name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பத்துப்பாட்டு
பத்துப்பாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்துப்பாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 05, 2019

பத்துப்பாட்டு (04) பெரும்பாணாற்றுப் படை !

பத்துப் பாட்டு நூல்களுள் நான்காவதாக அமைந்துள்ளது பெரும்பாணாற்றுப்படை !



பத்துப் பாட்டுத் தொகை நூல்களுள் பெரும்பாணாற்றுப் படையும் ஒன்று. இஃது, 500 அடிகள் அமைந்த அகவற்பாவினால் இயன்றது. சிறுபாணாற்றுப் படையை (269 அடி) விட அடியளவில் பெரியதாகையால் (500 அடி) இந்நூல் பெரும்பாணாற்றுப் படை எனப் பெயர் பெற்றது !


இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையனிடம் சென்று வறுமை தீர்ந்த பாணன் (இசையுடன் பாடும் புலவன்) ஒருவன், வறியவனான மற்றொரு பாணனை எதிர்ப்பட்டு, அவனைத் தொண்டைமானிடம் ஆற்றுப்படுத்துவதாக (செல்லுமாறு வழிப்படுத்தல்)  அமைந்ததிருக்கிறது இந்நூலிலுள்ள பாவின் அமைப்பு !


இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇஎனச் சிறுபாணாற்றுப் படையிலும், “இடனுடைய பேரியாழ் முறையுளிக் கழிப்பிஎனப் பெரும்பாணாற்றுப் படையிலும் வருகிறது. சீறியாழ், பேரியாழ் என்னும் யாழ் வேறுபாட்டினால், பாணர்கள் சிறுபாணர், பெரும்பாணர் என இரு திறத்தவராக வகைப்படுத்தப் பட்டிருந்தனர்இவர்களை ஆற்றுப் படுத்தியதால், இப்பாட்டுகள் சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை எனப் பெயர் வழங்கலாயிற்று எனக் கருதுவோரும் உளர் !


யாழ் பற்றிய வண்ணிப்பு (வருணனை), இளந்திரையனது சிறப்பு, வணிகர் செல்லும் நெடிய வழி, வம்பலர் செல்லும் கானக வாழி, எயினர் (வேடர்) வாழ்முறை, நால்வகை நிலங்களையும் அங்கு வாழும் மக்களையும் பற்றிய  செய்திகள், காஞ்சியின் சிறப்பு, இளந்திரையனின் போர் வெற்றி, ஆட்சிமுறை, விருந்தோம்பும் தன்மை முதலிய செய்திகளை நமக்கு விரிவாகத் தருகிறது பெரும்பாணாற்றுப் படை !

---------------------------------------------------------------------------------------------
அவையா அரிசி அம்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றிப்
பாம்புறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம்புற நல்லடை அளைஇ தேம்பட..”  (வரி.274 – 277)
-----------------------------------------------------------------------------------------------

நெய்தல் நிலத்து மீனவர்கள் அவர்களது வீட்டில் செய்த உணவினைப் பற்றி இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.  ஒரு மீனவரின் வீட்டிற்குப் புலவர் சென்றிருந்த போது, மீன் உணவுடன், அடையும், கைக்குத்தல் அரிசி (அவையா அரிசி) மாவினாற் செய்த களியும் செய்திருந்தனர். அவற்றை இதழ்கள் விரிந்த மலர் போன்ற தோற்றமுள்ள தட்டத்தில் (பிழா) கொட்டி ஆற வைத்திருந்தனர். அந்த மீனவரின் வீட்டில் செய்திருந்த அடையானது, பாம்பு உறைகின்ற புற்றுக்குள் குவிந்திருக்கும் கறையான் திரள் (குரும்பி) போல, மெது மெதுவென்று (SOFT) இருந்தது. பூப்போன்ற அதன் மேற்பகுதியில் (பூம்புறம்) தேனைத் தடவி (தேம்பட அளை) சுவை கூட்டி இருந்தனர் என்கிறார் புலவர் !


        
பிடி வாயன்ன மடி வாய் நாஞ்சில்..” (வரி.199) என்று ஒரு உவமை வருகிறது இந்நூலில். இதன் பொருள் ‘(தந்தமில்லாத) பெண் யானையின் (வாயின்) கீழ்த் தாடை போன்ற வடிவமுள்ள ஏர்க் கலப்பைஎன்பதாகும். யானை வாயின் கீழ்த் தாடையை ஏர்க் கலப்பையின் வடிவுக்கு  உவமை சொன்ன புலவரின் கற்பனை வளம் மிகச் சிறப்பாக இவ்வரியில் வெளிப்பட்டிருக்கிறது !

