர்ந்தார் !

சில நிமிட உரையாடல்களுக்குப் பின், அவர் தந்த குளம்பியை (COFFEE) மனக் குமட்டலுடன் சிறிது ஒப்புக்கு அருந்திவிட்டு, என் இல்லம் வந்து சேர்ந்தேன் ! துப்புரவும் ஒழுங்கும் இல்லாத வீட்டில், குளம்பியின் ஒவ்வொரு துளியும் கற்றாழைச் சாறாக மனதிற்குள்  கசந்தது !

நண்பர் மிடுக்கானவர் ! அழகாகத் தலைவாரி, உடையுடுத்தி, சில கூடுதல் ஒப்பனைகளையும் செய்து கொண்டு காண்போரைக் கவரும் வனப்புக் கொண்டவர் ! தன் தோற்றத்தைப் பொறுத்தவரை அழகுணர்ச்சியை முழுமையாக வெளிப்படுத்தும் இயல்பு வாய்ந்தவர் ! அவரது இல்லமா இப்படி ?

நேர்த்தியாக உடை உடுத்தி உலா வரும் ஒருவர், குப்பைக் கிடங்கிற்குள் குடி இருப்பதைப் போல் அன்றோ நண்பரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன ! தனது தோற்றத்தை எழிலாக வெளிப்படுத்த விரும்பும் அவர், தனது இல்லத்தைத் எழில் மிகுந்த மாளிகையாகப் பேணுவதில் ஏன் அக்கறை செலுத்துவதில்லை ?

குப்பைக் கிடங்குகள் நாய்கள்  உறங்கும் இடமன்றோ ? நண்பர் தன்னை நாயின் நிலைக்குத் தாழ்த்திக் கொள்வது, அவரது அறியாமையாலா ? அக்கறை இன்மையாலா ? அல்லது அவரது பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடா ?

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2050, கன்னி(புரட்டாசி),30]
{17-10-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
      
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------

பல்வகை (17) புதுச் சொல் புனைவு - அரசு முனைப்புக் காட்ட வேண்டும் ! !

சொல்லாக்கத்திற்கு   தமிழக அரசில் புதிய துறையை உருவாக்க வேண்டும் !



தமிழ் இலக்கியங்கள் பல, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. கி.பி முதலாம் நூற்றாண்டுக்குப் பிறகு இயற்றப் பெற்ற இலக்கியங்களும் அளவிறந்தவை ! கடைச் சங்க காலமான கி.மு. 600 – கி.பி. 200 இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பிறமொழிக் கலப்பில்லாதவை. இவற்றில் தமிழர் வரலாறும், தமிழர் நாகரிகமும், தமிழ்ப் பண்பாடும் இலைமறை காயாகப் பதிவு செய்து வைக்கப் பெற்றிருக்கின்றன !

கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு, தமிழகத்தில் வடமொழி ஊடுறுவல் தொடங்கியது. எனவே இதற்குப் பிறகு தோன்றிய இலக்கியங்களில் வடமொழிச் சொற்கள் கலப்பு மிகுதியாகக் காணப்படுகின்றன !

கடந்த 1800 ஆண்டுகளாக, வடமொழியின் மேலாண்மையிலிருந்து தமிழால் விடுபட முடியவில்லை. இன்றைய நிலையில் நாம் பயன்படுத்தும் சொற்களில், எவை வடமொழிச் சொற்கள், எவை தமிழ்ச் சொற்கள் என்று பகுத்துப்பார்க்க முடியாத அளவுக்குக் கலப்படம் மிகுதியாகிவிட்டது !

வடமொழிச் சொற்களின் கலவையால், மலையாளம், கன்னடம், துளுவம், தெலுங்கு போன்ற புதிய மொழிகள் தோன்றி, தமிழின் ஆட்சி எல்லை சுருங்கிப் போயிற்று ! வடமொழிக் கலப்பை மட்டுப் படுத்த, பல்லாண்டுகளாகப் பல தமிழறிஞர்கள்  முயன்று வந்துள்ளனர். எனினும் அவர்களது உழைப்பிற்குப் போதிய பலன் கிடைக்காமலேயே போயிற்று !

இன்றைய தமிழகத்தில், மக்கள் பெயர்களில் 95 % வடமொழிப் பெயராகவே உள்ளன. கோயில் பெயர்களும், கோயிலில் உறைகின்ற கடவுளர் பெயர்களும் 99 % வடமொழிப் பெயராகவே இருக்கின்றன. ஆண்டுகளின் பெயர்களும், மாதங்களின் பெயர்களும் வடமொழிப் பெயர்களாகவே திகழ்கின்றன !

வடமொழியின் மேலாண்மையிலிருந்து தமிழும் தமிழக மக்களும் விடுபடுதல் என்பது அத்துணை எளிய செயலன்று ! தமிழை ஒரு படி உயர்த்தி வைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டால், இரண்டு படிகள் கீழே இறக்கி வைக்கும் செயலில் சில அமைப்புகள் இடையறாது ஈடுபட்டு வருகின்றன !