       
வல் வாய்ச் சாடியின் வழைச்சு அற  விளைந்த வெந்நீர்..” என்று சாடியில் வைக்கப்பட்டுள்ள வெந்நீரைப் பற்றிச் சொல்கிறது பெரும்பாணாற்றுப் படை (வரி.280).  சாடி என்னும் தமிழ்ச் சொல்லைஜாடிஎன்று வலிந்து பலுக்கி (உச்சரித்து) அல்லது எழுதி, அதை வடமொழிச் சொல்லாகத் திரித்துக் காட்டும் போக்கு சிலரிடம் காணப்படுகிறது !


கடுப்புடைப் பறவைச் சாதி அன்ன” (வரி.229) என்று பெரும்பாணாற்றுப் படையில் குறிப்பிடப்படும் சாதிஎன்னும் தமிழ்ச் சொல் சில தமிழர்கள் வாயில்ஜாதிஎன்று பலுக்கப்பட்டு (உச்சரிக்கப்பட்டு) வடமொழிச் சொல்லாகத் திரித்துக் காட்டப்படுகிறது. “சாடி”, “சாதிஇரண்டும் தமிழ்ச் சொற்களே ! தமிழ் மக்கள் இப்போதாவது உண்மை நிலையை உணர்வார்களாக !


இத்துணைச் செய்திகளைத் தரும் இந்நூல், இக்காலத் தமிழர்க்குத் தேவையாக உள்ள புதிய பல சொற்களையும் பாடல் வரிகளில் நிரம்பவும் பொதிந்து வைத்திருக்கிறது.  பல ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணையான பொருள் அல்லது புனைப் பொருள்  தரும் அழகிய தமிழ்ச் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போமா !

---------------------------------------------------------------------------------------------------------

BACK YARD............................= படப்பை (பா.வரி.126)
BARBED WIRE FENCING.....= இடுமுள் வேலி (பா.வரி.154)
BED...........................................= அமளி )பா.வரி.252)
BLUE COLLAR JOB...............= கருங்கை வினைஞர் (வரி.223)
CARPENTER............................= தச்சர் (பா.வரி.248)
CART........................................= ஒழுகை (பா.வரி.63)
CONDENSER...........................= தூண்டில் (பா.வரி.285)
FLINT........................................= ஞெலிகோல் (பா.வரி.178)
GATE........................................= படலை (பா.வடி.60)
GOGGLES................................= கண்கூடு (பா.வரி.8)
GUEST.....................................= மகமுறை (பா.வரி.478)
HEARING.................................= ஓர்தல் (பா.வரி.183)
HEAVEN...................................= துறக்கம் (பா.வரி.387)
HEIR ...(வாரிசு)...................= பிறங்கடை (பா.வரி.30)
JAR...........................................= சாடி (பா.வரி.280)
JUNIOR....................................= இளையர் (பா.வரி.268)
LIVE FENCING.......................= வாழ்முள்வேலி (வரி.125)
MEALS PLATE.......................= பிழா (பா.வரி.276)
PARALLEL SHANK................= செங்கால் (பா.வரி.439)
PEAK.......................................= சிமையம் (பா.வரி429)
PLOUGH.................................= நாஞ்சில் (பா.வரி.199)
PORTICO................................= முன்றில் (பா.வரி.96)
ROPE......................................= தாம்பு (பா.வரி.244)
SAFETY.............................,....= ஏமம் (பா.வரி.66)
SENIOR...................................= முதியர் (பா.வரி.268)
SENTRY BOX........................= காவலர் குரம்பை (வரி.51)
SHED......................................= கொட்டில் (பா.வரி.189)
SHIRT.....................................= படம் (பா.வரி.69)
SHOE......................................= அடிபுதை அரணம் (பா.வரி.69)
SLIPPER.................................= தொடுதோல் (பா.வரி.169)
SPLIT PIN..............................= பகுவாயூசி (பா.வரி.112)
STAR.......................................= மீன் (பா.வரி.477)
TAPER SHANK.....................= கணைக்கால் (பா.வரி.124)
TERRACE...............................= வேயாமாடம் (பா.வரி.348)
TONGS...................................= கொடிறு (பா.வரி.207)
TOLL GATE...........................= உல்கு (பா,வரி.81)
TOUCH STONE....................= கட்டளைக் கல் (பா.வரி.220)
TUBE......................................= தூம்பு (பா.வரி.231)
VALVE....................................= புதவு (பா.வரி.52)
VICE.......................................= கதுவை (பா.வரி.287)
VILLAGE.................................= சீறூர் (பா.வரி.19)
VIOLIN....................................= கின்னரி (பா.வரி.494)
WALKING STICK..................= விழுத்தண்டு (பா.வரி.170)

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,13]
{28-06-2019}
---------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------



பத்துப்பாட்டு (03) சிறுபாணாற்றுப்படை !

ஓய்மானாட்டு (திண்டிவனம்)  மன்னன் நல்லியக் கோடனின் வள்ளன்மையை எடுத்துரைக்கும் நூல் !


பத்துப் பாட்டு தொகை நூல்களுள் சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை ஆகியவையும் அடக்கம்.  இரண்டையும் ஒப்பிடுகையில், சிறுபாணாற்றுப் படை, பாடலின் அடியளவில் சிறியது. ஆகவே இந்நூல் சிறுபாணாற்றுப்படை என்னும் பெயர் பெற்றது !

   
இதனை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார் என்னும் பெரும் புலவர். அகவற்பாவினால் இயன்ற இந்நூல் 269 அடிகளை உடையது. பல்மீன் நடுவண் பால்மதி போல, பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன போன்ற அழகிய சொற்றொடர்கள் நிறைந்த இந்நூல் படிக்கப் படிக்க இன்பம் தருவது !

       
இக்காலத்தில்,. திண்டிவனம் என்று சொல்லப்படும் ஊரும், அதனைச் சூழ்ந்துள்ள பகுதியும், சங்க காலத்தில் ஓய்மானாடுஎனப் பெயர் பெற்றிருந்தது. இந்நாட்டினைநல்லியக் கோடன்என்னும் மன்னன் ஆண்டு வந்தான் !


அவன்பால் சென்று, தன் வறுமை நோயைத் தீர்த்துக் கொண்டு மீண்ட பாணன் (இசைப் புலவன்) ஒருவன், நல்குரவால் நைந்த  மற்றொரு பாணனை அந் நல்லியக் கோடன் பால் ஆற்றுப்படுத்துவதாக (வழிப்படுத்துவதாக) அமைந்த நூல் சிறுபாணாற்றுப்படை. !


இதன்கண், இமயமலையில் தன் வெற்றிக் கொடியை நாட்டிய சேர அரசன் செங்குட்டுவன் பெருமையும், பாண்டிய மன்னர்களின் உயர்வும், சோழர்களின் சிறப்பும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது !


மயிலுக்குப் போர்வை வழங்கிய பேகன், முல்லைக்குத் தேர் ஈந்த பரம்பு மலைப்  பாரி, இரவலர்க்கு நிலமும் குதிரையும் தந்த திருக்கோவிலூர் காரி, பெருவள்ளல் ஆய் அண்டிரன் ஆகியோரின் வள்ளன்மை விதந்து பாராட்டப்படுகிறது !


ஔவைக்கு நெல்லிக் கனி தந்த தகடூர் (தர்மபுரி) அதியமான், நாள்தோறும் வாரி வழங்கிய நள்ளி, கூத்தர்க்கு நிலம் தந்த கொல்லி மலை மன்னன் வல்வில் ஓரி ஆகிய வள்ளல்களின் இயல்புகளும், நல்லியக் கோடனின் கொடை வளமும் பாராட்டப்பட்டுள்ளன !

சிறுபாணாற்றுப் படையில் பல் மீன் நடுவண் பால்மதி போல....”, “பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன...”, போன்ற அழகிய உவமைகளும், “வடபுல இமயத்து வாங்கு விற் பொறித்த, எழு உறழ் திணி தோள், இயல் தேர்க் குட்டுவன்...” போன்ற வரலாற்றுச் செய்திகளும், “இருங்காழ் உலக்கை இருப்பு முகம் தேய்த்த அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு...” (உலக்கையால் குத்தித் தீற்றிய வெள்ளை நிற அரிசிச் சோறு) போன்ற நடைமுறை வழக்கங்களைத் தெரிவிக்கும் வரிகளும் காணக் கிடக்கின்றன !