இத்தகைய இடையூறுகளைத் தமிழ் எதிர்கொண்டிருக்கையில், தமிழகத்தில் ஆங்கில மொழியின் ஊடுறுவல் அதிவிரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ! படிப்பறிவில்லாத பாமரன் வாயிலிருந்து உதிரும் சொற்களில் ஆங்கிலச் சொற்களின் அணிவகுப்பு காணப்படுவது கவலை அளிப்பதாக உள்ளது . பஸ், டிக்கட், கண்டக்டர், டிரைவர், காப்பி, டீ, சோடா, சிகரெட், சினிமா, டிரெய்ன், ஏரோப்ளேன், எம்.எல்., எம்.பி, கலெக்டர், தாசில்தார், போலீஸ் மற்றும் இன்னோரன்ன ஆங்கிலச் சொற்கள் பாமர மக்கள் வாயிலும் வரைமுறையின்றிப் புழங்குகின்றன !

மொழிவாரி மாநிலம் அமைந்து, தமிழ்நாடும் அதற்கென ஒரு அரசும் இயங்கி வருகிறது. தமிழ்நாடு என்று பெயரைத் தாங்கி இருப்பதால், தமிழையும் உயர்த்திப் பிடிக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டு அரசுக்கு இருக்கிறது. தமிழை வளப்படுத்தும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டால் தான் தமிழ் வளரும்; வாழும் ! அரசின் அரவணைப்பு இல்லையேல் தமிழ் தளர்ந்துபோகும்; வீழ்ந்தும் போகும் !

தமிழ் வளர்ச்சிக்குத் தமிழக அரசு இன்னும் நிரம்பச் செய்யலாம். பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியைக் கட்டாயமாக்கக் கூடுதலாக சில சட்டங்களை இயற்ற வேண்டும். பதின்மப் பள்ளிகள் தமிழை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்டு இயங்க, புதிய  சட்டங்களை இயற்ற வேண்டும்.  தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு மட்டுமே  அரசு வேலை என்பதைக் கட்டாயமாக்க  வேண்டும் !

தமிழ்ச் சொல்லாக்கத்திற்கு  என்று தமிழக அரசில் புதிய துறையை உருவாக்க வேண்டும். முனைவர் ப.அருளி போன்ற தமிழறிஞர்களை, அகவை மேல்வரம்பு விதிக்காமல், சொல்லாக்கத் துறையின் இயக்குநராக அமர்த்தம் செய்ய வேண்டும்.  இத்துறையில், தமிழ் வல்லுநர்கள் அடங்கிய பெருங்குழு ஒன்றை உருவாக்கி, இந்நாள்வரைத் தமிழாக்கம் செய்யப் பெறாமல் இருக்கும் ஆங்கிலச் சொற்களைத் திரட்டி, அவற்றுக்கு உரிய தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும் !

இப்பணியில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திட்டங்கள் வரையப்பட வேண்டும். சொல்லாக்கத் துறையின் ஆய்வுக்குப் பின், மாதம் இருமுறை, அனைத்துச் செய்தித் தாள்களிலும், புதிய சொற்களை, கட்டணமின்றி (அரசுக்குச் செலவின்றி) வெளியிடும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் !

புதிய கலைச் சொற்கள் பாடப் புத்தகங்களுக்குள் தனிப் பட்டியலாக முடங்கிக் கிடக்கின்றன. பல்கலைக் கழகங்கள் தொகுக்கும் கலைச் சொற்கள் அவர்களது நூலகத்தை விட்டு வெளியில் வருவதில்லை. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதிக்கெனத் தனித் துறையே உள்ளது. இத்துறையினர் தொகுத்த கலைச் சொற்கள், நூல் வடிவில் அப்பல்கலைக்கழக நூலகத்தில் முடங்கிக் கிடக்கிறது. புதிய சொற்கள் மக்களிடம் சென்று சேர அரசு செய்தித் தாள்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் !

மாதம் இருமுறை சொல்லாக்கத் துறையால் வெளியிடப் பெறும் புதிய தமிழ்ச் சொற்களை செய்தித்தாள்கள் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் வகையில் சட்டம் இயற்றிச் செயல்படுத்த வேண்டும் !

தமிழ் வளர்ச்சித் துறை, தனது பணிகளை அரசு அலுவலகங்களை ஆய்வு செய்வதுடன் முடித்துக் கொள்கிறது. அரசு அலுவலகங்களுக்கு அப்பாலும் தனது பார்வையை இத்துறை செலுத்த வேண்டும் !

தமிழின் பெயரை உள்ளடக்கியதமிழ்நாடு அரசுதமிழ் வளர்ச்சிக்கு முனைப்பாக உதவ வேண்டும் ! தமிழ் உணர்வாளர்களின் ஒற்றை வேண்டுகோள் இதுவே !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, துலை(ஐப்பசி) 02]
{19-10-2019}

-----------------------------------------------------------------------------------------------------------
       
தமிழ்ப் பணிமன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------