இத்தகைய சிறப்பு வாய்ந்த சிறுபாணாற்றுப் படையில், ஆங்கிலச் சொற்களுக்கு நேரான அல்லது இணையான அல்லது புனைப் பொருள் தரும் தமிழ்ச் சொற்களைக் கண்டறிய இயலாமல் தடுமாறும் தமிழர்களுக்கு, அருட்கொடை அளிக்கும் உயர்நோக்கு உடையதாக, பாடல் நெடுகிலும் பல அழகிய தமிழ்ச் சொற்கள் பரவிக் கிடக்கின்றன.  அவற்றுள் சிலவற்றை மட்டும் காண்போமா !
----------------------------------------------------------------------------------------------------------

BERTH...................................................= பாயல் (பா.வரி.46)
CART.....................................................= ஒழுகை (பா.வரி.55)
CENTER................................................= நடுவண் (பா.வரி.219)
DRIVER.................................................= வலவர் (பா.வரி.260)
EAT........................................................= மிசை (பா.வரி.139)
FUND.....................................................= நிதியம் (பா.வரி.249)
GLITTER................................................= சொலித்தல் (பா.வரி.236)
HAND MADE........................................= கைபுனை (பா.வரி.53)
KITCHEN...............................................= அட்டில் (பா.வரி.132)
MATING.................................................= சுணங்கல் (பா.வரி.24)
PANTS...................................................= கலிங்கம் (பா.வரி.85)
PATTERN..............................................= சாயல் (பா.வரி.16)
PLANET.......(கிரகம்)..........................= கோள்மீன் (பா.வரி.242)
SONS.....................................................= மகார் (பா.வரி.56)@
STAR......................................................= மீன் (பா.வரி.219)
WEAVERS.............................................= கோடியர் (பா.வரி.125)
THINGS NEEDED TO LEAF LIFE....= நடைப்பரிகாரம்(பா.வரி.104)

---------------------------------------------------------------------------------------------------------
@”BALU & SONS” என்பதை  பாலு & மகார்  என்று 
எழுத வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,12]
{27-06-2019}
---------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------

பத்துப்பாட்டு (02) பொருநராற்றுப்படை !

கரிகால் பெருவளத்தானின் பெருமைகள் பற்றிப் பேசும் இலக்கியம் !


பத்துப் பாட்டு நூல்களுள் இரண்டாவதாக அமைந்திருப்பது பொருநராற்றுப் படை.  இதனை இயற்றியவர் முடத்தாமக் கண்ணியார்  என்னும் பெரும் புலவர் !

         
பொருநர் என்பவர் ஏர்க்களம் (வேளாண்மை) பற்றிப் பாடுவோர், போர்க்களம் பற்றிப் பாடுவோர், பரணி (பரணி என்பது இலக்கியங்களில் ஒரு வகை) பாடுவோர் எனப் பலவகைப்படுவர் !

         
இவர்களுள், போர்க்களம் பற்றிப் பாடும் ஒருவன், சங்க காலச் சோழ மன்னர்களுள் தலைமணியாக விளங்கிய கரிகால் பெருவளத்தானிடம் சென்று பாடிப் பரிசில் பெற்று ஊருக்குத் திரும்புகையில், வேறொரு பொருநன் எதிரில் வருகிறான் !

         
அவனிடம், கரிகால் பெருவளத்தானைப்  பற்றி எடுத்துரைத்து, அம்  மாமன்னனிடம் சென்று பாடிப் பரிசில் பெற்று வரச் சொல்லி, அப்பொருநனை ஆற்றுப்படுத்துவதாக (வழிப்படுத்தி அனுப்புவதாக) அமைந்துள்ளது பொருநராற்றுப் படை என்னும் இந்நூல் !

         
அகவற்பாவினால் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்விலக்கியம், 248  அடிகளை உடையது. இந்நூலில், கரிகாலனின் விருந்தோம்பும் சிறப்பு, பொருநனுக்கு உணவு கொடுத்து ஓம்பிய முறை,, அரசவைக்குப் பொருநன் செல்லுதல், மன்னனின் சிறப்பைப் பாடுதல், ஊருக்குச் செல்ல பொருநன் விரும்புதல், அரசன் பிரிய மனமின்றி பரிசில் கொடுத்து அனுப்புதல், கரிகால் வளவனது சிறப்புகள், வெண்ணிப் போர் வெற்றி, மன்னனின் கொடைச் சிறப்பு ஆகியவை பற்றி விரிவாகப் பாடியுள்ளார் புலவர் !

         
சோழநாட்டின் வளமும் வனப்பும், நில மயக்கமும் நல்லாட்சியும், காவிரியின் வெள்ளச் சிறப்பு, காவிரி நாட்டு வயல் வளம் ஆகியவை பற்றியும் வயணமாக எடுத்துரைக்கிறார் முடத்தாமக் கண்ணியார் !

         
பல புதிய தமிழ்ச் சொற்களை நமக்கு அளித்துள்ள பொருநராற்றுப் படை, ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் அரிய சொற்களை ஆங்காங்கே பாடல் வரிகளில் பொதித்து வைத்துள்ளது. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போமா !

--------------------------------------------------------------------------------------------------------

MEALS.............................................= அவிழ்ப்பதம் (பொரு.112)
SKYJACKERS..................................= ஆறலைக் கள்வர் (பொரு.21)
ASHTAMI (அஷ்டமி)...................= எண்மதி (பொரு.11)
WHAT ARE ALL I KNOW............= என்னறி அளவை (பொரு.128)
WHAT ARE ALL HE KNOWS......= தன்னறி அளவை (பொரு.127)
HAIR CUTTER................................= மயிர் குறை கருவி (பொரு.29)
GRANARY BAG..............................= மூடை (பொரு.245)
GOGGLES........................................= கண்கூடு (பொரு.15)
TROUBLE SHOOTING...................= இடும்பைத் தீர்வு (பொரு.67)
BOILED FOOD................................= வேவை (பொரு.104)
SUDDENLY.......................................= கதுமென (பொரு.241)

--------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,11]
{26-06-2019}
-------------------------------------------------------------------------------------------------------
     “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------

பத்துப்பாட்டு (01) திருமுருகாற்றுப்படை !

அடியார் ஒருவரை   முருகனிடம் ஆற்றுப்படுத்துவது போல்   பாடப் பெற்ற   இலக்கியம்  !


இதனை இயற்றியவர் நக்கீரர். இந்நூல் 317 அடிகளைக் கொண்ட பாடலால் ஆனது. முருகக் கடவுளை அடைந்து வீடு பேறு பெற்ற அடியவன் ஒருவன், வீடு பேற்றை விரும்பிய மற்றொருவனை அக்கடவுளிடம் ஆற்றுப்படுத்தும் முறையில் (அதாவது வழி வகைகளைச் சொல்லி அனுப்பும் வகையில்) பாடப்பட்டது திருமுருகாற்றுப்படை ! [திரு + முருகன் + ஆற்றுப்படை].

       
முருகன், அமர்ந்திருக்கின்ற திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), திருத்தணிகை (குன்றுதோராடல்), பழமுதிர் சோலை (அழகர்கோயில்) என்னும் ஆறு படைவீடுகளின் சிறப்பியல்புகளை இப்பாட்டிற் காணலாம் !

      
முருகப் பெருமானின் பொலிவு, உயரிய ஒழுக்கம், அக்காலத்து ஆடை அணி வகைகள், வேலனது தோற்றம், குறமகளிர் விழாக் கொண்டாடும் முறை முதலியன, திருமுருகாற்றுப் படையில் விளக்கப்பட்டுள்ளன !

       
திருப்பரங்குன்றத்தின் சிறப்பை 77 வரிகளில் சொல்கிறார் நக்கீரர். சூரனை வென்ற திருச்சீரலைவாயின் பெருமைகளை 48 வரிகளில் பாடியுள்ள அவர், திருவாவினன்குடியின் புகழை 51 வரிகளிலும், திருவேரகம் என்னும் சுவாமிமலையின் சீர்மையை 13 வரிகளிலும், திருத்தணிகையின் அருமை பெருமைகளை 28 வரிகளிலும், பழமுதிர் சோலையின் பாங்கினை 100 வரிகளிலும் அழகுற எடுத்துரைக்கிறார் !

       
முருகனை மையப்படுத்தி, அவனது அறுபடை வீடுகளின் சிறப்பைப் பற்றி அகவற்பாவால் சரம் தொடுத்துப் வயணமாக படைத்திருக்கும் நக்கீரரின் திருமுருகாற்றுப் படையில் அழகிய தமிழ்ச் சொற்கள் பல ஆங்காங்கே பாடல் முழுதும் பரவிக் கிடக்கின்றன !


இச்சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் ஆங்கிலச் சொற்கள் கண்டறியப்பட்டு, உங்கள் பார்வைக்கு வைக்கபடுகின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் காண்போமா !

---------------------------------------------------------------------------------------------------------

BAZAAR....................= நியமம் (முரு.70)
STREET....................= மறுகு (முரு.71)
STRENGTH...............= மொய்ம்பு (முரு.81)
HIDE..........................= உரிவை (உரித்த தோல்) (முரு129)
FLOOD LIGHT.........= அவிரொளி (முரு.144)
STAR.........................= மீன் (முரு.169)
BOTTLE....................= புட்டில் (முரு.191)
BEAR (கரடி)..........= உளியம் (முரு.313)
ORCHESTRA...........= பல்லியம் (முரு.119)
HEAVY DUTY..........= மதவலி (முரு.275)
SQUARE...................= சதுக்கம் (முரு.225)
TUBE.........................= தூம்பு (முரு.148)
MOTTO........................= பொன்னுரை (முரு.145)

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,10.]
{25-06-2019}

----------------------------------------------------------------------------------------------------------
        “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------